27 Mar 2013

கூத்துப்பட்டறை நாடகம் - சி.சு செல்லப்பாவின் முறைப்பெண்


"கூத்துப்பட்டறைல நாடகம் நடத்துறாங்க வாரியா சீனு" என்றான் முத்து. எனக்கும் வெகு நாட்களாக நாடகம் பார்க்க வேண்டும் என்று தீரா ஆர்வம் உண்டு, அவன் அழைத்ததும் வருகிறேன் என்று சொல்லிவிடலாம் ஆனாலும் மேடவாக்கம் டூ விருகம்பாக்கம் தூரம் இடம் கொடவில்லை. அதற்கு முக்கிய காரணம் அவ்வளவு தூரம் பயணித்து, ஒருவேளை நாடகம் மொக்கையாக இருந்துவிட்டால் அந்த இழப்பை என் மனம் எப்படித் தாங்கிக் கொள்ளும். பலவாறான சிந்தனை இருந்த போதிலும் கூத்துப்பட்டறையின் மீது பாரத்தை போட்டு கிளம்பிவிட்டேன்


விருகம்பாக்கத்தில் இருக்கும் கூத்துப்பட்டறை அலுவலகத்தை கண்டுபிடித்துத் தர கூகிள் மாப் கூட சற்று குழம்பும் என்று நினைக்கிறன். கண்டுபிடிப்பதற்குள் பல சென்னைவாசிகளை திட்ட அல்லது அவர்களிடம் திட்டு வாங்க வேண்டியதாகிவிட்டது. அது ஏன் என்று தெரியவில்லை பல சமயம் வழி கேட்கும் போதெல்லாம் 'ஏதோ அவர்களது சொத்தையே எழுதி கேட்பது போல் முறைக்கிறார்கள், இல்லை முகம் பார்த்து பேச மறுக்கிறார்கள்". வழி சொல்லத் தெரியவில்லை என்பது வேறு விஷயம், தெரிந்தும் உதவும் மனநிலை இல்லை என்பது மோசமான விஷயம். சென்னை தன்னிடமிருந்து மாற்றிக் கொள்ள வேண்டிய அடையாளங்களில் மிக முக்கியமான அடையாளம் இது தான்

ருவழியாய் ஒரு வழியை கண்டுபிடித்து சேருமிடம் அடைந்துவிட்டோம்கூத்துப்பட்டறையின் பயிற்சிப் பட்டறையிலேயே  நாடக ஏற்பாடுகளை செய்திருந்தனர்பயிற்சிப் பட்டறை என்பதால் இருபது பேர் அமர வேண்டிய இடத்தில் நாற்பது பேர் அமர்ந்து இருந்திருந்தனர். எங்களுக்கு அங்கும் இடம் கிடைக்கவில்லை. மேலே லாப்டில் (பாக்ஸ்) அமர சொன்னார்கள். அங்கு அமர்ந்து நாடகத்தைப் பார்த்ததும் வித்தியாசமான ஒரு அனுபவம் தான். எழுத்தாளர் சி.சு செல்லப்பா அவர்களது நூற்றாண்டு விழாவாக அவர் எழுதிய முறைப்பெண் என்னும் நாடகத்தை கடந்த பத்து நாட்களாக அரங்கேற்றியிருகின்றனர், நாங்கள் சென்றது பத்தாவது நாள்பயிற்சிப் பட்டறையியில் சாதாரணமான மேடை வடிவமைப்பு என்றாலும் ரசிக்கும்படி இருந்தது. காட்சிகளுக்கு அவர்கள் வழங்கிய ஒளி அமைப்பு ரம்யம்.



சி.சு செல்லப்பா அவர்களைப் பற்றிய அறிமுக உரையில் இருந்து நாடகம் தொடங்கியது. ஐந்து காட்சிகளைக் கொண்ட நாடகம். அங்கம்மாவின் மகள் அழகு (பெயர் தான் அழகு), அவளை பஞ்சாயத்து தலைவர் மகனுக்கு கட்டிக் கொடுப்பதாக அங்கம்மா வாக்கு கொடுக்க, அங்கம்மாவின் அண்ணன் தன்னுடைய முறைபெண்ணை தனக்குத் தான் கல்யாணம் கட்டிக் கொடுக்க வேண்டும் என்று பிரச்சனை செய்கிறார். இது தான் நாடகத்தின் கரு. இதை நாடகமாய் வெளிபடுத்திய விதம் வெறும் வார்த்தைகளுக்காக சொல்லவில்லை உண்மையிலேயே அருமை.

ங்கம்மாவின் அண்ணன் தனது முறைப்பெண்ணை தனது பையனுக்குத் தான் கட்டிக் கொடுக்க வேண்டும் என்று சண்டையிடுகிறார், அப்படிக் கொடுக்கவில்லை என்றால் எதுவும் செய்யத்தயார் என்று மிரட்டிவிட்டு செல்கிறார், பகுடித்தேவர் அந்த கிராமத்திலேயே யாருக்கும் அடங்காதவர், கட்டுப்படாதவர், அவரின் முரட்டுக் குணத்தைக் கண்டு கிராமமே நடுங்குகிறது. இப்படிப்பட்டவருக்கு தங்கையாகப் பிறந்தவர் மட்டும் சளைத்தவரா என்ன, எவ்வளவு பெரிய இடர் வந்தாலும் சந்திக்கத் தயார் என்று தனது அண்ணனுக்கு சற்றும் அசராமல் சவால் விடுகிறார்.

குடித்தேவர் தனது குடும்பத்துப் பெரியவரான பாட்டையாவிற்கு மட்டும் கட்டுப்பட்டவர், அவர் முன்னெடுத்து பிரச்சனையை சமாதானமாய் பேசித் தீர்த்து வைப்பதாக அங்கம்மாவிடம் சொல்கிறார், இவ்வேளையில் அங்கம்மாவின் வயல் பற்றி எரிகிறது, ஆடு மாடு வயல் அனைத்தும் கருகி விட்டதாக தகவல் வருகிறது.   பாட்டையா சம்பவ இடத்திற்கு விரைகிறார், தகவல் அறிந்து பஞ்சாயத்து தலைவர் மற்றும் சம்மந்தக்காரரான பாலுத்தேவர் அங்கம்மாவின் வீட்டுக்கு ஆறுதல்படுத்த வருகிறார். இருவரும் பகுடித்தேவர் தான் இதற்குக் காரணம் என்று முடிவு செய்து அவரை போலீசில் பிடித்துக் கொடுக்க முடிவு செய்கின்றனர்.



ந்த விஷயம் பாட்டையாவுக்கு தெரியவரும் பொழுது கலவரமடைகிறார், பகுடி அந்த அளவிற்கு கீழ்த்தரமானவன் இல்லை என்று பெரிதும் நம்புகிறார். மேலும் இதுவரை போலீஸ் காலடி படாதகிராமம், எதுவாயிருந்தாலும் பஞ்சாயத்தில் பேசித் தீர்த்துக் கொள்ளலாம், பஞ்சாயத்திற்கு பகுடித்தேவன் கட்டுபடுவான் என்று பாட்டையா அங்கம்மாவையும், பாலுவையும் சமாதானப்படுத்துகிறார்

குடித்தேவர் தனது தங்கையை மிரட்டி இருக்கிறான், அவரது மகனோ பாலுத்தேவரின் மகனை மிரட்டி இருக்கிறான். அதனால் காட்சிகள் சாட்சிகள் அனைத்தும் பகுடித்தேவருக்கும், அவரது மகனுக்கும் எதிராக அமைகிறதுஇதற்கிடையில் பாட்டையா பகுடித்தேவரையும்பகுடித்தேவர் தனது மகனையும் சந்தேகப் படுகிறார்கள். அனைவரையும் சமாதானம் செய்துவிட்டு, அடுத்த நாள் நடக்க இருக்கும் பஞ்சாயத்து பற்றி தெரிவித்து, பஞ்சாயத்திற்கு கத்தி அருவா எதுவும் கொண்டு வரக்கூடாது என்று அறிவுறுத்திவிட்டு அங்கு இருந்து கிளம்புகிறார் பாட்டையா.

ஞ்சாயத்து கூடுகிறது, அந்தக் காலங்களில் பஞ்சாயத்து எப்படி நடந்து இருக்கும், எப்படியெல்லாம் சாட்சிகளை விசாரித்து இருப்பார்கள், என்பதையெல்லாம் வெகு அழகாக நாடகப்படுத்தி இருக்கிறார்கள், சாட்சிகளை குறுக்கு விசாரணை செய்யும் முறை அருமை. யார் குற்றவாளி என்பதை வேண்டுமானால் சொல்கிறேன், எப்படிக் கண்டுபிடித்தார்கள் என்பதையெல்லாம் முறைபெண் நாடகம் படித்தோ பார்த்தோ தெரிந்து கொள்ளுங்கள்.



சாட்சிகளை குறுக்கு விசாரணை செய்து, இறுதியாக பாட்டையா அளிக்கும் சாட்சி மூலம் பாலுத்தேவரின் மகன் தான் நடந்த அசம்பாவிதங்களுக்குக் காரணமானவன் என்று கண்டுபிடிக்கிறார்கள், பகுடித்தேவன் குடும்பத்தை ஊரைவிட்டு துரத்த வேண்டும் என்பதற்காகவே அவன் அப்படிச் செய்தான் என்பதும் தெரிய வருகிறது. இறுதியில் சுபம்.                                   

முறைப்பெண் நாடகத்தில் என்னைக் கவர்ந்த சில விஷயங்கள் 

சி.சு.செல்லப்பா மதுரைக்கு அருகில் வத்தலகுண்டுவில் பிறந்து வளர்ந்தவர். தன்னை சுற்றி இருந்த தேவர் சமுதாயத்து மக்களை கதாப்பாத்திரங்களாகவும், அவர்களின் பேச்சு வழக்கை வசனங்களாகவும் கொண்டு முறைப்பெண் நாடகத்தை எழுதி இருக்கிறார், கூத்துப்பட்டறையைச் சேர்ந்தவர்கள், ஆடை வடிவமைப்பிலும், வசன உச்சரிப்பு மற்றும் உடல் மொழியிலும் நம்மை அந்த கிராமத்திற்கே கொண்டு சென்று விட்டனர்

ங்கம்மாவின் அண்ணனாக வரும் பகுடித் தேவரின் நடிப்பு பிரமாதம். மிக மிக அற்புதமாக நடித்திருந்தார். உடல் மொழி என்னை வெகுவாய்க் கவர்ந்தது, அடுத்ததாக குடும்பத்துப் பெரியவராக வரும் பாட்டையா, வயதானவரின் உடல் மொழி கச்சிதம்அங்கம்மாவாக நடித்தவருக்கு மதுரை பாசை வெகு இயல்பாக வருகிறது

ந்தக் காலத்தில் பெரியவர்களை எப்படியெல்லாம் மதித்தார்கள், அவர்கள் சொல்லுக்கு எப்படிக் கட்டுபட்டார்கள் என்பதையெல்லாம் அற்புதமாக நடித்துக் காட்டினார்கள்

ந்தக் காலங்களில் மக்களின் பொழுதுபோக்கே நாடகங்கள் தான், இயல் இசையைத் தொடரும் நாடகத்தை நாம் இழந்து விட்டோம். எனக்கு நினைவு தெரிந்த நாட்களில் கூட தென்காசி கோவில் திருவிழாக்களில் நாடகம் பார்த்துள்ளேன், இன்றெல்லாம் அரிதாகிவிட்டது

ன்னர் காலத்து நாடகங்கள், தெனாலிராமன் நாடகங்கள் என்று நம்முடன் உலவிய ஒரு கலை இன்று இல்லாமல் போய்விட்டது என்று நினைக்கும் பொழுது சற்றே வருத்தமாய் உள்ளதுஇது போன்ற பல நல்ல நல்ல நூல்களை நாடகம் போட்டுக் காண்பிக்க வேண்டும், நமது நாடகத் திறமையை இன்னும் இன்னும் வளர்க்க வேண்டும்ஆனாலும் இணையத்தில் நாடக டிக்கெட் விலை தான் சற்றே பயமுறுத்துகிறது        


து போன்று நல்ல பல நாடகங்களை நடத்தும் கூத்துப் பட்டறை குழுவினருக்கு வாழ்த்துக்கள்.  

நாடகம் முடிந்து வெளியே வரும் பொழுது, பகுடித்தேவரின் மகனாக நடித்த இளைஞனிடம் ஒரு இளைஞி " அது எப்டி பாஸ், கிராமத்தான் மாதிரியே பேசுனீங்க, செம க்யுட் யூ நோ"

ம்மாளு " அது ஒன்னும் இல்லீங்க, ஜட்ஜ்மெண்ட் அப்படின்னு சொன்னா இங்கிலீஷ், அதையே ஜட்ஜு மெண்ட்டு அப்டீன்னு சொன்னா அது தமிழ்"

தைக் கேட்கும் பொழுது "யாமறிந்த மொழிகளிலே தமிழ் மொழி போல் இனிதாவது" என்று சொன்னனே என் பாரதி அவனது சில வரிகள் தான் நினைவுக்கு வந்தன... 

தமிழுக்கும் அமுதென்றுப் பேர் 
அந்தத் தமிழ் இன்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர் 
உயிருக்கு நேர் 

செந்தமிழ் நாடென்னும் போதினிலே 
இன்பத் தேன் வந்து பாயுது காதினிலே... 
எங்கள் அன்னையர் நாடென்னும் 
போதினிலே ஒரு சக்தி பிறக்குது மூச்சினிலே..           

16 comments:

  1. பால்கனி டிக்கெட்டில் இருந்து நீங்க பாத்த கூ்த்துப்பட்டறை நாடகம் அருமை. சி.சு.செல்லப்பாவின் புகழ்பெற்ற ‘வாடிவாசல்’ படிச்சதில்லையா சீனு? மிகச் சிறந்த எழுத்தாளர்œ! நாடகக் கலை வளரணும்னா எளிமையானவர்களும் டிக்கெட் வாங்கிப் பாக்கற மாதிரி, அந்தநாள்ல ‌விளையாட்டு மைதானங்கள்லயும், கொட்டகை போட்டும் நடத்தின மாதிரி சிம்பிளானாத்தான் உண்டு. இல்லாட்டி நாம பெருமூச்சு விட்டுக்கிட்டே இருக்க வேண்டியதுதான்!

    ReplyDelete
    Replies
    1. எப்புடி வாத்தியாரே அம்புட்டு சரியா கேட்டீங்க, கூத்துப்பட்டறை வெளியே பல புத்தகம் அடுக்கி வச்சிருந்தாங்க, நா வாங்குன புத்தகத்தின் பெயர் வாடி வாசல், எங்கோ எப்படியோ என் மனதில் பதிந்த புத்தகத்தின் பெயர், வாங்கிட்டேனே...

      Delete
  2. ஒரு காலத்தில் தினமும் நாடகம் பார்த்துக் கொண்டிருந்த நம் தமிழ் சமுதாயம் இப்போது என்றைக்காவது ஒரு நாள் என்றாகிவிட்டோம். வித்தியாசமான அனுபவம் என்று பின்னூட்டமிட வைக்கும் நிலையில் நாடகம் பார்த்த அனுபவம். பழையன கழிதலும் புதியன புகுதலும் வழுவன கால வகையினானே என்ற கணியன் பூன்குன்றனாரின் வார்த்தைகளை நாம் தவறாகப் புரிந்துகொண்டோமோ என்ற சந்தேகம் மனதில் எழுகிறது. பழமையை உணர்ந்து அனுபவிக்கவேண்டிய வேளையில் பெருமை பேசி மகிழ்கிறோம் என்பது வேதனை...

    நல்ல பகிர்வு...

    ReplyDelete
    Replies
    1. சிந்திக்கத் தூண்டும் பின்னூட்டம் சார்.

      நிச்சயம் வித்தியாசமான அனுபவம் தான், ஆனால் இயல்பான ஒன்றிலிருந்து வித்தியாசத்திற்கு தாவி விட்டது... கணியன் பூங்குன்றனாரை நினைவு கூர்ந்தது அருமை

      Delete
  3. கூத்துப்பட்டறை - எத்தனை அருமையான பெயர்!
    இந்த அமைப்புக்கான இணையதளம் தேடிப்பார்த்தேன், கிடைக்கவில்லையே. சுட்டி தெரிந்தால் சொல்லுங்களேன்?
    சென்னை வந்தால் பார்க்க வேண்டும் - உருப்படாத புத்தகப் புண்காட்சிகளுக்குப் பதிலாக இதில் நேரத்தை செலவழித்திருக்கலாம். எல்லவற்றுக்கும் கணேஷ் தான் காரணம். பெரிய கணேஷ்.
    கட்டுரை பிரமாதம். நுணுக்கங்களைப் பற்றிக் கோடி காட்டியது இன்னும் வேண்டும் என்று எண்ண வைத்தது. கதையையும் தேடிப் படிக்கத் தூண்டியது.

    ReplyDelete
  4. //விருகம்பாக்கத்தில் இருக்கும் கூத்துப்பட்டறை அலுவலகத்தை கண்டுபிடித்துத் தர கூகிள் மாப் கூட சற்று குழம்பும் என்று நினைக்கிறன். கண்டுபிடிப்பதற்குள் பல சென்னைவாசிகளை திட்ட அல்லது அவர்களிடம் திட்டு வாங்க வேண்டியதாகிவிட்டது. அது ஏன் என்று தெரியவில்லை பல சமயம் வழி கேட்கும் போதெல்லாம் 'ஏதோ அவர்களது சொத்தையே எழுதி கேட்பது போல் முறைக்கிறார்கள், இல்லை முகம் பார்த்து பேச மறுக்கிறார்கள்". வழி சொல்லத் தெரியவில்லை என்பது வேறு விஷயம், தெரிந்தும் உதவும் மனநிலை இல்லை என்பது மோசமான விஷயம். சென்னை தன்னிடமிருந்து மாற்றிக் கொள்ள வேண்டிய அடையாளங்களில் மிக முக்கியமான அடையாளம் இது தான்.//

    நகைச்சுவையும் , கோவமும் கலந்த வார்த்தைகள் . சென்னை மட்டுமல்ல இன்னைய தேதிக்கு தமிழ்நாட்டுல எந்த ந(ர)கரத்துல போயி வழி கேட்டாலும் இந்த கொடுமைதான் .ஒரு சிலர் வழி கேட்டா கண்டுக்கவே மாட்டாய்ங்க, இல்லாட்டி சைகைள காமிப்பாய்ங்க, சும்மா கோவம் சுர்ருன்னு ஏறும் .

    கூத்துப்பட்டறை நாடகத்திற்காக மெனக்கெட்டு போனதற்கும் , போய் வந்ததை பகிர்ந்ததற்கும் நன்றி . பல வருசங்களுக்கு முன்னாடி வள்ளி திருமணம் நாடகம் பாதி பாத்தது. இப்பல்லாம் டிவி நாடகம் தான் ...

    ReplyDelete
  5. நாடகம் அருமை...

    இப்போதெல்லாம் எங்கள் ஊரில் எங்கே...? குறைந்து விட்டது என்பதை விட அழிந்தே விட்டது எனலாம்... கூத்துப்பட்டறை போடுபவர்களும் இல்லை... அதனை ஆதரிப்பவர்களும் இல்லை... வேறு பட்டறை தான்...!

    முடிவில் தமிழ் இனித்தது... (பாரதியின் வரிகள்)

    ReplyDelete
  6. தொடர வாழ்த்துக்கள் ...
    த. ம. 2013

    ReplyDelete
  7. என்ன தல எங்க ஏரியா வந்துட்டு சத்தமே இல்லாம போன உமக்கு ஆயிரம் கவிதை புத்தகம் பார்சல், அது யாரோட புத்தகம் என்பதும் உமக்கு தெரியும் என்று நம்புகிறேன் ...

    ReplyDelete
  8. இருக்கையில் அதனை மதிக்கவோ, சரியாக பாது காக்கவோ தெரியாது. போனதும் தான் பெருமை கொண்டாடும் நிலையில் இருக்கிறது நம்மினம்! அந்த வகையில் இந்த நாடகமும் ஒன்று! எத்தனை மதிப்புமிக்க பொக்கிசங்களை தொலைத்து இருக்கிறோம் என்று கணக்கு போட்டால் எண்ணிலடங்கா.... என்னவோ சீனு என்று நம் தலைமுறையாவது மகுடிக்கு மயங்காமல் மரபை போற்ற பாடுபடுவோம்....

    ReplyDelete
  9. நாடகமப் பார்ப்பதே அரிதான இந்த காலத்திலும் கொத்துபட்டரையின் தயவால் நாடகம் பார்த்த நீங்கள்தான் அதிஷ்டசாலி.அடுத்தமுறை நடக்குமுன்பே பதிவிட்டால் என்னைப்போன்ற சிலரும் பார்க்கும் வாய்ப்பு கிட்டுமே.

    ReplyDelete
  10. எப்படிப்பட்ட ஒரு அரிய வாய்ப்பு! நல்லவேளை நழுவவிடாமல் கூத்துப்பட்டறைக்குப் போய் நாடகம் பார்த்துவிட்டீர்கள், பாராட்டுகள் சீனு!
    பதிவாகப் போட்டு எங்களுக்கும் அந்த அனுபவத்தைப் படித்துப் பார்க்க செய்திருக்கிறீர்கள், நன்றி!

    சிறுவயதில் பல நாடகங்கள் பார்த்திருக்கிறேன். சோ, சிவாஜி கணேசன், நாகேஷ் (நீர்க்குமிழி) மனோகர் இவர்களின் நாடகங்கள் பல பார்த்திருக்கிறேன்.
    போன வாரம் கூட கல்கியின் 'சிவகாமியின் சபதம்' இசை நாடகம் என்று விளம்பரம் பார்த்தேன். விலைதான் மயக்கம் தருகிறது.

    எஸ்.வி. சேகர், கிரேசி மோகன் இவர்களின் நாடகங்கள் வெறும் கேலிக் கூத்தாக இருக்கின்றனவே!

    இந்த அரிய கலையை எப்படியாவது காப்பாற்றி அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்ல வேண்டும். யார் செய்வார்கள்?

    கவியாழி கொத்துப்பட்டரை ஆக்கிவிட்டாரே!
    வருங்கால சந்ததிகளுக்கு இதன் அருமை தெரியுமா? இல்லை கொத்துப் பட்டரை ஆக்கிவிடுவார்களா?

    ReplyDelete
  11. //வழி சொல்லத் தெரியவில்லைஎன்பது வேறு விஷயம், தெரிந்தும் உதவும் மனநிலை இல்லை என்பது மோசமான விஷயம்.// உண்மை நிலைப்பாடு.

    அருமையான கட்டுரை .

    நாடகத்தில் தேர்ந்த நடிகர்களே ஒரு காலத்தில் சினிமா உலகை ஆண்டனர். நாடகத்தில் இருந்து பிறந்த சினிமா தன் தாயை விழுங்கியது.

    நம் சங்கதியர் இயல், இசை,நாடகம் என்பதை மறந்து, 'தமிழ்' என்றால் 'சினிமா'வில் காண்பது என்று சொல்லும் நிலையை நோக்கி சென்றுகொண்டிருக்கிறோம்.

    ReplyDelete
  12. இந்தக்காலத்தில் நாடகத்தை வளர்த்துக்கொண்டிருப்பது கூத்துப்பட்டறை என்று பத்திரிகைகளில் தான் படித்திருக்கிறேன்.. நீங்கள் நேரிலேயே பார்த்துவிட்டு வந்திருக்கிறீர்கள்.. நல்ல அனுபவமாக இருந்திருக்கும்.. என் வாழ்வில் நான் பார்த்தது ஸ்கூல் கல்லூரி நாடகங்கள் தான்.. நீங்கள் கொடுத்து வைத்த மவராசன்.. என்ஜாய்..

    ReplyDelete
  13. அருமையான வாய்ப்பு சீனு. தில்லியில் சில சமயங்களில் நடக்கும் நாடகங்களைப் பார்க்கும்போது நமக்கு அதிகம் வாய்ப்பில்லையே எனத் தோன்றும்.

    ReplyDelete
  14. கூத்துப்பட்டறை,அதுவும் மணிக்கொடி கால எழுத்தாளர் சி.சு.செ வின் கதை;அருமையான வாய்ப்பு உங்களுக்கு சீனு!

    ReplyDelete