28 Jun 2012

காவி நிறத்தில் ஒரு காதல்


ந்தர்ப்ப சூழ்நிலைகளால் காவி உடைக்குள் தன்னை புகுத்திக் கொண்டு சாமியாராக மாறிய ஒரு இளைஞனின் (சாமியாரின்) காதல் கதை. காதல் தோல்வியைத் தாங்கிக் கொள்ள முடியாமல் தன்னுடைய பதினெட்டு வயதில் காட்டிற்குள் சென்ற இளைஞன் பதினெட்டு வருடம் கழித்து மீண்டும் தன்னுடைய காதலியைத் தேடி, அவள் கரம் பிடிக்க தான் பிறந்த மண்ணைத் தேடி வருகிறான் சாமியாராககாதலின் வலி பொறுக்காமல் மீண்டும் உலக வாழ்க்கைக்குள் வரும் ஒரு சாமியாரை இந்த உலகம் பார்க்கும் பார்வைகளில் இருந்தும் காவி உடையில் இருந்தாலும் தன் காதலியை மறக்க நினைக்கும் முயற்சியே அவளை நினைப்பதற்கான பயிற்சியும் ஆகிவிட்டது என்று புலம்பும் சாமியாரின் உணர்சிக் குவியல்களில் இருந்தும் ஆரம்பமாகிறது இந்தப் பயணம்.  

விதை பாடும் கவிஞர் ஓருவர் தன் அழகான வசன நடையால் சாமியார் ஒருவருக்குள் காதலைப் புகுத்தி எதார்த்தமான சூழ்நிலைகளைக் கொண்டு கதை சொல்ல ஆரம்பிக்கிறார், அந்தக் காதலுக்கு அவர் கொடுத்த தலைப்பு காவி நிறத்தில் ஒரு காதல். அந்தக் கவிஞரின் பெயரோ கவிபேரரசு வைரமுத்துகவிபேரரசு வைரமுத்து அவர்கள் பத்துவருடங்களுக்கு முன்பு எழுதிய இப்புத்தகத்தினைப் படிக்கும் வாய்ப்பு தற்போது தான் கிடைக்கப் பெற்றேன் அந்த அனுபவத்தை இங்கு பதிவாக எழுதுகிறேன்.

நான் படிக்காத சுஜாதா புத்தகங்களையும் படித்த பிற எழுத்தாளர்கள் புத்தகங்களையும் விரல் விட்டு எண்ணிவிடலாம். ஒவ்வொருமுறையும் சுஜாதா அவர்களின் புத்தகத்தைப் படித்துவிட்டு புத்தகவிமர்சனம் எழுத வேண்டும் என்று நினைப்பேன் ஆனால் நினைப்பதோடு நின்றுவிடுவேன் காராணம் அப்போது என்னிடம் அப்போது வலைபூ இல்லை. என் முதல் புத்தக விமர்சனத்தை இந்தப் புத்தகத்திலிருந்து தொடங்குகிறேன். 

இந்த வருடம் புத்தகக் கண்காட்சியில் இருந்து என்னுடைய அண்ணன் காவி நிறத்தில் ஒரு காதல் புத்தகத்தை வாங்கி வந்திருந்தான். தலைப்பைப் பார்த்ததுமே படிக்கத் தோன்றவில்லை. படிக்கத் தூண்டும் தலைப்பு தான் இருந்தும் காவி என்று வருவதால் மதக் கலவரம் அது இது என்று எரிச்சலூட்டுவர்கள் என்று புத்தகத்தை தொட்டுக் கூட பார்க்கவில்லை. வாங்கி வந்த என் அண்ணனும் புத்தகத்தைப் படிக்கவில்லை. படித்திருந்தால் கண்டிப்பாக என்னையும் படிக்கச் சொல்லியிருப்பான். ஆனால் கடந்த ஆறு மாதங்களாக படி படி என்று கூறும் விதமாக அடிகடி என் கண்களில் தட்டுப்பட்டுக் கொண்டே இருந்தது. இரண்டு நாட்களுக்கு முன்பு படிப்பதற்கு வேறு புத்தகம் எதுவும் இல்லை என்ற காரணத்தால் இந்தப் புத்தகத்தை வாசிக்க ஆரம்பித்தேன். ஒரு புதுமையான வாசிப்பு அனுபவத்தைப் பெற்றேன்.

ஒரு சாமியார் தான் கதாநாயகன். காதலியைத் தேடி காட்டிற்குள் இருந்து நாட்டிற்குள் வருகிறான். தொலைந்து போன காதலியைத் தேடிச் செல்லும் இடங்களில் எல்லாம் காதலி வாழ்ந்ததற்கான தடங்களும் தடயங்களும் மட்டுமே கிடைகின்றதே தவிர காதலி கிடைக்கவே இல்லை. இறுதியில் காதலியை சென்று சேர்ந்தாரா. பல வருடங்களுக்குப் பின் சந்திக்கும் இருவரின் மன நிலையும் எப்படி இருந்தது என்பன போன்ற பல விசயங்களை சலிப்பு தட்டாமல் சொல்லிச் செல்கிறார்.    

ஷங்கர் படம் போன்ற காஸ்ட்லி காதலோ, சசிகுமார் தரணி லிங்குசாமி படம் போன்ற அடிதடிக் காதலோ, இல்லை பாரதிராஜா படம் போன்ற முழுக்க முழுக்க மண்வாசம் வீசும் காதல் போன்றோ இல்லாமல் பாலா அமீர் மிஷ்கின் படம் போன்ற எதார்த்தமான கொஞ்சம் அழுத்தமான சம்பவங்களைக் கொண்டு காதல் பேசுகிறார் இந்தச் சாமியார். காதலியைத் தேடி செல்லும் இடங்களில் எல்லாம் பட்டாம்பூச்சி விளைவு என்று சொல்லப் படகூடிய (நடைபெறக் கூடிய சம்பவங்களுக்குள் தொடர்பு இருக்கும்) விளைவின் மூலம் கதாநாயகன் தான் தவறவிட்ட உறவுகளையும் அவர்கள் மூலம் காதலியின் இருப்பிடமும் அறிகிறான். நாம் ஒவ்வொருவரும் ஏதோ ஒரு சந்தர்பத்தில் பட்டாம்பூச்சி விளைவுகளை சந்தித்துக் கொண்டு தான் உள்ளோம் என்ற கோணத்தில் கதையுடன் ஒன்றினோம் என்றால் கதை நமக்கு மிகவும் பிடித்து போகும். ( பட்டாம்பூச்சி விளைவை முழுவதுமாக தெரிந்து கொள்ள இந்தக் கதையோ இல்லை தசாவதாரம் படமோ எளிய உதாரணம். அது போதவில்லை என்றால் எண்ணிலடங்கா ஆய்வுக் கட்டுரைகள் உள்ளன தேடித் படித்துத் தெரிந்து கொள்ளுங்கள்). 

தவறான விசாரணையால் போலீசாரிடம் சிக்கி கொள்ளும் சாமியார்

"காட்டுக்குள் வாழ்ந்தேன், மிருகங்களிடம் எனக்குப் பாதுகாப்பு இருந்த்தது. நாட்டுக்குள் வந்தேன் மனிதர்களிடம் தான் எனக்குப் பாதுகாப்பில்லை"  என்று புலம்பும் வரிகளில் இருந்து வைரமுத்துவின் சிந்தனை ஓட்டத்தை அறிந்து கொள்ளலாம்.

தனக்காக தன் காதலியும் காத்துக் கொண்டிருக்கிறாள் என்று தெரியவரும் ஒவ்வொரு இடங்களிலும் காதலின் மேன்மை மிக மென்மையாக இருக்கும்.காதலியின் அக்கா கொடுத்த தகவல்களில் இருந்து தேடத் தொடங்கும் சாமியார் இடையில் பல சந்திபுகளுக்குப் பின் காவல்துறையில் டி.எஸ்.பி யாக பணிபுரியும் நண்பன் மூலம் அவள் 'கண்டதும் சுட' ப் பட வேண்டிய கொலைக் குற்றத்தில் இருக்கிறாள் என்பது வரை தெரிந்து அதிர்ந்து நொறுங்கும் வரை காதலின் ஒருபக்கமும், அதன் பின் நடக்கும் நிகழ்வின் மூலம் காதலின் மறுபக்கத்தையும் உணர்ச்சி பொங்கச் சொல்லிச் செல்கிறார். 

டி.எஸ்.பி நண்பன் அடர்ந்த வனபகுதிக்குள் இருக்கும் நக்சலைட்டுகளை கைது செய்ய செல்கிறார், செலும் இடத்தில இருவரும் நக்ஸல்களிடம் பணயக் கைதிகளாக சிக்கிக் கொள்கிறார்கள். அந்தக் நக்சல் குழுவில் சாமியாரின் காதலியும் இருப்பது அதிர்ச்சியின் உச்சம் என்றால் அவர்களுக்குள் நடைபெறும் சந்திப்பு உணர்சிகளின் உச்சம்.   

நெடுநாளைக்குப் பின் தன் காதலியைப் பார்த்த நொடியில் சாமியார் நினைக்கிறார் 

"சுவடுகள் மாறவில்லை. கொஞ்சம் சதை போட்டிருக்கிறாள். கண்களில் மட்டும் அதே பௌர்ணமிகள்".

தீவிரவாதியாக இருக்கும் தன் காதலியைச் சந்திக்கச் செல்லும் முன், தன் வாழ்க்கைப் பற்றி முடிவு செய்ய வேண்டிய கடைசி நொடியில் இருக்கும் சாமியாரின் சிந்தனைகள் இதோ 

" லௌகீகம் சிக்கல் தான்: உலகம் ரணம் தான்; உறவு சுகம் தான்

 எந்த வாழ்க்கை முறை சரி? தள்ளி வாழ்வதா? தழுவி வாழ்வதா? 

சாமியாரின் உள்ளக் கடலில் இரண்டு புயல்கள் மையம் கொண்டன. இரண்டையும் முட்டவிட்டு முட்டவிட்டு ஒரு முடிவுக்கு வந்தார். தள்ளி வாழும் வாழ்கையில் அமைதி இருக்கலாம், அது மயான அமைதி. 

தழுவி  வாழும் வாழ்கையில் சப்தம் இருக்கலாம். அது உயிருள்ள சப்தம்.

இந்த சந்தர்பத்தில் நக்ஸல்களிடம் பணயக் கைதிகளாக மாட்டிக் கொண்டுவிட்ட சாமியாரை தப்பிச் செல்லாமல் பாதுகாக்கும் பொறுப்பு அவர் காதலிக்கே வழங்கப் பட்டிருக்கும்.இங்கேசாமியாரின் மனநிலை 

சாமியார் கண்கொட்டாமல் அவளையே பார்த்தார். இப்போது பதினெட்டு வருடத் தேடல் பத்தடி தூரத்தில் 

அதே முகம்! என் மடியில் புதைந்த அதே முகம்! என் உள்ளங்கைகளில் ஏந்திய அதே முகம்! நான் முத்தமிட்ட முகம்! என் பதினெட்டு வருடக் கனவில் பவனி வந்த முகம்.  என் இருப்புக்கும் இறப்புக்குமான இடைப்பட்ட வாழ்க்கைக்கு ஆதாரமாய் இருக்கும் அதே முகம்! களத்தின் கனத்தாலும், வாழ்கையின் இனத்தாலும் கொஞ்சம் முற்றிப் போயிருந்தாலும் பழைய பசுமையின் சின்னங்கள் பறிபோய்விடாத அதே பழைய பால் முகம்.

இந்த  நிலையில் தன் காதலியைச் சந்தித்த சாமியாரிடம் டி.எஸ்.பி நண்பனின் கிண்டலும் அதற்கு சாமியாரின் பதிலும் 

" என்ன சாமியாரே சொர்கத்திற்கு வந்திருகீங்களா....நரகத்திற்கு வந்திருகீங்களா? " அந்த நேரத்திலும் டி எஸ் பி கிண்டலடித்தார்.

சந்தோசமோ துக்கமோ இல்லாத குரலில் சாமியார் சொன்னார், 

" நரகதிற்குள்ளே வந்து என் சொர்க்கத்தைப் பாத்திருக்கேன்"

இப்படிச் செல்லும் இந்தக் கதையின் முடிவில் நக்சல் காதலிக்கு மன்னிப்பு கிடைத்ததா இல்லை கூண்டோடு ஒழிக்கப் பட்டார்களா, பதினெட்டு வருடங்களாக தன் காதலனுக்காக தேக்கி வைத்திருந்த காதலை அவள் என்ன செய்தால் தொழுதாளா  இல்லை துடைத்தேரிந்தளா? சாமியார் காதலியால் கொல்லப்பட்டாரா இல்லை  கொள்ளப்பட்டரா, இனிமையாக ஆரம்பித்த காதல் பயணம் சுமை கடந்து சுகம் வரப் போகிறது என்ற எண்ணிய நேரத்தில் ரணமாக மாறியதை கவிஞர் எப்படி முடிவுரையாக மாற்றினார், 

என்பதை எல்லாம் அறிந்து கொள்ள  

வெளியீடு 
சூர்யா இலக்கியம் 
#22 நான்காம் குறுக்குத் தெரு, டிரஸ்ட்புரம், சென்னை,

விற்பனையாளர்  
திருமகள் நிலையம் 
#55 வெங்கட்நாரயணா சாலை, தி,நகர், சென்னை.
#2324 2899 

என்னும் முகவரிக்கு எழுதி கேட்டீர்கள் என்றால் புத்தகம் அனுப்புவார்கள் படித்து தெரிந்து கொள்ளுங்களேன்.

திடங்கொண்டு போராடு  வலைப்பூ தலைப்பின் தாக்கம் கொண்டு கோவைக்கவி அவர்கள் எழுதிய கவிதை வரிகள். அவர்களுக்கு என் மனபூர்வமான நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்.  


பதிவைப் பற்றிய உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து விட்டுச் செல்லுங்கள்,

23 Jun 2012

வாசிக்க வாசிக்க வானம் வசப்படும்


தைக்குச் செல்லும் முன் கதையைப் பற்றிய சில முக்கியமான தகவல்கள்... 

2005 ம் ஆண்டு நூலக வாரவிழாவினை முன்னிட்டு திருநெல்வேலி மாவட்ட நூலக ஆணைக்குழு நடத்திய மாவட்ட அளவிலான சிறுகதை போட்டியில் முதல் பரிசு பெற்ற சிறுகதை.   

க்கதையை எழுதியது சத்தியமாக நான் இல்லை. என்னுடைய அண்ணன் ராம் சங்கர். தன்னுடைய இளநிலை அறிவியல் இரண்டாம் வருடம் படிக்கும் பொழுது போட்டியில் பங்குகொண்டு எழுதியது.

தைக்கான தலைப்புகள் போட்டி ஆரம்பிப்பதற்கு ஐந்து நிமிடம் முன்னர் தான் வழங்கப்பட்டது. வழங்கப்பட்ட தலைப்புகள் 

புத்தகமே சிறந்த நண்பன் 
வாசிக்க வாசிக்க வானம் வசப்படும் 

தில் என்னுடைய அண்ணன் தேர்ந்தெடுத்த தலைப்பு வாசிக்க வாசிக்க வானம் வசப்படும். 

அப்போதைய அமைச்சர்களான  திரு.கருப்பசாமி பாண்டியன் மற்றும் திரு.நயினார் நாகேந்திரன் உடன் நெல்லை மாவட்ட ஆட்சியர் திரு சுனில் பாலிவால் இவர் கைகளால் பரிசு பெறுவது என்னுடைய அண்ணன்.  

வாசிக்க வாசிக்க வானம் வசப்படும்


க்டோபர் 15.2010. காலை மணி ஒன்பது , சென்னையின் இதயத் துடிப்பான தி.நகரின் மையத்தில் அமைந்திருக்கும் அந்த விழா  அரங்கமே ஆரவாரமாக காட்சியளித்தது. விழா மேடையில் இந்தியாவின் முக்கியமான V.I.P. கள் பலரும் புடைசூழ, நடுநாயகமாக அமர்ந்திருந்தான் குமார். இந்தியாவின் மிகச் சிறந்த மாவட்ட ஆட்சியருக்கான விருதைப் பெறப் போகும் குமாரின் வயது 28!.

விருது கொடுபதற்க்கு வி.ஐ.பி கள் பலர் காத்திருக்க, குமார் தனது கல்லூரி நூலகரின் கையால் விருது வாங்க ஆசைப்பட்டான்! அரங்கத்தில் அனைவருக்கும் ஆச்சரியம்! பலரும் தங்களுக்குள் விவாதிக்க ஆரம்பித்தனர். அனைவரின் கேள்விகளும் குமாருக்கு புரிந்தது. வாழ்க்கை என்னும் புத்தகத்தில் தன் தலையெழுத்து மாற்றப்பட்ட பக்கங்களைப் புரட்ட ஆரம்பித்தான்.  

ட்டு வருடங்களுக்கு முன்னால்........

மாணவர் தேர்தலுக்காக கல்லூரியே அமர்க்களப்பட்டிருந்தது.

தேர்தலன்று மாலை, தான் தோற்றுவிட்டதை அறிந்த குமார் ரகளை செய்ய ஆரம்பித்தான். தேர்தலில் ஊழல் நடந்துவிட்டதாகக் கூறி உண்ணாவிரதம் இருக்கப் போகிறேன் என்றான். மற்ற மாணவர்களையும் வீட்டுக்குப் போகவிடாமல் விரட்டிக் கொண்டிருந்தான். கடைசியில் சக மாணவர்கள் அவனை சமாதனம் செய்து வீட்டிற்கு அனுப்பினர். இப்படி ஒன்றல்ல இரண்டல்ல, பலமுறை குமாரின் அடாவடித்தனங்கள் அத்துமீறி இருக்கின்றன. குமார் வம்பு செய்து தண்டனை பெறாத துறைகளே கிடையாது. ஒவ்வொரு நாளும் துறைவாரியாக 'அப்பாலஜி' எழுதுவான். வகுப்பிற்கும் ஒழுங்காக வரமாட்டான். ஆனாலும் விளையாட்டில் சிறந்து விளங்கியதால் கல்லூரி நிர்வாகம் அவனை விட்டுவைத்திருந்தது. 

தே கல்லூரியில் தான் சூரியன் நூலகராகப் பணிபுரிந்தார். பெயருகேற்றார்போல் எப்பொழுதும் பிரகாசமாய் காட்சியளிப்பவர். எந்த மாணவன் உதவி கேட்டாலும் தாராளமாகச் செய்பவர். பல மாணவர்கள் அவரால் உயர்ந்த நிலையை எட்டியுள்ளனர். 

ரு நாள் குமார் நூலகத்திலும் தன் வேலையைக் காட்ட ஆரம்பித்தான். நூலக வாசலில் நின்றுகொண்டு உள்ளே செல்லும் மாணவர்களிடம்,

"டேய், எங்கடா போறீங்க?",  

" 'லைப்ரரி'க்கு போறோம் அண்ணா",

"எதுக்குடா லைப்ரரி போறீங்க?" 

"Books refer பண்ண போறோம் அண்ணா" 

"நானெல்லாம் கிளாஸ்கே போகமாட்டேன், நீங்க என்னடானா லைப்ரரி போறோம் refer பண்ண போறோம்னும்சொல்றீங்க! போய் வேற வேலை எதும் இருந்தா பாருங்கடா!"  என்று குமார் அவர்களை விரட்டிவிட்டான். சூரியன் இதைப் பார்த்துவிட்டார். இது அவரை வெகுவாகப் பாதித்தது. உடனே குமாரைக் கூப்பிட்டார். ஆனால் குமார் நைசாக நழுவிட்டான்.

ன்று இரவு வீட்டில் வைத்து சூரியன் நெடுநேரம் யோசித்தார். குமாரின் இந்த முறையற்ற போக்கினைத் திருத்தி அவனை நல்ல மாணவனாக, நல்ல மனிதனாக மாற்றுவதற்கு வழிதேடிக் கொண்டிருந்தார். இதற்காக தன்னுடைய நூலகப் புத்தகங்களையே கருவியாக பயன்படுத்தினால் என்ன என்று தோன்றியது. ஆம், அற்புதமான புத்தகங்கள் ஒருவனது வாழ்கையை ஆனந்தமாக மாற்றும் என்பதில் ஆழமான நம்பிக்கை கொண்டிருந்தார் அவர். 

றுநாள் குமாரைக் கூப்பிட்டு அனுப்பினார். அவனும் வேறு வழியின்றி நூலகத்திற்கு வந்தான். 

"தம்பி எந்த கிளாஸ் படிக்கிற?"

"B.A.History - Third year"

"அப்பா என்ன வேலை பார்கிறாங்க?"

"விவசாயம்"

"சரி B.A முடிச்சிட்டு என்ன செய்ய போற ?"

"முதல்ல B.A வை முழுசா முடிச்சிடுறேன் சார்"

"சரி! எனக்காக நீ ஒரு உதவி பண்ணனும்"

"உதவியா?! நான் என்ன சார் உதவி பண்ண போறேன்? ஆள விடுங்க சார்!"   

"எனக்காக ஒரு உதவி மட்டும், நான் இன்று உனக்கு ஒரு புத்தகம் கொடுக்கிறேன். நாளைக்கு வரும்பொழுது நீ அதை மட்டும் வாசிச்சிட்டு வரணும்"   

"சரி சார், கொடுங்க!", என்று தயக்கமான எரிச்சலுடன் புத்தகத்தை வாங்கினான்.

ன்று மாலை வீட்டில் நூலகர் கொடுத்த புத்தகத்தை வேண்டாவெறுப்பாக வசிக்க ஆரம்பித்தான் குமார். ஐந்து ஆறு பக்கங்கள் வாசித்துவிட்டு மூடிவிட வேண்டுமென்று நினைத்தவனால் புத்தகத்தை மூடிவிட முடியவில்லை. அதில் உள்ள வார்த்தைகள் அவனை கட்டிபோட்டன. வாக்கியங்கள் அவனுள் வர்ணஜாலம் புரிந்தன. இரவு முழுவதும் முழித்து அந்தப் புத்தகத்தைப் படித்து முடித்துவிட்டான். அந்தப் புத்தகத்தின் பெயர் 'அக்னிச் சிறகுகள்' , ஆம். Dr.அப்துல் கலாம் அவனுள் ஒரு அதிசிய மாற்றத்தை ஏற்படுத்தியிருந்தார். தன்னுடைய வாழ்க்கைப் பாதையின் மூலம் குமாரின் வாழ்க்கைக்குப் புதுப்பாதை ஏற்படுத்திக் கொடுத்திருந்தார். 

ப்பொழுது குமாரின் மனதினுள் ஒரு தெளிவான குழப்பம் நிலவியது. தான் செய்வது நல்லதா? கெட்டதா? தன்னுடைய வாழ்க்கைப் பாதை எங்கு செல்கிறது? என்றொரு தேடல் அவனிடத்தில் இருந்தது.

ல்லூரியை அடைந்தவுடன் நேராக நூலகரிடத்தில் சென்றான் . தன்னுடைய தவறுகளுக்கு மன்னிப்பு கேட்டான். நூலகரின் நம்பிக்கை வீண் போகவில்லை. அவர் இதனை எதிர்பார்த்திருந்தார். அடுத்ததாக பல அறிஞர்கள் எழுதிய உயர்ந்த புத்தகங்களைக் கொடுத்துப் படிக்கச் சொன்னார். குமார் அனைத்தையும் படித்தான். இப்பொழுது குமாரின் மனது தெளிவடைந்தது. தன் வாழ்க்கைக்கான விடைகளைத் தேட ஆரம்பித்தான். மேலும் மேலும் பல அற்புதமான புத்தகங்களை வாங்கி வாசிக்க ஆரம்பித்தான். நூலகர் அப்படியே கல்லூரிப் படிப்பின் மேல் அவனது கவனத்தைத் திசை திருப்பினார். அவரின் உதவியால் நன்றாகப் படித்து நல்ல மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்று மூன்றாம் ஆண்டை நிறைவு செய்தான்.

ப்பொழுது நூலகர், குமாரை I.A.S தேர்விற்கு தயார் செய்யுமாறு கூறினார். அதற்கான புத்தகங்களையும், பயிற்சியையும், ஊக்கத்தையும் அவரே கொடுத்தார். குமார் படித்தான், படித்தான், படித்துக் கொண்டே இருந்தான். இறுதியாக I.A.S தேர்வில் மாநில அளவில் முதல் தரம் பெற்றான்.

குமார் ஆட்சியர் ஆனவுடன் அவன் படித்த புத்தகங்களும் அதனால் ஏற்பட்ட அனுபவங்களும் அவனது ஆட்சிதிறமைக்கு பக்க பலமாக அமைந்தன. இதன் மூலம் தான் ஆட்சியாளராக இருந்த மாவட்டத்தை இந்தியாவிலேயே ஒரு முன்மாதிரி மாவட்டமாக மாற்றிக் காண்பித்தான். இதெற்கெல்லாம் மூலகாரணமாக விளங்கும் நூலகர் சூரியனை தன்னுடைய மனம் என்னும் கோவிலில் மனித தெய்வமாக வைத்துப் போற்றினான்.

தனால் தான் இன்று சிறந்த மாவட்ட ஆட்சியருக்கான விருதை நூலகரின் கையால் பெறப்போகின்றான். 

தோ! நூலகர் சூரியன் விருதைக் கொடுப்பதற்காக மேடைக்கு வந்துவிட்டார். அவரின் கண்களில் பெருமிதம் பொங்கி வழிந்த்தது.

குமாரின் கண்களிலோ இரு கண்ணீர் துளிகள் எட்டிப் பார்த்தன. அந்த இரு கண்ணீர் துளிகள் சொல்லும் 

"வாசிக்க வாசிக்க வானம் வசப்படும்" என்று.  




சென்னையில் பதிவர் சந்திப்பு - சந்திப்போம் 

சென்னையில் வரும் ஆகஸ்ட் பதினைந்து மூத்த பதிவரான சென்னைப் பித்தன், புலவர் ராமானுசம், வாத்தியார் கணேஷ் மற்றும் கவிஞர் மதுமதி ஆகியோரின் முயற்சியாலும் நமது பங்களிபாலும் பதிவர் சந்திப்பு நடைபெற இருக்கிறது. எழுத்துகளால் மனம் கவரும் நண்பர்களே, உங்களை நேரில் சந்திக்கவும் ஆசை. முடிந்தால் என்று சொல்வதை விட முயன்றால் கண்டிப்பாக இச்சந்திப்பில் கலந்து கொள்ளலாம். கலந்து கொள்ளுங்கள். இதை பற்றிய அறிவிப்புகள் மற்றும் அழைப்புகள் வரப் போகும் என் ஒவ்வொரு பதிவின் இறுதியிலும் தவறாது இடம்பெரும் சந்திப்பில் நீங்கள் தவறாது இடம் பெற வேண்டுமென்பதற்காக.

20 Jun 2012

சென்னையில் ஓர் ஆன்மீக உலா


ரு சிறிய தன்னிலை விளக்கத்துடன் இந்தப் பதிவை தொடங்குகிறேன். பக்தியும் ஆன்மீகமும் கோவிலும் வழிபாடும் பிடிக்கும் என்றாலும் கோவில்களை ஆராய்ந்து அங்கிருக்கும் தெய்வ உப தெய்வங்களின் சிறப்புகளை விரிவா எடுத்துரைக்கும் அளவிற்கு திறமையும் ஆன்மீக ஞானமும் எனக்குக் கிடையாது. இருந்தும் எதற்குமே ஒரு தொடக்கம் வேண்டுமென்பதால் இது என் முதல் ஆன்மீகப் பதிவு.

எண்ணங்களுக்கு உயிர் உண்டு என்று நம்பும் பலரில் நானும் ஒருவன், அந்த எண்ணங்களை நேர்மறை எண்ணங்களாக மாற்றுவதில் ஆன்மீகம் மட்டுமே பெரும்பங்கு வகிக்கிறது. நிம்மதியை மனநிறைவை ஆறுதலைத் தேடும் மனிதனின் மனபலத்தை அதிகரிக்கச் செய்யும் ஒரு சிறந்த கருவி என்ற அளவில் மட்டுமே பக்தியைப் பார்த்தோமானால் நம்முள் இருக்கும் சக்தியை முறையாக வெளிப்படுத்தலாம். 

ன்னுடைய ஊரிலும் கிராமபுரங்களிலும் நான் பார்த்த பக்திக்கும்,  சென்னையில் நான் பார்க்கும் பக்திக்கும் நிறையவே வித்தியாசம் உள்ளது. எங்கள் ஊரில் நடைபெறும் திருவிழாக்களில் அதிகபட்ச பக்தியாக நான் பார்த்திருப்பது பூ மிதித்தலும் (தீ மிதித்தலும்) பூச்சட்டி (தீச்சட்டி) எடுத்தலும் மட்டுமே. வாயில் பெரிய பெரிய அலகு குத்துவதையும், முதுகில் துளை போட்டு டாட்டா சுமோ  இழுபதையும், இரண்டு மூன்று பேர் செர்ந்து வேன் இழுபதையும் இங்கு தான் நான் கண்டேன். இதன் பின்னணியில் இருக்கும் பக்தியின் அளவை ஆராய்ச்சி செய்யும் எண்ணம் எனக்கு இல்லை. 
கண்மூடி கடவுளைத் தேடு கண்மூடித் தனமாக கடவுளைத் தேடாதே 
என்று யாரோ ஒரு சித்தர் கூறியதை மனத்தில் நிறுத்தி வாருங்கள் சென்னைக்குள் ஓர் ஆன்மீக உலா செல்வோம்.

ருகில் மெரினா இருப்பதால் சென்னைக்கு வரும் அநேகம் பேர் செல்லும் ஓர் வழிபாட்டுத் தலம், திருவல்லிக்கேணி பார்த்தசாரதி திருக்கோவில். பாரதப்போரில் பார்த்தனுக்கு சாரதியாக இருந்த பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் இங்கும் பார்த்த சாரதியகவே காட்சியளிக்கிறார். கையில் ஆயுதம் ஏதும் ஏந்தாமல், கவச உடை ஏதும் அணியாமல் சாரதியாக பாரதப் போருக்குச் சென்றதால் போரில் அவர் பெற்ற காயத்தின் தழும்புகளை முகத்தில் காணலாம். முறுக்கு மீசையுடன் கம்பீரமாக போர் வீரனைப் போலவே காட்சியளிக்கும் இந்த பார்த்தசாரதி பறக்கும் ரயில் நிலையம் மற்றும் கண்ணகி சிலை பேருந்து நிறுத்தத்தில் இருந்து நடந்து செல்லும் தொலைவிலேயே வீற்றுள்ளார்.

திருநீற்றின் மகிமையையும் நமச்சிவாய மந்திரத்தின் பெருமையையும் எடுத்துரைக்குமாறு சிவபெருமானிடம் பார்வதி கேட்டதற்கிணங்க, சிவபெருமானும் எடுத்துகூற ஆரம்பித்தார். இநேரத்தில் அங்கே நடனமாடிக் கொண்டிருந்த மயிலின் அழகில் மெய்மறந்த தேவி சிவபெருமான் கூறும் விளக்கத்தைக் கவனிக்கத் தவறினார். இதனால் கோபம் கொண்ட பெருமான் பூமியில் மயிலாகப் பிறந்து என்னை வணங்குவாயாக என்று சாபம் கொடுத்துவிட்டார். சாபத்திற்கு கட்டுப்பட்ட தேவியும் புன்னை மரத்தடியில் லிங்கம் அமைத்து வழிபட்டு வந்தார்.

வத்தில் மெச்சிய பெருமானும் தேவியின் சாபம் நீக்கி அவ்விடத்திற்கு திருமயிலை என பெயர் சூட்டினர் என்று ஒரு வரலாறும், சிவபெருமானைப் போல் தானும் ஐந்து தலை உடையவன் என்று கர்வம் கொண்ட பிரம்மாவின் கர்வம் களைய அவரின் ஐந்து தலைகளில் ஒன்றினைக் கொய்து தன் கைகளில் கபாலம் ஏந்தியதால் கபாலீஸ்வரனாக காட்சியளிக்கிறார் என்றும் மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலின் தலவரலாறு கூறுகிறது. இத்தலத்திற்கு சென்று வார பேருந்து நிறுத்தம் மட்டுமே அருகில் உள்ளது. இங்கு நடைபெறும் அறுபத்துமூவர் உலா பிரசித்திப்பெற்றது. இவரைப் பற்றி மேலும் தெரிந்துகொள்ள இங்கு கிளிக்குங்கள்.

தென்காசி, நெல்லை, மதுரை பகுதிகளில் பாண்டிய மன்னர்கள் கட்டிய பிரமாண்டமான கோவில்களைப் பார்த்து வளர்ந்த எனக்கு சென்னையில் உள்ள கோவில்கள் அனைத்தும் அளவில் மிகச் சிறியதாகவே தெரிகிறது. ஓரளவிற்குப் பெரிய கோவிலைக் காண வேண்டுமென்றால் நாம் செல்ல வேண்டிய இடம் திருவள்ளூர் வீரராகவப் பெருமாள் கோவில். இங்கு சயனத்தில் வீற்றிருக்கும் பெருமாளைப் பார்பதற்கே அவ்வளவு ரம்மியமாக இருக்கும். கோவிலின் அருகே மிகப் பெரிய தெப்பகுளம் ஒன்றும் அமைந்துள்ளது. இந்தக் கோவிலின் அருகிலேயே தீர்தேஸ்வரர் என்ற பெயரில் சிவனும் காட்சியளிக்கிறார் அங்கும் தவறாது சென்று வாருங்கள். 

வீரராகவப் பெருமாளின் தலபுராணத்தை தன் மின்னல் வரிகளால் எழுதியிருக்கும் கணேஷ் சார் அவர்களின் பதிவைப் படிக்க இங்கு சொடுக்குங்கள். இதே திருவள்ளூர் மாவட்டத்தில் தான் அறுபடை வீடுகளில் ஒன்றான திருத்தணி முருகன் கோவில் உள்ளது. கோயம்பேடு மற்றும் திருவள்ளூரில் இருந்து திருத்தணி சென்று வர பேருந்து வசதி செய்து தரப்பட்டுள்ளது. ரயில் வசதி கொஞ்சம் குறைவு .திருத்தணி முருகனை தரிசித்து விட்டு மேலும் மூன்று மணிநேரம் பயணித்தீர்கள் என்றால் திருப்பதி ஏழுமலையானையும் தரிசித்து விடலாம் என்பது கூடுதல் தகவல்.

திருநின்றவூரில் பகதவட்சலப் பெருமாள் கோவில் உள்ளது வருகிறாயா என்று கேட்டார் என் தந்தை, செல்லலாமா வேண்டாமா என்று யோசித்துக் கொண்டிருக்கும் போதே அங்கிருக்கும் என்னை பெற்ற தாயாரை தரிசித்து வரலாம் கிளம்பு என்றார். சற்றே வித்தியாசமாய் இருந்த தாயாரின் பெயர் எனக்குப் பிடித்துப் போகவே மறுக்காமல் கிளம்பி விட்டேன் . அங்கு சென்றதன் பின் தான் தெரிந்தது அக்கோவில் 108 திவயதேசங்களில் ஒன்று என்று. ரயில் நிலையத்தில் இருந்து ஆட்டோவில் மட்டுமே செல்ல முடியும். பேருந்து வசதி மிகக் குறைவு.இக்கோவிலின் வரலாற்றை என்னை விட இவர் தெளிவாக எழுதி உள்ள காரணத்தால் இங்கே கிளிக்கி படிக்கவும்.

திருமுல்லைவாயில் பேருந்து நிறுத்தம் அருகில் இருக்கும் பச்சையம்மன் கோவில் மிகவும் பிரசித்தி அம்மன் கோவில்களில் ஒன்று. இங்கு வழங்கப்படும் குங்குமும் கயிறும் பச்சை நிறத்திலே இருப்பது கூடுதல் சிறப்பு. ராகவா லாரன்ஸ் எழுப்பி இருக்கும் ராகவேந்திரர் கோவில் இருப்பதும் இதே திருமுல்லைவாயிலில் தான். எனக்கு மிகமும் பிடித்த அமைதியைத் தரக் கூடிய ஆலயங்களில் இதுவும் ஒன்று. ராகவேந்திரருக்கு நாமே தீபாராதனை செய்யும் வாய்பு உண்டு. ராகவேந்திரரைப்  பார்த்த வண்ணம் தியானம் செய்ய இடவதியும் உண்டு.

ராகவேந்திரர் சிலையின் மாதிரியை சூப்பர் ஸ்டார் ரஜினியிடம் சென்று காண்பித்த லாரன்சிடம் ரஜினி கூறியது, ராகவேந்திரர் மிகப் பெரிய மகான், யோகா தியானங்களின் மூலம் உடலை கட்டுக்கோப்பாக வைத்திருப்பார் அவருக்கு தொந்தி இருக்காது என்று கூறியதோடு நில்லாமல் அவரிடமிருந்த ராகவேந்திரரின் மாதிரியை கொடுத்து உதவி இருக்கிறார். அந்த மாதிரியின் வடிவமாய்த் தான் ராகவேந்திரர் இங்கு காட்சியளிக்கிறார். 

திநகர் வெங்கட் நாராயணா சாலையில் திருமலை திருப்பதி தேவஸ்தானம் கட்டியிருக்கும் வெங்கடேசப் பெருமாள் கோவில் உள்ளது. திருப்பதி சுவாமி தரிசனத்திற்காக கைரேகை மூலம் முன்பதிவு செய்யும் மையமும் இங்கு இயங்கி வருகிறது. மேலும் மதத்தின் முதல் ஞாயிறு அன்று இங்கே திருப்பதி லட்டு விற்பனை செய்யப் படுகிறது. அதை வாங்குவதற்கும் பெருங்கூட்டம் காத்திருக்கும். மா என்றால் பெரிய, சிவபெருமான் இங்கே  மா அம்பலத்தில் ஆடுவதால் இந்த ஊருக்கு மாம்பலம் என்று பெயர். மாம்பலம் பேருந்து நிலையதீன் மிக அருகில் சிவனும் விஷ்ணும் சேர்ந்து இருக்கும் சிவவிஷ்ணு ஆலயம் உள்ளது. 

ம்பதாயிரம் முதல் ஐம்பது லட்சம் வரை எவ்வளவு செலவழித்து வண்டி வாங்கினாலும் அதை RTOவிற்கு எடுத்துச் செல்வார்களோ இல்லையோ மறக்காமல் பாடிகாட் முனீஸ்வரனிடம் பூஜை போட எடுத்து வந்துவிடுவார்கள். பல்லவன் ஹவுஸ் பக்கத்தில் மிக மிக சிறிய அளவில் இருக்கும் இக்கோவிலில் கூடத்திற்குப் பஞ்சமே இருக்காது. காவல் தெய்வமான  முனீஸ்வரன், BODYGUARD முனீஸ்வரன் ஆனது சென்னைத் தமிழனின் தமிழ்ப் பற்றாக இல்லாமல் வேறு என்னவாக இருக்க முடியும்.(பல்லவன் ஹவுஸ் என்பது சென்னை மாநகரப் பேருந்து டிப்போவின் தலைமையகம்)  

பெசன்ட் நகர் கடற்கரையின் அருகில் அஷ்ட லக்ஷிமிகளைக் கொண்டு வீற்றிருக்கும் அஷ்ட லக்ஷ்மிக் கோவில் மிகவும் சிறப்பு வாய்ந்தது. இந்தக் கோவிலில் இருந்து கடலைப் பார்பதற்கும் மிக மிக அழகாக இருக்கும். கோவிலில் கும்பாபிஷேக வேலைகள் நடப்பதால் மூலவரையும் அஷ்ட லக்ஷ்மிகளையும் தரிசிக்க முடியாது. தையும் மீறின என்னையொப் போல் ஆவலுடன் சென்றீர்கள் என்றால் உற்சவ மூர்த்தியை மட்டுமே தரிசித்து வர வேண்டி இருக்கும். 

புட்லூர் திருவேற்காடு மாங்காடு பெரியபாளையத்தம்மன் காளிகாம்பாள் என்று அம்மன் கோவில்களுக்கு இங்கு பஞ்சமே இல்லை . நெல்லை மாவட்டத்தில் மாரியம்மனும் இசக்கியம்மனும் பெச்சியம்மனும் அதிகம் இருபது போல் சென்னையில் சின்னம்மனும் செல்லியம்மனும் பொன்னியம்மனும் அதிகம். வடபழனி முருகன் கோவில், அண்ணா நகர் அய்யப்பன் கோவில், குன்றத்தூர் முருகன் கோவில் இவை நான் நெடுநாட்களாக செல்ல நினைக்கும் கோவில்கள். விரைவில் சென்று தரிசனம் பெற அந்த இறைவன் தான் அருள் புரிய வேண்டும்.

சாந்தோம் பரங்கிமலை தேவாலயங்கள், ஆயிரம் வில்லுக்கு மசூதி பிரசித்திபெற்றவை. தேவலாயங்களும் தர்காகளும் அதிகம் என்பது கூடுதல் தகவல்.


சென்னையின் ஆன்மீக உலாவில் தவறு இருந்தாலோ, தவறாகக் கூறியிருந்தாலோ எடுத்துச் சொல்லுங்கள் திருத்திக் கொள்கிறேன். தவறாமல் உங்கள் கருத்துகளை உதிர்த்துவிட்டுச் செல்லுங்கள்.  

15 Jun 2012

நாடோடி எக்ஸ்பிரஸ் - தமிழ்நாடு டூரிசமும் மேனரிசமும்




ரு வழக்கமான வெள்ளிக் கிழமை மாலையில் சென்னை மருத்துவக் கல்லூரியில் பயிலும் சித்தப்பா மகளான என் தங்கையிடம் இருந்து போன் வந்தது, "நாளைக்கு ஊர்ல இருந்து அம்மா அத்தை எல்லாரும் வராங்க, சனி கிழமை மாமல்லபுரம், ஞாயிறு ரங்கநாதன் தெரு, ஞாயிறு  சாயங்காலமே ஊருக்கு கிளம்புராங்க". அவள் இப்படி சொல்லியதும் மூன்று பேர் கொண்ட குழு கூடியது, குழுவில் இடம் பெற்றவர்கள் நான், என் அண்ணன் மற்றும் தங்கை. எப்படி செல்வது என்று முடிவெடுக்க ஆரம்பித்தோம். பாஸ்ட் ட்ராக் பிரண்ட் ட்ராக் என்று கூகிள் தேடிக் கொடுத்த எல்லா ட்ராக்கிலும் விசாரித்தோம், நூறு கி.மீ சென்று வர  மூன்றாயிரம் ருபாய் கேட்டனர் அதற்கு மேல் செல்லும் கி.மீ க்கு அதிகமான பணம் கேட்டனர், ஆவடியிலிருந்து நூறு கி.மிக்கும் அதிகமான தூரத்தை கூகிள் மாப் காட்டியதால் அந்த திட்டத்தை கைவிட்டுவிட்டோம்.   

வேண்டுமென்றால் ஐம்பது ருபாய் டிக்கெட் எடுத்து போய் வரலாம் என்று சீப்பான ஒரு ஐடியா குடுத்தேன், இந்தியாவில் மலிவான ஐடியாக்கள் தான் மதிக்கப் படுவதில்லையே. அதனால் அந்தத் திட்டமும் கைவிடப்பட்டது. ( ஐம்பது ருபாய் டிக்கெட் என்பது சென்னை மாநகரப் பேருந்தில் பயணம் செய்வதற்கான ஒரு நாள் பயணச் சீட்டு, .சி தவிர மற்ற எல்லா பேருந்துகளிலும் பயணிக்கலாம்). தமிழ்நாடு டூரிசம் வழங்கும் ஒருநாள் மாமல்லபுர இன்பச் சுற்றுல்லா திட்டத்தின் மூலம் சென்று வரலாம் என்ற முடிவில் டூரிசம் வலைதளத்தை திறந்தோம். திறந்தால் ஆச்சரியம். சனி கிழமைக்கான சுற்றுல்லாப் பேருந்தில் வெறும் இரண்டு நபர் மட்டுமே முன்பதிவு செய்திருந்தனர்.

மிழனின் வழக்கமான சந்தேகம் தலை தூக்கியது, யாருமே முன்பதிவு செய்யவில்லை என்றால் 'சர்வீஸ் கேவலமாக இருக்கும் போல எதுக்கும் விசாரிப்போம்' என்று கூகுளிடம் முறையிட்டோம், எங்கள் மேல் என்ன கோபமோ சரியான தகவல்களைத் தர மறுத்தது. வலைபூவிலும் தேடினேன் தகவல் கிடைக்கவில்லை, சரி நம்பிக்கை தானே வாழ்க்கை என்ற ஒரு நம்பிக்கையில் அடுத்த நாள் பயணத்திற்கான முன்பதிவை வெற்றிகரமாக செய்து முடித்தோம். அந்த நொடியில் தெரியாது நாளை சந்திக்கப் போகும் விபரீதத்தின் விஸ்வரூபம் எப்படி இருக்கும் என்று

டுத்த நாளின் ஆரம்பம் சூரியனின் வெற்றிகரமான சுழற்சியால் புலர ஆரம்பித்தது. சென்னை சேப்பாக்கம் வாலாஜா சாலையில் இருக்கும் டூரிசத்தின் தலைமை அலுவலகம் செல்ல மின்ரயில் ஏறி அமர்ந்தோம், ரயில் கிளம்பிய தருணத்தில்  சுற்றுலாவின் முதல் அணு ஆயுதத்தை எறிந்தான் என் தமையன். 'டிக்கெட் பிரிண்ட் அவுட்ட வீட்டிலையே மறந்து வச்சிட்டு வந்துட்டேன்' என்றான். வேறு வழியில்லை திரும்பி சென்று எடுத்து வர நேரமும் இல்லை. அவர்கள் அனுப்பிய குறுந்தகவல் உள்ளது சமாளித்துக் கொள்ளலாம் என்று சமாதனம் செய்து கொண்டோம்.       

ரியான நேரத்திற்கு டூரிசம் வந்து சேர்ந்தோம், ஆடிக் கொண்டு இருக்கும் என்று நினைத்தால், அங்கே சரியான கூட்டம், வெளிநாட்டுப் பயணிகளும் அதிகமாக இருந்தனர். டிக்கெட் எடுத்து வர மறந்து விட்டோம் என்ற எங்களை சுட்டெரிப்பது போல் பார்த்தார் அந்த சீனியர் ஆபிசர், டிக்கெட் இல்லாமல் எதுவும் செய்ய முடியாது, மேலும் உங்கள் பெயர் பயணிகள் லிஸ்டில் வரவே இல்லை, டிக்கெட் கொண்டு வா என்று கோபத்தில் கத்த ஆரம்பித்தார். வேறு வழியில்லை வாலாஜா சாலையில் வலம் வர வேண்டுமென்று அக்னி தேவன் விரும்பி விட்டான் போல் கொளுத்தும் பத்து மணி வெயிலில் அண்ணனுடன் சேர்ந்து சுற்ற ஆரம்பித்தேன். ( சுற்றுல்லாப் பேருந்து புறப்படும் சரியான நேரம் மணி பத்து என்பது கூடுதல் தகவல்)  ஒரு வழியாய்  இணைய உலவி மையத்தைக் கண்டுகொண்டோம். அங்கே அடுத்த மின்அதிர்ச்சி வரவேட்றது. அந்த தொழிலதிபர் 'கரென்ட் இல்லப்பா அப்பால வா' என்றான் தன்கையில் இருந்த தற்காலிக விசிறியை விசிறிக் கொண்டு

நிலைமையை டூரிசதில் இருந்த அந்த சீனியர் ஆபிசரிடம் விளக்கினோம், அவர் எங்களைக் கண்டு கொள்ளவே இல்லை. தங்கையின் ஆண்ட்ராய்ட் கைபேசி மூலம் டிக்கெட்டை தரவிறக்கம் செய்து கைபேசி வழியாகவே காண்பித்தோம். பின்பு தான் அவர் விஷயத்தை தெளிவாக்கினார். முன்பதிவு செய்ய உதவும் வலைதளம் ஒழுங்காக வேலை செய்யாதாம், மேலும் பயணிக்க இருக்கும் இரண்டு நாட்களுக்கு முன்பே முன்பதிவு நிறுத்தப் பட்டுவிடும் உங்களால் மட்டும் எப்படி பதிவு செய்ய முடிந்தது என்று எங்களுக்கே தெரியவில்லை      என்று புலம்ப ஆரம்பித்தார். இதில் மற்றுமொரு கொடுமை என்னவென்றால் அங்கு வேலைபார்பவர்கள் அனைவருக்கும் போன் வந்தவண்ணம் இருந்தது, எங்கள் பிரச்சனையை கண்டுகொள்ள அவர்களுக்கு நேரம் இல்லை. நாங்கள் செல்ல வேண்டிய பேருந்து வேறு கிளம்பிவிட்டது, இனி பேருந்தும் கிடையாது

காபலிபுரம் போனது போகட்டும் ஆறு பேறுக்காக செலுத்திய பயணத் தொகை இரண்டாயிரம் ரூபாய்க்கு விடை என்ன? இவர்கள் இறுதியாக ஒரு பதில் சொன்னால் வேறு எங்காவது செல்லலாம், இப்போது அதற்கும் வழி இல்லை. கேள்விகள் மட்டுமே எங்களிடம் விடை அவர்களிடம், விடை தர வேண்டியவர்கள் எங்களைத் தவிர மற்ற எல்லாருக்கும் விடை கொடுத்துக் கொண்டிருந்தனர். கோபம் எல்லையைக் கடந்து விட்டது, எங்கள் பிரச்சனையை யாரோ ஒரு உயரதிகாரியுடன் போனில் தெரிவித்துக் கொண்டிருந்தார். அதனால் மீண்டும் காத்திருக்க ஆரம்பித்தோம். காரணம் அவர்களுக்கும் என்ன முடிவெடுப்பது என்றே தெரியவில்லை.  பதினோரு மணிக்கு எங்களிடம் வந்தார் "கார் வர சொல்லியிருகோம், நீங்க அதில் போகலாம்" என்றார். முதல் முறையாக அவர் புன்னகைத்தது அப்போதுதான்.         

ரி எப்படியோ கார் ஏற்பாடு செய்து கொடுத்தார்களே அது வரைக்கும் சந்தோசம். நாம் செலுத்திய தொகைக்கு அதிகமாக கேட்டாலும் கொடுத்துவிடலாம் என்ற நிலைக்கு வந்துவிட்டோம். அவர் கூறியதிலிருந்து அரைமணி நேரம் கழித்து 'கார் வந்துவிட்டது நீங்கள் செல்லலாம்' என்று கூறினார். வெளியில் சென்று பார்த்த எங்களுக்கு இன்ப அதிர்ச்சி.

மிழ்நாடு அரசாங்கத்திற்கு சொந்தமான அரசாங்க சுமோ அது. அதிஷ்டம் எங்களை அரசாங்க விருந்தினர்களாக மகாபலிபுரம் சுற்றுல்லாவிற்கு அழைத்துச் செல்ல தயாராக்கியது. அந்த வாகனத்தின் ஓட்டுனரும் குடும்ப நண்பரைப் போல் எங்களிடம் பழகினார். சுற்றுல்லாத் துறையில் வேலை பார்ப்பதால் பல தெரியாத புது தகவல்களையும் எங்களிடம் பகிர்ந்து கொண்டே வந்தார். கிழக்குக் கடற்கரைசாலையில் இருக்கும் சுங்கச் சாவடிகளிலும் சுற்றுல்லா இடங்களில் வாகனம் நிறுத்துவதற்கான தொகையையும் அவர் செலுத்தவே இல்லை, காரணம் நாங்கள் பயணிப்பது தான் அரசாங்க வாகனமாயிற்றே. மதிய சாப்பாடு நாங்கள் வீட்டிலிருந்தே எடுத்து வந்ததால், சாப்பிடுவதற்காக ஹோட்டல் தமிழ்நாடு உணவகத்தில் இருக்கும் பூங்காவிற்கு அழைத்துச் சென்றார். சென்னைக்குத் திரும்பியதும் சென்ட்ரல் ரயில் நிலையம் வரை வந்து இறக்கிவிட்டு தான் சென்றார். நாங்கள் எதிர்பார்க்காததை விட மிக உற்சாகமான பயணமாக அமைந்தது இந்த மாமல்லபுர இன்பச் சுற்றுல்லா.    
   
பின் குறிப்புக்கள் 

திருவான்மியூர் மருந்தீஸ்வரர் கோவிலில் இருந்து ஆரம்பித்து மகாபலிபுரம் வரை சென்று மீண்டும் உங்களை வாலாஜா சாலையிலேயே இறக்கி விடுவார்கள். செலும் வழியில் பத்திற்கும் மேற்பட்ட இடங்களுக்கு கூட்டிச் செல்கிறார்கள்

சிறப்பான பயண ஏற்பாடுகளை செய்வதால் எப்போதும் கூட்டம் அதிகமாக இருக்கும்.  டூரிசம் மூலம் செல்வதால் நுழைவுக் கட்டணங்களில் சிறப்புச் சலுகையும் உண்டு.  

குளிரூட்டப்பட சிற்றுந்தில் தான் பயணம், அதனால் சென்னை வெயில் உங்களைத் தாக்காது. காஞ்சிபுரம் பாண்டிச்சேரி திருப்தி போன்ற இடங்களுக்கும் சுற்றுல்லா ஏற்பாடுகள் உண்டு. திருப்தியில் சனிகிழமை தவிர மற்ற எல்லா நாட்களிலும் சிறப்பு தரிசனம் செய்ய வசதிகள் உண்டு.      

நேரமிருந்தால் சென்று வாருங்கள் தமிழ்நாடு டூரிசமும் மேனரிசமும் நன்றாகவே உள்ளது