30 Aug 2013

வழிகாட்டி - பதிவர் சந்திப்புக்கு வரவிருக்கும் வெளியூர் நண்பர்கள் கவனத்திற்கு


பிராட்வே, சென்ட்ரல், எக்மோரில் இருந்து வடபழனி வருவதற்கு :

பேருந்து எண் : 17M, 17E. M17M       

அனைத்து பேருந்துகளும் பிராட்வேயில் இருந்து சென்ட்ரல் எக்மோர் வழியாக வடபழனிக்கோ, இல்லை வடபழனி கடந்தோ செல்லக் கூடியவை.

17E (பிராட்வே - சாலிகிராமம்) மண்டபம் மற்றும் லாட்ஜ் இருக்கும் நிறுத்தத்தில் நிற்கும், வடபழனி டிப்போவிற்கு அடுத்த நிறுத்தம்.

குறிப்பு :  17M, 17E. M17M  தவிர்த்து வேறு 17 சீரிஸ் பேருந்துகள் ஏற வேண்டாம். பேருந்துகள் அடிகடி உள்ளன.

கோயம்பேடில் இருந்து வடபழனி வருவதற்கு :

பேருந்து எண் : 70A, M70A, G70, D70 மற்றும் M27

கோயம்பேடில் இருந்து கிண்டி தாம்பரம், வேளச்சேரி, திருவான்மியூர், வண்டலூர் செல்லும் அனைத்து 70 (70A, M70A, D70, G70) சீரிஸ் பேருந்துகளும் வடபழனி செல்லும். 

குறிப்பு கோயம்பேடில் பேருந்து ஏறும்போது கவனமாய் இருக்கவும், காரணம்  நீங்கள்;ஏறக் கூடிய பேருந்து கிண்டி, தாம்பரம் வழியாக செல்வதாக இருக்க வேண்டும், அங்கிருந்து வேறு இடங்களுக்கு செல்வதாக இருக்கக் கூடாது.      

70சீரிஸ் பேருந்துகள் அனைத்தும் நூறடி ரோடில் இருக்கும் வடபழனி பேருந்து நிறுத்தம் வழியாக செல்லும், அங்கிருந்து நடக்க வேண்டும் காரணம் இவை வடபழனி டிப்போ செல்லாது.  

மற்றொரு குறிப்பு : திருவேற்காடில் இருந்து தி.நகர் செல்லும் பேருந்தான M27 வடபழனி டிப்போ செல்லும் ஆனால் அரை மணி நேரத்திற்கு ஒரு பேருந்தே உள்ளது.

தாம்பரத்தில் இருந்து வடபழனி வருவதற்கு : 

பேருந்து எண் : 70A, M70A, G70 மற்றும்  M18M

அனைத்து 70 சீரிஸ் பேருந்துகளும் (கோயம்பேடு, ஆவடி, ரெட்ஹில்ஸ்) வடபழனி பேருந்து நிறுத்தம் வழியாக செல்லும், (டிப்போ செல்லாது). 

தாம்பரத்தில் இருந்து M18M பேருந்து மட்டும் வடபழனி டிப்போ செல்லும், எண்ணிக்கை குறைவு.

மாம்பலத்தில் இருந்து வடபழனி வருவதற்கு :

பேருந்து எண் : ஹைப்பொதட்டிகல் :-)

சென்னைக்கு புதியவர்கள் மாம்பலத்தில் இறங்குவதைத் தவிர்த்து எக்மோர் செல்வது நலம்.

ஒருவேளை இறங்கினால், அடுத்த மின்தொடர் வண்டி ஏறி கோடம்பாக்கம் சென்று, அங்கிருந்து லிபர்டி நிறுத்தம் வரை நடந்து பின் எக்மோரில் இருந்து வரும் 17M, 17E. M17M பேருந்துகளையோ அல்லது 12B, 25G பேருந்துகளையோ உபயோகிக்கவும்.

அல்லது பொடிநடையாக மாம்பலம் ரயில் நிலையத்தில் இருந்து தி.நகர் பேருந்து நிலையம் நடந்தால் தி.நகரில் இருந்து திருவேற்காடு செல்லும் பேருந்தான M27 வடபழனி டிப்போ செல்லும் ஆனால் அரை மணி நேரத்திற்கு ஒரு பேருந்தே உள்ளது.                           

வடபழனி டிப்போவில் இருந்து லாட்ஜ் மற்றும் மண்டபம் செல்வது 

பேருந்து எண் : நடராஜா சர்வீஸ் (ஆள்(ல்) டைம்)  

வடபழனி டிப்போவில் இருந்து  சில நிமிட நடையில் மண்டபம் வந்துவிடும், இசைகலைஞர்கள் சங்க மண்டபம் என்றால்  தெரியும். மேலும் அங்கிருந்து AVM ஸ்டுடியோ வழிகேட்டு நடந்தால் ஸ்டுடியோ எதிர்புறம் செல்லும் கெங்கப்பா தெருவில் இருக்கிறது மசாபி லாட்ஜ் இங்கு தான் பதிவர்கள் தங்குவதற்கு அறை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 

முகவரி 

Masafi Guest House
No. 5, Gangappa Street, (Opp. to AVM Studio) Vadapalani,
Chennai - 600026.
Ph: 044 - 42136173 / 23766173 / 23766174

பதிவர் சந்திப்பு நடைபெறும் இடம் 

திரை இசைக்கலைஞர்கள் சங்கம், 297 ஆற்காடு ரோடு, வடபழனி, சென்னை - 
26. கமலா தியேட்டர் அருகில்.

நாள்: செப் 1. நேரம்: காலை 9 முதல் மாலை 5.30 வரை. 




மேலும் உங்களுக்கு ஏதேனும் சந்தேகம் இருப்பின் 

அதிகாலை ஐந்து மணி முதல் 10 மணி வரை 

தொடர்புக்கு 

சீனு        : 9940229934
அரசன்  : 9952967645
ரூபக்     : 8148915596

10 மணிக்கு மேல் தொடர்புக்கு 

சிவா      : 9841611301
சீனு        : 9940229934
ரூபக்     : 8148915596

விளம்பரம் :-)

எனது சமீபத்திய சிறுகதை : அம்முவும் அகாலமும் 

தமிழ் வலைப்பதிவர் குழுமம் உங்களை அன்புடன் வரவேற்கிறது. உங்கள் அனைவரின் வருகையையும் ஆவலுடன் எதிர்பார்த்து 

சீனு 

29 Aug 2013

அம்முவும் அகாலமும் - சிறுகதை


ஒரே நேரத்தில் பல கைகள் என்மீது படர்வது போன்ற ஒரு உணர்வு, அத்தனை கைகளின் தொடுகையும் அம்முவை நினைவுபடுத்தின. இவ்வளவு மிருதுவாக இதமாக அவளைத் தவிர வேறு யாராலும் தொட முடியாது. ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கையில்  அம்மு என்னை எழுப்புகையில், தோகை விரித்தாடும் மயில் ஒன்று தனது பீலிகளைக் கொண்டு இதமாய் வருடினால் எத்தனை இன்பம் கொடுக்குமோ அப்படி இருக்கும் அம்முவின் இதமான வருடல்கள்

பழையமகாபலிபுரம் சாலை. உயிர்ப் பலிக்களுக்குச் சற்றும் பஞ்சமில்லாத பரபரப்பான சாலை. அலுவலகம் செல்ல உபயோகிக்கும் இந்த சாலையில் பல நேரங்களில் பல சடலங்கள் அனாதையாக்கப் பட்டிருப்பதையும், அதைச் சுற்றி ஒரு கூட்டம் கூடியிருப்பதையும், அனிச்சையாய் பார்த்துக் கொண்டே கடப்பதுண்டு.

அலுவலகம் சென்று கொண்டிருக்கும் அன்றைய நாளின் பகற்பொழுதில் நானும் அடிபட்டு விழுவேன் என்று நிச்சயமாய் நம்பவில்லை. போன் பேசிக்கொண்டே பைக்கை ஓட்டிய கிறுக்கன் திடிரென்று நிலைதடுமாறி கீழே விழ, அவசரகதியாய் நானோ என் பிரேக்கை அழுத்த, பின்னால் வேகமாய் வந்த கார் என் மீது இடித்து சடுதியில் நான் மிதக்கத் தொடங்கியிருந்தேன். 

கழுத்தை ஒருபக்கமாய் சாய்த்துக் கொண்டே வண்டி ஒட்டியவன் தாறுமாறாக தடுமாறியதும், பின்னால் வந்த காரின் டயர் தேய்ந்து கறுகும் வாடையும் நியாபகம் உள்ளது. ஆனால் அதற்குப் பின் நான் என்ன ஆனேன். நானும் பலமுறை யோசித்துப் பார்த்துவிட்டேன், இதுவரையிலான சம்பவங்கள் மட்டுமே என் நியாபகத்தில் வந்து செல்கின்றன.  

சுற்றிலும் தடித்த மவுனம், இருளையும் வெளிச்சத்தையும் பிரித்துப் பார்க்கத் தெரியாத குழப்பம். பேரிரைச்சல், பெரும்அமைதி. எனக்கு நேர்ந்தது விபத்தா இல்லை ஆழ்மனதில் என்னை அறியாமல் என்னுள் நிகழ்ந்து கொண்டிருக்கும் பெருங்கனவா? 

அம்மு? அம்மு எங்கே? அம்முவை உடனே பார்க்க வேண்டும். கனவு தான். கெட்ட சொப்பனம் தான். கனவு களைய வேண்டும், சட்டென எழுந்திருக்க வேண்டும். அம்மு தேடுவாள். அம்முவைப் பார்க்க வேண்டும். எழுந்திருக்க நினைத்தும் எழ முடியவில்லை. என்னை யாரும் கட்டிப் போடவில்லை, ஆனால் எழுந்திருக்கவும் முடியவில்லை.   

என்னுள் பொதிந்திருக்கும் வேறு நியாபகங்களை நினைவுபடுத்திப் பார்க்க முயன்றேன். அம்மு. அம்முவைத் தவிர வேறு எதுவும் நியாபகத்தில் இல்லை.

அலுவலகம் கிளம்பும் அவசரத்தில் அம்முவிடம் முத்தம் பெற மறந்த நாட்களில் என்னை விட அதிகம் துடித்துப் போவது அவளாகத் தான் இருக்கும். நான் எப்போதும் அவளுடனேயே இருக்க வேண்டும். அவளுக்காகவே இருக்க வேண்டும். அம்முவைப் பொறுத்தவரையில் நான் ஒரு கைப்பாவை... அவளுக்கு மிகவும் பிடித்த விளையாட்டு பொம்மை... உயிருள்ள உணர்வுள்ள விளையாட்டு பொம்மை. 

எப்போதும் ஏதாவது கேட்டுக் கொண்டே இருப்பாள் 

"அப்பா" தன்னுடைய பிஞ்சு விரலை என் வலது கையின் மீது பதித்து என்னை அழைத்தாள்.   

" சொல்லு டி செல்லம்"

"அப்பா.. நா எப்போப்பா உன்ன மாதிரி அப்பாவவேன்..." அம்முவிடம் இருந்து இப்படி ஒரு கேள்வியை சற்றும் எதிர்பார்க்கவில்லை நான். 

"உன்னால அப்பா ஆக முடியாதுடி செல்லம்.. அம்முவால அம்மாவாத்தான் ஆக முடியும்" என்னால் ஏன் என்று விளக்க முடியாவிட்டாலும் அவளுக்கு புரியும் பாஸையில் சொன்னேன். 

"அய்ய.. அம்மா எப்ப பார்த்தாலும் அடிச்சிட்டே இருப்பா.. நான் வளந்ததும் உன்ன மாதிரியே என்னயும் அப்பாவா ஆக்குப்பா" தன்னுடைய மழலை மொழியில் சிரித்துக் கொண்டே அம்மு கூறிய அடுத்த நொடி,  

"ஏய் ஒழுங்கா தூங்குடி.. அப்பாவே வேலைக்கு போயிட்டு வந்த டயர்ட்ல படுத்துருக்காரு.. சும்மா..அப்பா நொப்பான்னுட்டு...", என் மீது பாசம் காட்டுவது என் மகளாகவே இருந்தாலும் சமயங்களில் என் மனைவிக்கு அது பிடிப்பதில்லை. காரணம் என்னால் அவளையும் தவிர்க்கவே முடியாது.  

"அப்பா... அம்மா திட்டுனா நாளைக்கு முத்தம் கொடுக்க மாட்டேன்னு சொல்லுப்பா.."

அம்முவைப் பொறுத்தவரை அவள் பேசிக் கொண்டே இருக்க வேண்டும், அல்லது அவளுடன் நான் பேசிக் கொண்டே இருக்க வேண்டும். அவளுக்கு எல்லாமே அவளது அப்பாவாகிய நான் மட்டுமே.  

அம்மு. மூன்று வயதே நிரம்பிய எங்கள் செல்ல மகள். வரமாக வந்த தேவதையா இல்லை வரம் தர வந்த தேவதையா என்றால், எங்களுக்காக இறைவனிடம் வரம் வாங்கி வரம் தர வந்த தேவதை எங்கள் அம்மு.

என் வாழ்க்கையில் குறுக்கிடும் அத்தனை பிரச்சனைகளையும் தன் பிஞ்சுக் கரங்களில் சரணடையச் செய்ய அம்முவால் மட்டுமே முடியும். இருந்தும் என் வாழ்க்கையில் என்னால் சமாளிக்க முடியாத மிகப் பிரச்சனையே ஊருக்குச் செல்கையில் என்னைத் தனியே விட்டு அம்முவை மட்டும் தன்னோடு அழைத்துச் செல்லும் என் மனைவி தான். இதைத் தவிர்ப்பதற்காகவே பலமுறை அலுவலகத்தில் தேவையற்ற  விடுப்புகள் எடுத்ததுண்டு.

இன்னும் என்னவெல்லாமோ சிந்தித்துப் பார்த்துவிட்டேன் இன்னும் என்னால் என்  தூக்கத்தில் அல்லது தூக்கம் போன்ற நிலையிலிருந்து மீள முடியவில்லை. 

"இறைவா இது எவ்வளவு பெரிய கனவாக வேண்டுமானாலும் இருந்துவிட்டுப் போகட்டும், அதுபற்றி  கவலை இல்லை. ஆனால் என்னுள் நன்றாக நியாபகம் இருக்கும் விபத்து வெறும் கனவாக மட்டுமே இருக்கட்டும். என் அம்முவுக்கு நான் வேண்டும், உயிரோடு வேண்டும். 

"அப்பா" 

"சொல்லு ம்மா"

"நீ வேலைக்கு போகாதப்பா.. " அம்முவின் குரலில் ஒருவித ஏக்கமும் கண்டிப்பும் கலந்திருந்தது. 

"ஏன்மா.. அப்பா வேலைக்கு போனாதான அம்முக்கு நிறைய பொம்மை வாங்கிக் கொடுக்க முடியும்.. அம்முவும் விளையாட முடியும்"

"டெய்லி அம்மா கூட விளையாடது போர் ப்பா... அம்மா நீ வேலைக்கு போ... பொம்ம வாங்கி தா.. அப்பா நீ இனி வீட்ல இரு.. ஆனா ஒரு கண்டிசன்" மெத்தையில் எங்களோடு படுத்திருந்தவள் சட்டென என் வயிற்றின் மீது ஏறி அமர்ந்து தன் பிஞ்சு விரலை என்னை நோக்கி நீட்டி கண்டிசன் போட்டாள் அம்மு.         

" என்ன கண்டிசன் டி அம்மு" அவள் கண்டிசனைக் கேட்பதில் நான் ஆர்வமானேன்.. என் மனைவியோ கிண்டலாக தன் தலையில் அடித்துக் கொண்டாள்.   

"வீட்ல என் கூட இருந்தேனா, சும்மா எப்ப பாரு தூங்கிட்டே இருக்கக் கூடாது.. அம்முகூட விளையாடிட்டே இருக்கணும்" சட்டெனெ நானும் என் மனைவியும் சிரித்து விட்டோம். நம்மை குழந்தையாக்க குழந்தைகளால் மட்டுமே முடிகிறது.     

என் நியாபகம் சரி என்றால் நேற்று இரவு தூங்கச் செல்வதற்கு முன் அம்மு என்னிடம் கூறிய வார்த்தைகள் தான் இவை.      




என் பிரிவால், நான் இல்லாத தனிமையால் அவளால் ஒருநாளைக்கு மேல் கூட அமைதியாக இருக்க முடியாது. அவளுக்கு நான் வேண்டும். குறைந்தபட்சம் ஒரு விளையாட்டு பொம்மையாகவாவது நான் வேண்டும். அவள் பொம்மைக்கு மைதீட்டி பவுடர் போடும் போதெல்லாம், அவற்றை எனக்கும் செய்ய வேண்டும். என் முகத்தில் எப்படியெல்லாம் ஓவியம் தீட்ட ஆசைப்படுகிறாளோ அதற்கெல்லாம் நான் அனுமதிக்க வேண்டும்.    

இது கனவு தான். எனக்கு விபத்து நேர்ந்திருந்தால் உடம்பெல்லாம் வலி எடுத்திருக்குமே?, ரத்தத்தின் ஈரம் என்னை நனைத்திருக்குமே? ஆம்புலன்ஸ் சத்தம் கேட்கவில்லை, யாருமே ஓடிவந்து என்னைத் தூக்கவில்லை. ஒருவேளை... ஒருவேளை... நான் இறந்துவிட்டேனா... இல்லை இல்லை நிச்சயம் இல்லை. இது கனவு தான். சிறிது நேரத்திற்கு மூளை எதையுமே சிந்திக்க விடவில்லை.

ஆழந்த உறக்கம். சலனமற்ற ஆழ்கடலும் அகன்று விரிந்த வானும் ஏற்படுத்துகின்ற அமைதி. என்னுள் எதுவுமே தோன்றாத, எதைப்பற்றியுமே சிந்திக்க முடியாத மரண அமைதி. 

எவ்வளவு நேரத்திற்கு இப்படி ஒரு அமைதி நீடித்தது என்று தெரியவில்லை. திடிரென்று என்னைச் சுற்றி சிறு சலசலப்பு. பெருங்கூட்டம் ஒன்று சேர்ந்து உருட்டுக் கட்டையால் என்னைத் தாக்கியது போன்ற வலி. கை, கால் எதையும் என்னால் அசைக்க முடியவில்லை.

மெல்ல கண்களைத் திறக்க முயற்சித்தேன், என்னைச் சுற்றிலும் இருந்த சலசலப்பு அதிகமாகியது, கனவு கலைகிறது, இதுவரை என்னைச் சூழ்ந்திருந்த மாயவலை கிழிகிறது என்ற நம்பிக்கையில் கண்களைத் திறக்க ஆரம்பித்தேன். கண்களின் முன்னால் நிழலாடுவது தெரிந்தது. மெல்ல மெல்ல கண்களை முழுவதுமாய் திறந்தேன். வழக்கமான தமிழ் சினிமா பாணியில் வெள்ளைகோட் டாக்டர், கையில் பிளேட்டுடன் ஒரு சிஸ்டர், பக்கத்தில் நன்கு பரிட்சியமான பல முகங்கள்.

"வெல் ஹீ ஒபண்ட் ஹிஸ் ஐஸ்"

ஒரு ஓரத்திலிருந்து நன்கு பரிட்சியமான குரல் அழுது கொண்டிருந்தது, அது என் மனைவியின் குரல்

பேச முயன்றேன் பேச முடியவில்லை, தலையை திருப்ப முயன்றேன் முடியவில்லை. என்னுடலைச் சுற்றிலும் ஏகத்திற்கும் கட்டுகள். 

"மிஸ்டர் நந்தா... நீங்க பிழச்சிட்டீங்க.. ஆக்சிடெண்ட் நடந்த அப்போ ஹெல்மெட் போட்டு இருந்ததால தலையில அடிபடல.. பட் பைக்ல இருந்து தூக்கி வீசப்பட்டதால  உங்க பாடி பயங்கரமா ஷேக் ஆகியிருக்கு, எல்லா ஜாயிண்டஸும் டிஸ்லொகெட் ஆகியிருக்கு, நவ் யு ஆர் சேவ்ட்.. இன்னும் மாசத்துல நார்மல் லைப்க்கு திரும்பிரலாம்." 

டாக்டர் கூறிய எதுவுமே என் காதுகளில் விழவில்லை. என் கண்கள் அம்முவைத் தேடியது. நான் தேடுவதைப் புரிந்துகொண்ட என் மனைவி மெதுவாக என்னருகே வந்தாள், அழுது அழுது அவள் முகமே வீங்கிப் போயிருந்தது. அவள் இடுப்பில் அம்மு இருந்தால், அம்முவின் இடுப்பில் ஒரு பொம்மை இருந்தது.

"அப்பா" அங்கு நிலவிய மவுனத்தைக் கலைத்தாள் அம்மு. 

"சொல்லு டி அம்மு" அம்மு என் முகத்திற்கு மிக இருந்தாள் .

"ப்பா... நான் அப்பாவும் ஆகல, அம்மாவும் ஆகல, ஆனா ஒரு கண்டிஷன்" வழக்கம் போல அவள் பிஞ்சு விரலும் கண்டிஷன் என்று காட்டியது.

"சொல்லுடி செல்லம்"

"அப்பா நா எப்பப்பா டாக்டர் ஆவேன், இந்த டாக்டர் ஒரு வாரமா என்ன உள்ள விடவே இல்லபா... பொம்மைக்கு பொட்டு வச்சேன், விபூதி வச்சேன், ஆனா உனக்கு தான் வைக்க முடியல... ப்பா நான் டாக்டர் ஆகணும் ப்பா" என்று சொல்லிக்கொண்டே தன் கையில் இருந்த விபூதியில் கொஞ்சம் எடுத்து என் நெற்றியில் பூச ஆரம்பித்தாள் அம்மு. 

அம்முவின் பிஞ்சுக் கை மெல்ல என் மேல் படரத் தொடங்கிய போதே என்னுடலில் இருந்த அத்தனை வலிகளும் அவள் முன் மண்டியிடத் தொடங்கியிருந்தன.   







மகள்களைப் பெற்ற அப்பாக்களுக்கு 
மட்டுமே தெரியும் 
தாங்கள் சிரஞ்சீவிகள் என்று 

22 Aug 2013

பதிவர் சந்திப்பு - 2013 - நீங்கள் அறியாத சில தகவல்கள் & வாங்கண்ணா வணக்கங்கண்ணா

பிள்ளையார் சுழி 

மே மாதம் முடியும் வரையிலும் யாருமே பதிவர் சந்திப்பைப் பற்றி பேசத் தொடங்கி இருக்கவில்லை. என்னுள்ளும்  ஒரு சந்தேகம் தொடர்ந்து கொண்டே இருந்தது, அது இவ்வருடம் பதிவர் சந்திப்பு நடக்குமா நடக்காதா என்று. 


பதிவர் ராஜ் சென்னை வந்தபோது, புலவர் அய்யா வீட்டில் வைத்து நடந்த ஒரு திடீர் சந்திப்பில் தான் அண்ணன் மெட்ராசும் ஆரூர் மூனாவும் இவ்வருட பதிவர் சந்திப்பிற்கான பிள்ளையார் சுழியைப் போட்டனர். ஆனால் கடந்த வருடம் பதிவர் சந்திப்பை முன்னின்று வழிநடத்திய மூத்த பதிவர்கள் யாரும் இதில் அவ்வளவாக ஆர்வம் காட்டவில்லை, காரணம் சென்ற வருடம் பதிவர் சந்திப்பு முடிந்த பின் ஏற்பட்ட சில தேவையில்லாத பிரச்சனைகள் அவர்களை சோர்வடையச் செய்திருந்தது. இதனால் சென்றமுறை ஆர்வமாய் வழிநடத்திய மூத்த பதிவர்களை இம்முறை இளைய பதிவர்கள் உற்சாகப்படுத்த அவர்களும் பழைய உற்சாகத்துடன் இணைய இனியும் காலம் தாழ்த்த வேண்டாம் என்று உற்சாகமாக களத்தில் இறங்கியது பதிவர் குழு. 

பதிவர் சந்திப்பு முன்னேற்பாட்டுக் குழு 

ஜூலை முதல் வாரம் கே.கே நகரில் இருக்கும் சிவன் பார்க்கில் தொடங்கிய முதல் முன்ஏற்பாட்டுக் கூட்டமானது எவ்விதமான முடிவுகளும் எடுக்கப்படாமலேயே கலைய, பின் வந்த வாரங்களில் சுறுசுறுப்பாகச் செயல்படத் தொடங்கியது பதிவர்கள் குழு. வரவேற்புக் குழு, நிகழ்ச்சி மற்றும் பதிவர் ஒருங்கிணைப்புக் குழு, உணவுக் குழு என்று சில குழுக்கள் பிரிக்கப்பட்டு வேலைகள் பகிர்ந்தளிக்கப்பட்டது. 

கடந்த ஆண்டு பதிவர் சந்திப்பு நடத்த தொழிற்களம் நிறுவனம் தாமாக முன்வந்து உதவினர், இம்முறை அதுபோல் ஸ்பான்சர் எதுவும் கிடைக்காததால் விருப்பமுள்ள அனைத்து பதிவர்களிடமும் தம்மால் இயன்ற பங்களிப்பை அளிக்கும்படி வேண்டுகோள் விடுக்கப்பட்டது. 


இதில் நான் அதிசயித்து வியந்த மற்றும் மிக மகிழ்ச்சியான விஷயம் யாதெனில் தம்மால் கலந்து கொள்ள முடியாதென்றாலும் பதிவுலகில் நம்மோடு பயணிக்கும் சக பதிவர்கள் சேர்ந்து நடத்தும் விழா என்ற எண்ணத்தோடு பல வெளிநாட்டுவாழ் பதிவர்கள் தங்கள் பங்களிப்பை அளித்து மிக சிறப்பாக உதவினர். எவ்வளவு பெரிய விஷயம் இது, பதிவுலகில் நமக்கே தெரியாமல் மறைமுகமாக பொதிந்து கிடக்கும் ஒற்றுமையின் வெளிபாடாகவே இதனைக் கருத முடிகிறது. 

இந்தியா மற்றும் வெளிநாடுகளில் இருந்தும் பல பதிவர்கள் கலந்து கொள்ள இருக்கும் இவ்விழாவிற்கான முன்னேற்பாடுகளை மிகச் சிறப்பாக செய்து வருகின்றனர் பதிவர் குழுவைச் சேர்ந்தவர்கள். தங்களுக்கு இருக்கும் பல குடும்ப மற்றும் அலுவல் சார்ந்த பிரச்சனைகளுக்கு மத்தியிலும் விழாவிற்கென தனியாக நேரம் ஒதுக்கி எந்த ஒரு வேலையிலும் குறை ஏற்பட்டு விடாதபடி பார்த்துப் பார்த்து செய்து கொண்டிருக்கும் இவர்களது உழைப்பிற்கு முதல் வணக்கங்கள். இதில் குறிபிடப்பட்ட வேண்டிய மிக முக்கியமானவர்கள் மதுமதி, ஆருர்மூனா செந்தில், வாத்தியார் பாலகணேஷ் அரசன் மற்றும் ஸ்கூல் பையன். காரணம் இவர்களுக்கு ஒத்துகப்பட்ட பணிகளின் சுமை சற்றே அதிகம்.

ஒவ்வொரு வார ஞாயிறும் தங்கள் மதிய தூக்கத்தைத் தியாகம் செய்து! மீட்டிங்கில் கலந்து கொள்ளவே தனி உற்சாகமும் தெம்பும் வேண்டும். கடந்த பத்து வாரங்களாக இந்த சந்திப்பு நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடப்பட வேண்டிய விஷயம். ஒவ்வொரு வாரமும் கூட்டம் நடத்த இடமளித்து உதவி வரும் டிஸ்கவரி புக்பேலஸ் வேடியப்பன் அவர்களுக்கு சிறப்பான நன்றிகள்.

டிஸ்கவரி புக்பேலஸ் :  

டிஸ்கவரி புக் பேலஸின் புத்தக விற்பனை நிலையம் பதிவர் சந்திப்பு நடைபெறும் அரங்கில் இயங்க இருக்கிறது. இந்த விற்பனை நிலையம் மூலம் விற்கப்படும் அனைத்து புத்தகங்களும் பதிவர்களுக்கான சிறப்பு சலுகையாக பத்து சதவீதம் தள்ளுபடி விலையில் விற்கப்படும் என்பதை வேடியப்பன் அவர்கள் தெரிவித்துள்ளார்கள், மேலும் அணைத்து முன்னனி பதிப்பகங்களின் புத்தகங்களும் விற்பனை இங்கே ஆக இருக்கிறது.


உங்களுக்கு தேவைப்படும் புத்தகங்களை டிஸ்கவரி புக்பேலசின் ஆன்லைன் மூலமாக முடிவுசெய்து டிஸ்கவரியின் என்ற 044-6515 7525 எண்ணுக்கு கால் செய்து கூறினால் பதிவர் சந்திப்பு அன்று  புத்தகங்களை உங்களுக்காக எடுத்து வருவதாகவும் கூறியுள்ளார். பதிவர்களுக்காக பல சலுகைகள் செய்து தரும் வேடியப்பன் அவர்களுக்கு மீண்டுமொருமுறை நன்றிகள்.

புத்தக வெளியீடுகள் 

பதிவர் சந்திப்பின் மற்றொரு சிறப்பம்சமாக கருதப்படுவது நாம் எழுதிய புத்தகங்களின் வெளியீடுகள். இம்முறை நான்கு பதிவர்களின் புத்தகங்கள் வெளியிடப்பட இருக்கிறது. அவர்களுக்கு உற்சாகமான வாழ்த்துக்கள் 


பதிவர்கள் தங்களின் அடுத்த படிநிலையாகக் கருதும் தாங்கள் எழுதிய புத்தகங்களை பதிவர் சந்திப்பின் மூலம் வெளியிடுவது நமக்கும் பெருமையே. ஆனால் இதில் நாம் சந்திக்கும் சவால் ஒன்றே ஒன்று, அது நேரமின்மை. அதனால் புத்தகம் வெளியிடும் பதிவர்கள் நேரத்தைக் கணக்கில் கொண்டு தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நேரத்திற்குள் புத்தக வெளியீட்டை முடித்துக் கொண்டால் காலதாமதத்தை தவிர்க்க முடியும்.

மவுன அஞ்சலி 

கடந்த வருடம் மறைந்த மூன்று பதிவர்களான ஆயிரத்தில் ஒருவன் மணி, டோட்ன்டு ராகவன் மற்றும் பட்டாப்பட்டி ஆகியோருக்கு ஒருநிமிட மவுன அஞ்சலி செலுத்தப்பட இருக்கிறது.

சிறப்பு அழைப்பாளர் :


எழுத்தாளர் மற்றும் மிகச் சிறந்த பேச்சாளரான எழுத்தாளர் உயர்திரு பாமரன் அவர்களின் சிறப்புரை நிகழ இருக்கிறது. பதிவர்களுக்கு மற்றும் எழுத்துச் செழுமைக்கு தேவையான விசயங்களைக் குறித்து அவர் பேசுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.       

பதிவர் தனித்திறன் நிகழ்வுகள் 

நம்முள் இருக்கும் திறமைகளை வெளிக்கொணர இது ஒரு சிறிய சந்தர்ப்பம், ஆர்வமுள்ள பதிவர்கள் முன்னேரே ஆருர்மூனா செந்திலையோ அல்லது நிகழ்ச்சி ஒருங்கிணைப்புக் குழுவினரையோ தொடர்பு கொண்டால் நலம்.
  • மெட்ராஸ், ஆரூறார், செல்வின் மற்றும் பிலாசபி இணைந்து ஒரு மேடை நாடகத்திற்கு தயாராகி வருகின்றனர்.
  • சங்கத்து தீவிரவாதி (சதீஷ்) ஒரு மாறுவேடப் போட்டிக்கு தயாராகி வருகிறார் அது சஸ்பென்ஸ்.
  • திண்டுக்கல் தனபாலன் (டி.டி) ஒரு மேடை நாடக ஸ்க்ரிப்ட்டுடன் தயாராக உள்ளார், நடிப்பதற்கு மூன்று பேர் தேவை. உங்களில் யார் அந்த மூன்று பேர். ஆர்வமாய் உள்ளவர்கள் என்னையா அல்லது டிடியையோ தொடர்பு கொள்ளுங்கள்.           

பதிவர் சந்திப்புக் கீதம் 

பதிவுலகில் நமது நண்பர்கள் காட்டிவரும் ஆர்வம் அளப்பரியது. இவ்விசயத்தில் என்னை வெகுவாய்க் கவர்ந்தவர் கோவை ஆவி. பதிவுலகில் மிக ஈடுபாட்டுடன் வலம் வரும் ஆவி பதிவர்களுக்காக ஒரு பாடலை எழுதி தானே மெட்டமைத்துப் பாடியுமுள்ளார்.  



ஆவிக்கு பதிவுலகம் மீது இருக்கும் ஆர்வம் அளப்பரியது என்று எப்படி சொல்கிறேன் என்றால் கடந்த மாதம் ஆவிக்கு ஒரு மிகப் பெரிய விபத்து நேர்ந்து தனது இருகைகளிலும் முறிவு ஏற்பட்டு கட்டுண்டார், அந்த நிலையிலும் உற்சாகமாக எழுதிய பாடல் தான் இந்த பதிவர் ஆந்த்தம்.

தினந்தோறும் அலுவல்கள் ஏராளம்.. நாங்கள் 
அதினிடையே பதிவெழுத மறப்பதில்லை.
குற்றம்குறை எழுத்துப் பிழை தாராளம்- அதை 
ஏற்றுக்கொள்ள திருத்திக்கொள்ள மறுப்பதில்லை 

இணையில்லா இணையத்தின் சாலையிலே- நம் 
கற்பனைக்கு என்றுமந்த வானமே எல்லை..

மிக்க நன்றி ஆவி.

உணவுக் குழு 

ஆருர்மூனா, ராஜீ அக்கா மற்றும் சிராஜுதீன் தலைமையில் சூடானா சுவையான வெஜ் மற்றும் நான் வெஜ் நமக்காக காத்துள்ளது, வாருங்கள் அவற்றையும் ஒரு பிடிபிடிப்போம்.      

குட்டனுக்கு ஒரு வேண்டுகோள் 

குசும்பு குட்டன் அவர்கள் தினமும் அவரது பதிவில் பதிவர் சந்திப்புக் குறித்து மிக உற்சாகமாக எழுதி வருகிறார். முகம் தெரியாத குட்டனின் எழுத்துக்கள் எனக்கு மிகவும் பிடிக்கும். குட்டன் அவர்களே தங்களது தரிசனம் கிடைக்குமா? உங்களை எதிர்பார்த்து உங்கள் வாசகன் :-)))))


பதிவர் சந்திப்பிற்கான பணஉதவி 

பதிவர் சந்திப்பிற்காக உங்கள் பங்களிப்பைத் தர விரும்பினீர்கள் என்றால் கீழ்க்கண்ட வங்கிக் கணக்கு மூலம் செலுத்துங்கள்.

First Name: Raja
Last Name: Sekar
Display Name: RAJA. S
Account Number: 30694397853
Branch Code: 006850
CIF No. : 85462623959
IFS Code : SBIN0006850
MICR Code : 600002047
Branch : SBI Saligramam Branch
 
Address: 49, Arcot Road, Saligramam , Chennai, City Pin - 600093

Contact :

044- 24849775 

தொடர்புக்கு

அரசன்(ராஜா) அலைபேசி எண் - 9952967645
   

வாங்கண்ணா வணக்கங்கண்ணா 


இதுவரை நாம் படித்து ரசித்த எழுத்துக்களின் சொந்தக்காரர்களையும், புதிய அறிமுகங்களையும் தர இருக்கும் பதிவர் சந்திப்பை நிகழ்த்த தலைநகரம் உற்சாகமாக தயாராகி வருகிறது. நீங்கள் தயாராகி விட்டீர்களா...! உங்கள் அனைவரையும் ஆவலுடன் எதிர்பார்த்து... 

உங்கள் நண்பன் 
சீனு

20 Aug 2013

திடங்கொண்டு போராடு - காதல் கடிதம் பரிசுப்போட்டி முடிவுகள்

எனக்குத் தெரியும் நான் இங்கு எழுதும் எதையுமே படிக்காமல் நேராக உங்கள் கண்கள் பரிசுப்பட்டியலைத் தான் தேடி ஓடும்என்று... இருந்தாலும் எழுதுவது என்று முடிவெடுத்த பின் சொல்ல வந்ததை எழுதுவதற்கு தயக்கம்ஏன்...

நன்றிகள் :

காதல் கடிதம் பரிசுப் போட்டியில் கலந்து கொண்ட அத்தனை பேருக்கும் நன்றிகள். இந்தப் போட்டியின் மூலம் பலருக்கும் பல பதிவர்களது அறிமுகம் கிடைத்துள்ளது என்பது மிக்க மகிழ்ச்சி அளிக்கிறது.  





புரட்சி F.M நடத்தி வரும் நிரூபன் அவர்கள் தனது பண்பலையில் நமது கடிதப் போட்டியில் இடம்பெற்ற கடிதங்களை தனது நிகழ்ச்சியில் பகிர்ந்து கொள்ள இருப்பதாக தெரிவித்துள்ளார். ஒவ்வொரு வாரமும் தனது நிகழ்ச்சியில் பங்குகொண்ட கடிதங்களின் ஒலி வடிவத்தை நம்முடன் பகிர்ந்து கொள்வதாக தெரிவித்துள்ளார். இதுவும் நமக்குக் கிடைத்த மிகச் சிறந்த அங்கீகாரம். மேலும் தானாக முன்வந்து பதிவர்களின் படைப்புக்களை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்ல இருக்கும் நிருபன் அவர்களுக்கும் அவர் நடத்தும் புரட்சி F.M -மிற்கும் மனமார்ந்த நன்றிகள்.



காதல் கடிதம் பரிசுப் போட்டி குறித்த விளம்பரத்தை பகிர்ந்த மற்றும் தங்கள் தளங்களில் பதிவு செய்த அத்தனை நண்பர்களுக்கும் மிக்க நன்றி. உங்கள் தளங்களில் பதிவு செய்த விளம்பரம் மூலம் இந்தப் போட்டியில் பங்கு கொண்டவர்கள் ஏராளம். அதனால் நீங்கள் செய்த உதவி அளப்பரியது. மிக்க நன்றி.


காதல் கடிதம் விளம்பரதிற்கான படக்கலவை மற்றும் பரிசுக்கான போஸ்டர் செய்து கொடுத்த நண்பர் மற்றும் சாவி குறும்பட கதாநாயகன் சுரேஷ் அவர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றிகள். 




நடுவர்கள் : 

இவர்கள் இல்லை என்றால் இந்தப் போட்டி எந்தத் திசையில் எந்தப் பாதையில் பயணித்து இருக்கும் என்று என்னால் நினைத்துக் கூடப் பார்க்க முடியவில்லை. 




போட்டிக்கான விதிமுறைகள் நிர்ணயிப்பதில் ஆரம்பித்து சிறந்த கடிதங்கள் தேர்ந்தெடுப்பது வரை கூடவே பயணித்து போட்டியை வழிநடத்தியவர்கள் இவர்கள். இவர்களின் அனுபவங்கள் மூலம் நான் கற்றுக்கொண்ட அனுபவங்கள் ஏராளம்.

பூகோளரீதியாக நால்வரும் வேறுவேறு இடங்களில் இருந்தாலும், கடிதங்களை நால்வருமே தனித்தனியாக திறனாய்வு செய்தாலும் நால்வரின் மதிப்பெண்களும் பெரும்பாலும் ஒரே மாதிரியானதாக இருக்கும், தங்கள் விவாதங்களிலும் அதையே பகிர்ந்து கொண்டிருப்பதை எண்ணி வியந்துள்ளேன்.

நால்வரும் வேறு வேறு இடங்களில் இருந்து வடம் பிடித்தாலும் தேரை இழுத்த திசை என்னவோ தேர் பயணிக்க வேண்டிய திசையில் தான். 

தங்கள் கடுமையான பணிச்சுமை, பயணச்சுமைகளுக்கு மத்தியிலும் சிறப்பாக நடுவர் பணியாற்றிய வாத்தியார் பாலகணேஷ் மூன்றாம்சுழி அப்பா சார், எங்கள் பிளாக் ஸ்ரீராம் சார் மற்றும் ரஞ்சனி அம்மா இவர்களுக்கெல்லாம் எத்தனை முறை நன்றி சொன்னாலும் போதாது. நன்றி நன்றி நன்றி...!

பரிசுத் தொகை :

சமீபத்தில் சாருநிவேதிதா விமர்சகர் வட்டம் சார்பில் நடத்தப்பட்ட சிறுகதைப் போட்டியின் முதல் பரிசுத் தொகை ரூபாய் 13,000/- காதல் கடிதம் பரிசுப் போட்டியின் முதல் பரிசுத் தொகை 500/- :-) . ஏணி இல்லை ஏரோபிளேன் வைத்தாலும் எட்டாது. அவர்கள் ஒரு குழுவாக இணைந்து நடத்துவதால் இது சாத்தியமாயிற்று, நானும் பதிவுலக நண்பர்களுடன் இணைந்து நடத்துவது குறித்து கேட்டிருக்கலாம், ஆனால் பணம் சம்மந்தப்பட்ட விஷயம் என்பதால் கேட்பதற்கு ஒரு சிறிய தயக்கம். 

இது முதல் முயற்சி தானே அதனால் முயன்று பாப்போம் என்ற நம்பிக்கையில் களம் இறங்கினேன், இத்தனை பெரிய வெற்றி கிடைத்திருக்கும் என்று முன்பே தெரிந்திருந்தால் இன்னும் பல முன்னேற்பாடுகளோடு களமிறங்கி இருக்கலாம். இருந்தும் பரிசுத்தொகையில் தங்கள் பங்களிப்பை பகிர்ந்து கொள்ள சில நண்பர்கள் விரும்பியதால் பரிசுகளின் எண்ணிக்கை அதிகபடுத்தப்பட்டுள்ளது. தங்கள் பெயர் வெளியிடவேண்டாம் என்று கண்டிப்பாக கேட்டுக் கொண்டதால் மட்டுமே அவர்கள் பெயர்கள் வெளியிடவில்லை. அவர்களுக்கும் எனது நன்றிகள்.

முதல் மூன்று பரிசுகள் மற்றும் மூன்று ஆறுதல் பரிசுகள் என்றளவில் தான் முதலில் திட்டமிட்டிருந்தோம். ஒரு கட்டத்தில் பல கடிதங்கள் சிறப்பாக அமையப்பெறவே எதை சேர்ப்பது எதை விடுப்பது என்ற இக்கட்டான சூழல் ஏற்பட்டது. இந்நிலையில் பரிசுகளின் எண்ணிகையில் மேலும் மூன்று அதிகரித்துள்ளது என்பது  சந்தோசமான விஷயம்.

பரிசு:

பரிசை பணமாகக் கொடுப்பதைவிட புத்தகமாக கொடுக்கலாம் என்று நினைத்துள்ளோம். இது குறித்து டிஸ்கவரி புக் பேலஸ் வேடியப்பனிடம் பேசியபொழுது பரிசுக்கூப்பன்களாக கொடுக்கலாம், வெற்றி பெற்றவர்கள் அவர்களுக்குப் பிடித்த புத்தகங்களை வாங்கிக் கொள்ளட்டும் என்று கூறினார்.  இது சிறப்பான வழி, ஆனால் சென்னையில் இருப்பவர்களால் மட்டுமே டிஸ்கவரி சென்று புத்தகம் வாங்க சாத்தியப்படும் என்பதால், சென்னையைத் தவிர பிற பகுதிகளில் வசிக்கும் நண்பர்கள் தங்களது வீட்டு முகவரியையும், பரிசுத்தொகைக்குள் அடங்கும் புத்தக பெயரையும் குறிப்பிட்டால் அவர்களுக்கு கொரியர் மூலமாக புத்தகம் அனுப்பி வைக்கப்படும்.




செப்டம்பர் 1 அன்று நடைபெறும் பதிவர் சந்திப்பு மண்டபத்திலும் டிஸ்கவரி புக்பேலசின் விற்பனை நிலையம் இருக்கும், பதிவர் சந்திப்பிற்கு வரும்பொழுது கூட தங்கள் பரிசுக் கூப்பனை உபயோகப்படுத்தி புத்தகம் வாங்கிக் கொள்ளலாம். 

காதல் கடிதம் பரிசுப் போட்டியில் வெற்றி பெற்றவர்கள் பட்டியல் :




முதல் பரிசு

சுபத்ரா - வார்த்தைகள் தேவையா   கடிதம் படிக்க 



திருமணங்கள்
சொர்க்கத்தில்
நிச்சயிக்கப்படுகின்றனவாம்..
எனக்குச்
சொர்க்கம் என்பதே
நம் திருமணத்தில் தான்
நிச்சயிக்கப்படுகிறது!

இரண்டாம் பரிசு 

கோவை மு சரளா - என் உள்ளம் கவர் கள்வனுக்கு  கடிதம் படிக்க



"என்னை தொட்டு விடுவாயோ
என தூரம் செல்ல கட்டளையிடுகிறது மூளை
என்னை தொடமாட்டாயா ?
என நெருங்கி வருகிறது மனம்"



இரண்டிற்கு மத்தியில் நான்


"யார் பேச்சை நான் கேட்பது
கடைசியில் பட்டிமன்ற நடுவரை போல நான்

இருதரப்பையும் ஏற்றுக்கொண்டேன்"  

மூன்றாம் பரிசு 

ஜீவன் சுப்பு - கலவரக்காரனின் காதல் கடிதம் கடிதம் படிக்க 


நான் வண்ணத்திரையின் நடுப்பக்கத்தை புரட்டிக்கொண்டிருக்கின்றேன்,
நீயோ வண்ணதாசனை (சு)வாசித்துக்கொண்டிருக்கிறாய்.
நான் சத்தம் போட்டு பேசுவது எனக்கே கேட்கவில்லை ,
நீ ரகசியம் பேசுவது ஊருக்கே கேட்கிறது .
நான் அடங்கிக்கொண்டிருகின்றேன் ,
நீ வெடித்துக்கொண்டிருக்கின்றாய் .
நான் பேசாத வார்த்தைகள் தான் அழகென்கின்றேன் ,
நீயோ பேசும் வார்த்தைகள் தான் அழகென்கின்றாய் .
இப்படி அனைத்திலுமே நீயும் நானும் முரண்பட்டுத்தான் இருக்கின்றோம் ,
அதனாலென்ன ...? அனைத்திலும் ஒத்திருக்க நாமென்ன வியாபாரமா செய்யப்போகிறோம் ....!
காதல் தானே பண்ணப்போகின்றோம் ...!
காதலில் முரண் தானே அழகு ...!

மற்றும் 

கண்மணி - உறங்கும் கடிதம் கடிதம் படிக்க 


காலையில் எழும் போது, நீ எனக்கு நெற்றியில் முத்தம் வைத்து எழுப்புவதாய்த் தொடங்கும் என் கற்பனை, மதியம் நாம் ஒன்றாகச் சாப்பிடுவதாய் நீண்டு, மாலை நீயும் நானும் ஒன்றாய் கை கோர்த்து நடப்பதாக விரிந்து, இரவு நீ என் வயிற்றின் அருகே வந்து, மெதுவாய்க் கை வைத்து, முத்தமிட்டு, ராகுலுக்குக் கதை சொல்வதாய் முடிகிறது! பிறகு பெரும்பாலான நேரம், ராகுலுக்கு உன்னைப் பற்றி, ரானுவத்தைப் பற்றிக் கதை சொல்லியே செலவாகிறது. ஒவ்வொரு நாள் முடியும் போதும், ஒரு ஆனந்தம், உன்னைக் காணப் போகும் நாள் நெருங்குவதால்!

ஆறுதல் பரிசு 


முரளிதரன் - கவுத்துட்டியே சரோ கடிதம் படிக்க

அப்புறம்  உன்மேல எனக்கு ஒரு இதுன்னு என்கூட சுத்திகினி இருப்பானுங்களே அந்த பசங்களுக்கு தெரிஞ்சிபோச்சா!..என்னாடா உன் ஆளு சரோஜானு பழய பேர் வச்சுக்குனு கீதுன்னு கடுப்பேத்துனானுங்க! எனக்கு வந்துச்சே கோவம். கழுத்தாமுட்லயே ஒன்னு உட்டு, "சரோஜாலதான் ரோஜா இருக்குடா பேமானிங்களா" ன்னு கத்துனனா? பசங்க மெர்சல் ஆயிட்டானுங்க.  

ஹிசாலி - எழுத நினைத்த காதல் கடிதம் கடிதம் படிக்க 

நீ சாலையில் வருவதற்கு முன்  உன் நிற ஆடையைக் கண்டு என் நிற ஆடையாக மாற்றிக்கொள்ளும் மறைமுக காதலை விரும்புகிறேன் 


ஒவ்வொரு அழைப்பிலும் உன் குரல் கேட்காதா என ஏங்கும் தவிப்பை தேடுகிறேன் 

கடைதனிலே குவிந்திருக்கும் பூக்களை கண்டால் உனக்காக தவமிருப்பதாக கற்பனை செய்கிறேன்


தமிழ்செல்வி - என் எழுத்தின் உயிர்ப்பானவனுக்கு கடிதம் படிக்க 

என் விழிகள் பொய் சொல்லாது. அது வெளிப்படுத்தும் காதலை நான் மறைத்துவிட முடியாது. என்னால் உனக்கு நட்பாக வரமுடியாது. என் காதல் கருவாய் இருந்திருந்தால் கலைக்கப்படும் வலி குறைவாக இருக்கும். என்னுள் கருவாகி உருவான காதல் இப்போது வாலிபத்தில் நிற்கிறது. நான் கல்லறைக்குள் போனால் ஒழிய அதனால் இறந்துவிட முடியாது. நானும் என் காதலும் வேறு வேறா?.

சசிகலா - என்னைப் புதுப்பித்த புதியவனுக்கு கடிதம் படிக்க 


இன்னும் எத்தனை
நாட்களுக்கு மௌனத்தோடு
மல்யுத்தம் செய்யப்போகிறாய் ?
காதலை சொல்ல 
நீ தவிப்பதையும்
தாங்க முடியாதவளடா நான் !

ரேவதி சதீஷ்  - உன் காதலே அன்றி கடிதம் படிக்க

பார்க்க மறுத்த பயம் ...
பார்க்க வைத்த தைரியம் ...
இரண்டுக்கும் நடுவில் இருந்த
காதல் தான் நீ!!  

மொத்த காதலும் நிறைகிறது
முதல் முத்தத்தில் ....
உனது ஒவ்வொரு முத்தமும்
எனக்கு
முதல் முத்தமே !!


பரிசு பெற்றவர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.. போட்டியில் உடன் பயணித்த அத்தனை சக பயணிகளுக்கும் நிறைவான நன்றிகள். வேறொரு தளத்தில் வேறொரு களத்தில் சந்திப்போம்...


என்றும் நட்புடன் 
சீனு