3 Oct 2019

களம் - புத்தக விமர்சனம்


களம்


சமீபகால கிரிக்கெட் மற்றும் கிரிக்கெட் அரசியல் சார்ந்து எழுதபட்டிருக்கும் க்ரைம் த்ரில்லர் நாவல், களம். இந்தியக் கிரிக்கெட் அணியின் கேப்டன் விஷாலின் திருமண வைபவத்தைச் சார்ந்த நிகழ்வுகள் அரங்கேறிக்கொண்டுள்ளன. ஒரு மிகப்பெரிய அசம்பாவிதம் நடைபெற இருக்கிறது. அந்த அசம்பாவித்த்தை யார்யாரெல்லாம் நிகழ்த்தியிருக்கக்கூடும் என்று இராஜேஷ் சந்தேகப்படுகிறாரோ அவர்கள் அனைவரையும் ஒவ்வொருவராக அறிமுகம் செய்துவிட்டு கிரைமுக்குள் நுழைகிறார். விளக்குகள் அணைகின்றன. மீண்டும் அவை வெளிச்சத்திற்கு வரும்போது ஒரு குற்றம் நிகழ்ந்திருக்கிறது.

இதற்காகவே காத்திருந்த போலீஸ் ஆபீசர்களான விநாயக்கும் வசந்தாவும் கிரைம் சீனுக்குள் நுழைந்து கலைந்து போன சீட்டுக்கட்டுகளின் ஊடாக தங்கள் காயை நகர்த்துகிறார்கள்.கொலைகாரன் யார், கொலைக்கான காரணம் என்னவாக இருக்கும். இந்த சதிவலையின் ஆதிமூலம் யார் என நகரும் குற்றப்பின்னணியின் ஒவ்வொரு ஓவரைக் கடக்கும் போதும் விநாயக்கும் வசந்தாவும் புதிய புதிய தகவல்களைக் கண்டுபிடிக்கிறார்கள்.  கடைசி ஓவரின் கடைசிப்பந்தில் குற்றவாளியைக் கண்டுபிடித்தார்களா? இல்லை வைட் பாலா?. சுபம்   

*****

" Rashomon effect "அகிரா குரசோவா பயன்படுத்தின இந்த டெக்னிக்கை ஃபாலோ பண்ணி நிறைய படம் வந்திருக்கு ( தமிழில் 'அந்த நாள் ') .

ஒரு சம்பவம் , அது நடந்த நேரத்திலிருந்து பின்னாடி போய் ஒரு கேரக்டரை அறிமுகப்படுத்தி அந்த சம்பவம் நடக்கும் நேரத்தொடு கனெக்ட் பண்ணிட்டு, பின் இன்னொரு கேரக்டரை அறிமுகப்படுத்தி அந்த சம்பவம் நடக்கும் நேரக்தொடு கனெக்ட் பண்ணி ... இப்படி எல்லா முக்கிய கேரக்டரை அந்த சம்பவத்தோட கனெக்ட் பண்ணிட்டு, அப்புறம் அந்த சம்பவம் நடந்த இடத்திலிருந்து முன்னாடி போவாங்க .....

*****

மேலே அடைப்புக்குள் குறிப்பிடப்பட்டிருக்கும் இந்தத் தகவல்கள் ஆசிரியர் தனது முகநூலில் தன் நாவல் குறித்துக் கூறியிருந்த கருத்துக்கள்.  தன் நாவலின் கட்டமைப்பை மிக எளிதாக அவரே கூறிவிட்டதால் அதனையே இங்கு குறிப்பிட்டிருக்கிறேன்.

களம். இராஜேஷ் ஜெயப்பிரகாசம் அவர்களின் முதல் நாவல் (என்றுதான் நினைக்கிறன்) என்பது முதல் பக்கங்களில் இருந்தே தெரிய ஆரம்பிக்கின்றன. ஒரு ஆரம்பகால எழுத்தாளர் என்னென்ன சோதனைகளுக்கு உள்ளாவாரோ அத்தனையையும் கடந்துதான் தன் நூலை வெளியிட்டிருக்கிறார். குறைகள் இருப்பினும், ஒரு புத்தகத்தை எழுதி அதனை சந்தைப்படுத்துவது என்பதே பெரியவிஷயம் ஆன காலகட்டத்தில் அதனை முயன்று பார்த்திருக்கும் இராஜேஷ் அவர்களுக்கு மனமார்ந்த பாராட்டுக்கள்.

விமர்சனம் என்பதே எதிர்மறையாகத்தான் இருக்கவேண்டும், எடுத்துக்கொள்ள வேண்டும் என்ற அவசியம் இல்லை என்றாலும் முதலில் குறைகளில் இருந்து நிறைகளை நோக்கிச் செல்வோம்.   

தன் முதல் பக்கத்தில் இருந்தே நாவலை மிகப்பரபரப்பாக கட்டமைக்க வேண்டும் என்ற கட்டாயத்திற்குள் தள்ளப்பட்ட இராஜேஷ், மிகச்சிறந்த கதைக்களத்தை அமைத்த பின்னும் குதிரையை வண்டியில் பூட்டிய பின் கடிவாளத்தைப் பிடிக்க மறந்த கதையாக சில அத்தியாயங்களுக்குக் கதை தன் போக்கில் சென்று பின் தளவாடத்தினுள்ப் புகுந்து தனக்கான பாதையில் சீராக பயணிக்கத் தொடங்குகிறது.  

சம்பவம்,  சம்பவம் நடந்த நேரத்தில் இருந்து பின்னாடி போய் ஒரு நபரை அறிமுகப்படுத்தி பின் மீண்டும் சம்பவ இடத்திற்கே வந்து அங்கிருந்து இன்னொரு நபர் என குற்றம் முழுமையாக நடந்து முடியும் வரைக்கும் பல நபர்கள் அறிமுகப்படுத்தப்படுகிறார்கள். இந்த அறிமுகப்படலம் மின்னல் வேகத்தில் நகர்கிறது. கதாப்பாத்திரங்கள் வந்துகொண்டே இருக்கிறார்கள். வந்துகொண்டே இருக்கிறார்கள் என்பது பிரச்சனை இல்லை. கொஞ்சம் நிதானமாக வந்திருக்கலாமோ என்று எண்ணத் தோன்றியது. ஒவ்வொரு நபரையும் மிகஅழுத்தமாக வாசகனின் மனதில் பதியச்செய்துவிட்டு அடுத்தகட்டத்திற்குள் நுழைந்திருக்கலாமோ என்று தோன்றியது. 

ஏனென்றால் பின்னால் வரும் கண்ணிகளை எழுத்தாளன் இணைக்கும் போது அவனோடு சேர்ந்து இயைந்துகொள்ள வாசகன் தயாராக இருக்க வேண்டும். இப்படி ஒரு நபர் வந்தாரா? யார் இவர் என்ற ஐயம் எழுமாயின் அங்கே மிஞ்சி நிற்கப்போவது ஒரு சின்ன கேள்விக்குறி.

இதுபோன்ற குறைகள் அனைத்தும் களம் ஆரம்பமாகும் சிலபகுதிகளுக்குத்தான். அதன் பின் கதை மிகவும் சுவாரசியமாக நகர்கிறது. இராஜேஷ் இதனைக் கதையாக எழுதியுள்ளார் என்று சொல்வதைவிட ஒரு நல்ல திரைக்கதையாக கற்பனை செய்து பார்த்துள்ளார் என்றுதான் கூற வேண்டும். காட்சிக்கோர்ப்புகளும் அப்படியே நகர்கின்றன. இதனை நாவலின் பலமாகக் கருதுகிறேன்.

பல இடங்களில் மென்நகைக்க வைக்கிறார். வசந்தா மற்றும் விநாயக் தங்கள் பெயர்க்காரணம் கூறும் இடமாகட்டும், பெண்ணியப் போராளியா இருப்பாங்க போல கொஞ்சம் பார்த்துதான் பேசணும் என விநாயக் நினைத்துக்கொள்ளும் போதோகட்டும், எதவாது சொன்னீங்களா? இல்லை மேடம் நினைச்சேன், போன்ற இடங்களிலோ சரி போகிற போக்கில் அசரவைக்கிறார். இன்னும் கொஞ்சம் மெனக்கெட்டார் என்றால் ஒரு முழுநீள விருந்தை இவரால் படைக்க முடியும். லைட் ரீடிங்கில் இராஜேஷ் ஜொலிக்க வாய்ப்புகள் பிரகாசமாகவே இருக்கின்றன.

என்ன யாராவது ஒருவர், அவர் கதையைக் கொஞ்சம் ப்ரூப் ரீடிங் செய்திருக்கலாம், ஒற்றுப் பிழையையும் சந்திப்பிழையையும் புத்தகமாகப் பார்க்கும்போது அவற்றை மனம் ஏற்பதில்லை. உறுத்தலாகாவே இருக்கிறது.

ஆக... குறைகளைக் கடந்து பார்த்தால்,

ஒரு கதையை மிக சுவாரசியமாக சொல்லிச்செல்லும் கலை இராஜிஷிடம் இருக்கிறது, இன்னும் கொஞ்சம் நேரமெடுத்து டீடெயிலிங் செய்திருந்தால் 'களம்' கிரைம் உலகின் தவிர்க்க முடியாத கதையாக மாறியிருக்கக்கூடும் அத்தனை சாத்தியக்கூறுகளும் இதில் இருக்கின்றன. இராஜேஷ் குமார், இராஜேந்திர குமார் வரிசையில் இராஜேஷ் ஜெயப்பிரகாசத்திற்கும் சிறந்த பாதை காத்திருக்கிறது தன் குதிரையின் கடிவாளத்தை ஒழுங்காகப் பிடிப்பாரே என்றால்.

- சீனு