31 Oct 2012

குறும்படத் துறை - எழுத இருகிறார்கள் புதிய வரலாறு


புதுமையான வாய்ப்புகளை வழங்குவதில் சென்னைக்கு நிகர் வேறு எதுவும் இல்லை (இது தான் உண்மை நிலை என்பதால் மறுப்பதற்கு எதுவும் இல்லை). தற்போது மிகவும் பிரபலமாக வேகமாக வளர்ந்து வரும் ஒரு துறை குறும்படத் துறை. யார் வேண்டுமானாலும் இனி சினிமாக் கனவுகளுடன் பிறக்கலாம், கோடம்பாக்கத்தின் கதவைத் தட்டலாம் என்று நம்பிக்கைத் தர வைத்ததுறை. பிரபல நடிகரின், இயக்குனரின் மகன் என்ற விசிடிங் கார்டுகள் இனி செல்லுபடியாகாது. நினைத்த இடத்தில நினைத்த நேரத்தில் படம் பண்ணலாம். பிரபலம் என்றில்லை யாரை வேண்டுமானாலும் திரையில் காட்டலாம். இவர்கள் மனது வைத்தால் இன்னும் சில நாட்களில் பிரபலம் என்ற வார்த்தையைக்  கூட பிரபலம் இல்லாமல் ஆக்கலாம் அல்லது யார் வேண்டுமானாலும் பிரபலம் ஆகலாம். இவர்களுக்கு இருக்கும் ஒரே ஒரு சவால் பட்ஜெட்.

இளம் இயக்குனர் இளனின் வார்த்தைகள்   

சொல்ல நினைப்பதை குறிப்பிட்ட கால இடைவெளிக்குள் சொல்ல வேண்டும் என்பதே இதில் விடப் பட்டிருக்கும் சவால். இந்தக் கலையில் தேறிவிட்டால் போதும் காதலையும் பிட்சாவையும் சொதப்பாமல் சொல்லிவிடலாம். சென்ற வருடம் சிறந்த சின்னத்திரை நிகழ்ச்சியாக விகடனால் தேர்ந்தெடுக்கப்பட்ட நிகழ்ச்சி நாளைய இயக்குனர்.கேப்டன் டிவி கூட குறும்படம் சார்ந்த நிகழ்ச்சி ஒன்று நடத்தினார்கள், தற்பொழுது நடக்கிறதா என்று தெரியவில்லை. பதினைந்து நிமிடங்களில் எடுக்கப்படும் குறும்படங்கள் எந்த ஒரு மனிதனின் நேரத்தையும் வீணடிப்பதில்லை என்பதால் குறும்படங்கள் பார்ப்பவர்களின் எண்ணிக்கை சமீப காலங்களில் அதிகரித்து உள்ளது என்பதை யுட்யுப் மீது ஆணையிட்டுச் சொல்லலாம். ஒவ்வொரு படமும் குறைந்தது ஆயிரம் பக்கபார்வைகளைக் கடந்து ஓடிக் கொண்டிருகிறது.

வெட்டி வேலையில் நண்பன் மணிகுமார் 
யுட்யுப்! குறும்பட உலகின் வெள்ளித்திரை, கனவுகளை அரங்கேற்றும் இலவச மேடை எல்லாமே யுட்யுப் தான். தமிழ் குறும்படங்களுக்கு என்று பல சேனல்கள் உள்ளன. பலரும் பல படங்களை இங்கு பகிருகின்றனர். அந்தப் படத்தைப் பற்றி தங்களுக்குத் தோன்றும் கருத்துகளை பகிருகின்றனர். குறும்படங்களின் மேல் ஈர்ப்பு வந்த தருணங்களில் வாரத்திற்கு பத்து படங்களாவது பார்ப்பேன், தற்போது வரையறைக்கு உட்பட்ட இணைய சேவையைப் பெற்று வருதால் (லிமிட்டெட் இன்டர்நெட் பிளான்) அதிகமான குறும்படங்களை தரவிறக்கம் செய்ய முடியவில்லை. குறும்படங்களின்  விமர்சனகளைப் பொருத்து தரவிறக்கம் செய்து பார்த்து வருகிறேன்.  

அனந்தரா மற்றும் ஜூனியர் பிலிம் மேக்கர் பெஸ்டிவல் 2012: 

எனது நண்பன் மணிகுமார் இதுவரை பத்திற்கும் மேற்பட்ட குறும்படங்களுக்கு எடிட்டிங் செய்து உள்ளான், தற்பொழுது செய்தும் வருகிறான். அவன் வெட்டிய ஒரு படம் அனந்தரா மற்றும் ஜூனியர் பிலிம் மேக்கர் பெஸ்டிவல் 2012லில் பங்கு கொள்கிறது என்று என்னை அழைத்துச் சென்றான். ஸ்கை வாக்கில் இருக்கும் பி.வி.ஆர் சினிமாஸில் வைத்து நடைபெறுகிறது இந்த மூன்று நாள் திருவிழா. நான் சென்றது முதல் நாள் துவக்க விழா அன்று, சிறப்பு விருந்தினர்களாக இயக்குனர் தரணி மற்றும் சித்ரா லக்ஷ்மணன் ( நமது பாஸ் மங்குஸ் ஹெட் தான், ஒழுங்கா சொல்லாட்ட புடிச்சு உள்ள போட்ட்ருவாயிங்க சார் )  உட்பட ஐந்து பேர் வந்திருந்தனர், மீத மூன்று பேர்களின் பெயர் அறியும் வாய்ப்பு கிடைக்கவில்லை. ( எங்கு சென்றாலும் ஒரு குறை : விழா நடத்துபவர்களும் விருந்தினர்களும் ஏன் ஆங்கிலத்தில் மட்டுமே பேசுகிறார்கள் என்று I can't understand why these people are behaving like this ha ha ha ). 

காலை எட்டு மணிக்கு விழா தொடங்கியது. முதலில் தரணி பேசினார். குறும்படம் பற்றியும் அதன் மூலம் வெள்ளித் திரையில் தடம் பதித்த பாலாஜி (காதலில் சொதப்புவது எப்படி) கார்த்திக் சுப்புராஜ் (பிட்சா) பற்றியும் கூறிவிட்டு தத்துவம் ஒன்று சொன்னார். படம் பண்றதுக்கு ரூல்ஸ் எதுவும் கிடையாது ஆனால் ரூல்ஸ் தெரியமா  ரூல்ஸ்ல மாட்டிட்டு முழிக்காதீங்க. ( பழமொழி சொன்ன ஆராயக் கூடாதுன்னு சொல்லுவாங்க சத்தியமா சொல்றேன் அந்த பழமொழி எனக்குப் புரியவே இல்ல, ஒருவேள படம் பண்றவங்களுக்குப் புரியும் போல).       

--மணி பதினொன்ட்ரையத் தாண்டியும் குறும்படங்கள் தொடர்ந்தன, இருந்தும் சத்யமில் பிட்சா இரண்டாம் முறை அழைத்ததால் அங்கு சென்று விட்டேன்--  

ஒன் மார்க் : நல்ல மார்க் எடுக்க வேண்டும் என்று நினைக்கும் அப்பாவுக்கும், பிள்ளைக்கு செல்லம் கொடுக்கும் அம்மாவிற்கும் ஏற்படும் அவமானத்திற்கு இடையில் அவர்கள் மகனினுள் ஏற்படும் மற்றம். எனக்கு மிகவும் பிடித்திருந்தது. கதை சொன்ன விதம் அருமை.    

அகடனம் கிளிக் டெலிட் : ( அகடனம் - இதன் அர்த்தம் தெரிந்தால் சொல்லுங்கள், என் தமிழ் மோசமாகி விட்டதோ என்று எண்ணி கூகுளிடம் மொழி பெயர்க்கச் சொன்னேன், நல்ல வேலை அதற்கும் தெரியவில்லை ), கையில் சிக்கும் ஒரு காமெர, யாரைப் படம் எடுக்கிறார்களோ அவர்கள் அந்த காமிராவின் உள் வந்து விடுவார்கள், டெலிட் செய்தால் மீண்டும் தொலைந்த இடத்திற்கே வந்து விடுவார்கள், இந்த காமிராவைக் கொண்டு நாட்டைத் திருந்தும் புதிய உத்தி(!). படம் எடுத்தது அனைத்துமே பதின்ம வயது சிறுவர்கள் போல் இருந்தார்கள், சரியாக தெரியவில்லை, அனால் இளையவர்களின் சிந்தனைக்கு வாழ்த்துக்கள்.

பத்ம வியுகம் : அடிதடி ரவுடிகளுக்குள் நடைபெறும் மோதல், நடக்கும் கொலைகள் அனைத்தின் பின்னும் வேறு ஒரு வியுகம் பின் தொடர்கிறது. சிறந்த சிந்தனை, நல்ல கதை, இன்னும் கொஞ்சம் நடித்திருக்கலாம், இருந்தும் நல்ல முயற்சி, எனக்கு பிடித்திருந்தது.

புலப்பாடு வாய் பேச முடியாத ஒருவனின் கதையைத் திருடி படம் எடுக்கிறார்கள், ரொம்பவே சிறிய படம், வித்தியாசமான முயற்சி.

ஜீவன் : லியோ டால்ஸ்டாய் எழுதிய கதையை பின்பற்றி என்று தொடர்கிறார்கள். மிகச் சாதரணமாக எடுக்கப்பட்ட படம், இருந்தும் சொன்ன கருத்துக்கள் ஆழம் மிக்கவை, அந்த மூன்று கருத்துக்கள்.


1. மனிதனிடம் கொடுக்கப்பட்டது : கருணை         
2 மனிதனிடம் கொடுக்கப்படாதது: எதிர்காலத்தை நிர்ணயிக்கும் சக்தி 
3. மனிதன் எதனால் வாழ்கிறான் : அன்பினால் 

இந்தக் கருத்துகளை அவர்கள் சொல்ல தேர்ந்தெடுத்த விதம் கவிதை.

ஒரு கோப்பை தேநீர் : ஒரு பெண் கைதிக்கும் பெண் காவலருக்குமான வாழ்கையை ஒரு சில நிமிடங்களில் படமாகியிருக்கும் விதம் அற்புதம். பாருங்கள் உங்களுக்கும் பிடிக்கும், பின்பு தன அறிந்து கொண்டேன் இப்படத்தின் வசனம் எஸ்.ரா என்று...    

லௌட் ட்ருத் : இது தமிழ் படமா, மலையாளப் படமா என்று சந்தேகமாக உள்ளது, ஹீரோவைத் தவிர அனைவரும் தமிழ் பேசுகிறார்கள், படத்தில் தமிழ் பேசியவர்கள் தவிர படத்திற்கு உழைத்தவர்கள் அனைவருமே மலையாளிகள். அதனால் இதனை மலையாள குறும் படம் என்றே சொல்லாம். மூட நம்பிக்கையால் குழந்தையைப் பலி கொடுக்கும் கூட்டத்தை வெளி உலகுக்கு கொண்டு வந்த ஒரு பத்திரிக்கையாளனின் உண்மைக் கதை. எடுக்கப்பட்ட விதம் மிகவும் அருமை. மிகத் தெளிவான ஒளிப்பதிவு, காட்சிகளில் பணம் விளையாடி உள்ளது, நல்ல குறும் படத்திற்காக மெனக்கெட்டு இருப்பதால் பணம் செலவானது குறித்து கவலைப் பட்டிருக்க மாட்டார்கள் என்று நினைக்கிறன். எனக்கு மிகவும் பிடித்த படம்.



மல்லிப்பூ : பாலு மகேந்த்ராவின் சினிமாப் பட்டறையைச் சேர்ந்தவர்கள் எடுத்த குறும்படம். கஷ்டப் படும் விதவைத் தாய் பிறந்த நாள் டிரஸ் கேட்க்கும் மகனுக்கு இடையில் நடக்கும் பாசப் போராட்டம் கதை. எதார்த்தமாக சொன்ன விதம் அருமை. ஏழ்மை பாசத்தின் வலியை கண்முன் காட்டி இருக்கிறார்   இயக்குனர்.

தமில் : 1950' இல் காரைக்குடியில் நடப்பது போன்ற கதை, ஒரு வேலைக்காரச் சிறுமிக்கும் வீட்டு எசமானிக்கும் இடையில் நடக்கும் காட்சி நகர்வுகள் சொல்லிய விதம், அருமை. 


அன்புடன் ஜீவா : எனது நண்பன் மணிகுமார் வெட்டி ஒட்டிய குறும்படம், மிக நேர்த்தியான ஒளிபதிவு, கவிதையை மட்டுமே வசனமாகக் கொண்ட குறும்படம். பிட்சா படத்தில் இரண்டாவது பேயாக நடித்த பாபி தான் இப்படத்தின் ஹீரோ. இப்படத்திற்கு வசனம் எழுதிய இயக்குனர் இன்னும் கல்லூரி தான் படித்துக் கொண்டுள்ளார் என்று சொன்னால் நம்புவது கடினமே, இருந்தாலும் நேரில் பார்த்தால் நம்பினேன். மேலும் இந்தப் படத்தின் இசை ஜஸ்டின் (நாளைய இயகுனரில் இருமுறை விருது பெற்றுள்ளார். இவர் என் நண்பன் ஆண்டோவின் அறைத்தோழன் என்பதால் நண்பனின் நண்பன். கவிதையால் நகரும் காட்சிகள் தான் என்றாலும் காதலை விரும்பும் அனைவருக்கும் பிடிக்கும் படியான படம். அதில் எனக்குப் பிடித்த ஒரு வசனம் (அ) கவிதை 

என்னை அடித்த கை வலித்ததா... என்ன ? 
நீ அழுது ... 
என் கண்களையும் அழ வைத்தாய்...


என் நண்பனின் பெயரை பெரிய திரையில் பார்த்த சந்தோசம், இனி எப்போதும் அவன் பெயரை பெரிய திரையில் பார்க்க வேண்டும் என்ற எண்ணத்தில் எழுதியது தான் இப்பதிவு.வருமானம் இல்லாத துறை, ஆனால் அதனை நம்பியும் கால் பதித்த நண்பர்கள் அதில் இருப்பதால் எனக்கும் அதில் ஆர்வம் அதிகம், அவர்களை ஊக்கப் படுத்தும் விதமாக அன்புடன் ஜீவா டீமின் அடுத்த படம் விசித்திரம் பற்றி ஒரு பதிவு எழுத விருப்பம்,  அந்த டீம் ஒத்துழைத்தால் விரைவில் வி-சித்திரம் பற்றிய பதிவை எதிர்பார்க்கலாம்.  


விளம்பரம் : 

குறும்படங்களைப் பற்றிய பதிவானதால் விளம்பரமும் குறும்படம் சார்ந்தே அமையும் என்று நான் நினைக்கவில்லை. உணவு சார்ந்த  விழிப்புணர்வைத் தரும் டாக்குமெண்டரி படம் பற்றி ஹாலிவுட் ரசிகன் எழுதிய பதிவு, அவசியம் படியுங்கள், நிச்சயமாக ஒரு விழிப்புணர்வு பதிவு.    


பதிவு பற்றிய விமர்சனம் பகிர்ந்து செல்லுங்களேன்.  
பெரும்பாலான படங்களின் சுட்டி கிடைக்கவில்லை, உங்களிடம் இருந்தால் கமன்ட்டிவிட்டு செல்லுங்கள் :-)


24 Oct 2012

பீட்சா - இது முறையான விமர்சனம் அல்ல



" பாப்பா நீ படத்த பாத்து பயப்படலியா பாப்பா"


இண்டர்வெலில் அரங்கிலிருந்து வெளியேறும் பொழுது கட்டிளங்காளை ஒருவன், இருபத்தி ஐந்து வயது நிரம்பிய "அழகிய" பாப்பாவின் கையில் இருந்த ஐந்து வயது பாப்பாவை பார்த்து கேட்ட கேள்வி " பாப்பா நீ படத்த பாத்து பயப்படலியா பாப்பா"  

"எனக்கு இன்னும் டவுட்டாவே இருக்கு, அவன் எந்த பாப்பாவ  பார்த்து இந்தக் கேள்வியக் கேட்டான்" சீனு'ஸ் மைன்ட் வாய்ஸ்.

ஒரு ட்விஸ்ட்டுடன் நிறைவடையும் டைட்டில் கார்டில் இருந்து ஆரம்பமாகிறது இரண்டு மணி நேர ட்விஸ்ட். ரஜினி கமல் அஜித் படங்களுக்கு இருந்த எதிர்ப்பார்ப்பு இந்தப் படத்திலும் என்னை தொற்றிக் கொண்டது காரணம் பதிவுலகமும் பேஸ்புக் உலகமும். எங்கு காணினும் பீட்சா பீட்சா பீட்சா, பீட்சா. எனக்குப் பிடிக்காத ஒரு வஸ்து பீட்சா, "வெண்ணை ரொட்டி" என்பது தான் முறையாகப் பதப் படுத்தப்படாத அந்த ரொட்டியின் தமிழ் பதம் என்று அண்ணன் மெட்ராஸ் அவர்கள் மூலம் அறிந்து கொண்டேன். பரவாயில்லை இந்த பீட்சாவை வெகு சிறப்பாக பதப்படுத்தி நம் இதயத்தை காட்சிக்கு காட்சி பதம் பார்த்திருக்கிறார்கள். 


அரங்கின் உள்ளே நுழையும் பொழுது தற்செயலாக ஊழியர் ஒருவரிடம் கேட்டு வைத்திருந்தேன் எப்போ படம் முடியும் என்று "ரெண்டரைக்கு முடியும்" என்று அவர் சொன்னதால் அடிகடி மணிதுளிகளைப் பார்த்துக் கொண்டே இருந்தேன் எப்போது இரண்டரை மணி ஆகும் என்று. " எனக்கெல்லாம் ட்விஸ்ட்டு பிடிக்காது என்று நினைபவர்கள் கடைசி பத்தாவது நிமிடம் வந்தால் போதும், மொத்த படத்தையும் மீண்டும் ஒருமுறை ரீவைண்ட் செய்கிறார்கள் அப்போது பார்த்துக் கொள்ளுங்கள்.        

கார்த்திக் சுப்புராஜ் பற்றிய கவர் ஸ்டோரி சமீபத்தில் ஆனந்த விகடனில் வெளியாகி இருந்தது, அதில் அதில் என்னைக் கவர்ந்த விஷயம், சினிமாவா  இல்லை ஐ டி வேலையா என்று முடிவெடுக்க வேண்டிய நிலையில் துணிந்து தேர்ந்தெடுத்த துறை தான் சினிமாத் துறை. இவர் இயக்கிய முதல் குறும்படத்திற்கு வந்த கமென்ட் " நீயெல்லாம் எதுக்கு படம் எடுக்குற" இவரது சமீபத்திய குறும்படங்கள் லட்சக்கணக்கான பார்வைகளைத் தாண்டி சென்று கொண்டுள்ளது. இவை எல்லாமே பீட்சா மேல் ஈர்ப்பு வரக் காரணமான விஷயங்கள். 


ரம்யா நம்பீசன் அடுத்த ரவுண்டு வர வேண்டும் என்றால் தன்னிடம் இருப்பதில் ஒரு ரவுண்டை குறைக்க முயல வேண்டும். பின்னணி இசையில் மிரட்டலுடன் இருக்கிறது, வசனம் அருமை. குறைகள் கண்டுபிடிக்க நேரம் தராமல் காட்சி நகர்வுகளில் நேர்த்தி சேர்த்திருப்பது படத்திற்குப் பலம். ஹீரோ ஹீரோயின் காதல் காட்சிகளை பார்க்கும் (சங்கத்து) பேச்சிலர்கள் பொறமை கொள்ளக் கூடாது.      

"தமிழ் சினிமாவையே தலை கீழ புரட்டி போட போறான் மச்சி" படம் முடிந்து வெளியே செல்லும் பொழுது புரட்சிப் போராட்டம் நடத்த ஆரம்பித்தான் தமிழ் சினிமாவின் டெடிகேட் ரசிகன். "த்தா நீயெல்லாம் படம் பாத்திருந்த நெஞ்சு வெடிச்சு செத்ருப்ப" நவநாகரீக இளைஞன் ஒருவன் சென்னைத் தமிழில் தன் நண்பனை சீண்டிக் கொண்டிருந்தான், அவன் கைகளுக்குள் தான் கையை விட்டு மாற்றான் ஆகியிருந்த நவநாகரீக இளைஞிஅவன் இடுப்பை செல்லமாக சீண்ட "த்தா பேசிட்டு இருக்கேன்ல சும்மா வாடி" என்று தேன்பாயும் சென்னை தமிழில் காதல் புரிய அரம்பித்தான். (மேற்கண்ட வாக்கியங்களில் ஓ என்னும் ஒலி சென்சார் செய்யப்பட்டுள்ளது என்பதை பகிரங்கமாக தெரிவித்துக் கொள்கிறேன்). 


அரங்கில் மயான அமைதி நிலவிய நேரம் " எப்பா பயத்துல யாரும் பக்கதுல இருக்கவங்க கைய தடவாதீங்க" என்று ஒருவன் நேரடி வர்ணனை புரிய அதில் எந்தவிதமான இரட்டை அர்த்தமும் இல்லாததால் வெகுவாக ரசித்தேன். திருவான்மியூர் எஸ் டூ திரையரங்கம் காதலர்களாக வந்த பெண்கள் சுடிதாரிலும், அப்பா அம்மாவோடு வந்த பெண்கள் டைட் டீஷர்ட் மற்றும் ஸ்லீவ் லெஸ்ஸிலும் வந்தது குறித்து வியப்பின் எல்லை வரை சென்று வந்தேன் "ஒரு வேள டிரண்டு மாறிடிசோ".    

"தயவு செய்து படத்தின் கதையை யாரிடமும் சொல்லிவிடாதீர்கள், கிளைமாக்ஸ் என்ன என்பதையும் சொல்லி விடாதீர்கள்" இப்படி தான் அதே கண்கள் படத்தின் டைட்டில் கார்டு ஆரம்பமாகும் என்று எனது சித்தப்பா சொன்னார், நேற்று முகபுத்தாக நண்பர் ஒருவர் கூட அடுத்த அதே கண்கள் என்று தான் சொன்னார், என் கெட்ட நேரம் சிறுவயதில் நான் டியூஷன் முடித்து வரும் பொழுது வீட்டில் அதே கண்கள் கிளைமாக்ஸ் தான் ஒட்டிக் கொண்டிருந்தது. எப்படியோ அதில் தவற விட்ட அனுபவத்தை இதில் மீட்டெடுத்து விட்டேன் என்ற ஆனந்தம் உள்ளது.


படம் பார்த்த பின் முகப் புத்தகத்தில் எனது அண்ணன் பதிந்த ஸ்டேடஸ்       

"எல்லோருக்கும் ஒரு மொமென்ட் வரும், அவ நம்பிக்கையநம்பிக்கை யா மாத்துற மொமென்ட்,your moment is waiting".

Ya i got that moment after watching 'PIZZA', A wonderful horror movie of my life time. Just gone to the movie with out any expectation but had very thrilling experience!!!! My best cinema of the year!!






22 Oct 2012

ஐம்பதாவது பதிவு : ஹாய் கங்ராட்ஸ்


வரலாற்றுச்சுவடுகள்  

"லவ்வர்ஸ டே ஸ்பெஷல் கதை எழுதச் சொல்லி இருகாங்க தல, நம்ம கம்பெனி வெப் சைட் பாத்தீங்களா" மதிய உணவு முடித்து அரக்க பறக்க ஓடி வந்த விக்ரம் மூச்சுவிடக் கூட மறந்து என்னிடம் கூறிய வார்த்தைகள் தான் இவை.

"அத ஏண்டா இவ்ளோ ஆர்வமா சொல்ற, நடத்துனா நடத்திட்டு போகட்டும் "   கூறியது சீனுவாகிய நான்.

"யோவ் தல உங்கள மதிச்சு சொன்னேன் பாருங்க, எதாவது எழுதிக் கொடுயா நாமளும் கலந்துப்போம்"

"ஹா ஹா ஹா " ... மீண்டும் நான் 

"சிரிக்காதீங்க தல, நா சீரியஸா பேசிட்டு இருக்கேன், நமக்கு பரிசு எல்லாம் கிடைக்கும். நல்ல விஷயம் நடந்தா வேணாம்னா இருக்கு" , விக்ரம்.

" சரி எதபத்தி, என்ன எழுதலாம்னு சொல்லு ட்ரை பண்ணிப் பாப்போம்"

"ஹீரோ நடுவெயில்ல ஒரு பொண்ண பாக்குறான். உடம்பெல்லாம் வேர்வை யோட நிக்குற ஹீரோவ ஹீரோயின் பாக்குறா, பொண்ணும் பையன பார்த்த உடன இம்ப்ரெஸ் ஆகுறா, முதல் பார்வையில லவ்வு, ஆனா ரெண்டு பெரும் லவ்வ சொல்லிக்கக் கூடாது " கதையின் கருவை அத்தனை ஆர்வமாய் சொல்லிக் கொண்டிருந்தான் விக்ரம்.

இந்த சம்பவத்தை இந்த இடத்தில ஸ்கிப்பிவிட்டு வேறு சில முக்கியமான விசயங்களைப் பற்றி பேசுவோம்.

மின்னல்வரிகள் 


சால்ட்டாக ஐநூறு ஆயிரங்களைக் கடந்து பலரும் தெம்பாக ஓடிக் கொண்டிருக்க, ஐம்பதைத் தொடுவதற்குள்ளாக எனக்கோ மேல்மூச்சு கீழ்மூச்சு வாங்குகிறது. அல்லது அப்படி ஒரு பிரமை கற்பனை மாயை  அல்லது மாயை  அல்லாத உண்மை. பதிவுலக ஜாம்பவான்களை தொன்று தொட்டு எழுதிவரும் மார்கண்டேயன்களைப் பார்க்கும் பொழுது ஐம்பது என்பது அளப்பரிய சாதனையோ அல்லது அலப்பறையைக் கூட்டும் சாதனையோ அல்ல. இருந்தும் என்னைப் பொறுத்த வரையில் மகிழ்ச்சியான ஒரு விஷயம்.

எங்கள்(என்) பிளாக் 
  
சிறுகதைகளை தவிர வேறு எதுவும் எழுதக் கூடாது என்று தான் பதிவுலகினுள் காலடி எடுத்து வைத்தேன். பதிவுலகை நாடி வந்தவர்களின் நாடி பிடித்துப்பார்த்த பொழுது நமது கடையில் சிறுகதைகளை வைத்து மட்டுமே வியாபாரம் செய்துவிட முடியாது என்பதை தெளிவாகப் புரிந்து கொண்டேன். (எனது ஆரம்பகாலப் பதிவுகள் பெரும்பாலும் சிறுகதைகளாக மட்டுமே இருக்கும்).  சிறுகதைகளைத் தவிர்த்து எழுத நினைத்த விஷயம் சினிமா, கேபிள் வழியாக சினிமா சினிமாவைப் பார்க்கும் ஹாலிவூட்ரசிகர்களும் ஹாரிப்பாட்டர்களும் இருக்கும் இந்த இடத்தில் நம் படம் ஓடாது என்பதையும் கணிக்கத் தவறவில்லை. ( நான் எழுதிய சினிமா பதிவுகளுக்கே ஹிட்ஸ் அதிகம் என்பது வேறு விஷயம்!).

ரு பதிவன் என்பவன் நிகழ்கால வாழ்க்கையை (அ) தன் எண்ணங்களை பதிந்து பகிருந்து கொடுப்பவனாக இருக்க வேண்டும் என்ற பதிவுலக விதிக்கு ஏற்ப என்னை மாற்றிக் கொண்டேன். அப்படியாக நிகழ்காலத்தைப் பற்றி எழுத வேண்டுமென்ற எண்ணத்தில் எழுதத் தொடங்கிய பதிவுகள் தான் சென்னையைப் பற்றிய பதிவுகள். தென்காசியைப் பற்றி எழுதாமல் சென்னையைப் பற்றி மட்டுமே அதிகம் எழுதுவதாக என் மண்ணின் மைந்தர்கள் என்னை முறைப்பதுண்டு. தென்காசியைப் பற்றி எழுதவும் பேசவும் பல விஷயங்கள் இருந்தும், சென்னையில் நான் தேடித் தேடி அறிந்து கொண்ட விஷயங்கள் அதிகம். அவை நிகழ்கால சென்னைவாசிகளுக்கும் வருங்கால சென்னைவாசிகளுக்கும் நிச்சயம் உதவலாம் (உதவாமலும் போகலாம்)  என்ற எண்ணமே சென்னையைப் பற்றிய எனது பதிவுகளுக்கான மிக முக்கியமான விஷயம்.       

ஸ்பெஷல் மீல்ஸ் - சுஜாதா

லைபூ ஆரம்பித்தால் அதில் சுஜாதா என்னும் பிள்ளையார் சுழியைத் தான் முதலில் பதிக்க வேண்டும் என்று நினைத்து நினைத்து காலம் கடத்திக் கொண்டே இருந்தேன்.  ஐம்பதாவது பதிவும் வந்துவிட்டது இதுவரை ஒருபதிவு கூட வாத்தியாரைப் பற்றி எழுதவில்லை. எழுத்தறிவித்தவன் வாத்தியார் அவரைப் பற்றிய பதிவு விரைவில் விரைவில் என்று எழுத முடியாமல் விரைவாக காலமும் மற்ற பதிவுகளும் கடந்து கொண்டே உள்ளது. வெகு சமீபத்தில் தான் யவனிகா படித்தேன், அதைப் பற்றியாவது எழுத வேண்டுமென்று நினைத்தேன் முடியவில்லை. ஹாரி புண்ணியத்தில் சுஜாதா சாயலில் கதை எழுதும் வாய்ப்பு கிடைத்தது, அதற்காக ஹாரி அவர்களுக்கு சிறப்பான நன்றிகள்.

தம்பி - தீவிரவாதம் 

கபதிவர்கள் மிக முக்கியமானவர்கள். இவர்களைப் போல் எழுத வேண்டும் என்பதற்கு எடுத்துக்காட்டாய் பலரும், தயவு செய்து இவர்களைப் போல் மட்டும் எழுதி விடாதே என்பதற்கு எடுத்துக்காட்டாய் சிலரும் மறைமுகமாக பயிற்சி அளித்துக் கொண்டே உள்ளார்கள். சமயங்களில் பதிவுலகில் நடக்கும் வெட்டுக்குத்துக்களும் தீவிரவாதங்களும் ஷப்பா.... இருந்தும் ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமான படிப்பினையை கற்றுக் கொடுத்துக் கொண்டேதான் உள்ளார்கள். ஆரோக்கியமான விவாதங்களும் ஆங்காங்கே நடந்து கொண்டு தான் உள்ளது. நான் சொல்ல வரும் விஷயம்,  பதிவுலகம் நேரத்தைக் குடிக்கவில்லை, ஏதோ ஒரு விதத்தில் ஒரு வித்தியாசமான சூழ் நிலையை உருவாகிக் கொடுத்துக் கொண்டே உள்ளது என்பது தான். அதனால் பதிவுலகம் போர் அடித்து விடாது என்பது என் கணிப்பு.

பிட்...பைட்...மெகா பைட்...

னது பதிவு மூலம் நான் அறிந்து கொண்ட சில பிட்...பைட்...மெகா பைட்கள்...

  • அக்கா என்ற வார்த்தையை கூகிள் தப்பார்த்தம் செய்து கொண்டதால் எனது அக்கா கடைக்கு கணிசமான வாடிகையளர்கள் தினமும் தவறாது வந்து ஏமாந்து கொண்டிருக்கிறார்கள்.
  • பொன்னியின் செல்வனைப் பற்றி படிப்பவர்கள் மிக அதிகமாகவே உள்ளார்கள். ஒரு நாளில் குறைந்த்தது ஒருவராவது பொன்னியின் செல்வனைத் தேடுகிறார். ஏதோ ஒரு விதத்தில் சென்னையும் ராமேஸ்வரமும் படிக்கப்படுகிறது.
  • சினிமா பதிவுகளுக்கு தான் தமிழன் முதலிடம் கொடுக்கிறான் என்பதற்கு உதாரணம் என் சினிமா விமர்சனகள் கூட படிக்கப்படுகின்றன என்பது தான்.  

தலைபோல வருமா

திவெழுத ஆரம்பித்த புதிதில் என் எழுத்துக்களை உற்சாகப்படுத்த நண்பன் காளிராஜ் வரைந்து கொடுத்த படம் தான்  தற்போது என் வலைபூவிற்கு அடையாளமாக இருக்கும் புகைப்படம். அவனாக முன்வந்து செய்து கொடுத்தது, தலைப்பிற்கு ஏற்ற வகையில் அந்த படத்தை தயார் செய்து கொடுத்தது, வலைபூவிற்கு அற்புதமான அடையாளம் கிடைக்க அவனும் ஒரு காரணம். மிக்க நன்றி தல. இதுவரை ஒரு முறை கூட இதை பற்றி எங்கும் குறிபிட்டது இல்லை, இங்கே வைப்பு கிடைத்தது கூறிவிட்டேன்.



ஊர்ப்பேச்சு 


தொடர்ந்து உற்சாகமளித்து வரும் அனைவரையும் தனியே குறிப்பிடவில்லை, குறிப்பிட நினைத்தால் உங்கள் ஒவ்வொருவரைப் பற்றியும் தனிப் பதிவு ஒன்றே எழுதலாம், அப்படி எழுத நேரம் கிடைப்பின் தவறவும் மாட்டேன். இந்தப் பதிவு உலகம் மிக முக்கியமான நல்ல நண்பர்களைப் பெற்றுக் கொடுத்துள்ளது.. இதற்குக் காரணம் உங்கள் முகங்கள் இல்லை எழுத்துக்கள் தான்....அந்த எழுத்துக்களுக்கு எனது நன்றி.


கேளுங்க 

ம்பது பதிவுகள் எழுதியதற்காக சங்கம் எனக்கு பாராட்டு விழா எதுவும் நடத்துமா ? என்பதை ராசா கேளுங்க மூலம் தலைவரிடம் கேட்ச் சொன்னார், ( தலைவரே உங்கள் மரமண்டையில் ஏறியதா?)  

பிலாசபி 

பொருத்தமான தலைப்புகள் அனைத்தும் சகபதிவர்களிடம் இருந்து சுட்டது, காப்புரிமை கேட்டு சங்கத்துப் படியேறின் நீதி வழங்கப்பட மாட்டாது என்பதை இங்கே பெருமையாகக் கூறிக் கொள்கிறேன். காரணம் இங்கே நீதிகள் விற்கப் படுவதில்லை.

விளம்பரம் 

விளம்பர குறிப்பு : பதிவின் ஆரம்பத்தில் இருக்கும் நீலநிற எழுத்துகளைப் படித்து விட்டு மீண்டும் விளம்பரப் பகுதிக்கு வாருங்கள். 

"நல்ல விஷயம் நடந்தா வேணாம்னா இருக்கு" என்று அன்று விக்ரம் சொல்லிய வார்த்தைகளால் நடந்த ஒரு நல்ல விஷயம் நான் வலைபூ ஆரம்பித்தது ...! (மூணு புள்ளி ஒரு ஆச்சரியக் குறி). என் வலைப்பூவின் முதல் பதிவு அல்லது சிறுகதை அன்று விக்ரம் கொடுத்த கதைக்கரு தான். அந்த முதல் பதிவு மற்றும் நான் எழுதிய முதல் கதை இன்றைய விளம்பரம்.





17 Oct 2012

புதுப்பொலிவுடன் - திடங்கொண்டு போராடு


ந்த மாதம் முழுக்க இத்தனை நாட்களில் இதுவரை ஒரே ஒரு பதிவு தான் எழுதி இருக்கிறேன், பதிவு எழுத ஆரம்பித்த மாதம் தொடர்ந்து இத்தனை காலங்களில் இல்லாத சிந்தனை வறட்சி, நிச்சயமாய் என்னால் இதனை "சிந்தனை வறட்சி" என்று தான் வகைப் படுத்த முடிகிறது. யாருடைய வலைபூவிற்கும் நான் செல்லவில்லை ஒரு வேலை நான் சென்றிருந்தாலும் சென்றதற்கான தடத்தைப் பதிக்கவில்லை. எப்போது அடுத்த பதிவை எழுதுவாய்? என்றதன் பின் தான் ஏன் என் வலைப்பூவிற்கு வரவில்லை என்ற கேள்வியைக் கேட்டனர். எனக்கு பதில் சொல்லத் தெரியவில்லை, முதல் பத்து நாட்கள் தான் உடல் நிலை சரி இல்லாமல் இருந்தது, மீதமிருந்த நாட்கள் - சிந்தனை வறட்சி. 

சென்ற வாரம், எப்படியோ ஒரு பதிவை எழுதி அதையும் மிகப் பெரிய வெற்றிக்கு கொண்டு சேர்த்து விட்டனர் நண்பர்கள். வரும் அஞ்சு பத்து  கமேன்ட்டுகளையே அதிசயமாய்ப் பார்ப்பேன், வரபோகும் கமெண்ட்டுகளை ஆர்வமாய் எதிர்பார்ப்பேன், சென்ற பதிவிற்கு வந்த கமன்ட்டுகள் மூலம் முதல் முறை சதம் கடந்தேன், எனக்கே மலைப்பாய் இருந்தது, இத்தனைக்கும் கடந்த நாட்களில் நான் யார் பதிவிற்கும் சென்று இருக்கவில்லை, அவர்கள் என்ன பதிவுகள் எழுதி இருந்தார்கள் எழுதுகிறார்கள் என்பதைக் கூட அறிந்து இருக்கவில்லை, இருந்தும் என்னை மதித்து என்னை வைத்து கும்மி அடித்த அனைத்து நண்பர்களுக்கும் மகிழ்வான நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். 

திவு எழுத ஆரம்பித்த நாட்களில் இருந்து இது வரை ஒரு முறை கூட டெம்ப்ளேட்டை மாற்றி அமைத்தது இல்லை, புதிதாக எதையும் சேர்த்ததும் இல்லை குறைத்ததும் இல்லை. எனக்கே என் வலைப்பூவைப் பார்க்கப் பரிதாபமாய் இருந்தது. சரி எதாவது செய்வோம் என்று களத்தில் குதித்தேன்,     
முதல் கட்ட ஆரய்ச்சியில் இறங்கினேன், என்ன செய்யப் போகிறோம் என்று தெரியாமல் யாரிடமும்  உதவி கேட்க முடியாது, என்னவெல்லாம் மாற்றங்கள் தேவை என்பதை ஆராய்ந்தேன், முதல் கட்டமாக "PAGES" என்கிற "WIDGET". நமது வலைப்பூவில் நாம் எழுதிய பதிவுகளை முறையாக ஒருங்கிணைக்கக் கூடியது, எத்தனையோ வலைப்பக்கங்களில் பார்த்து உள்ளேன், இருந்தும் எப்படி இதனை சேர்க்காமல் இருந்தேன் என்பது வியப்பாகவே உள்ளது, நீங்கள் இதுவரை உபயோகிக்க வில்லையா உடனே சேர்த்துக் கொள்ளுங்கள், மிகவும் அவசியமான விட்ஜெட். 

தற்கு அடுத்து நான் செய்த அனைத்து வாஸ்து சாஸ்திரங்களுக்கும் உதவி புரிந்தவர்கள் பிளாக்கர் நண்பன் நமது டெக்னிகல் நண்பன் அப்துல் பாசித் அவர்களும் அண்ணன் வரலாற்றுச் சுவடுகள் அவர்களும். இவர்கள் சும்மா ஒன்றும் எனக்கு உதவி செய்து விடவில்லை, இது கூட உனக்கு தெரியாதா? இது கூட உனக்கு தெரியாதா! என்பது போன்ற அசிங்கப்படுத்தும் கேள்விகளை எழுப்பி அசிங்கப்படுத்தி அதன் பின்னரே கற்றுக் கொடுத்தனர் என்பது ரகசியம் அல்லாத ரகசியம். " தெரியாதுன்னு தானையா உங்க கிட்ட கேக்குறேன், அப்புறம் என்ன இது கூட உனக்கு தெரியாதான்னு ஒரு கேள்வி ". இருவரும் மிக மிகப் பொறுமையாக என்னை அசிங்கப் படுத்திக் கொண்டே கற்றுக் கொடுத்ததால், அவர்களும் எரிச்சல் அடையவில்லை. பின்ன ஆடு சிக்கி இருக்கு கெடா வெட்ட வேணாமா! 

ற்போது நான் புதியதாக மாற்றி அமைத்து இருக்கும் முதல் பக்கத்தை முறையாக வடிவமைக்க உதவி செய்தவர் நண்பன் பாசித். முறையாக மாற்றத் தெரியாமல் நான் செய்திருந்த தவறுகள் அனைத்தையும் சுட்டிக்காட்டி ஒழுங்கு படுத்திக் கொடுத்தார். மிச்சம் மீதி இருந்த டிங்கரிங் வேலைகள் அனைத்தையும் ஒவ்வொன்றாகக் கண்டுபிடித்து அதை சரி செய்ய சொல்லிக் கொடுத்தவர் அண்ணன் வசு என்கிற வரலாற்றுச் சுவடுகள். "ஆங் எல்லாம் சூப்பரா வந்த்ருக்குப்பா, இனி ஒரு பிரச்னையும் இல்ல" என்று உறுதி படுத்தியவர் ஹாரிபாட்டர். பாசித் அவர்களிடம் என்ன சந்தேகம் கேட்டாலும் சிரித்துக் கொண்டே சுட்டியை அனுப்புகிறார், அதில் நம் சந்தேகம் தீர தெளிவான விளக்கப் பதிவு ஒன்றை எப்போதோ எழுதி வைத்துள்ளார். நிச்சயம் மிகப் பெரிய விஷயம். ஒரு வாரம் முழுமையாக வேண்டும் பாசித் எழுதிய பதிவுகளைப் பரிசோதித்துப் பார்ப்பதற்கு.     

பதவி ஆசை இல்லை என்று கூறினாலும் மறைமுகமாக தனக்குள் பதவி ஆசை இருப்பதை வெளிபடுத்திய அண்ணன் அரசன் அவர்களின் கைவண்ணம்.      
     



ங்கத்து தீவிரவாதிக்கு நான் சொல்லிக் கொள்ள விரும்புவது, அனைத்து மாற்றங்களையும் உங்கள் தளத்தில் சங்கம் தன் சொந்த செலவில் செய்து தரும். அதுவரை தீவிரவாதச் செயல்களில் ஈடுபடமால் இருக்க சங்கம் அன்பான வேண்டுகோள் விடுகிறது. இந்நேரத்தில் ஒன்றை சொல்லியே ஆக வேண்டும், சதீஷ் அண்ணா இந்நிமிடம் வரை இந்த மாதத்தில் பதினான்கு பதிவுகள் எழுதி இருக்கிறார், ஒரு பதிவு எழுதவே ஒன்றும் தோன்றாத நேரத்தில் அண்ணன் விளையாடுறாரு. 

 

விளம்பரம் :

ண்ணன் சதீஷ் அவர்கள் இந்தப் பதிவில் கேட்டிருக்கும் கேள்விக்கு நமது பதில் என்ன ?( நிச்சயமாய் உரத்த (அ) உரைக்க வேண்டிய சிந்தனை தான் ) 


பின் குறிப்பு : புதுபொலிவு பெற்றிருக்கும் என்னை தொடர்ந்து வலையுலகில் சந்திக்கலாம் என்பதை புதுப் பொலிவுடன் தெரிவித்துக் கொள்கிறேன்   



8 Oct 2012

சுரேகா கவிதையும் - சங்கத்து பதிவர்களும் ஒரு பார்வை


எச்சரிக்கை : தலைப்புகளை சுட்டுங்கள் பதிவர்கள் தளம் திறக்கும்


மீப காலத்தில் என் மனதிற்குப் பிடித்த கவிதை. என்னிடம் யாரவது கவிதைகளைப் பற்றி பேசினால் இந்தக் கவிதையை சொல்லாமலோ அல்லது ஆரம்பிக்காமலோ என் உரை முடிந்திருக்காது. நான் கவிதைகளை தேடித் தேடி படிப்பவன் அல்ல, ஆனால் விரும்பிப் படிப்பவன், அதிலும் ஒரு கவிதை பிடித்து விட்டால் மீண்டும் மீண்டும் படிப்பேன். நான் கூற விரும்பும் கவிதை விகடனில் வெளிவந்த கவிதை. தலைப்பை முதலில் படிக்காமல் கவிதையை வாசிக்க ஆரம்பித்தேன், குழந்தையால் மனைவிக்கும் கணவனுக்கும் சண்டை நடப்பது போல இருக்கும். அந்த ஒரு வரியை என் மனது உள்வாங்கிய நேரம் என்னுள் அப்படி ஒரு சந்தோசம், சந்தோசம் என்று சொல்வதை விட இன்னதென்று அடையாளம் காணப்பட முடியாத ஒரு ஆனந்தம்.

து சற்றே பெரிய கவிதை, வார்த்தைகள் நியாபகம் இல்லை, என் நியாபகத்தில் இருந்த வார்த்தைகளைக் கொண்டு நான் கூற நினைத்த கவிதையைப் பற்றி தனி பதிவொன்று எழுத வேண்டும் என்று நினைத்திருந்தேன். அந்த கவிதையின் முடிவு இப்படியாகத் தான் என் மனத்தில் பதிந்திருந்தது. "எங்கள் வீட்டு குட்டி தேவதை நடக்க ஆரம்பித்து விட்டாள்". இந்தக் கவிதையை எழுதியவர் தொட்டு விடும் தூரத்தில் தான் இருக்கிறார் அவரும் ஒரு பதிவர் என்பதை அறிய வந்த பொழுதும் அந்த கவிதையை அவர் தளத்திலேயே வாசித்த பொழுதும் நான் அடைந்த உற்சாகம் அளவிட முடியாதது.   

ந்த பதிவர் வேறு யாரும் அல்ல, பதிவர் சந்திப்பில் சிறப்பாக வர்ணனை செய்த, அதே சந்திப்பில் நான் பேச வேண்டும் என்று நினைத்து பேசாமல் கடந்த ஒரு பதிவர், சுரேகா அவர்கள் தான்ஒரு வலைபூ எனக்கு பிடித்துவிட்டால் அதில் குறைந்த பட்ச ஆராய்ச்சி செய்யாமல் வெளிவருவது கிடையாது, சமீபத்தில் சுரேகா அவர்கள வலைபூவையு ஆராய்ந்து கொண்டிருந்த பொழுது கண்ணில் சிக்கியது அந்தக் கவிதை.  எனக்கு மிக மிக பிடித்த கவிதை, நன்றி சுரேகா சார்.      

*****************************

ஆயிரத்தில் ஒருவன் மணி - வருந்துகிறோம் 

முகப்புத்தகத்தில் சாப்பாட்டுக்கடை என்று ஒரு குழுமம் இயங்கி வருகிறது. வெகு சமீபத்தில் மணி அவர்களின் கருத்துகளை அங்கு படித்து வெகுவாக சந்தோசப்பட்டேன். பதிவர் சந்திப்பு குறித்து நடைபெற்ற கூட்டங்களில் அவர் கட்டிய ஆர்வம், சந்திப்பு அன்று அவர் செய்த பணிகள் அனைத்துமே பாராட்டத்தக்கது. சந்திப்பில் சாப்பிடும் பொழுது எனது நண்பன் ஆன்டோ கூறிய வரிகள் " உங்க அண்ணன் கல்யாணத்துக்கும் இவரையே கூப்பிடலாம் டா நல்லா செஞ்சிருகாறு". நெருங்கிய நண்பரை இழந்தது போன்ற உணர்வு. ஆன்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுவோம். 

*****************************
                                                             

இந்தப் பதிவு முழுக்க முழுக்க சமகாலத்து பதிவர்களைப் பற்றிய விளம்பரமாகத் தான் இருக்கும். இதில் மாற்று கருத்துக்கள் இருப்பின் தெரிவியுங்கள் சங்கம் சார்பில் முடிந்தால் மன்னிப்பு கேட்கிறோம். சங்கத்தின் பெயர் காமடி கும்மி என்று அண்ணன் வரலாறு ஒரு flow வில் சொல்லிச் செல்ல, டெர்ரர் கும்மி அண்னண்ங்கள் வெறி கொண்டு வரலாறைத் தேடி வருவதாக உளவுத் துறை தகவல் சொல்லியது. அதற்குப் பயந்து நடுங்கிய அண்ணன் வரலாறு என்ன செய்வதென்று தெரியாமல் கீழ்க்கண்டவாறு அறிக்கை ஒன்றை வெளியிட்டு தற்போதைக்கு நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்துள்ளார். 


தற்போது நான் பயின்றுவரும் உயர்கல்வி தொடர்பாக டிசம்பரில் எனக்கு தேர்வுநடக்கவிருப்பதால்… தேர்வுக்காக என்னை தயார்செய்துகொள்ளும் பொருட்டு தற்காலிகமாக சிறிதுகாலம் பதிவுலகில் இருந்து விலகியிருக்க முடிவுசெய்துள்ளேன்..!


நான் தொடர்ச்சியாக பதிவுகள் எழுதுபவன் அல்ல, மாதத்திற்கு நான்கு பதிவுகள் எழுதினாலே ஆச்சிரியம்தான்...கடந்த ஒன்பது மாதங்களில் மொத்தமாக 36 பதிவுகள்தான் எழுதியிருக்கிறேன்.., இருப்பினும் Alexa (
current rank as worldwide; 395698); Indiblogger (current rank as India Level; 71) Tamilmanam (current rank, 52) போன்ற மதிப்புமிக்க தளங்களில்..., வலைத்தலங்களுக்கான தரவரிசைபட்டியலில் குறிப்பிட்ட அளவு முன்னேற்றம் அடைந்திருக்கிறேன்! இதற்க்கு காரணம்... சர்வநிச்சயமாய் என் தளத்தை வாசித்துக்கொண்டிருக்கும் நீங்கள்தான் என்றால் மிகையில்லை! உங்கள் ஒவ்வொருவரின் வருகையும், கருத்துரையும், வாக்குகளும்தான் என்னை வெறும் 36 பதிவுகளில் இந்த அளவிற்கு உயரத்தை அடையச்செய்தது! 



என் எழுத்துக்களை வாசித்து, கருத்துரை வழங்கி, வாக்குகள் அளித்து என்னை உற்சாகப்படுத்திய அனைத்து அன்பு உள்ளங்களுக்கும் என் இதயம் நிறைந்த நன்றிகளை இவ்வேளையில் உரித்தாக்குகிறேன்! தேர்வை சிறப்பாய் எழுதிவிட்டு மீண்டும் உங்களை ஜனவரியில் சந்திக்கிறேன் நண்பர்களே...அதுவரை நீங்கள், எனக்காய் பொறுமையாய் காத்திருக்க வேண்டும் என்று வேண்டி கேட்டுக்கொண்டு விடைபெறுகிறேன்..!



மிக்க அன்புடன், 

இவ்வாறாக இருப்பதால், நிலைமை சீரானதும் மன்னிப்பு கேட்பதா வேண்டாமா என்பது பற்றி சங்கம் பிற்பாடு முடிவு செய்யும். அதையும் மீறி சங்கம் எங்களுக்கு மன்னிப்பு குடுத்தே தீர வேண்டும் என்று ஆசைபட்டால் நண்பன் ஹாரியின் தளம் வழியாக கேளுங்கள், பின்பு அதைப் பற்றி யோசிப்போம். இப்போது தான் மற்றுமொரு முக்கியமான விடயம் நியாபகதிற்கு வந்தது, 



தூங்கும் பொழுது கூட அடுத்த பதிவு பற்றி யோசிப்பவரா அப்படி என்றால் நீங்கள் தான் பிரபல பதிவர். ஒரு வேளை தூங்கும் பொழுது அடுத்து என்ன தளம் திறக்கலாம் என்று யோசித்தீர்கள் என்றால்  நீங்கள் தான் நம்பர் ஒன் பதிவர். நமது ஹாரி அப்படியாகத் திறந்த மூன்றாவது தளம் தான் கேளுங்க, என்ன கேட்கனும்னு கேக்றீங்களா எதுவேணும்னாலும் கேளுங்க. உங்க பேரு என்னனு வேணும்னாலும் கேளுங்க, உங்க கிட்ட கேட்டு அடுத்த பதிவுல உங்க பேர உங்களுக்கே சொல்லுவாரு. சங்கத்தின் நிகழ்காலத் தலைவன், எப்போது யாரால் பதவி பறிபோகுமோ என்ற பயத்தில் தூங்காமல் அடுத்த தளம் அடுத்த தளம் என்று இரவு பகலாக இயங்கிக் கொண்டிருப்பவர்.    


சமீப காலத்தில் நான் மிகவும் விரும்பிப் படிப்பது பிரபல பதிவர் அண்ணன் சதீஷ் செல்லதுரை அவர்களின் கவிதைகள். இவர் எழுதிய கவிதைக்கு நான் சென்று கமென்ட் இட, அது எவ்வளவு பெரிய பிழை என்பதை நினைத்து  இன்றளவும் வருந்திக் கொண்டுள்ளேன். எங்கள் சங்கத்து அடிதாங்கி இடிதாங்கி எல்லாம் இவர் தான். எதிரி பதிவர்களின் சோதனைக்கு ஆளாவதில் இவருக்கு அலாதி ஆர்வம். எவ்வளவு அடி வாங்கினாலும் வலிக்கவே வலிக்காது, மீண்டும் மீண்டும் சென்று மல்லுக்கு நிற்பார்.  சிங்கம் டா என்று பாக் கிரௌண்ட் மியூசிக் எல்லாம் போடச் சொல்லுவார். எங்கள் சங்கத்து தீவிரவாதி. பீ கேர் புல்.    



சில பதிவர்களை சந்தித்து விட்டேன், சிலரின் முகங்களைப் பார்த்து விட்டேன், தற்போது நான் சந்திக்க அல்லது முகம் பார்க்க விரும்பும் இரு பதிவர்கள் ஸ்ரீராம் சார் மற்றும் ரிஷபன். எங்கள் பிளாக் ஸ்ரீராம் சார் தற்போது எழுதி முடித்து வெற்றி பெற்றிருக்கும் கதை தான் இப்படியும் ஒரு வெற்றிபெற்ற காதல் கதை. சமீப காலத்தில் படித்த சலிப்பு தட்டாத அதே நேரத்தில் வித்தியாசமான கதைக் களம் கொண்ட காதல் கதை, ஹீரோ சினிமாத் துறையைச் சேர்ந்தவன் ஆனால் நடிகன என்பதை சொல்லாமல் விட்டதால் லாஜிக் மிஸ் ஆகவில்லை. அது என்னவென்பதை கதையைப் படித்து தெரிந்து கொள்ளுங்கள். சமீப காலமாக கிரிகெட் பற்றி முகப் புத்தகத்தில் இவர் செய்து வரும் அக்கப்போரு கொஞ்ச நஞ்சம் அல்ல. மனிதர் நின்னு ஆடுறாரு. ரவுசு தாங்கல.



லைப்பூவில் என்னை உரிமையோடு மாணவனாக ஏற்றுக் கொண்டவர், இல்லை என்னால் ஏற்றுக் கொள்ள வைக்கப்பட்டவர், நான் அவரின் ஏலகலைவன். வாத்தியார் தற்போது எழுதி வரும் முழுநீள நகைச்சுவைத் தொடர் சிரித்திரபுரம். வரிக்கு வரி வார்த்தைக்கு வார்த்தை ஹாஸ்யம் வைத்து அசத்துகிறார். அப்படி எழுதுவது எப்படி என்று ஒரு வகுப்பு எடுப்பதாகக் கூறினார், பாவம் இளமை திரும்புவதால் மறந்து விட்டார் போலும்( ஹி ஹி ஹி). கொஞ்சம் ரிலாக்ஸ் வேண்டுமா நிச்சயம் இங்கே கிடைக்கும். 


சங்க ஆலோசகர், புதிய பதிவர்களையும் புதிய சங்கங்களையும் ஊக்குவிப்பதில் வல்லவர் என்பதால் எங்கள் சங்கத்து ஆள எவனும் அடிச்சா அடுத்தமுறை  அடிவாங்காமல் தப்பிப்பது எப்படி என்பது குறித்து ஆலோசனைகள் வழங்குவார். எதிரி பதிவர்களைக் கலவரப் படுத்துவதில் இவரை மிஞ்ச ஆளே கிடையாது. 


எங்கள் சங்கத்திற்கு என்று இருக்கும் ஒரே ஒரு அடியாள் இவர் தான். ஆண் தமண்ணா என்று பிரபல பதிவர் மெட்ராஸ் பவனால் புகழுரை சூடப்பட்டவர் வெள்ளைச் சிங்கம். வரலாறு மனப்பாடம் செய்து கொல்லுவார் என்றால் இவர் கடிதம் எழுதியே கொல்லுவார். ஆனாலும் இவர் கடிதங்கள் வரலாற்றில் இடம் பெறக் கூடியவை. பின்னொரு நாள் சங்கம் இவற்றை தொகுத்து புத்தகமாக வெளியிடும் என்பதை மிரட்டலுடன் தெரிவித்துக் கொல்கிறேன்.    



சீனு  : அது எப்படி ராசா ஒரு வரிய மடக்கி மூணு வரியாக்கி கவிதைங்கற பேருல தைரியமா வெளியிடுறீங்க.

ராசா : தலைவரே உங்கள மாதிரி பக்கம் பக்கமா எழுதி அறுத்தா ஒரு பய படிக்கச் மாட்டான், ஒரு வரிய மடக்கனும், பொழுது போகாட்டா எவனையாவது நாலாவது வரியில கோர்த்து விடனும்

சீனு  : அண்ணே சங்கத்துத் தலைவரா இருக்குற முழுத் தகுதியும் உங்களுக்கு தான்னே இருக்கு, எப்படியாவது ஹாரிய போடுறோம், உங்கள தலைவராக்குறோம்.

ராசா : தலைவரே போரூர் பக்கம் ஒரு சின்ன பைசல் இற்கு அத முடிச்சிட்டு கொழும்பு பக்கம் போவோமா?

( பிரபல பதிவர் ஹாரி தலைமறைவு )        


சங்கத்தில் ஏற்படும் திடீர் பிரச்சனைகளை சரி செய்ய வல்லவர், எதிரி எங்கள் வலைப்பூவை ஹாக் செய்தால் உடனடித் தீர்வு அளிப்பவர். அப்படி வலைப்பூவில் திடிரென்று ஏற்பட்ட ஒரு பிரச்சனைக்கு அவர் கொடுத்த அற்புதமான தீர்வு படியுங்கள். எங்காளு எங்க கூட இருக்குற வரைக்கும் ஒரு பய எங்கள தொட முடியாது, என்று சங்கத்திற்குள் ஹாரிபாட்டர் சொல்லி வருவதாக திடீர் பகீர் தகவல் கிளம்பியுள்ளது. அதை உண்மையாக்கும் விதமாக பிளாக்கர் நண்பன் நடந்து வருவது சங்கத்திற்கு தெம்பூட்டும் விதமாக இருப்பதாக சங்கத்தின் செய்தித் தொடர்பாளர் தலைமறைவான வரலாறு, அண்ணாச்சி கடை அக்கவுன்ட் புத்தகத்தில் எழுதி, நன்றாக வாங்கிக் கட்டியுள்ளார் என்பது கூடுதல் தகவல்.     


த்தனை நாட்களாக கோலிவூட் சட்டியினுள் குதிரை ஓட்டிக் கொண்டிருந்த என்னை ஹாலிவூட வரை கொண்டு சென்றவர் ராஜ், பின்பு அவர் கம்பி நீட்ட, என் அறிவுக் கண்ணை திறந்து வருபவர் நமது ஹாலிவூட் ரசிகன். இவர் எழுதும் சினிமா விமர்சனங்கள் சினிமாவைப் பற்றி மட்டும் இல்லாமல் சினிமா கலந்த விமர்சனமாக இருப்பது அருமை. தற்போது நான் அடிக்கடி செல்லும் தளம்.   



திவுலகில் எங்கள் மூத்தவர் சங்கத்தை வழிநடத்த மற்றும் சங்கம் ஒன்று பட எருமை மாடாக உழைத்தவர். எங்களை ஒன்று சேர்த்தவர். இன்று அன்னாரின் வலைபூவிற்கு ஒன்றாவது பிறந்த நாள். தற்போது அலுவல் காரணமாக சற்று ஒதுங்கி  இருந்தாலும் நீகுழாய் ( யு ட்யுப்) மூலம்புதிய பரிணாமம் எடுத்து உள்ளார். எங்கள் அண்ணா திறந்த புதிய தொலைக்காட்சியை (சேனல்) இந்த சுட்டியின் மூலம் சென்று சேரலாம். சங்கத்தை அடுத்த தளத்திற்கு எடுத்து செல்லும் லிப்ட்டாக உழைப்பவர் என்பதை இங்கு பெருமையுடன் கூறிக் கொல்கிறேன். அவருக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்.



தொழிற்களம் தளத்தில் முகநூல் பற்றிய முழு வரலாறு எழுதும் வாய்ப்பு கிடைத்துள்ளது, சீரிய முறையில் சிறந்த ஒரு தொடராக எழுத வேண்டும் என்பது எனது எண்ணம். அதற்க்கு உங்கள் ஆதரவும் உற்சாகமும் வேண்டும். கிடைக்கும் என்று நம்புகிறேன். இந்த மாத இறுதியில் முதல் கட்டுரை வெளிவரும், அதைத் தொடர்ந்து ஒவ்வொரு வாரமும் வெளிவரும். முகல் தொடர் கட்டுரைக்கு நல்ல தலைப்பு ஒன்று கொடுத்தால் சந்தோசப்படுவேன்.