31 Jul 2014

கர்த்தரின் தூதர்களும் - சூலாயுத நாதரும்

பெரும்பாக்கத்தில் சரவணாவை இறக்கி விட்டு மேடவாக்கத்தை நெருங்கிய போது நேரம் நள்ளிரவைக் கடந்து பின்னிரவை நெருங்கிக் கொண்டிருந்தது. தூறலும் ஈரமான காற்றும் நள்ளிரவை நனைத்துக் கொண்டிருக்க எதிர்பட்ட லாரிகளை எல்லாம் மடக்கிப் பிடித்துக் கொண்டிருந்தார்கள் காக்கிச் சட்டைக்காரர்கள்... நான் அவர்களுத் தேவையில்லை என்பதால் எனக்குக் கவலையில்லை. அவர்களைக் கடந்து மேடவாக்கம் பேருந்து நிறுத்தத்தைக் கடக்க முயலும் போது தான் அவரைக் கவனித்தேன். 

மெலிந்த தேகம். கருத்தமேனி. கையில் ஒரு சேல்ஸ்மேன் அல்லது லேப்டாப் பேக். டக்-இன் செய்திருந்தார். தாம்பரம் பேருந்திற்காக காத்திருந்திருக்க வேண்டும். கடைசி பேருந்தைத் தவற விட்டிருக்க வேண்டும். வாகன உதவி கேட்டு வழிமறித்துக் கொண்டிருக்க வேண்டும். . 

இன்னும் சில அடி தூரத்தில் என் வீட்டிற்கு திரும்பும் வளைவு என்பதால் என்னால் லிப்ட் கொடுக்க முடியாது என்பதை சைகையின் மூலம் கூறினேன். அவருக்குப் புரியவில்லை. வண்டியை மெல்ல ஸ்லோ செய்தேன்.    

நான் வண்டியை ஸ்லோவாக்குவதைப் பார்த்த அவர் எங்கே லிப்ட் தான் கொடுக்கப் போகிறேனோ என்ற ஆர்வத்தில் என்னை நெருங்கி ' தாம்பரமா சார்' என்றார். வயது நாற்பதை நெருங்கியிருக்க வேண்டும். அல்லது கடந்திருக்க வேண்டும். நல்லவர் என நம்பலாம் போல் தான் தோன்றியது. கெட்டவன் என்றாலும் உருவுதற்கு என்னிடம் ஒன்றும் இல்லை. மாசக் கடைசி வேறு.  

'சார் இங்க பக்கத்துல தான் என் வீடு. இந்நேரத்துல பஸ் உண்டு.' என்றேன்.

'இல்ல தம்பி ஒரு மணி நேரமா நிக்குறேன், பஸ்ஸே இல்ல' அது சற்றே மிகைப்படுத்தப்பட்ட பொய் என்றாலும் அவரின் கவலை உண்மை. 

ஒருவேளை அவர் செல்ல வேண்டிய இடம் அருகில் தான் என்றால் இறக்கிவிடலாம் என்ற எண்ணத்தில் எங்க போகணும் என்றேன். 

'சந்தோஸ்புரம் போகணும் தம்பி, ஆட்டோ கூட இல்ல, வேளச்சேரில பஸ் இல்ல.  இங்கயாது கிடைக்கும்னு வந்தேன், இங்கயும் இல்ல' என்றார்.

சந்தோஸ்புரம் அப்படியொன்றும் எனக்குத் தூரம் இல்லை, மூணு கிமீ, வெறும் ஐந்து நிமிடம். ஆனால் மணி பன்னிரெண்டைக் கடந்து பல நிமிடம் ஆகியிருந்தது. என்னை எதிர்பார்த்து அம்மா நிச்சயம் அரைத் தூக்கத்தில் காத்திருப்பார் என்று தெரியும். 

'வாங்க சார், நான் உங்கள விடுறேன்'

'god bless you' என்றபடி சந்தோசமாக ஏறிக் கொண்டார். 

நகரத் தொடங்கினோம். 

என்னைப் பற்றி என் வீடு இருக்கும் ஏரியாவைப் பற்றி விசாரித்தார். அவரும் அந்த ஏரியாவில் வசித்ததாகக் கூறினார்.  அவர் அம்மாவுக்கு உடம்பு சரியில்லை அதனால் வீட்டிற்கு உடனே போக வேண்டும் என்று கூறினார். எனக்கு இன்னும் கல்யாணம் ஆகவில்லையே என்று வருந்தினார். இதன் பின் தான் பேச்சு மெல்ல வேறு பக்கம் சென்றது. 

'தம்பிக்கு சௌத்தா'

'ஆமா சார் தென்காசி'

'அதான், நீங்க உதவி செய்யிறத பார்தததும் தெரிஞ்சது.  நீங்க சௌத்து-தான்னு, உங்க ஏரியாகாரங்க தான் தம்பி நல்லா உதவி பண்ணுவாங்க, எனக்குக் கூட கோயமுத்தூர் தான். நானும் பலருக்கும் உதவி செஞ்சிருக்கேன். இதோ இப்ப கூட நானா கேட்கல, நான் செஞ்ச உதவி தான் எனக்கு இப்ப உதவி பண்ணுது' என்றார். 

சிரித்தேன். இது எனது வழக்கமான சிரிப்பு தான். 

'தம்பி கிறிஸ்டியனா' என்றார்

'இல்ல சார் இந்து என்றேன்'     

'இல்ல கிறிஸ்டியன்னா உடனே உதவி பண்ணுவாங்க, அவங்களுக்கு உதவுற மனப்பான்மை ஜாஸ்தி, நீங்களும் நான் கேக்காம உதவுனீங்க, அதான் கேட்டேன்' என்றார். 

அதற்கும் சிரித்தேன். இதுவும் வழக்கமான சிரிப்பு தான்.       

'தம்பி பைபிள் படிச்சி இருக்கீங்களா, எனக்கு பைபிள் ரொம்ப புடிக்கும், டெயிலி பைபிள் படிப்பேன். நம்பிக்க ஜாஸ்தி'      

'இல்ல சார் படிச்சது இல்ல' என்றேன் 

'வாய்ப்பு கிடைச்சா கண்டிப்பா படிங்க தம்பி' என்று அவர் கூறிக் கொண்டிருக்கும் போதே வண்டியின் வேகத்தை மெல்ல அதிகரித்தேன். பின்னால் உட்கார்ந்திருக்கும் அவர் பயப்படக் கூடாது என்பதற்காக வண்டியை உருட்டிக் கொண்டிருந்தேன். அதனால் வந்த சோதனை இது. என் வழக்கமான வேகத்திற்கு வண்டியை மாற்றிக் கொண்டிருந்தேன். அவரும் தொடர்ந்து பேசத் தொடங்கினார். 

'பைபிள்ல்ல எல்லாமே உண்ம தம்பி, மத்த எல்லா வேதமும் கடவுள் எப்படி இருப்பார்ன்னு சொல்லுது, ஆனா கிரிஸ்தவம் மட்டும் தான் கடவுள் எப்படி உலகுக்கு வருவார்ன்னு சொல்லுது., நீங்க படிச்சது கிரிச்ட்டியன் ஸ்கூலா' என்றார். 

'ஆமா சார்' என்றேன். 

'அங்க படிச்சுமா பைபிள் படிக்காம இருக்கீங்க, இப்பல்லாம் முன்ன மாதிரி கிறிஸ்டின் ஸ்கூல் இல்லப்பா, அப்போ ஒழுக்கத்த சொல்லிக் கொடுத்தாங்க, இப்ப எங்க. அங்க படிச்சு பைபிள் கூட படிக்காம வந்து இருக்கீங்க' என்று அங்கலாய்த்தார்.       

இப்போதும் சிரித்தேன். ஆனால் இது வழக்கமான சிரிப்பு இல்லை. ஒருவன் சிரித்துக் கொண்டே இருந்தால் தொடர்ந்து என்ன வேண்டுமானாலும் பேசிக்கொண்டே போகலாம் என்று நினைத்த அவரின் அறிவுஜீவித்தனம் குறித்த சிரிப்பு.   

'தம்பி பைபிள் படிச்சா இரக்க குணம் அதிகமாகும். கிறிஸ்டியன் இரக்கமா இருக்கக் காரணம் பைபிள் தான்.' என்றார்.  

இப்போதும் சிரித்தேன். ஆனால் இதுவும் வழக்கமான சிரிப்பு இல்லை. அலுவலக அலுப்பு அசத்திக் கொண்டிருக்க 'ஏண்டா லிப்ட் கொடுத்தோம்' என்ற நிலைக்கு என்னைத் தள்ளியிருந்த சிரிப்பு. 

'தம்பி சண்முகநாதன்ன்னு ஒருத்தர். ஓர் அன்புக்... தம்பி ஸ்டாப் வந்த்ருச்சு..ஸ்டாப் வந்த்ருச்சு..' என்று எச்சரிக்க.' ஷப்பாடா' என்றபடி அவரை இறக்கிவிட்டேன். 

ஒரே ஒரு நிமிஷம் என்றவர், அந்த இருளில் சிறிது நேரம் பையை துழாவிட்டு ஒரு புத்தகத்தைக் கையில் எடுத்தார். அவர் அதைச் செய்வார் என்று எதிர்பார்த்தேன். 'ஓர் அன்புக் கடவுளின் உண்மைக் கதை' சண்முகநாதன்னு நம்ம நண்பர் எழுதிய புத்தகம். கிறிஸ்தவம், பைபிள் பற்றிய அழகான தெளிவான விளக்கம் இருக்கு, நீங்க படிக்கணும். அவரு ஒரு பெரிய ஆராய்ச்சியாளர்' என்றபடி என்னிடம் கொடுத்தார். 

வாங்கிக்கொண்டு நன்றி என்றேன்.  


'god bless you' என்றபடி ஹெல்மட்டில் சிலுவையை வரைந்தார். அதற்கும் மறுப்பு தெரிவிக்கவில்லை. என்னுடைய தொலைபேசி எண் கேட்டார். அவரின் உள்ளர்த்தம் எதற்கு என்று தெரிந்ததால் என்னிடமிருந்த அணைத்து வைக்கப்பட்ட எண் ஒன்றைக் கொடுத்துவிட்டு அங்கிருந்துக் கிளம்பினேன். 

வெகுசமீபத்தில்  கிடைத்த கேப்பில் மதப்பிரசங்கம் செய்த ஒரு பாஸ்டருக்கு லிப்ட் கொடுத்திருந்தேன். இவர் இரண்டாமவர். இவர் போன்றவர்களிடம் கோபப்பட்டோ வாக்குவாதம் செய்தோ எதுவும் ஆகப் போவதில்லை. எதிர்வினை ஆற்றத் தெம்பும் இல்லை.  

வீட்டிற்கு வந்ததும் அந்தப் புத்தகத்தைத் திறந்தேன். அறிவுக் கண்ணைத் திறக்கப் போகும் புத்தகமல்லவா! அந்தப் புத்தகத்தின் நான்காவது கட்டுரை 

'இந்து சகோதர மக்களின் வேதம் எது?' 

பதில் 

ஒரு மிகபெரிய விளக்கத்திற்குப் பின் : 

சூலாயுதம் தீமையை அழிக்கும் ஆயுதம். இந்துக்களின் முக்கிய அடையாளம். 

வேதாகமத்தின் படி தீமையை அழிக்க வல்லவர் இறைவன் ஒருவரே. அப்படி தீமையாகிய சாத்தானை அழிக்க வல்லவர் சிலுவைநாதரே. சிலுவையின் மீது வீற்றிருக்கும் அவரே சூலாயுதத்தின் குறியீடு. 

இந்து சகோதரர்களே இப்போது கூறுங்கள் உங்களின் வேதம் எது? நீங்கள் முக்தியடைய இது தவிர வழியே கிடையாது என்றபடி நிறைவடைகிறது அந்த கட்டுரை.  

அந்த கட்டுரையின் கீழே ஒருபடம் வரைந்திருந்தார்கள். அந்தப் படத்தில் சிலுவைநாதர் சூலாயுதம் வடிவத்தில் சிலுவையில் தொங்கிக் கொண்டிருந்தார் . 


இப்போதும் சிரித்தேன். இது வழக்கமான சிரிப்பா இல்லை வழக்கத்திற்கு மாறான சிரிப்பா தெரியவில்லை!

ஹல்லேலுயா...!  

22 Jul 2014

கடவுளின் தேசத்தில் ஒரு பயணம் - தென்காசி டூ கோட்டயம்

புளியரை செக்போஸ்ட் தாண்டியதும் வரக்கூடிய அந்த S வளைவின் மீது மெல்ல ஏறத் தொடங்கியது எங்கள் டவேரா. அதுவரை சமதளத்தில் பயணித்துக் கொண்டிருக்கும் சாலை வளைந்து நெளிந்து மலையேறத் தொடங்குவது இங்கிருந்துதான். ஒருபுறம் உயர்ந்த மலை. மறுபுறம் கொஞ்சம் கொஞ்சமாக தன் ஆழத்தை அதிகரித்துக் கொண்டிருக்கும் பள்ளம். சுற்றிலும் அடர் வனம். ஆங்காங்கு வழிந்தோடிக் கொண்டிருக்கும் சாலையோர அருவிகள். கடவுளின் தேசம் மெல்ல எங்களைத் தன் எல்லைக்குள் அனுமதித்துக் கொண்டிருந்தது. கேரள சாலைகளில் நீண்ட தூரப் பயணம் போவது இதுவே முதல் முறை. இதற்கு முந்தைய எனது பயணங்கள் மொத்தமும் ஆரியங்காவு அச்சன்கோவில் வந்ததுமே நின்றுவிட இப்போதுதான் ஒரு ஐந்து மணி நேரப்பயணத்திற்குக் கருணை காட்டியுள்ளது காலம். 

கொல்லம் - செங்கோட்டை ரயில்பாதை

அப்போது கொல்லம் திருச்செந்தூர் மெயில் ஓடிக் கொண்டிருந்த காலம். எங்களுடைய பெருமாபலான கேரளப் பயணங்கள் இருப்புப் பாதை வழியாகவே நடந்து முடிந்துவிட சாலைவழிப் பயணம் என்பதே எப்போதாவது அரிதாக நடக்கக் கூடிய ஒன்றாகத்தான் இருந்தது. அதிலும் அந்தப் பெரிய டனலில் பயணிக்க வேண்டும் என்பதற்காகவே இரயிலில் செல்லவேண்டும் என அடம்பிடித்த நாட்கள் அவை.    

ரயில் டனலை நெருங்க நெருங்க மனம் ஒருவித அவசரப் பரபரப்பிற்கு ஆளாகியிருக்கும். ரயிலின் வேகம் குறைந்து நத்தையின் வேகத்தில் டனலின் உள்ளே நுழைகையில், உடன் வரும் மரங்களும் செடிகொடிகளும், கரும்பாறைகளும், பாறைகள் எதிரொளிக்கும் சூரியவெளிச்சமும் மெல்ல மறையத் தொடங்கி, மிகப்பெரிய இருட்டறையில் நம்மைத் தள்ளிவிட்டது போன்ற உணர்வை ஏற்படுத்தும். அடுத்த மூன்று நிமிடங்களுக்கு ரயில் இந்தக் குகையினுள்தான் பயணிக்கும் என்ற எண்ணமே அலாதியாய் இருக்கும். 

டனலினுள் நுழையும் போது ரயிலில் இருந்து ஒலிக்கும் ஹார்ன் சப்தமானது மதங்கொண்ட யானை ஒன்றின் பிளிறலைப் போன்றிருக்கும், அப்படியான ஹார்ன் சப்தமும் தண்டவாளத்தில் சக்கரங்கள் தடதடக்கும் பெருஞ்சப்தமும் குகைகளின் சுவர்களில் மோதி எதிரொலிக்கையில் ஏற்படும் அதிர்வலைகள் இனம்புரியா அமானுஷ்யத்தை உண்டுபண்ணும். விதவிதமான திகில் குரல்களும் அடித்தொண்டையில் இருந்து கத்தபடும் ஊளைச் சத்தங்களும் அந்த இடத்தின் அமானுஷ்யத்தை இன்னும் அதிகபடுத்தும். பயத்தில் தங்கள் கண்களை இறுக்க மூடிக்கொள்ளும் பெண்களும் உண்டு. இந்த நேரத்தில் ஒட்டுமொத்த ரயிலும் ஒருவித இனம்புரியா பரவச நிலையில் இருப்பதைப் போல் உணர்வேன். அதுவே உண்மையுமாயும் இருக்கலாம். 



நூற்றாண்டு கண்ட கொல்லம் - செங்கோட்டை ரயில்பாதை தற்போது ப்ராட்கேஜ் பணிகளுக்காக அடைக்கபட்டுள்ளது. மேலும் அரை கிலோமீட்டருக்கும் நீளமான அந்த டனல் அகல ரயில்பாதைக்கு இடையூறாக இருப்பதால் ஒட்டு மொத்தமாக இடித்துவிடலாம் என்று ரயில்வே நிர்வாகம் நினைக்கிறது. 'இத்தனைநாள் அக்குகையோடு ஒன்னுமண்ணாய்ப் பழகியவர்கள் நாங்கள் அதனால் அதை இடித்துவிட வேண்டாம்' என்று கோரிக்கை விடுத்துள்ளார்கள் பொதுமக்கள். அந்த ஒரு பகுதியை மட்டும் கிடப்பில் போட்டுவிட்டு மற்ற பகுதிகளில் பணிகள் ஜரூராய் நடந்து கொண்டுள்ளன.

பதிமூன்று கண் பாலம்

இதே இருப்புப்பாதையில் மற்றுமொரு முக்கியமான இடமும் உண்டு. அது கழுதுருட்டிக்கும் தென்மலைக்கும் இடையில் இருக்கும் பதிமூன்று கண் பாலம். கொல்லத்தில் இருந்து புனலூர் வழியாக செங்கோட்டையை இணைப்பதற்காக 1902-ல் போடப்பட்ட இந்த ரயில்வே பாதை ஆங்கிலேயே அரசாங்கத்தின் மிக முக்கியமான சாதனைகளில் ஒன்று. ஆங்கிலேயர்கள் இந்தியாவுக்குச் செய்த மிக முக்கியமான நல்லகாரியம் இருப்புப் பாதைகளை நாடு முழுவதும் அமைத்துக் கொடுத்தது. ஒருவேளை அன்றைய தினத்தில் அவர்கள் ஆட்சி செய்திருக்காவிட்டால் இன்றைக்கு பல ஊர்களிலும் இருப்புப் பாதை வேண்டி ஆர்பட்டாம் நடந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. அதிலும் கேரளா போன்ற மலைப் பிரதேசங்களுக்கு இருப்புப்பாதை என்பது இன்றளவிலும் கனவாகத்தான் இருந்திருக்க வேண்டும். மலையைக் குடைந்து, சுழித்து ஓடும் ஆறுகளின் மேல் பாலம் அமைத்து, மேடு பள்ளங்களை சமன் செய்து உருவாக்கப்பட்ட கொல்லம் - செங்கோட்டை இருப்புப்பாதை ஏறக்குறைய 90 கிமீ நீளம் உடையது. அவ்வாறு போடப்பட்ட பல பாலங்கள் இன்று வரையிலும் மிக உறுதியாக நிற்கின்றன. அகல ரயில்பாதைக்காக உடைக்கப்படும் பல பாலங்களையும் அவர்களால் அவ்வளவு எளிதில் உடைத்து விடமுடியவில்லை. 



அவ்வாறு கட்டப்பட்ட பாலங்களில் ஒன்றுதான் இந்த பதிமூன்று கண் பாலம். சேட்டனின் மொழியில் பதிமூன்று கண்ணர பாலம் என்று வழங்கப்பட்ட ஒன்றைத் தமிழர்கள் பதிமூன்று கண் பாலமாக மாற்றிவிட்டனர். மேற்குத்தொடர்ச்சி மலைத்தொடரானது கூட்டம் கூட்டமான பெரிய பெரிய மலைகளையும் சிறிய குன்றுகளையுமுடைய ஒரு நீளமான மலைத்தொடர். அவ்வாறான இரண்டு குன்றுகளை இணைப்பதற்காக போடப்பட்ட பாலமே இது. மொத்தம் பதிமூன்று தூண்களைக் கொண்ட இந்தப் பாலத்தின் ஒவ்வொரு தூண்களும் சுமார் நூறு அடிக்கும் குறையாத உயரம் கொண்டவை. இப்பாலத்தை ரயிலில் கடக்கும் போது எழில்மிகு பள்ளத்தாக்கைக் கண்டுகளிக்க முடியும் என்றால், அந்தப் பள்ளத்தாக்கின் அடிப்புறம் வழியாக நகரும் தார் சாலையில் இருந்து ஒட்டுமொத்த பாலத்தின் கம்பீரத்தையும் கண்டு களிக்கலாம். 

1992-ல் ஒரு மிகபெரிய வெள்ளம் மேற்குத்தொடர்ச்சி மலையையும் அதன் அடிவார கிராமங்களையும் ஆட்டிபடைத்த போது செங்கோட்டை புனலூருக்கு இடையிலான அத்தனைப் பாதைகளும் பாலங்களும் சேதப்பட்டு தொடர்பற்றுப் போயின. போக்குவரத்து ஸ்தம்பித்தது. நிலைமை இப்படியிருக்க பதிமூன்று கண் பாலம் மட்டும் அசாதாரணமாய் அனைத்தையும் தாங்கிக் கொண்டு கம்பீரமாய் வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்திருக்கிறது. தற்போது அகல ரயில்ப்பாதை அமைப்பதற்காக பாலத்தின் உறுத்தித்தன்மையை சோதிக்கும் வகையில் பாலம் முழுவதும் சின்ன சின்ன ஓட்டைகளைப் போட்டு சோதித்துப்பார்த்துள்ளனர். சோதனையின் முடிவில் இன்னும் ஒரு நூறு வருடத்திற்குக்கூட இப்பாலம் உறுதியாய் இருக்கும், இடிக்க வேண்டிய அவசியமில்லை என்று அறிவித்துள்ளனர். பாலத்தின் அத்தனை தூண்களிலும் மிக நெருக்க நெருக்கமான குழிகளாக அந்த ஓட்டைகளைக் காணமுடிகிறது. 

லுக்அவுட் - தென்மலை  


தென்மலை - லுக்அவுட் 

தென்மலையைக் கடந்ததும் லுக்அவுட் என்றொரு இடம் இருக்கிறது. இந்த இடத்தில் தென்மலை நீர்த்தேக்கம் மற்றும் அதைச் சுற்றி இருக்கும் பள்ளத்தாக்கைக் கண்டுகளிக்கும் விதமாக முப்பதடி உயரத்தில் டவர் ஒன்று கட்டிவைத்துள்ளனர். லுக்அவுட்டைக் கடக்கும் போது மழை வெளுத்து வாங்கிக் கொண்டிருந்தது. மற்றவர்கள் அனைவரும் காரிலேயே அமர்ந்துகொள்ள நான் மட்டும் அந்த டவரின் மீது ஏறினேன். கண்முன்னே இயற்கை அற்புதமான ஓவியத்தை வரைந்து வைத்திருக்க நம்மவர்களோ அங்கிருந்த சுவர் முழுவதும் தங்கள் கைதிறமையை (ஆபாசமாக) காண்பித்திருந்தார்கள். டவரின் உள்ளே யாருமே இல்லை. ஒரே ஒரு காதல் ஜோடி மட்டும் கொஞ்சிக் கொண்டிருந்தார்கள். அவர்களில் யாரோ ஒருவருக்கு வாய் பேசமுடியாது போலும். அவர்கள் உலகமும் காதலும் சைகைகளாலேயே நிறைந்துள்ளன. இம்முறைப் பொறாமைப்படவில்லை. 'எங்கிருந்தாலும் வாழ்க' பாடிவிட்டு நகர்ந்துவிட்டேன்.      



காலை ஏழரை மணிக்குப் புனலூரில் பரோட்டாவும் டீயும் சாப்பிட்டது. மணி இப்போது பத்தரையைக் கடந்திருக்க லேசாக பசிக்கத் தொடங்கியது. வெளியில் மப்பும் மந்தாரமுமாக இருக்கும் கிளைமேட்டிற்கு இதமாய் ஒரு டீ குடித்தால் நன்றாய் இருக்கும் என்று தோன்ற 'மாமா டீ' என்றேன். மாமா தகவலை டிரைவருக்கு அனுப்ப, சாயா கடையைத் தேடத்தொடங்கி, தேடினோம் தேடினோம் தேடிக்கொண்டே இருந்தோம் கிட்டத்தட்ட பல கிமீக்கள் கடந்து விட்டோம் ஆனாலும் ஒரு சாயாக் கடையைக் கூட கண்டுபிடிக்க முடியவில்லை. தமிழ்நாட்டில் பத்தடிக்கு ஒரு கடை இருக்க இங்கோ பல கிமீக்கள் வந்தும் ஒரு கடையைக் கண்டுபிடிக்க முடியவில்லை. 

ஒருவழியாய் கடையைக் கண்டுபிடித்து வண்டியை நிறுத்தினால் வேகவேகமாய் ரோட்டைக் கடந்து எங்களை நெருங்கிய ஒருவர் 'சாரே லாட்டரி' என்றார். மாமா அவரிடம் கேட்ட அடுத்த கேள்வி 'சுரண்டையா சங்கரன்கோவிலா' என்பதுதான். இவரோ சற்றும் தாமதியாமல் 'சுரண்டன்னே' என்றார். பார்ப்பதற்கு டிபிகல் மலையாளி போல இருந்தவரை 'எப்படி கண்டுபிடிச்சீங்க' என்றேன். தமிழ்நாட்டுல லாட்டரிய க்ளோஸ் பண்ணினதும் பாதிபேரு லாட்டரி சீட்டு யாவாரம் பார்க்க இங்க வந்துட்டாங்க என்றார். லாட்டரி யாவாரம் பார்க்கும் அந்த தமிழகத்து சேட்டன் மாதம் ஒருமுறை ஊருக்கு சென்று வருவாராம். நாங்கள் டீ குடித்த கடையில் வேலை பார்க்கும் சிறுவனும் கூட நெல்லையில் இருந்து வந்தவனே. ஒரு டீயைக் குடித்துவிட்டு மீண்டும் கேரள சாலைகளில் பறக்கத் தொடங்கியது எங்கள் வாகனம்.  


  
கிட்டத்தட்ட ஒரு குழந்தையின் கிறுக்கலைப் போன்றவை கேரள சாலைகள். வளைந்து நெளிந்து தன் போக்கிற்கு எங்கெங்கோ எப்படியெப்படியோ பயணிக்கின்றன. அதிலும் புனலூரைக் கடந்து அடூர் வரைக்கும் மலையின் மீது பயணிக்கும் சாலைகள், அதன்பின் மலையும் அல்லாத சமதளமும் இல்லாத ஏற்ற இறக்கங்கள் நிறைந்த பாதைகளில் பயணிக்கின்றன. கேரள எல்லைக்குள் நுழைந்ததில் இருந்தே சிறு சிறு தூறலாக ஆரம்பித்திருந்த மழை கொஞ்சம் கொஞ்சமாக வலுக்கத் தொடங்கியிருந்தது. நனைந்துகிடக்கும் சாலைகளும் சாலையோரத்தில் பச்சை வர்ணம் பூசப்பட்டது போல் பாசிபிடித்துக் கிடக்கும் கட்டிடங்களின் சுற்றுச்சுவரும் கடவுளின் தேசத்திற்கு மேலும் அழகு சேர்த்துக் கொண்டிருந்தன. 

புனலூர் தாண்டி கோட்டயம் வரையிலும் சாலையோரத்தில் கட்டப்பட்ட வீடுகள் ஒவ்வொன்றும் அட்டகாசமாய் இருக்கிறது. மிகச் சாதாரணமான அல்லது சாதாரணமான வீடுகளையே பார்க்க முடியவில்லை. அத்தனையும் திரைபடங்களில் சீரியல்களில் காட்டப்படும் கலை வேலைப்பாடுகளுடன் கூடிய பெரிய பெரிய வீடுகள் 'எல்லாம் வெளிநாட்டுப் பணம்' என்றபடி வாகனத்தை செலுத்திக் கொண்டிருந்தார் எங்கள் டிரைவர். அவர் வாங்கிய லாட்டரி சீட்டிற்குப் பணம் விழ வேண்டுமே என்ற கவலை வேறு அவரை வாட்டி வதைத்துக் கொண்டிருந்தது. 

புனலூர் - தொங்கும் பாலம்  

புனலூரில் இருந்து கோட்டயம் பிரிந்து செல்லும் பாதையில் ஊரின் மத்தியில் ஒரு பெரிய தொங்கும் பாலம் இருக்கிறது. தென்இந்தியாவில் இருக்கும் ஒரே ஒரு தொங்கும் பாலம் இதுமட்டுமே. செங்கோட்டை - கொல்லத்தை தரைவழியாக இணைப்பதற்காக கல்லடா என்ற நதியின் மீது 1877-ல் கட்டப்பட்ட பாலம் இது. கிட்டத்தட்ட 1975 வரையிலும் பயன்பாட்டில் இருந்த இப்பாலம், போக்குவரத்து பெருகிப் போனதால் அதன் அருகிலேயே மற்றொரு பாலத்தைக் கட்டிவிட்டு இதை மூடிவிட்டனர். அது என்ன செங்கோட்டையின் மீது மட்டும் கேரள அரசாங்கத்திற்கு அவ்வளவு பாசம் என்றும் நினைக்க வேண்டாம். இந்தியா மொழிவாரியாக பிரியும் முன் வரைக்கும் செங்கோட்டை கேரளா சமஸ்தானத்தின் அங்கமாக இருந்த பகுதியாகும். 



இந்த தொங்கும் பாலத்தின் பின்னணியில் சுவாரசியமான நிகழ்ச்சி ஒன்றும் இருக்கிறது. 

கல்லடா நதியைக் சுற்றிலும் வனவிலங்குகள் நிறைந்த அடர்ந்த காடு. ஒருவேளை தரைவழிப் பாலம் அமைத்தால் கொடிய விலங்குகள் ஊருக்குள் புகுந்து தொல்லை செய்யும் என்று அஞ்சிய அரசாங்கம் ஆங்கிலேய பொறியாளர்களின் உதவியில் தொங்கு-பாலம் அமைக்க என்று முடிவு செய்தது. இப்பாலம் ஒரு ஊஞ்சல் போல் ஆடிகொண்டிருக்கும் என்பதால் இதனைக் கடப்பதற்கு வனவிலங்குகள் அஞ்சும். அவைகளால் ஊறு ஏதும் ஏற்படாது என்று நினைத்தது அரசாங்கம். 

ஒருவழியாக தொங்கும் பாலம் கட்டிமுடித்து திறப்புவிழா நடத்தி முடித்தபோதிலும், ஊர் மக்கள் அப்பாலத்தின் உறுதித் தன்மையை சந்தேகித்து அதன் மீது பயணிக்க பயந்துள்ளனர். மக்களின் மனதில் நம்பிக்கையை ஏற்படுத்துவதற்காக பாலத்தின் பொறியாளர் அந்த பாலத்தின் மீது ஆறு யானைகளை நடக்கவிட்டு, அவைகள் பாலத்தைக் கடக்கையில் இவர் தனது குடும்பத்துடன் ஒரு படகில் பாலத்தின் அடிப்புறத்தைக் கடந்துள்ளார். அதன்பின்னரே மக்கள் மனதில் நம்பிக்கை ஏற்பட்டு இந்தபாலத்தை உபயோகபடுத்தத் தொடங்கியுள்ளனர். அவ்வளவு அடர்காடுகள் நிறைந்த புனலூர் வனப்பகுதி இன்றைக்கு கான்க்ரீட் காடாக மாறியிருப்பது வேறு விஷயம். 


எவ்வளவு கெஞ்சியும் வழிவிடாத சேட்டனின் சேட்டை 
கேரளத்து புறநகர் சாலைகள் அனைத்தும் வெறிச்சோடிக் கிடக்க நகர்ப்புறத்து சாலைகளோ அம்புட்டு பிசியாக இருக்கின்றன. அதேநேரம் இங்குள்ள வாகன ஓட்டிகள் தாறுமாறாக வாகனம் ஓட்டுகிறார்கள். நம்மூர் ஆட்டோகாரன் செய்யகூடிய அத்தனை வித்தைகளையும் இவர்கள் செய்கிறார்கள். அதிலும் இருசக்கர வாகன ஓட்டிகள் அநியாயத்திற்கு கடுப்பைக் கிளப்புகிறார்கள். கேரளாவிலும் சரக்கு விற்பனையை அரசாங்கமே எடுத்து நடத்துகிறது. ஒவ்வொரு கடையின் வாசலிலும் ரேசன் கடையைப் போல கூட்டம் கூட்டமாக வரிசையில் நின்று தேசப்பணி ஆற்றுகிறார்கள் கேரளத்துக் குடிமகன்கள்.        


தேசியப் பொருளாதாரத்தை வலுபடுத்த வரிசைகட்டி நிற்கும் குடிமகன்கள் 
பந்தளம் அரண்மனை 

கோட்டயதிற்குச் செல்லும் பாதையில் சுவாமி ஐயப்பன் வாழ்ந்த பந்தளம் அரண்மனை இருக்கிறது. நாங்கள் சென்றபோது நேரம் மூன்றைக் தாண்டியிருந்ததால் அரண்மனையும் அதன் அருகில் இருக்கும் கோவிலையும் அடைத்து வைத்திருந்தனர். இன்னும் எப்போது இந்த வழியாக பயணிப்போமா தெரியாது என்பதால் சும்மா கோவிலையும் அரண்மனையையும் ஒரு சுற்று சுற்றிவிட்டு அங்கிருந்துக் கிளம்பினோம். பந்தளம் கோவிலின் அருகில் மிகபெரிய ஆறு ஒன்று ஓடுகிறது. கிட்டத்தட்ட அப்படியான ஆறுகளை தமிழகத்தில் பார்ப்பதே மிக அரிது. 


கேரளம் முழுவதுமே மிகபெரிய அகலமான கரைபுரண்டு ஓடக்கூடிய ஆறுகளை ஒவ்வொரு நகரத்திலும் பார்க்க முடிகிறது. கேரளா இன்றளவிலும் தங்கள் நீர் வளத்தை முறையாகப் பாதுகாக்கிறது. ஆனால் நாம்? தமிழக ஆறுகளுக்கு நடக்கும் அவலங்களை அதன் கண்ணீர்க் கதைகளைத் தனியொரு பதிவாய் எழுதலாம். சொல்லபோனால் கடவுளின் தேசத்தை அழகுபடுத்த தமிழகத்தின் தென்னகத்து நதிகளை பாழாக்கிக் கொண்டுள்ளோம். 

காரணம் கேரளாவில் மணல் அள்ளத் தடை. நம் அரசியல்வாதிகளோ அவர்களிடம் பணத்தை வாங்கிகொண்டு தாமிரபரணியையும் சிற்றாரையும் இன்னும் சில உப ஆறுகளையும் கேவலமாய்க் கற்பழித்துக் கொண்டுள்ளனர். லாரிலாரியாக மணலை அனுப்பிக் கொண்டுள்ளனர். போதாகுறைக்கு தொழிற்சாலைகளுக்கு என லட்சகணக்கான லிட்டரை மானிய விலைக்கு விற்கின்றனர். முறையான நீர் சேகரிப்புகள், நீர் பாதுகாப்பு நடவடிக்கைகள் அத்தனையும் பாழ்பட்டுப் போய்விட்டன. ஒருகாலத்தில் தமிழகத்திலும் இப்படியாக ஓடிய ஆறுகள் மெல்ல மெல்ல தங்கள் தடங்களை சுறுக்கி சுறுக்கி இன்று வாய்க்காலைப் போல் ஓடிக் கொண்டுள்ளன. இதையெல்லாம் பார்க்கும் போது தோன்றுவது கடவுளுக்காக பூசாரிகளால் பலியாடாகும் ஆடுகள் தமிழகத்தின் ஆறுகள் என்பதைத் தவிர வேறு ஒன்றுமில்லை. எது எப்படியோ கடவுளின் தேசமாவது ஓரளவிற்குப் பாதுகாப்பாய் இருக்கிறதே அதுவரை சந்தோசம்.  

சில புகைப்படங்கள் - நன்றி இணையம் 

19 Jul 2014

வேலையில்லா பட்டதாரி - ஹவுஸ்புல்

நிச்சயமாக படத்தின் கதையை விவரிக்கப் போவதில்லை. இந்தப்பதிவு ஒரு சி செண்டர் பார்வையாளனாக என்னுடைய விமர்சனம் அவ்வளவே. 

வேலையில்லா பட்டதாரி. நாவலூர் ஏஜிஎஸ்ஸில்  முதல்நாள் இரவுக் காட்சி. அதிலும் வெள்ளிக்கிழமை இரவென்பதால் ஒட்டுமொத்த ராஜிவ்காந்தி சாலையும் அரங்கை நிறைத்திருந்தது. ஏதாவது ஐ.டி கான்பரன்ஸ் நடந்தால் கூட இவ்வளவு கூட்டம் வருமா தெரியவில்லை. அம்புட்டு ஐடி கம்பெனியில் வேலை பார்க்கும் பட்டதாரி ஊழியர்களும் வேலை இல்லாப் பட்டதாரியைப் பார்க்கக் குழுமியிருந்தார்கள் தங்களின் கடந்தகால நினைவுகளை திரும்பிப் பார்பதற்காக. கடந்த தலைமுறையில் கமலகாசன் தொடங்கி ராம்ஜி வரை வேலையில்லாப் பட்டதாரியாக நடித்துவிட்டுப் போக இந்த தலைமுறையினருக்காக வே.இ.பட்டதாரியாக களத்தில் இறங்கியுள்ளார் தனுஷ். அவரின் சொந்தத் தயாரிப்பும் கூட. இதுவே அவருக்கு வினையாகிப் போனது வேறுவிஷயம், மானப்பிரச்ச்னையும் கூட. இதன் பின்னணி உங்களுக்கும் தெரிந்திருக்கலாம் இல்லையேல் அப்புறம் சொல்கிறேன். 



பொறியியல் முடித்துவிட்டு, தான் படித்த கட்டிட கட்டுமான துறையில் நியாயமான முறையில் நேர்மையான மனிதர்களுக்கு மத்தியில் வேலை பார்க்க ஆசைப்படும் நாயகன் இடைவேளை வரைக்கும் அப்படி ஒரு வேலை கிடைக்காமல் கஷ்டபடுகிறார். இடைவேளைக்குப் பின் அப்படி ஒரு வேலை கிடைத்தாலும், அப்படியாகக் கிடைத்த வேலையை தக்க வைத்துகொள்ள கஷ்டப்படுகிறார். காரணம் நம் நாயகன்தான் நேர்மையானவன் ஆயிற்றே. அதனால் அவனைத் தொந்தரவு செய்ய ஒரு அமுல்பேபி வில்லனாக வருகிறான். அவ்வப்போது டூயட்பாட பக்கத்துவீட்டில் குடியேறும் அமலாபேபி ஹீரோயினாகிறார். அவ்வளவு தான் கதை.  

முதல்பாதியில் விறுவிறுப்பான காட்சிகள் எதுவும் இல்லை என்றாலும் திரைக்கதை எழுதிய விதத்தில் அவை விறுவிறுப்பாகவே நகர்கின்றன. என்னை கேட்டால் படத்தின் பெரும்பலம் தனுஷைத் தவிர்த்து வசனமும் ஒளிபதிவுமே என்பேன். பெரும்பாலான வசனங்கள் பட்டையக் கிளப்புகின்றன. அதிலும் தனுசின் டயலாக் டெலிவரி பிரமாதம். 'முன்னல்லாம் இல்லதாவங்க இருக்குறவங்கட்ட இருந்து பிடுங்கினாங்க, இப்ப என்னடான்னா இருக்குறவங்க இல்லாதவங்க கிட்ட இருந்து பிடுங்குறீங்க' ஒரு சோற்றுப்பதம். தனுஷ் பேசும் பெரும்பாலான வசனங்கள் அடிபொலி. செயற்கைத்தனம் இம்மியளவும் இல்லை. என்ன நாயகி அமலாபால் இடத்தில் வேறொரு ஈரோயின் இருந்திருந்தால் இன்னும் சூப்பராய் இருந்திருக்கும். அமலாபாலுக்கு கல்யாணம் ஆகிவிட்டதாலோ என்னவோ ஆண்டியாகவே தெரிகிறார். சொல்லபோனால் அதுதான் உண்மையும் கூட. 

சமீபத்திய வெற்றிப்படங்களின் ஒளிப்பதிவாளர் வேல்ராஜ் தான் இப்படத்தின் இயக்குநர் என்பதால் படத்தின் ஒளிபதிவு ரிச்சாக இருக்கிறது. நன்றாகவும் இருக்கிறது. சென்னைக்குள்ளேயே படம் மொத்தத்தையும் முடித்தது பாராட்டத்தக்கது.  

படத்தின் சில காட்சி அமைப்புகள்  கொஞ்சம் பிரஷ்ஷாக இருந்தது. அதில் ஒன்று நாயகன் ரகுவரன் நாயகி ஷாலினிக்குக் கொடுக்கும் பிறந்தநாள் பரிசு. ஒட்டுமொத்த அரங்கமும் வேறொன்றை எதிர்பார்த்துக் காத்திருக்க அங்கே நடப்பதோ யாரும் எதிர்பாராத ஒன்று. வெகுநாட்களுக்குப் பின் திரையில் தோன்றும் சின்னக் கலைவாணர் சற்றே ஆறுதல் அளிக்கிறார் என்பதுதான் விகடனின் விமர்சன வரியாக இருக்கும் என்பது என் அவதானிப்பு. 

பாடல்கள் அனிருத்தின் வழக்கமான டெம்ப்ளேட் இசை. அதேநேரம் அனிருத்தின் இசைக்கு தனுஷின் நடனம் பிரமாதம். அவ்வளவு எனர்ஜிட்டிக். திருடா திருடி சுள்ளானில் நடித்த தனுசுக்கும் வேலையில்லா பட்டதாரி தனுசுக்கும் ஆயிரம் வித்தியாசங்கள். இத்தனை நாள் தனுஷ் என் பிடித்த நடிகர்களின் பட்டியலில் இல்லை. இந்தப்படத்தில் எனக்கு அவரை வெகுவாகப் பிடித்துப் போய்விட்டது. நடிப்பு பிரமாதம். சமுத்திரக்கனி மற்றும் சரண்யா பொன்வண்ணனின் நடிப்பும் அருமை.          

முதல் பாதியுடன் ஒப்பிடுகையில் இரண்டாம் பாதி தொய்வு என்றே பலரும் விமர்சிக்கின்றனர். எனக்கு அப்படியொன்றும் தெரியவில்லை. படம் ஆரம்பத்தில் இருந்து முடிவு வரை சலிப்பு தட்டாமல் தான் சென்றது. என்ன இரண்டாம் பாதி திரைக்கதையில் இன்னும் கொஞ்சம் மெனக்கெட்டிருக்கலாம். அடுத்தடுத்து என்ன நடக்கபோகிறது என்பதை கணிக்கக் கூடிய வழக்கமான திரைக்கதை தான் என்றாலும் போதுமான அளவு மசாலா தடவி பரிமாறப்பட்ட விதத்தில் சுவைக்குப் பஞ்சமில்லை. நம்பிப்போய் பார்க்கலாம். 

ரசித்த சில காட்சிகள் :
  • தன்னைவிட அதிகம் சம்பாதிக்கும் தம்பிக்கு பணம் கொடுத்து உதவுவது. 
  • சரக்கடித்துவிட்டு சரண்யாவிடமும் அமலாபாலிடமும் கூத்தடிக்கும் காட்சிகள். 
  • சமுத்திரகனி தனுஷை ஆறுதல்படுத்தும் காட்சி 
  • வில்லனின் அப்பாவிடம் நேருக்கு நேர் விடும் சவால். 
  • அமுல்பேபியிடம் தனுஷ் பேசும் அத்தனை காட்சிகளும். 
  • பத்திரிக்கையாளர்களிடம் தனுஷ் பேசும் காட்சி.  

வேலையில்லா பட்டதாரியை தனுஷே தயாரித்ததால் படத்தை வெளியிடுவதில் சிக்கலில் மாட்டியிருந்ததாக ஒரு பத்திரிக்கைச் செய்தி படித்தேன். அதவாது தனுஷ் சிவகார்த்திகேயனை வைத்து அடுத்த படம் தயாரிப்பதாகவும் அந்தப் படத்தையும் தங்களிடமே விற்றால் மட்டுமே வேலையில்லா பட்டதாரியை வாங்குவோம் என்றும் தனுசை டார்ச்சர் செய்தார்களாம் டிஸ்ட்டிப்யுட்டர்கள். கடந்த சில படங்கள் தனுஷுக்கு சரியாக போகாததால் ஏற்பட்ட நிலைமை இது. அதனால் தனுஷுக்கு கிட்டத்தட்ட இது தன்மானப் பிரச்சனை. மேலும் 25-வது படம் வேறு. இது வெற்றிப்படமாக அமைந்தே தீர வேண்டிய கட்டாயத்தில் தள்ளப்பட்டிருக்கிறார். அதற்காக அதிகமாக உழைத்துள்ளார். தனுஷ் எதிர்பார்த்த வெற்றியை அவர் அறுவடை செய்வாரா என்றால்? 



படம் முடிந்து வெளிவரும் போது அனைவரும் தங்களுக்குள் திரைப்படத்தை மிக உற்சாகமாக விமர்சிக்கத் தொடங்கியிருந்தனர். 'எனக்கு அந்த சீன் புடிச்சிருந்தது'. 'ஒவ்வொரு டயலாக்கும் செம மச்சி'. 'த்தா மாஸ் சீன் டா' என்று ஒவ்வொருவரும் தங்களுக்குப் பிடித்த காட்சிகளை விமர்சித்துக் கொண்டே நகர்ந்தனர். சமீபத்தில் பார்த்த எல்லா முதல்நாள் இரவுக் காட்சிகளிலும், படம் முடிந்ததும் தலையைத் தொங்கபோட்டுக் கொண்டு ஏதோ ஒரு விரக்தியில் செல்லும் ரசிகனையோ அல்லது 'செம தலைவலி எப்படா போய் தூங்குவோம்' என்ற எண்ணத்தில் செல்லும் ரசிகனையோ பார்த்துப் பழகியிருந்த எனக்கு இந்தக் காட்சி சற்றே புதுமையாய் இருந்தது. ஒரு திரைப்படம் வெற்றி பெற ரசிகனின் புளகாங்கிதத்தை விட வேறு என்ன விசயம் வெற்றியைத் தேடித் தந்துவிடப் போகிறது. 

வேலையில்லா பட்டதாரி - ஒருவேளை நீங்கள் வேலையில்லாப் பட்டதாரியாக இருந்தாலோ இருந்திருந்தாலோ உங்களுக்குள் இருக்கும் பழைய நினைவுகளை கிளறிவிட வாய்ப்புள்ளது.