அளவிற்கு அதிகமான அன்பு செலுத்தும் நண்பர்களையும், எப்போது வேண்டுமானலும் கொல்லப்படலாம் என்ற அளவிற்கு எதிரிகளையும், யார் விரித்த வலையில் எப்போது வேண்டுமானாலும் விழுந்து மாளலாம் என்ற அளவிற்கு துரோகிகளையும் பெற்றுள்ள ஒருவன், தான் செல்லும் இடங்களில் எல்லாம் தன்னை அநாதை என்று அறிமுகம் செய்து கொள்கிறான், அவன் தான் கதாநாயகன் அவனே தான் வந்தியத்தேவன். எவனொருவனை எல்லோருக்கும் பிடித்துப் போகிறதோ அவன் ஒருவனுக்கு தான் ஆபத்துக்கள் அதிகம் வரும், ஆபத்துகள் கொடுப்பவர்கள் ஒன்று அவனது எதிரிகளாய் இருப்பர் இல்லையேல் அவனது விரோதிகளாய் இருப்பார்கள். எதிரி விரோதி சிறு வித்தியாசம் முன்நின்று அடிப்பவன் எதிரி. எதிர்க்கத் துணிவில்லாமல் பின்னின்று அடிப்பவன் விரோதி. எதிரியை விட விரோதியை சமாளிப்பது தான் கஷ்டம். எதிரிகளையும் விரோதிகளையும் சமாளித்து நண்பரிகளின் நட்பை உறுதிப்படுத்தும் ஒப்பற்ற கதாபாத்திரம் தான் வந்தியதேவனுக்கு.
நண்பன் ஆதித்த கரிகாலன் கேட்டுக் கொண்டதற்கிணங்க தூதுவனாக தஞ்சை நோக்கி தன் பயணத்தைத் தொடங்கும் வந்தியத்தேவன், வழியில் இளைப்பாறுவதற்காக தன் மற்றொரு நண்பன் கந்தமாறன் இருக்கும் கடம்பூருக்கு செல்கிறான். இங்கே சோழ சாம்ராஜ்யத்தைக் கவிழ்க்கும் சதி ஆலோசனைக் கூட்டம் நடைபெறுவதைக் கண்டு திடுக்கிடும் வந்தியத்தேவன் தன் ஒற்றன் வேலையையும் தொடங்குகிறான். இந்த இடத்தில இருந்து தான் பொன்னியின் செல்வன் என்னும் சரித்திர புதினமும் தொடங்குகிறது.
வந்தியத்தேவனிடம் அளவிற்கு அதிகமான வீரம் இருக்கும், வீரம் மட்டுமே இருக்கும் இடத்தில விவேகம் குறைவாய்த் தானே இருக்கும். பல சமயங்களில் தேவை இல்லாமல் ஆபத்தில் சிக்கிக்கொள்ளும் வந்தியத்தேவனை காபாற்றுவதற்காகவே படைக்கப்பட்டிருக்கும் கதாப்பாத்திரம் தான் திருமலை நம்பி. திருமலை ஒரு வீரவைஷ்ணவன். இந்தக் கதை நடைபெறும் காலத்தில் சைவ வைஷ்ணவ சண்டை ஓயாமல் நடைபெற்றுக் கொண்டிருக்கும், அதில் ஒருவரை ஒருவர் காயப்படுத்தும் அளவிற்கு வெறி முற்றிப்போனவர்களின் பெயர் வீர சைவன் மற்றும் வீர வைஷனவன். திருமலை நம்பி வீர வைஷ்ணவன் என்பதால் செல்லும் இடங்களில் எல்லாம் சைவர்களுடன் வம்பிழுத்துக் கொண்டே இருப்பான். இந்த இடங்களில் எல்லாம் கல்கி அவர்களின் சைவ வைணவ விளக்கங்கள் அற்புதமாக இருக்கும். இருதரபினரைப் பற்றி நாம் அறியாத பல தகவல்களை அள்ளித் தெளிப்பார். நிற்க இங்கு திருமலை நம்பி செய்யும் ஒவ்வொரு கலகத்தின் பின்னும் ஒற்றறிதல் இருக்கும், ஒற்றன் என்பவன் எப்படி விவேகத்தோடு செயல்பட வேண்டும், ஒற்றரிய துணிய வேண்டும், சந்தர்ப்பங்களை உண்டாக்க வேண்டும் என்பதையெல்லாம் திருமலை நம்பி வெகு லாவகமாக செயல்படுத்துவான்.
நம்பி ஒருவன் தான் வந்தியத்தேவனுடன் கதை முழுவதும் பயணிக்கப் போகிறான் என்பதால் அவனுடைய அறிமுகம் விரிவாய் இருப்பது அவசியமாகிறது. பல சமயங்களில் அதிர்ஷ்ட தேவதையின் கரம் பிடித்து தப்பிப் பிழைக்கும் வந்தியத் தேவன் சில சமயங்களில் நம்பியின் விவேகத்தாலேயே தப்பிக்கிறான். இருந்தும் கதையின் பிற்பாதி வரை இருவருக்கும் இருவர் மீதும் சந்தேகம் இருந்து கொண்டே இருக்கும். சில சமயங்களில் சந்தேகத்தின் உச்சம் சண்டை வரை செல்லும், அங்கெல்லாம் இருவேருமே பின்வாங்க மாட்டார்கள்.
இருவருக்குள்ளும் நடை பெரும் ஒரு சுவாரசியமான உரையாடல் (என் நியாபகத்தில் இருந்து)
வந்தியத்தேவன் : வீர வைஷ்ணவரே இது ஒரு வீர சைவக் கத்தி. வீர வைஷ்ணவன் ஒருவன் ரத்தம் பார்க்க வேண்டும் என்று துடிக்கிறது. எதாவது மறுத்துப் பேசினீர் உம்மை கைலாயத்திற்கு அனுப்பிவிடும்.
நம்பி : அப்பனே உன் வீர சைவக் கத்தியிடம் கொஞ்சம் சொல்லிவை, என்னை கைலாயதிற்கெல்லாம் அனுப்ப வேண்டாம், அந்த வைகுண்டத்திற்கு அனுபினால் நலமாய் இருக்கும் என்று.
இப்படி பல இடங்களில் இருவருக்குள்ளும் நடைபெறும் உரையாடல்களே வெகு சுவாரசியமாய் இருக்கும்.
பழுவூர் இளைய ராணி நந்தினியை சந்திக்கும் அந்த முதல் சந்திப்பிலேயே இருவருக்கும் ஒருவரை பிடித்துப்போய்விடும். இருந்தும் மாற்றான் மனைவி என்பதாலும் சாம்ராஜ்யம் கவிழ்க்க அவள் சதியே காரணம் என்பதும் தெரியவரும்பொழுது அவளின் காமக் கண்கள் இவனுக்கு மட்டுமே கொலைக் கண்களாக நஞ்சுண்ட கண்களாக தெரியும். முதலமைச்சரான அநிருத்த பிரம்மராயரே எங்கே நந்தினியைச் சந்தித்தால் அவள் காமவலையில் சிக்கி விடுவோமோ என்று அவள் சந்திப்பைத் தவிர்ப்பார். தன் சதி நிறைவேற எல்லரோயும் மோக வலைக்குள் சிக்க வைக்கும் நந்தினியை வந்தியத்தேவன் ஒருவன் தான், அவன் திட்டம் நிறைவேற வேண்டும் என்பதற்காக அவளை தன் வலையில் விழ வைப்பான்.
குந்தவையை சந்திக்கும் அந்த ஒரு நொடிப் பொழுதில் அவளிடம் தன் மனதைப் பறி கொடுத்தாலும் பிற்பாதியில் அவளிடம் தன் காதலை வெளிபடுத்தும் இடத்தில தான் முதல் முறையாய் வெட்கப்படுவான் கவி பேசுவான் காதல் பாடுவான். இவர்கள் இருவருக்குள்ளும் நடைபெறும் உரையாடல்கள் காதலும் நட்பும் பாசமும் கலந்ததாக இருக்கும். தன் வானர் குலப் பெருமையை கூறும் இடத்தல் வந்தியத்தேவனின் சொல்லாடல் மிக அற்புதமாக இருக்கும். தன்னுடைய ஒற்றன் பணிக்காக செல்லும் இடங்களில் எல்லாம் பொய் பேசித் திரியும் வந்தியத் தேவன், இலங்கையில் அருள்மொழிவர்மனை அதாவது பொன்னியின் செல்வனை சந்தித்ததும் பொய் பேசக் கூடாது என்று உறுதிமொழி எடுத்துக் கொள்வான். அதன்பின் அவன் உண்மையே கூறினாலும் யாரும் நம்பமாட்டாரர்கள். ஏன் குந்தவையும் நம்பியும் கூட சமயங்களில் நம்பமாட்டார்கள்.
என்னதான் பொய் பேசுவதில்லை என்று உறுதி எடுத்துக் கொண்டாலும் கன்னியர் தம் கடைக்கண் பார்வைக்கு சபலப் படுபவனாகவே இருப்பான். பார்க்கும் பெண்களிடம் எல்லாம் காதலைச் சொல்லுவான், ஒருமுறை பொன்னியின் செல்வன் என்று தெரியாமலேயே அவருடன் சரிக்கு சமமாக வாட்போர் புரிவான் வந்தியத்தேவன், யார் வெற்றி பெறுவார்கள் என்பது தெரியாமல் இருக்கும் வேளையில் பூங்குழலியின் மீது இவன் பார்வை பட்டதும் ஒரு கணம் தப்பி விடுவான், பொன்னியின் செல்வன் வென்றுவிடுவார். பின்பு குந்தவை சொல்லியதற்கிணங்க ஆதித்த கரிகாலனின் நிழல் போல் தொடர்வான், அதற்காக அவன் செய்யும் குறும்புத் தனமான செயல்கள் ரசிக்கும் படியாயும், அவன் செய்யும் வீர தீரச் செயல்கள் அவனை மெச்சும் படியாயும் இருக்கும். அங்கேயும் மணிமேகலை என்னும் பெண்ணுடன் காதல் புரியும் காட்சிகள் அவன் குறும்புத் தனத்தின் உச்சம். மணிமேகலை ஒரு முக்கியமான கதாபாத்திரம் படித்தே தெரிந்து கொள்ளுங்கள்.அவன் பொய் காதல்கள் அனைத்தும் ஒற்று வேலைக்காக, உண்மைக் காதல் மட்டுமே குந்தவைக்காக.
அரச குடும்பத்தில் முக்கியமான ஒருவரின் கொலைப்பழி வந்தியத் தேவன் மீது விழுந்து விடும், இவன் செய்திருக்க மாட்டான் என்று அரச குடும்பமே நம்பும் ஆனால் இவனது நண்பர்களாக இருந்து விரோதிகளாய் மாறிய கந்தமாறனும் பார்த்திபேந்திரனும் மட்டும் நம்ப மறுப்பார்கள், பாதாள சிறையில் அடைப்பார்கள். அப்போது இவனை காப்பாற்ற முடியாமல் குந்தவையும் பொன்னியின் செல்வனும் தவிக்கும் இடங்களில் காதலையும் நட்பையும் முழுவதாய் காணலாம். யார் உதவியும் இல்லாமல் பாதாள சிறையில் இருந்து தப்பிக்கும் பொழுது வந்தியத் தேவனின் சமார்த்தியத்தை முழுவதும் ரசிக்கலாம்.
வந்தியத்தேவன் என் மனம் கவர காரணங்கள் இன்னும் பல... இருந்தும் புத்தகம் படித்தால் மட்டுமே உங்களால் உணர முடியும். பதிவின் தலைப்பில் விட்டுப் போன ஒரே ஒரு காரணத்தை மட்டும் சொல்லி விடுகிறேன். தேவை இல்லாமல் ரஜினியை இழுத்துள்ளேனே! அதற்கான காரணம் சொல்ல வேண்டாமா? நான் படித்த மின் புத்தகத்தில் ஓவியங்களோ படங்களோ எல்லாம் கிடையாது. ஒவ்வொரு கதாபாத்திரத்தையும் என் மனக்கண் முன் நானாக கற்பனை செய்து நிறுத்திக் கொள்ள வேண்டும். இது மிகப் பெரிய சவாலாகவே இருந்தது. வந்தியத்தேவன் கதாபாத்திரத்தை தவிர. ஆம் என் மனக்கண் முன் வந்தியத்தேவனாக தோன்றியது ரஜினிகாந்த் மட்டுமே, அத்தனை சுறுசுறுப்பு, வேகம், பேச்சாற்றல், நட்பு, காதல், குறும்பு என வந்தியத்தேவனுக்கு இருக்கும் அத்தனை அம்சங்களையும் சிறப்பாக செய்ய முடியும் என்றால் அது தலைவா உன்னால் மட்டுமே முடியும். இனி உன்னால் முடியுமா என்று தெரியவில்லை. ஆனால் நீ நடித்திருந்தால் அது முழுமையாய் இருந்திருக்கும்.
பொன்னியின் செல்வன் புதினம் என்னும் புதுமை பதிவு படிக்கவில்லை என்றால் அதையும் படித்துவிடுங்கள். இதைப் படித்துவிட்டால் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள்

