19 May 2012

மீண்டு(ம்) வந்தேன்


டங்கல் நாம் நம் அடுத்த அடியை எடுத்து வைக்க தயாராகி விட்டோம் என்பதை தோல்விக்கு காட்டுவதற்கான தடங்கள். வாழ்கையில் ஒவ்வொரு வேளையில் ஒவ்வொரு விதமான தடங்கல் வருவது இயல்பு. சமீப காலத்தில் இணையத்துடன் இணைய முடியாத அளவிற்கு ஒரு தடங்கல் ஏற்பட்டது, மிகவும் சோர்ந்து விட்டேன், பழைய நிலைக்கு வர முடியுமா மீண்டும் நம்மால் ப்ளாக் எழுத முடியுமா என்பது போன்ற பல கேள்விகளை கேட்டுக் கொண்டும் சமாதானம் அடைய முடியாத பல பதில்களை எனக்கு நானே கூறிக் கொண்டும் இருந்தேன், இறுதியாக நான் எடுத்த முடிவு, இனி எழுத வேண்டாம் (உங்கள் சந்தோசம் புரிகிறது, காத்திருங்கள் இன்னும் பதிவு முழுமையடையவில்லை), மற்ற நண்பர்களின் பதிவுகளை மட்டும் படித்து அவர்களை உற்சாகப்படுத்துவோம் என்ற முடிவுக்கு வந்தேன். 

ருவாரம் கழித்து ப்ளாக்கை திறந்தால் பல சந்தோசங்கள் என்னை வரிசையாக வரவேற்றன. அதில் நான் பெற்ற முதல் சந்தோசம் இதை முதல் சந்தோசம் என்பதை விட முதல் விருது என்றும் சொல்லலாம். என்னை மதித்து(!) சகோதரி கலை, அவர் பெற்ற விருதை என்னுடன் பகிர்ந்து கொண்டது. என் வாழ்வில் நான் பெற்ற விருதுகளில் இதை எத்தனையாவது விருதாகக் கொள்ளலாம் என்று என்னுடைய வாழ்க்கையை சிறிது பின்னோக்கிப் உற்றுப் பார்த்ததில் ஒன்றைப் புரிந்து கொண்டேன் வாழ்க்கையில் நான் பெற்ற முதல் விருது இது தான். அதனால் அந்த மகிழ்ச்சியை எனக்கு அளித்த கலை அவர்களுக்கு என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் (ஆண்டவரே கோட்டான கோடி நன்றிகள் ஆண்டவரே கோட்டான கோடி நன்றிகள்). 

னக்கு அளித்த விருதுகளை நான் பகிர்ந்து கொள்வதற்கு முன்பு தடங்கலுக்கு வருத்தமும் அதற்கான காரணத்தையும் அதிலிருந்து மீள காரணமானவர்களையும் பற்றி பகிர்ந்துகொள்ள கடமைபட்டுள்ளேன்.

த்தாவது முடித்தவுடன் "அடுத்து என்ன குரூப் எடுக்க போற" என்ற கேள்விக்கு விடை தேடி ஆரம்பித்த பயணம் இன்னும் தொடர்ந்து கொண்டுதான் உள்ளது. பிளஸ் டூ நான் முடிப்பதற்கு முன்பே சமுதாயம் அடுத்த கேள்வியை தயார் செய்து விட்டது "இஞ்சினியரிங் படி" என்ற குரல் திரும்பிய இடங்களில் எல்லாம் எதிரொலித்தது. நான் எடுத்த மிக மோசமான நல்ல மதிப்பெண்களுக்கு (சமுதாயத்தைப் பொறுத்தவரை அது மோசமான மதிப்பெண் நான் படித்த படிப்பை பொறுத்தவரை அது நல்ல மதிப்பெண்!) இஞ்சினியரிங் படிப்பு என்பது கனவாகிப் போனது.மிகப் பெரிய போராட்டத்தின் முடிவில் கலை அறிவியல் கல்லூரியில் படிப்பதற்க்கான இடம் கிடைத்தது. இளங்கலை முடியும் தருவாயில் வேலைக்குச் செல்லபோகிறேன் என்ற என் வாயை அடைத்து "முதுநிலை படி"க்கச் சொல்லியது சமுதாயம். 

சென்னையின் மிகப் பெரிய பொறியியல் கல்லூரி என்று தனக்குத் தானே சொல்லிக் கொள்கிற ஒரு கல்லூரியில் அரசாங்க உதவியுடன் இடம் கிடைத்தது. இறுதி ஆண்டின் இறுதியில் கேம்பஸ் இண்டர்வியு என்ற சம்பிரதாயத்தின் உதவியில் தலைசிறந்த நிறுவனத்தில் வேலை கிடைத்தது. சமுதாயதிற்கு தெரியாது அந்த நிறுவனம் வேலைக்கு அழைப்பதற்கு பல நாட்கள் ஆகும் என்று. படிப்பு முடிந்ததும் "எப்ப ஜாயின் பண்ண போற" என்ற கேள்வியையும் அது கேட்கத் தவறவே இல்லை. எனக்குத் தான் தெரியுமே. அதனால் தற்சமயத்திற்காக ஒரு சிறு அலுவலகத்தில் வேலைக்குச் சேர்ந்தேன். ஒரு நல்ல நாளில் வந்து சேர்ந்துகொள்ளுமாறு அந்த பெரிய நிறுவனம் அழைத்தது. நான் தேர்வானதில் இருந்து சரியாக ஒரு வருடம் பத்து நாட்கள் கழித்து அந்த நிறுவனத்தில் ட்ரைனிங் ஆரம்பமாகியது.  

மூன்று மாதங்கள் முடிந்ததும் ப்ராஜெக்ட் கிடைத்து விடும் என்று நம்பிக்கொண்டிருந்த சமுதயத்திற்குத் தெரியாது அங்கே பெஞ்ச் என்ற ஒரு சடங்கு உண்டு என்று. பெஞ்ச் என்றால் ட்ரைனிங் முடிந்து ப்ராஜெக்ட் கிடைக்கும் வரை சும்மா இருக்க வேண்டும் வேலை எதுவும் கிடையாது. ஆனால் சம்பளம் உண்டு. கேட்பதற்கு நன்றாக இருந்தாலும் அது நரகம் என்பது பெஞ்சில் இருப்பவர்களுக்குத் தான் தெரியும். சமுதாயம் விழித்துக் கொண்டது "எப்போ ப்ராஜெக்ட் கிடைக்கும்? ஏன் இன்னும் சும்மாவே இருக்க?" கேள்விகளை கேட்டுக் கொண்டே சென்றது. அதற்க்கான பதிலை நானும் தேடிக் கொண்டே இருந்தேன். ஒரு நிருபனின் வேலை நிஜத்தைத் தேடுவது, பெஞ்சில் இருப்பவனின் வேலை நிழலைத் தேடுவது காரணம் அலுவலகத்தினுள் செல்ல அனுமதி கிடையாது. தினசரி அலுவலகம் செல்வது, கிடைக்கின்ற நிழலில் உட்காருவது, சிறுவயதில் உட்கார்ந்து கொண்டு விளையாடும் அனைத்து விளையாட்டுக்களையும் விளையாடுவது, கிண்டல் கேலி மதிய சாப்பாடு பின் வீட்டுக்குப் புறப்பாடு என்ற நிலையிலேயே வாழ்க்கை இரண்டு மாதங்களுக்கு நகர்ந்து கொண்டிருந்தது. 

முடிவில்லா நிலை என்பது எதிலுமே இல்லை, பெஞ்ச் வாழ்க்கையும் நிறைவுக்கு வந்து சென்ற வாரம் ப்ரோஜெக்டும் கிடைத்து விட்டது. நான் இருக்கும் ஆவடியிலிருந்து அறுபது கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் அலுவலகத்தில் தான் இனி என் வேலை. அங்கு தான் நான் செல்ல வேண்டும். சுருக்கமாகச் சொல்வதென்றால் ஆவடி இருக்கும் திருவள்ளூர் மாவட்டத்திலிருந்து இருந்து சென்னை கடந்து காஞ்சிபுரம் மாவட்டத்திலிருக்கும் சிறுசேரி சென்று திரும்ப வேண்டும். தலை சுற்றுகிறதா சென்னையில் பலபேரின் அலுவல் நிமித்தம் இப்படித் தான் இருக்கும்.காரணம் சென்னையின் புறநகரில் தான் வீட்டு வாடகை குறைவு. இருபது கி.மீ தொலைவிற்குள் ரூம் பார்த்து அங்கே சென்றுவிட்டேன். இருந்தும் வேலை பழக்கத்திற்கு வரும் வரை கொஞ்சம் கடினமான சவால்களை எதிர்கொள்ள வேண்டி இருக்கும்.  

ன் வாழ்வில் வந்த இந்த மாற்றங்கள் தான் தடங்களுக்குக் காரணம். அதனால் மற்ற நண்பர்களின் எழுத்தை உற்சாகப்படுத்துவதோடு நின்று கொள்ளலாம் என்ற நிலைக்கு வந்தேன். அந்த முடிவோடு தான் ப்ளாக்கையும் ஓபன் செய்தேன். ஆனால் முடிவு மாறிவிட்டது இல்லை என்னை உற்சாகப்படுத்தும் உங்களால் மாற்றப்பட்டுவிட்டது. நான் பதிவெழுத ஆரம்பித்த காலத்தில் இருந்து இப்பொழுது வரை என் பதிவை முதல் ஆளாக படித்து வரும் லாய், பதிவுலகின் முதல் நண்பராய் வந்து என் எழுத்தை தன் நண்பர்களுடன் பகிர்ந்து கொண்டு எப்பொழுது அடுத்த பதிவு எழுதப் போகிறாய் என்று உற்சாகபடுத்துகிற சதீஷ் அண்ணா, முதல் விருது கொடுத்த சகோதரி கலை, பதிவில் நடை எப்படி எப்படி இருந்தால் அது நல்ல பதிவாக இருக்கும் என்று பாடம் சொல்லிக் கொடுத்து என்னை திருத்தும் என் சின்ன வாத்தியார் கணேஷ் சார்,லேட்டாக வந்தாலும் லேட்டஸ்ட்டாக கமெண்ட் கொடுக்கும் நிரஞ்சனா, பல சிறுகதைகள் எழுதி வரும் மெலட்டூர். இரா.நடராஜன் சார், என் ஒவ்வொரு பதிவிலும் இருக்கும் குறை நிறைகளை தவறாது எடுத்துரைக்கும் என் அண்ணன், ஸ்ரீமதி மற்றும் ஜனனி, தவறாது என்னை உற்சாகப்படுத்தும் மணிசார் பிரவீன் வில்வா பவி ராஜி மணிமாறன் மதுரைதமிழன் சீனி ராஜபாட்டை ராஜா ரமணி விச்சு சென்னையை சுற்றிக் காட்ட அழைக்கும் சின்னமலை புதியதாய் கிடைத்த நண்பர்கள் யுவராணி பாலா துளசி கோபால் வெங்கட் நாகராஜ் மூத்த பதிவர்களான லெக்ஷ்மி அம்மா வை கோபால கிருஷ்ணன் ராஜராஜேஸ்வரி அம்மா மற்றும் மனோ சாமிநாதன் என் பதிவிற்க்கான புகைப்படங்களை தந்து உதவும் நண்பன் காளிராஜ் என்று ஒவ்வொருவரும் என் உற்சாகதிற்கான காரணங்கள்.

ன் கல்லூரி தோழர்கள், என் உடன் வேலைக்குச் சேர்ந்த தோழர்கள் என்று அனைவர் கொடுக்கும் உற்சாகமும் மிக முக்கியமான காரணங்கள். 'கொஞ்சம் தாமதமாக வந்தமைக்கு மன்னிக்க வேண்டுகிறேன் வாத்தியரே. விதி வழியில் செல்வதால் சதி ஒன்று நிகழ்ந்து விட்டது' என்று கணேஷ் சாரிடம் கூறினேன், அதற்க்கு அவர் உதிர்த்த மிக மிக உற்சாகமான வார்த்தைகள் 'விதி வழி செல்லும் வாழ்வில் உங்களுக்கும் சோதனைகள் நேர்கின்றனவா... மீண்டு வாருங்கள். எல்லாம் நமக்கு உரமே...'. .அடுத்ததாக நான் எதிர் பார்க்காத நிகழ்வு என்னை வலைசரத்தில் அறிமுகம் செய்து வைத்திருந்த தோழி சசிகலா "தங்கள் பதிவொன்றை வலைச்சரத்தில் பகிர்ந்துள்ளேன் . நேரமிருப்பின் வலைச்சரம் வருமாறு அன்போடு அழைக்கிறேன்" என்று என்னை வலைசரத்தில் அறிமுகம் செய்திருந்த தோழி சசிகலா அவர்கள். எப்போது அடுத்த பதிவு என்று கேட்ட சதீஷ் அண்ணா. இனி பதிவெழுதுவாயா என்று கேட்ட ஸ்ரீ அண்ணா? இப்படி ஒவ்வொருவரிடமும் இருந்து கிடைத்த உற்சாகம் என்னை மீண்டும் பதிவெழுத தூண்டியது. இனி கண்டிப்பாக எழுத வேண்டும் என்ற ஆர்வமும் பிறந்ததது.இன்னும் ஒரு மாத காலத்திற்கு என்னால் தொடர்ந்து எழுத முடியுமா என்று தெரியவில்லை ஆனால் உங்களை தொடர்ந்து கொண்டிருப்பேன் என்பதை மட்டும் என்னால் உறுதியாகக் கூற முடியும். 


னி விருது கொடுக்கு நேரம் 

ன் எழுத்துகளை தன் மின்னல் வரிகளால் பாரட்டும் சின்ன வாத்தியார் கணேஷ் சார் அவர்களுக்கு 

ன் சிறுகதைகள் சிறந்த சிந்தனைகள் என்று பலவேறு விதங்களில் எழுதி வரும் அய்யா மெலட்டூர். இரா.நடராஜன் சார்அவர்களுக்கு 

ல்லை பாதுகாப்புப் படையில் பணிபுரிந்து வரும் நம்மைக் காக்கும் சீரிய பணியில் இருந்தாலும் சிறப்பாக தன் அனுபவங்களை எழுதி வரும் அண்ணன் சதீஷ்  அவர்களுக்கு

லையல்ல சுனாமி என்ற பெயரில் பதவு எழுதி வரும் அண்ணன் விச்சு

டக்கு மடக்கு என்று பெயர் வைத்திருந்தாலும் தன் மனதில் தொட்ரியதி அப்படியே எழுதும் முட்டாப்பையன் (!) அவர்களுக்கு 

தாவது எழுதுவோம் என்று எழுதினாலும் திருக்குறளை பாமர விளக்கங்களுடன் எழுதி வரும் ஐயா வியபதி அவர்களுக்கு 

நிழலுலகில் நிஜத்தை தேடும் சராசரிப் பெண்ணான யுவராணி தமிழரசனுக்கு

சினிமா சினிமா என்ற தலைப்பில் தான் ரசித்த ஆங்கிலத் திரைப்படங்களை அழகான விமர்சனத்துடன் தரும் நண்பன் ராஜ் அவர்களுக்கு 

தான் நினைத்ததைச் சொல்லும் தன்னுடைய பதிவில் நூரைக்கண்ட முரளிதரன் அவர்களுக்கு

ன் கவிதை வரிகளால் கவி பாடும் என் வகுப்புத் தோழன், மண்ணின் மைந்தன், உடன் பணியாற்றுபவன் என்று பல சிறப்புகளை பெற்ற கவிபாலா அவர்களுக்கு 

ன்று இந்த விருதுகளை பகிர்ந்து கொடுக்கிறேன். இந்தச் சிறுவன் மகிழ்வோடு தரும் விருதை பெற்றுக் கொள்ள தாழ்மையுடன் அழைக்கிறேன்.    

10 May 2012

சென்னையில் வாங்கலாம் வாங்க


சியாவிலேயே மிகப் பெரிய பொதுநல மருத்துவமனையான சென்ட்ரல் மருத்துவமனையின் வெளியிலுள்ள பிளாட்பாரத்தில் ஐந்து ரூபாய்க்கு ரஸ்னா விற்பவனிடமும் சரி, ராயபேட்டை மல்டிப்ளெக்ஸில் ஏசி ரூமில் உயர்ரக குளிர்பானம் விற்பவனிடமும் சரி கூட்டம் அலைமோதிக் கொண்டுதான் இருக்கும். சென்னையில் எங்காவது ஒரு பொட்டிக் கடை வைத்து விட்டால் போதும் நீங்கள் பிழைத்துக் கொள்ளலாம். காரணம் ஜன நெருக்கடி நிறைந்து இருக்கும் சென்னை மிகப்பெரிய தொழில் வணிக வியாபார நகரம், அதனாலேயே சென்னை எல்லார்க்கும் எல்லாமுமாய் விளங்குகிறது. 

சென்னைக்கு புதிதாக வருபவர்களிடம் 'எல்லா பொருட்களும் ஒரே இடத்தில் கிடைக்கும் இடம் எது?' என்று கேட்டால் கண்ணை மூடிக்கொண்டு பதில் சொல்லுவார்கள் 'திநகர் ரங்கநாதன் தெரு' என்று. சென்னையை நன்றாகத் தெரிந்தவர்களுக்கு மட்டுமே தெரியும் ரங்கநாதன் தெருவில் துணிகளைத் தவிர வேறு எதுவும் கிடைக்காதென்று.

வ்வொரு குறிப்பிட்ட பொருள்களும் குறிப்பிட்ட இடங்களில் தான் கிடைக்கும். காய்கறியில் தொடங்கி துணிகள், தங்க நகைகள், எலெக்ட்ரானிக் பொருட்கள், புத்தகங்கள், வாகன உதிரிபாகங்கள் என்று ஒவ்வொரு பொருளுக்கும் ஒவ்வொரு பகுதியை சென்னை தனக்குள்ளேயே ஒதுக்கிக் கொண்டுவிட்டது. 

சென்னையின் மிகப் பிரபலாமான வர்த்தக மையம் திநகரில் இருக்கும் ரங்கநாதன் தெரு, உஸ்மான் ரோடு மற்றும் பாண்டிபஜார். இந்த மூன்று இடங்களிலுமே பெண்களுக்கான ஆடைகள், ஆபரணங்கள், அணிகலன்கள் விற்கும் கடைகளும் சுடிதார் தைக்கும் தையலகங்களுமே அதிகம். அதனால் பெண்களின் கூட்டத்திற்கு இங்கு பஞ்சமே இருக்காது. இந்தியாவுக்கே  பஞ்சம் வந்தாலும் ரங்கநாதன் தெருவில் இருக்கும் கூட்டத்திற்கு மட்டும் பஞ்சமே வராது. ரங்கநாதன் தெரு மாம்பலம் ரயில் நிலைய வாசலிலேயே இருப்பதும் பேருந்து நிலையமும் நடந்து செல்லும் தூரத்திலேயே இருப்பதும் மக்களுக்கு மிகவும் வசதியாய்ப் போய்விட்டது. இந்தத் தெருவின் பெரும்பாலான பகுதியை ஆக்கிரமித்துக் கொண்டிருப்பது சரவணா ஸ்டோர்ஸின் பெரிய பெரிய கட்டிடங்கள் தான். இந்தத் தெருவில் துணிக் கடைகளும் தையலகங்களும் அதிகம். மிகப் பெரிய பாத்திரக் கடையும் உள்ளது.    

ங்கநாதன் தெரு தொட்டுக் கொண்டிருக்கும் உஸ்மான் ரோடில் தங்க நகைக்கடைகள் அதிகம். சரவணா, ஜி.ஆர்.டி, ஓ.கே.ஜெ, ஜாய் அலுக்காஸ், தனிஷ்க், பாத்திமா, கசானா என்று பெரிய பெரிய நகைக் கடைகளின் பெயர்களை அடுக்கிக் கொண்டே செல்லலாம். அவர்களும் தங்கள் கடைகளை அடுக்கு மாடிகளாக அடுக்கிக் கொண்டே தான் செல்கிறார்கள். சரவணா, போத்திஸ், சென்னை சில்க்ஸ், ஆர்.எம்.கே.வி, நல்லி, குமரன் சில்க்ஸ் போன்ற ஜவுளிக் கடல்களும் இங்கே தான் ஒருவருக்கொருவர் போட்டியாய் அணிவகுத்து நிற்கிறார்கள். ஒரே ஒரு உபரி தகவல் இந்த 'எடுத்துக்கோ எடுத்துக்கோ' கடையில் மட்டும் இலவசமாக கொடுத்தால் கூட எதையும் எடுத்து விடாதீர்கள் காரணம் இங்கே பொருட்களின் விலையும் குறைவு தரமும் குறைவு. இவ்வளவு பெரிய பெரிய கடைகளுக்கு நடுவில் இருக்கும் சாலை வெகுவாக சுருங்கி விட்டதால் வாகன நெரிசலும் ஜன நெருக்கடியும் எப்போதுமே ஜெகஜோதியாய் இருக்கும்.

ந்த இரண்டு தெருக்களையும் சுற்றிவிட்டு பாண்டி பஜார் சென்றால் அங்கே பெண்களுக்கான அணிகலன்கள் மொத்தமும் விதவிதமாக அணிவகுத்து நிற்கும். அழகழகான வாட்சுகள், கம்மல்கள், வளையல்கள், கள்,கள் என்று அடுக்கிக் கொண்டே செல்லலாம்.

சாதாரண மற்றும் விடுமுறை நாட்களில் இருக்கும் கூட்டத்தைக் காட்டிலும் விழாக் காலங்களில் கூட்டம் பலமடங்கு அதிகமாக இருக்கும். காரணம் சென்னை மட்டுமில்லாமல் வெளிமாவட்டங்களில் இருந்தும் மக்கள் அதிகளவில் வருகை புரிவார்கள். இவ்வளவு கூட்டத்தையும் சமாளிக்கும் அளவிற்கு திநகரில் உணவகங்கள் கிடையாது. இங்கு உணவகங்கள் அதிகம் தான் என்றாலும் பண்டிகை தினங்களில் இருக்கும் கூட்டத்துடன் ஒப்பிடும் பொழுது சொற்பமாகவே தெரியும். அதனால் பண்டிகை நாட்களில் இங்கு வருமுன் உணவை முடித்துவிட்டு வருவது நல்லது இல்லையேல் மறந்துவிட்டு வருவது நல்லது.



டுத்த இடம் ரிட்சி ஸ்ட்ரீட் அல்லது ரிச் ஸ்ட்ரீட். கம்ப்யூட்டர், கம்ப்யூட்டர் உதிரி பாகங்கள், செல்போன், செல்போன் உதிரி பாகங்களிலிருந்து பெயர் தெரிந்த தெரியாத என்னென்ன எலெக்ட்ரானிக் பொருட்கள் வாங்க வேண்டுமானாலும் இந்த எலெக்ட்ரானிக் சந்தைக்கு வந்துவிடலாம். ஹார்ட் டிஸ்க், மதர் போர்ட் தொடங்கி கம்ப்யூட்டரின் அணைத்து உதிரிபாகங்களையும் பிளாட்பாரத்தில் கடை பரப்பி வைத்திருப்பதைப் பார்த்தல் கொஞ்சம் திகிலூட்டும். காரணம் அனைத்தும் திருட்டுப் பொருட்கள். சென்னையின் வீடுகளில் இருக்கும்  எலெக்ட்ரானிக் பொருட்களில் குறைந்தது ஒரு பொருளாவது இங்கிருந்து வாங்கப்பட்டதாகதான் இருக்கும். அண்ணா சாலையின் ஆரம்பத்திலேயே இருக்கும் இந்தத் தெருவிற்கு சில ஆண்டுகளுக்கு முன்பு அரசாங்கம் சூட்டிய பெயர் நரசிங்கபுரம் தெரு. இந்தத் தெருவிற்கு இப்படி ஒரு பெயர் இருப்பதே சென்னையில் பலருக்கு தெரியாது. 

ங்கநாதன் தெருவிற்கு அடுத்தபடியாக மிக மிக நெரிசலான குறுகலான கூட்டம் அதிகம் இருக்கும் இடம் ரிச் ஸ்ட்ரீட் தான். ஒரே ஒரு வித்தியாசம் இங்கு ஆண்களை மட்டுமே அதிகம் காண முடியும். பெண்கள் இங்கு தனியாக செல்வது அவ்வளவு நல்லதும் இல்லை. இங்கு போலிகள் அதிகம் என்பதால் ஏமாறாமல் பொருட்களை வாங்குவது உங்கள் சாமர்த்தியம். இந்த இடத்தைப் பற்றியோ அல்லது வாங்கப் போகும் பொருளைப் பற்றியோ முழுவதுமாக அறிந்த்தவரை உடன் அழைத்துச் சென்றால் அடுத்த முறை ரிச் ஸ்ட்ரீட் வருவதற்கு நீங்கள் தயங்கமாட்டீர்கள். (நட்டு போல்ட் கார்டு ரீடர், ரிமோட் வாங்க செல்பவர்களுக்கு இது பொருந்தாது). பல எலெக்ட்ரானிக் பொருட்களின் சர்வீஸ் சென்டரும் இங்கு உண்டு. 

ந்த படிப்பிற்கு, எந்த துறைக்கு, எந்த ஆத்தர் எழுதிய புத்தகம் வாங்க வேண்டுமானாலும் நாம் செல்ல வேண்டிய ஒரே இடம் சென்ட்ரல் புறநகர் ரயில் நிலையத்திற்கு அடுத்த கட்டிடமாக இருக்கும் மூர் மார்கெட். ஐஐடி புத்தகங்களிலிருந்து டிஐ புத்தகம் வரை அனைத்தும் ஒரே இடத்தில் கிடைப்பதால் இளைஞர்களின் கூட்டம் அலைமோதும். இங்கு கிடைக்காத புத்தகங்களே இல்லை. பழைய புதிய பாடப் புத்தகங்களுக்கு என்றே தனிதனிக் கடைகள் இங்கு உண்டு. பழைய வார மாத இதழ்களும் கிடைக்கும். 

குறிப்பிட்ட பாடப் புத்தகத்திற்கு எந்தெந்த ஆத்தர்கள் புத்தகங்கள் எழுதயுள்ளர்கள், அவற்றில் எந்த ஆத்தர் எழுதிய புத்தகம் சிறப்பாக இருக்கும் என்பன போன்ற பல விசயங்களை தங்கள் நா நுனியில் வைத்திருப்பார்கள். புத்தகம் பற்றிய தகவல்கள் அனைத்தும் ஆறு வயது சிறுவனிலிருந்து அறுபது கிழவர் வரை அறிந்து வைத்திருப்பது ஆச்சரியம் என்றால், இவர்களுக்கு குறைந்தபட்ச படிப்பறிவு கூட கிடையாது என்பது அதிசியமான விஷயம். உங்களுக்கு சென்னை பாஷை பேசத் தெரிந்திருந்ததால் புத்தகத்தை பேரம் பேசி மிகக் குறைந்த விலைக்குக் கூட வாங்கலாம். இங்கே வண்ண வண்ண மீன்களும், மீன் தொட்டிகளும், மீன் வளர்ப்பு சார்ந்த பொருட்களும் விற்பனையில் உள்ளன என்பது குறிப்பிடத்தக்க விஷயம்.   

மெரினா கடற்கரையில் கண்ணகி சிலை அருகே இருக்கும் பாரதியார் சாலை முழுவதிலும் புத்தகக் கடைகள் தான், ஆனால் இங்கே பாடப் புத்தகளை விட பழைய புதிய கதைப் புத்தகங்கள் அதிகம். கொஞ்சம் நேரமெடுத்து தேடினால் பல அரிய பழைய புத்தகங்கள் சிக்கும். பொழுது போகவில்லை என்றால் மெரினா செல்வதை விட இங்கு வருவது மிகவும் பிடிக்கும்.பாண்டி பஜாரிலும் புத்தகக் கடைகள் உண்டு. அங்கு பெரும்பாலும் உலகப் புகழ்பெற்ற ஆங்கிலப் புத்தகங்களே கிடைக்கும். 

ன்று வந்த புதிய படத்திலிருந்து எப்போதோ வந்த பழைய படங்கள் வரை எந்த மொழி திரைப்படம் வாங்க வேண்டுமென்றாலும் பீச் ஸ்டேஷன் என்றழைகப்படும் சென்னை கடற்கரை ரயில் நிலையம் வாசலில் இருக்கும் பர்மா பஜார் உங்களை இருகரம் பிடித்து வலுக்கட்டாயமாக வரவேற்கும் இல்லை வலுகட்டாயமாக இழுத்து வரவேற்பார்கள். அருகில் ஹார்பர் உள்ள காரணத்தினால் கஸ்டம்சில் சிக்கும் விலை உயர்ந்த பொருட்கள் அனைத்தும் மிக மிக குறைந்த விலையில் இங்கு கிடைக்கும். அதற்க்கு இந்த ஏரியாவில் ஆட்பழக்கம் அதிகம் வேண்டும். அதனால் இந்த ஏரியாவிற்கு கள்ளச் சந்தை கஸ்டம்ஸ் சந்தை என்றும் பல பெயர்கள் உண்டு. 

நீங்கள் கள்ளத்தனமாக வாங்கும் அப்பொருட்களின் ஆயுட்காலம் உங்கள் அதிர்ஷ்டத்தைப் பொறுத்தே உள்ளது. இந்தியாவில் முறைப்படி ஐ-பாட் விற்பனைக்கு வருமுன்பே இங்கு வந்துவிட்டது என்பது ஆப்பிள் அறிந்த விஷயம். பர்மா பஜார் பற்றி லக்கிலுக் யுவகிருஷ்ணா எழுதி இருக்கும் அழிக்கப் பிறந்த்தவன் நாவலில் இருந்து அதிக விசயங்களைத் தெரிந்து கொள்ளலாம்.

புதுப்பேட்டை. இந்த இடத்திற்கு இந்தப் பெயர் சாலப்பொருந்தும். காரணம் பழைய ஸ்கூட்டரை கொண்டு சென்றால் அதை புதிய நான்கு சக்கர வாகனமாகவே மாற்றித் தரும் அளவிற்கு திறமை வாய்ந்த மெக்கானிக்குகள் இங்கு உண்டு. இங்கிருக்கும் எல்லா மெக்கானிக்குகளும் எல்லா காரையும் பார்ப்பது இல்லை. போர்ட் என்றால் நம்பி, அம்பாசிடர் என்றால் கரீம் பாய், என்று ஒவ்வொரு கம்பெனிக்கும் ஒரு திறமையான மெக்கானிக் உள்ளார். இருசக்கர வாகனத்தை பிரித்து மேய்வதில் இவர்களை விட்டால் வேறு ஆள் இல்லை எனலாம். சமீபத்தில் புதுபேட்டைக்குச் சென்றிருந்த பொழுது ஒரு விளம்பரம் என்னை ஆச்சரியப் பட வைத்தது என்பதை விட அதிர்சிக்குள்ளாக்கியது. இதுதான் அந்த விளம்பரம், "இங்கு BENZ BMW AUDI கார்களுக்கு சர்விஸ் செய்யப்படும், உதிரி பாகங்கள் கிடைக்கும்".   

காய்கறி வாங்க கோயம்பேடு  மார்க்கெட், fresh fish வாங்க எண்ணூர், மதுரவாயல் மார்கெட். மளிகை சாமான்கள் வாங்க பாரிஸ், மூக்குக் கண்ணாடி, கல்யாண பத்திரிக்கை,  எழுதும் நோட்டு, பட்டாசு, வாங்க BROADWAY. என்று ஒவ்வொரு தொழிலுக்கும் ஒவ்வொரு ஏரியாவை பிரித்து அழகு பார்க்கிறது சென்னை. என் அறிவுக்கு எட்டியதை விட என்று சொன்னால் அது பொய், நான் ஊர் சுற்றி அறிந்து கொண்ட இந்த இடங்களைத் தவிர எனக்குத் தெரியாத சில இடங்களும் இருக்கலாம். அவற்றை நான் அறிந்த பின்பு உங்களுக்கும் அறிவிக்கிறேன்.  

சென்னையை பற்றிய சென்ற பதிவு சிறியதாகிவிட்ட காரணத்தால் அதை நிவர்த்தி செய்யும் விதமாக இப்பதிவு சற்றே பெரியதாகி விட்டது. அடுத்த பதிவு சென்னையின் சுற்றுலாத் தளங்களைப் பற்றியது, சென்னையை சுற்ற தயாராக இருங்கள்.   

8 May 2012

சென்னை சிங்காரச் சென்னை


சென்னை பலவிதமான எதிர்பார்ப்புகளோடு வரும் ஒவ்வொரு தனிமனிதனையும் எந்த விதமான எதிர்பார்ப்பும் இல்லாமல் அப்படியே ஏற்றுக்கொள்ளும் ஒரு மாநகரம். இதுதான் சென்னை இவ்வளவு தான் சென்னை என்று சென்னையை ஒரு எல்லைக்குள் அடைக்கவே முடியாது. 

"எக்மோருக்கு எப்படி சார் போகணும்" வழி கேட்ட உங்களை வெறித்து ஒரு பார்வை பார்த்துவிட்டு, வாயில் குதப்பியிருந்த பான்பராக்கை உங்கள் காலுக்குக் கீழேயே துப்பும் சென்னைவாசியை சந்திக்கும் அதே நேரத்தில் தான் "சார் ஒரு நிமிஷம், எக்மோர் தான இங்கயே நில்லுங்க 15B வரும், அதுல ஏறுனா மூணாவது ஸ்டாப் எக்மோர் தான்" எங்கிருந்தோ வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்து திடிரென்று ஓடி வந்து உதவும் அவரும் அதே சென்னைவாசியாகத் தான் இருப்பார். 

ப்படி பல்வேறு முகங்கள் இருக்கும் சென்னையை நாம் எந்த முகத்தோடு பார்த்தாலும் சுவாரசியம் குன்றாமல் தான் இருக்கின்றது. அப்படிப்பட்ட சென்னையை நான் எப்படிப் பார்கின்றேன் என்பதைத் தான் இங்கே பதிவாக எழுத இருக்கிறேன். சென்னையைப் பற்றி எழுத எவ்வளவோ இருக்க அதில் எதைப் பற்றி எழுதலாம் என்று சிந்தித்துக் கொண்டே கன்னத்தில் கைவைத்து நாடியை வருடும் பொழுது தான் தட்டுபட்டது அந்தத் தழும்பு.  

ட இப்பொழுது தான் நியாபகம் வருகிறது. எனக்கு நான்கு வயதாக இருக்கும்பொழுது நாங்கள் நான்கு மாதங்கள் சென்னையில் தான் வசித்தோம். அப்பொழுது சென்னையில் ஒரு மழைக்காலம். என்னையும் அண்ணனையும் வீட்டில் விட்டுவிட்டு அம்மா மட்டும் கடைக்குச் சென்றிருந்தார்.  நாங்கள் குடியிருந்தது மாடிவீடு என்பதால் மாடி படியிலிருந்து குதித்துக் குதித்து விளையாடுவது என் வழக்கம். அன்றும் அப்படித் தான் மூன்றாவது நான்காவது படியிலிருந்து குதித்து விளையாடத் தொடங்கினேன். 

ழை பெய்யும் பொழுது படியிலிருந்து குதித்தால் வழுக்கும், அடிபடும், நாடியிலிருந்து இரத்தம் வரும், தையல் போட வேண்டும் என்பதெல்லாம், இவ்வளவும் நடந்ததன் பின்பு தான் தெரிந்த்தது. சென்னை தந்த முதல் அன்புப் பரிசு அது. அந்த வயதில் நடந்த பல விஷயங்கள் நியாபகத்தில் இல்லை. இருந்தும் நாங்கள் குடியிருந்த மாடிவீடு, குளோரின் வாசத்துடன் வரும் தண்ணீர், கட்டுகட்டாக சேர்த்து வைத்த எலெக்ட்ரிக் ட்ரெயின் டிக்கெட், நாக்கில் வேல் குத்திய ஒருவர் பூசி விட்ட விபூதி, இப்படி சின்ன சின்ன விஷயங்கள் மட்டுமே மனதிலிருந்து மறக்காமல் உள்ளது.

தினொன்றாவது வகுப்பு விடுமுறையை கழிப்பதற்காக மீண்டும் சென்னைக்கு வந்தேன். தாம்பரம் தாண்டியதுமே புரிந்து கொண்டேன் சென்னை ஒரு சினிமா நகரம் என்று. இன்று வலைதளங்களிலும் முகப்புத்தகங்களிலும் நாம் பார்க்கும் பேனர்களையும் கட்அவுட்களையும் அன்றைய சென்னையின் ஒவ்வொரு கட்டிடங்களிலும் காணலாம். திரும்பிய இடங்களில் எல்லாம் விளம்பரங்கள். அவற்றில் பாதிக்கு மேல் சினிமா விளம்பரங்கள். அந்தச் சென்னையை பார்த்தவுடன் எனக்குப் பிடித்துவிட்டது. பேருந்தின் ஜன்னல் வழியாக பார்வையை செலுத்தும் பொழுதே ஏதோ ஒரு புதிய திரைப்படத்தைப் பார்ப்பது போல சென்னையை ரசித்துக் கொண்டிருந்தேன். 

ன்றோ பொதுமக்கள் நலன் கருதி அரசாங்கம் அவற்றை அப்புறப்படுத்தி விட்டதால் என்னுடைய பார்வையில் சென்னை கலையிழந்துவிட்டது. இருந்தும் புதிய வடிவில் விஸ்வரூபம் எடுக்கும் பெரிய பெரிய கட்டிடங்கள், பிரிட்டிஷ் கால புராதன கட்டிடங்கள் என்று சென்னை சென்னையாகவே இருந்து வருவது தனித்துவமிக்க விஷயம். 

சென்னையில் ஏமாற்றுக்காரர்கள் அதிகம், நீ சின்னப் பையன் தனியாக சென்னை செல்லக் கூடாது, என்பன போன்ற பல எதிர்ப்புகளையும் மீறி சென்னையை வந்து சேர்ந்திருந்ததில் ஒருவித இனம் புரியாத இன்பம் மனதை குளுமையாக்கியிருந்த்தது அது டிசெம்பர் மாதம் என்பதால் சென்னையும் குளுமையாகவே இருந்த்தது.
கோயம்பேடு பேருந்து நிலையம் அப்பொழுது தான் புதிதாக கட்டி முடித்திருந்தார்கள், ஆசியாவிலேயே மிகப் பெரிய பேருந்து நிலையம் என்பதை பார்த்தவுடன் புரிந்து கொண்டேன். 


திநகர் செல்லும் பேருந்து நிற்கும் இடத்தில அப்பாவுக்காக காத்துக்கொண்டிருந்தேன், அப்போதெல்லாம் செல்போன் கிடையாது என்பதால் முந்தைய நாளே தகவல் பரிமாறப்பட்டு அன்று நான் நின்றுகொண்டிருந்த இடத்தில நிற்கவேண்டும் என்ற உத்தரவு பிறப்பிக்கப் பட்டிருந்தது.  சொன்ன நேரத்திற்கு அப்பா அங்கு வரவில்லை. இந்த நேரத்தில் நான் ஊருக்குப் புதியவன் என்பதை சென்னை கண்டுபிடித்து விட்டது. "இன்னாப்பா வேலைக்கு வந்த்ருக்கியா", "கூடவா இட்னு போறேன்" இது போன்ற இரண்டு பேரைக் கொண்டுதான் சென்னை என்னை பரிசோதித்துப் பார்த்தது. அந்த சோதனையில் வெற்றி எனக்கே.


ப்பா வரும் வரை பொழுது போக வேண்டும் என்பதற்காக CMBT (Chennai Mofussil Bus Terminus ) என்பதன் விரிவாக்கத்தை மனனம் செய்து கொண்டிருந்தேன், முடியவில்லை. (முழுவதுமாக என்னை சென்னைக்கு தாரை வார்த்துக் கொடுத்த பின்பு தான் அதை மனம் செய்தேன் என்பது வேறு கதை). அதன் பின்பு நான் தங்கியிருந்த ஒருவாரமும் சென்னையை தனியாகத் தான் சுற்றிப் பார்த்தேன், தினமும் தவறாது நான் சென்ற இரண்டு இடங்கள் கன்னிமாரா நூலகமும் மெரினா கடற்கரையும். எஸ்கலேட்டரில் போக வேண்டும் என்பதற்காக ஸ்பென்சர்பிளாசா சென்று வந்தேன். 


ளங்கலை இரண்டாம் வருடம் படிக்கும் பொழுதும் சென்னை வந்திருந்தேன், இப்போது பிரமாண்டமாக இருக்கும் லூகாஸ் பாலம் அப்போது தான் கட்டிக் கொண்டிருந்தார்கள். அங்குமிங்கும் குட்டியும் நெட்டையுமாக எழுபியிருந்த தூண்களைக் கொண்டு எப்படி பாலம் கட்ட முடியும் என்பதே என் நெடுநாளைய சிந்த்தனையாக இருந்தது. இப்போதெல்லாம் அடிக்கடி அந்த பாலத்தின் மீது பயணிக்கிறேன் என்று நினைக்கும் பொழுதே பிரம்மிப்பாக உள்ளது.

வை கடந்த காலத்தில் நான் கடந்து வந்த சென்னை, அடுத்த பதிவில் நிகழ்கால சென்னையின் அங்க அசைவுகளை எனக்குத் தெரிந்த வரையில் இங்கு வரைகிறேன். 

4 May 2012

ஆனந்தா...ஆனந்தா...சிரிப்பானந்தா...

லைப்பைப் படித்ததும் நீங்கள் எந்த ஆனந்தாவை நினைத்திருப்பீர்கள் என்பதற்கு உங்கள் உதட்டில் தவழும் புன்னகை ஒன்றே சாட்சி. இந்த அறிய கண்டுபிடிப்பை எந்தக் காமிராவும் பொருத்தாமல் கண்டுபிடித்த பெருமிதத்துடன் விசயத்திற்கு வருகிறேன்.

முகப்புத்தகத்தில் வழக்கமான ஆராய்ச்சியில் ஈடுபட்டிருந்த ஒரு மாலை வேளையில் தான் அந்த அறிவிப்பைப் படித்தேன். சிரிப்பரங்கம் ஞாயிற்றுக் கிழமை மாலை 4.25 அம்பத்தூர். சி(ரி)றப்பு விருந்தினர் உயர்திரு ரவிபிரகாஷ் முதன்மை ஆசிரியர் விகடன் குழுமம். சிரிப்பரங்கம் என்ற பெயரே வித்தியாசமாக இருந்ததாலும், விகடன் குழுமத்தின் ஆசிரியர் ரவிபிரகாஷ் அவர்கள் கலந்து கொள்வது கூடுதல் சிறப்பு என்பதாலும், நான் வசித்து வரும் ஆவடிக்கு பக்கத்திலேயே அம்பத்தூர் இருப்பதாலும் கண்டிப்பாக அங்கு செல்வது என்று முடிவெடுத்துவிட்டேன்.

ஞாயிற்றுக் கிழமை மாலையும் வந்தது, எங்கு செல்வதாக இருந்தாலும் நண்பர்களுடனே சென்று பழகி விட்டதால் அவர்களுக்கு அழைப்பு விடுத்தேன். ஒவ்வொருவனும் ஒவ்வொரு காரணம் சொல்லி தப்பித்து(?) விட்டான். அவர்கள் வராவிட்டால் என்ன? தனியொரு ஆளாக செல்வது என்று முடிவெடுத்த பின்னரும் இறுதி முயற்சியாக நண்பன் காளிராஜை  கூப்பிட்டுப்பார்த்தேன். அதிசியம் வருகிறேன் என்று சொல்லிவிட்டான். 

ரங்கத்தினுள் சரியான நேரத்திற்கு நுழைந்தோம், இது அரசியல் கூட்டம் இல்லை என்பதால் கூட்டம் குறைவாகவே இருந்தது. ரவி சார் தன் குடும்ப சகிதம் வந்திருந்தார். தாடி வைத்த ஆசாமி ஒருவர் நகைச்சுவை கும்மி என்ற நாட்டுபுறப் பாடலை கடவுள் வாழ்த்தாக பாடி ஆடிக் கொண்டிருந்ததது சற்றே புதுமையாக இருந்தது. அவர் அப்பாடலைப் பாடி ஆடிய விதமும் அந்தப் பாடலின் நடுவே வரும் விதவிதமான சிரிப்பொலிக்கு ஏற்ப அரங்கத்தினரும் சேர்ந்து சிரித்தது வித்தியாசமாகவும் சற்றே பயமாகவும் இருந்தது. இருந்தும் அவரைப் பார்த்த மாத்திரத்தில் பிடித்துவிட்டது. எங்கே நிகழ்ச்சி மொக்கையாக இருக்கப் போகிறதோ என்ற என் சிந்தனை தவிடு பொடியாகப் போகின்றது என்பது அப்போது என் மனதிற்கு தெரியாது.

ந்து நிமிடம் கழிந்திருந்த நிலையில் மீண்டுமொருமுறை அரங்கைப் பார்த்தேன், என் கண்களை என்னாலேயே நம்ப முடியவில்லை அனைத்து இருக்கைகளும் நிரம்பி இருந்தது. ஏழை பணக்காரர், படித்தவர் படிக்காதவர் என்ற பாகுபாடு இல்லாமல் அனைவரும் சரிசமமாக அமர்ந்து இருந்ததும் சிறியவர் முதல் பெரியவர் வரை ஆண்களும் பெண்களும் உற்சாகத்தோடு பங்கு கொண்டதைப் பார்க்கும் பொழுதும் மனம் சொல்லியது சரியான இடத்திற்குத் தான் என்னை அழைத்து வந்திருக்கிறாய் என்று.

மாதம் ஒரு தலைப்பு என்ற வகையில் வருகை தரும் அனைவரும் துணுக்குகள் சொல்ல வேண்டும், உங்களுக்கு துணுக்குகளே தெரியாவிட்டாலும் பரவயில்லை துண்டு சீட்டில் அச்சிட்டுக் கொடுத்து படிக்க வைக்கிறார்கள், இந்த சி(ரி)றப்பு செயல் திட்டத்திற்கு இவர்கள் வைத்துள்ள பெயர் 'பிட்டு பார்த்து துணுக்கு சொல்' என்பது தான். இதில் இன்னொரு சிறப்பம்சம், மேடை ஏறி துணுக்கு சொல்லுபவர்கள் அனைவருக்கும் அந்த இடத்திலேயே சிறப்பு விருந்தினர் கைகளால் பரிசு வழங்குகின்றனர். மேலும் இறுதியில் சிறந்த மூன்று துணுக்குகளை தேர்ந்தெடுத்து சிறப்புப் பரிசும் கொடுக்கின்றார்கள். 

துணுக்குகள் சொல்வதற்கு மட்டுமே சில கட்டுபாடுகள் விதித்துள்ளார்கள்.எந்த ஒரு தனிமனிதனையும் கேலி செய்தோ அல்லது ஆபாசமாகவோ இருக்கக் கூடாது என்பதே அந்தக் கட்டுப்பாடு. நான் சென்றிருந்த பொழுது மருத்துவர் நோயாளி பற்றிய துணுக்குகள் பகிர்ந்து கொண்டிருந்தார்கள், அப்போது பின்னால் இருந்து ஒரு கை என் முதுகில் படர்வதை உணர்ந்து திரும்பினேன். முகம் முழுவதையும் தாடிக்குள் புதைத்திருந்த அந்த தாடிக்கார நண்பர் மலர்ந்த முகத்துடன் என்னிடம் கேட்டார் "நீங்க ஏதும் ஜோக் சொல்றீங்களா சார்", "இல்ல சார் பரவாயில்ல, அடுத்த முறை வரும்போது சொல்றேன்" என்றேன் தயங்கியபடியே. தயார் நிலையில் வரவில்லை என்பதை விட எனக்குத் தெரிந்த ஜோக்குகள் அனைத்தும் சொல்லப்பட்டு விட்டன என்பதே காரணம்.

னைவரும் துணுக்குகள் சொல்லி முடித்தனர், அடுத்ததாக ரவி சாரை பேச அழைப்பார்கள் என்று காத்துக்கொண்டிருக்கும் பொழுதே அந்தத் தாடிக்கார ஆசாமி தன்னை சிரிப்பானந்தா என்று அறிமுகம் செய்து கொண்டு பேசத் தொடங்கினார். சிரிப்பானந்தா இந்தப் பெயரைக் கேட்டதும் உங்களுக்கு எந்த ஆனந்தா நியாபகம் வந்தாரோ அவரே என் நியாபகத்திற்கும் வந்தது ஆச்சரியம் தான்(?)! உலகமே தன்னைப் பார்த்து சிரிப்பாய் சிரிக்கும் கேவல நிலையில் இருக்கும் அந்த ஆனந்தாவிற்கும், உலகையே சிரிக்க வைக்கும் உன்னத நிலையில் இருக்கும் இந்த ஆனந்தாவிற்கும் வித்தியாசங்கள் பல. 

'ன்று உங்களுக்கு சிரிப்பு யோகா சொல்லித்தரப் போகின்றேன்' என்று தனது பேச்சை ஆரம்பித்தவர் செய்யவும் தொடங்கி விட்டார். அதில் ஒரு யோகா எப்படி இருக்கும் என்றால், 'கும்மி அடிப்பது போல் கைகளை இரண்டு பக்கமும் தட்ட  வேண்டும், சும்மா தட்டக் கூடாது இடுப்பை நன்றாக வளைத்துக் கொண்டே தட்ட வேண்டும். வலது பக்கம் இடுப்பை வளைத்து கை தட்டி 'வெரி குட்' அதே போல் இடது பக்கம் இடுப்பை வளைத்து கை தட்டி 'வெரி குட்' என்று சொல்லி விட்டு இரண்டு கைகளையும் உங்கள் தலை மேல் உயர பறக்க விட்டு எம்பிக் குதித்து 'வெரி குட்' என்று உச்சஸ்தாயில் கத்த வேண்டும்'. 

தற்குப் பெயர் வெரி குட் யோகா (வெரி குட்?). இப்படி செய்து காட்டிய சிரிப்பானந்தா எங்களையும் செய்யச் சொன்னார், நானும் காளியும் தயங்கியபடியே மற்றவர்களைப் பார்த்துக் கொண்டு நின்ற பொழுது, எங்களைத் தவிர்த்து ஒட்டுமொத்த கூட்டமும் வெரி குட்டில் ஆழ்ந்து விட்டது. மற்றவர்கள் அப்படி செய்ததது சிரிப்பாக இருந்தது, ஆனால் சில நொடிகளில் எங்களை அறியாமலேயே எம்பிக் குதித்து 'வெரி குட்' சொல்லிக் கொண்டிருந்தோம் (வெரி குட்!). இன்னும் பல சிரிப்பு யோகாக்களை சிறப்பாக கற்றுக் கொடுத்தார். வந்திருந்த ஒட்டுமொத்த கூட்டமும் அரங்கம் அதிர சிரித்துக் கொண்டே சிரிப்பு யோகாக்களை செய்யும் பொழுது சிரித்துக் கொண்டே ஊக்கபடுத்திய சிரிப்பானந்தாவின் கண்கள் பிரகாசமாக மின்னியதை என் கண்கள் பார்க்கத் தவறவில்லை.  

யோகா முடிந்ததும் சாந்தகுமார் அவர்களின் பேசும் பொம்மை நிகழ்ச்சி அரகத்தில் இன்னும் அதிகமான சிரிப்பலைகளை உண்டு பண்ணியது. அதன் பின்பு பேச வந்த ரவி சார் மிக சி(ரி)றப்பாக தன் உரையை ஆற்றினார், அவர் பேசிய உரையை அவரது வலைப்பூவில் அவரே எழுதவிட்ட காரணத்தால் நான் இங்கே குறிப்பிடவில்லை. இங்கு கிளிக் செய்து அவ்வுரையைப் படிக்கவும். சிரிப்பரங்கம் முடிந்ததும் ரவி சார் மற்றும் சாந்த குமார் சாருடன் பேச வாய்ப்பு கிடைத்தது பெரிய மனிதர்கள் என்ற தோரணை இல்லாமல் இச்சிறுவனுடன் (சிறுவன்?) மிக மிக எளிமையாகப் பழகினார்கள். சிரிப்பானந்தாவுடன் தான் அதிக நேரம் பேச முடியவில்லை. ஆனால் அதற்கு அடுத்த நாளே முகப்புத்தகத்தின் மூலம் அவரது செல்பேசி என்னை கண்டறிந்து சந்திக்க ஏற்பாடு செய்து சந்த்திதும் விட்டேன். 

வர் சிரிப்பானந்தாவாக மாறியது எப்படி? அவர் மனதை நெகிழச் செய்த மிகவும் நிம்மதி அளித்த  சம்பவங்கள் எவை? அவர் சந்தித்த சோதனைகள் அவற்றை சாதனையாக மாற்றிய உழைப்பு இவை பற்றி அறிய ஆவலாக உள்ளதா காத்திருங்கள் அடுத்த பதிவில் சிரிப்பானந்தாவை சந்திப்போம்.     




கூடுதல் தகவல்கள்

ஒவ்வொரு மாதமும் இரண்டாவது ஞாயிற்றுக் கிழமைகளில் சிரிப்பரங்கம் அம்பத்தூரில் நடைபெறுகிறது என்பதும், அம்பத்தூர் கிருஷ்ணா பூங்காவில் தினமும் காலை சிரிப்பு யோகா நடைபெறுகிறது என்பதும் கூடுதல் தகவல்கள். நேரம் இருந்தால் கண்டிப்பாக கலந்து கொள்ளுங்கள். நானும் இருப்பேன்.