24 Nov 2014

ரியல் எஸ்டேட் மிருகமும் - வண்டலூர் ஜூவும்

தினமும் தொலைகாட்சியில் ரியல் எஸ்டேட் செய்யும் ப்ரோக்கர்கள் சென்னைக்கு மிக மிக அருகில் இருக்கும் வண்டலூரில் இருந்து ஐந்தே நிமிடத்தில் சென்று விடக்கூடிய இடத்தில் ப்ளாட் போட்டு விற்றுக் கொண்டிருப்பதை காட்டுகிறார்கள். அவர்களது வியாபார யுக்தியே அருகில் இருக்கும் லேண்ட்மார்க்குகளைக் கூறி கூவி கூவி விற்பனை செய்வதுதானே. அப்படித்தான் இந்த வண்டலூர் அருகில் இருக்கும் ப்ளாட்டையும் விற்றுக் கொண்டிருந்தார்கள். 

வண்டலூரின் லேண்ட்மார்க்காக அவர்கள் கூறுவது இன்னும் சில வருடங்களில் இங்கே அமைய இருக்கும் உலகின் மிகபெரிய ஒருங்கிணைந்த பேருந்து நிலையத்தை. 

ஆசியாவிலேயே மிகப்பெரிய பேருந்து நிலையம் கோயம்பேடு என்பது நீங்கள் அனைவரும் அறிந்ததே. அது இப்போது நிரம்பி வழியும் அவலத்தில் இருப்பதால் சென்னை தினமும் அதன் காலை மாலை வேளைகளிலும் அசந்தர்ப்பமான சூழ்நிலைகளிலும் திக்குமுக்காடிப் போகிறது. நிலைமையை சரிசெய்ய அங்கு இருக்கும் பேருந்து நிலையத்தையே இரண்டு அடுக்கு பேருந்து நிலையமாக மாற்றலாமா என்று யோசித்துப் பார்த்தார்கள். என்ன நினைத்தார்களோ அந்த திட்டத்தைக் கைவிட்டு இப்போது வண்டலூர் என்கிறார்கள். 

கோயம்பேடில் பேருந்து நிலையம் வருவதற்கு முன் அனைத்து பேருந்துகளும் பாரிஸ் வரை சென்று வந்து கொண்டிருந்தன. சென்னை ஒன்னில் ட்ராபிக்கை கட்டுபடுத்த ஊரின் ஒதுக்குபுறமாக இருந்த கோயம்பேடைத் தேர்ந்தெடுத்தது தமிழக அரசு. இப்போது கோயம்பேடும் மையப் பகுதி ஆகிவிட்ட நிலையில் சென்னைக்கு மிக மிக அருகில் இருக்கக் கூடிய வண்டலூரைத் தேர்வு செய்திருக்கிறார்கள் அதிகாரிகள், அரசியல் மட்டத் தலைகள். 

எந்த படித்த அறிவு ஜீவி வண்டலூரைத் தேர்ந்தெடுக்கச் சொல்லி புத்தி புகட்டினார் என்று தெரியவில்லை. ஒருவேளை வண்டலூரின் பின்கதை அந்த அதிமேதாவிக்கு தெரியாமல் போயிருக்கும் என்று நினைக்கிறேன்.

ஆசியாவின் மிகபெரிய மிருகக் கண்காட்சி சாலையை பிரிடிஷ் அரசாங்கம் முதன்முதலில் அமைத்த இடம் தற்போது சென்ட்ரலில் மூர்மார்க்கட் அருகில் இருக்கும் இடம். 


அப்போது பாரிஸ் சென்ட்ரல் போன்ற இடங்கள் இயற்கைச் சூழல் மிகுந்து இருந்த பகுதிகள் என்பதால் அங்கே அமைத்தார்கள். முதலில் உயரதிகாரிகள், சமஸ்தான தலைவர்கள் மட்டுமே வந்து போகும் இடமாக இருந்த சென்ட்ரல் மிருகக் காட்சி சாலை மெல்ல மெல்ல பொதுமக்கள் பார்வைக்கும் திறந்து விடப்பட்டது. தமிழகம் முழுவதும் இருந்து மக்கள் வண்டி கட்டி பார்த்து சென்றிருக்கிறார்கள். மெல்ல அவர்களின் முக்கியமான பொழுது போக்கும் இடமாகவும் மாறி இருக்கிறது.

இவ்விசயம் நம்மக்கள் மத்தியில் சற்றே பிரபலமாக கூட்டம் கூட்டமாக வந்துசெல்ல ஆரம்பித்தனர். மேலும் இவ்விடங்களை இவர்கள் செத்த காலேஜ் என்றும் உயிர் காலேஜ் என்றும் வாஞ்சையோடு அழைக்கத் தொடங்கினர். விஷயம் சுத்துப்பட்டு எட்டுபட்டிக்கும் பரவ "எட்றா வண்டிய" என்றபடி வண்டிமாடு கட்டிக்கொண்டு சென்னைக்கு கிளம்பிவிட்டார்கள் ஜமீன்கள் மிராசுகள் மற்றும் ஜனங்கள். வெகுவிரைவில் இவ்விரு இடங்களும் நகரின் முக்கியமான பொழுதுபோக்கு மையமாக மாறின. இந்நிலையில் இரண்டாம் உலகப்போரின் போது ஜப்பானின் வான்படை விமானங்கள் மதராசப்பட்டினத்தைத் தாக்கலாம் என்ற நிலை ஏற்பட்ட போது விலங்குகளின் நலன் கருதி இடமாற்றம் நடைபெற்றுள்ளது. அதன்பின் மீண்டும் இங்கேயே மாற்றிவிட்டார்கள். இடைப்பட்ட காலத்தில் நடந்தது என்ன? என்பது குறித்துத் தெரியவில்லை. 

சமநேரத்தில் மிருகக் காட்சி சாலையில் இருந்த விலங்குகளை ஏதோ திடீர் நோய் தாக்கி அவற்றின் உயிரைக் காவு வாங்கி இருக்கின்றன, ஒன்று அல்ல இரண்டு அல்ல, கொத்து கொத்தாக விலங்கினங்கள் செய்தது மடிய, என்ன நடக்கிறது என்பதையே நம் அரசாங்கத்தால் உணர்ந்து கொள்ள முடியாமல் போயிருக்கிறது. உடனடியாக ஒரு ஆய்வுக் கமிட்டியை  களத்தில் இறக்கி இருக்கிறார்கள். அதில் இருந்த மருத்துவர்களும், ஆய்வாளர்களும் மிருகங்களுக்கு வந்திருக்கும் புதிய நோயைக் கண்டுபிடித்து ஒரு ரிப்போர்ட்டை சப்மிட் செய்தார்கள். அதில் அவர்கள் கூறிய விஷயம் உடனடியாக அரசாங்கத்தை சிந்திக்கச் செய்தது. 

அவர்கள் கூறிய கருத்து

பாரிஸ் சென்ட்ரல் எழும்பூர் பகுதியில் போக்குவரத்தும் வாகனங்களின் எண்ணிகையும் கணிசமாகப் பெருகி விட்டதால் வாகனங்கள் எழுப்பும் ஒலியை விலங்குகளால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. இதன் காரணமாக ரெஸ்ட்லெஸ் என்று கூறுவோமே, அது மாதிரியான மன நோய் விலங்குகளைத் தாக்கி அவற்றை ஒரு நிலையில் இல்லாமல் வைத்து சாகடித்துக் கொண்டிருகின்றன. இந்நிலை மாற வேண்டுமானால் உடனடியாக இடத்தை மாற்ற வேண்டும் என எச்சரித்திருக்கிறார்கள்.

உறக்கம் கலைந்த அரசாங்கம் மாற்றுவழி தேடி யோசித்த போது சென்னையில் இருந்து முப்பது கிமீ தொலைவில் அமைந்திருந்த வண்டலூரின் பசுமையான இயற்கைச் சூழல் உயிரியல் பூங்கா கட்டமைக்க ஏற்ற சூழல் என்று அரசாங்கம் முடிவெடுத்து 1976-ம் வருடம் சுமார் 1400 ஏக்கர் பரப்பளவில் உதயசூரியனின் தலைமையில் உதயமானது அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா.  

இப்படி மிருகங்கள் அனைத்தையும் பாதுகாப்பதன் பொருட்டு உடனடியாக இடத்தை மாற்றியாக வேண்டிய நிலை. அதற்காக அடுத்த இடத்த தேடிய போதுதான், சென்னையில் இருந்து சற்றே தொலைவில், தனிமையில் ஓரளவு மலைப்பாங்கான அடர் வனம் சூழ்ந்த இடமாக இருந்த வண்டலூரைத் தேர்வு செய்தது அரசாங்கம். அன்றிலிருந்து இன்று வரை மிகப் பெரிய உயிர்ச்சூழலின் சாட்சியாக இயங்கி வருகிறது வண்டலூர் மிருகக் காட்சி சாலை. 

இப்போது அதே வண்டலூரில் தமிழக அரசாங்கம் மிகபெரிய பேருந்து நிலையத்தை அமைக்கப் போவதாக அறிவித்து இருக்கிறது. அதவாது என்ன காரணத்திற்காக வண்டலூர் உருவானதோ அதையே இல்லாமல் செய்யும் வேலையில் இறங்கி இருக்கிறது அரசாங்கம். இப்படியே போனால் வண்டலூரையே இழுத்து மூடிவிட்டு அதன் மேலேயே ரியல் எஸ்டேட் வியாபாரம் நடத்தினாலும் நடத்துவார்கள் நம்மவர்கள். இத்தனை நாள் காடுகளை அழித்து காடு போன்ற சூழலை ஏற்படுத்தி அதில் வாழ்ந்து கொண்டிருந்தோம். இப்போது காடு போன்ற சூழலையும் அழிக்க இருக்கிறோம்.  

என்ன செய்வது மனிதன் என்பவன் மிகபெரிய சுயநல மிருகம். தன் இனம் நிம்மதியாக வாழ எதையும் செய்யக் கூடியவன். தான் நிம்மதியாக வாழ தனது இனத்தையே அழிக்கக் கூடியவன் தானே, மிருக இனம் அழிவதைப் பற்றி அவனுக்கு என்ன கவலை இருந்து விடப் போகிறது. 

23 Nov 2014

மற்றுமோர் மென்பொருள் தினம்

நேற்றைய தினம் அலுவலகத்தில் family day. அலுவலகமே உற்சாகத்தில் திளைத்துக் கொண்டிருந்தது. இதற்கெனவே சிலபல பிரத்யோக ஏற்பாடுகளைத் தயார் செய்து மிகப் பெரிய கொண்டாடத்திற்கு தன்னை ஏற்பாடு செய்திருந்தது எங்கள் அலுவலகம். சும்மாவே எங்கள் அலுவலகம் asia's largest single campus building. இதை எதற்குச் சொல்கிறேன் என்றால் அலுவலகத்தின் பரப்பை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக. கிட்டத்தட்ட 150 ஏக்கர் பரப்பளவில் அமைந்த கட்டிடம். அந்த மொத்த பரப்பளவையும் சுற்றிவளைத்து கொண்டாட்டங்களுக்கான இத்யாதிகளை ஏற்பாடு செய்திருந்தார்கள். முந்தின நாள் நள்ளிரவில் அலுவலகம் முடித்து கிளம்பும் போது எல்லா ஏற்பாடுகளையும் செய்து கொண்டிருந்தார்கள். 

நேற்று சனிகிழமை மதியம் அலுவலகத்தில் நுழையும் போதே அதன் முகமே மாறியிருந்தது. இந்த அலுவலகத்தில் சேர்ந்த பின் இது மூன்றாவது family day. அதில் ஒன்றைக் கூட பார்த்ததில்லை. ஆகவே என்னைப் பொறுத்தவரையில் இதுதான் எனக்கு முதல் தடவை. சிறுசேரி மொத்தமும் வாகனங்களால் நிரம்பி வழிய, அலுவலக கட்டிடம் மொத்தமும் மனிதர்களால் (அலுவலக ஊழியர்களின் குடும்பங்களால்) நிரம்பி வழிந்து கொண்டிருந்தது. மேளதாளம் பொய்க்கால் பொம்மை நடமாட்டத்துடன் வருபவர்களை வரவேற்றுக் கொண்டிருக்க ஒரு திருவிழாக் களை வந்திருந்தது அலுவலகத்திற்கு. ஆனான்கு சீரியல் பல்பு, அம்மன் கட்வுட் இல்லை அவ்வளவு தான் ஒரு கோவில் திருவிழாவிற்கும் பேமிலி டேவுக்குமாக இருந்த வித்தியாசம். ஆனான்கு பம்பரம், கோலிகுண்டு, கேரம் இன்னும் இன்னும் வித்தியாசமான விளையாட்டுக்கள் நடந்து கொண்டிருக்க, பலரும் உற்சாகமாக பங்கெடுத்துக் கொண்டிருந்தார்கள். ஒரு உற்சாக அலை என்னை தள்ளிக் கொண்டு போவது போல் உணர்வு, அலுவலகத்தினுள் வண்டி ஓட்டிக் கொண்டே இவற்றை கவனித்துச் சென்றதால் என்னால் நெருங்கி சென்று எதையும் பார்க்க முடியவில்லை. 

என்னுடைய ப்ராஜெக்டில் சென்று ஒரு அட்டென்டென்சை போட்டுவிட்டு அப்புறம் இந்தக் கொண்டாட்டங்களைப் பார்க்க செல்லலாம் என்று அந்த கண்ணாடி சிறைக்குள் நுழைந்தேன். ஆம் எனக்கு வேலை தினம். அதிலும் production support வேறு. இருக்கையில் யாராவது இருந்து அந்த இயந்திரத்தைக் கவனித்துக் கொண்டே இருக்க வேண்டும். ப்ராஜெக்ட் மொத்தமும் வெறிச்சோடிக் கிடக்க பிரபு மட்டும் கணினியில் முகம் புதைத்து தீவிர ஆலோசனையில் இருந்தார். உள்ளே நுழைந்ததும் நேரே அவர் அருகில் சென்றேன். சொல்ல மறந்துவிட்டேன் பிரபு என் டீம். எனக்கு முந்தைய ஷிப்ட். என்ன பிரபு 'பேமிலி டேக்கு போகாம இங்க இருக்கீங்க' எனக் கேட்க வந்ததை மனதிலேயே முழுங்கி அவர் நிலையைப் பார்த்ததும் கண்டுபிடித்து விட்டேன். 'ஸ்ரீனி காலையில இருந்து ஒரு இஸ்யு, சால்வ் ஆகல.  பார்த்துட்டு இருக்கேன்' என்றார். 

அவர் சொல்லி முடிக்கவில்லை. சரவனாவிடம் இருந்து ஒரு போன். 'டேய் EB3 (கட்டிடத்தின் பெயர்) வா, செமையா இருக்கு என்றான். அலுவலகத்தினுள் வரும் போதே திருவிழாக் கொண்டாட்டம் என்று கூறினேன் இல்லையா, அதன் காரணம் கலர் கலரான நிறைய கலர்களும் தான்! ஏ சீக்கிரம் கிளம்பி வா என்று அவசரப்படுத்திக் கொண்டிருந்தான். இங்கே கணினியைப் பார்த்தால் பிரச்சனை முடியும் போல் தெரியவில்லை. 

நாங்கள் மட்டுமே தனித்து இயங்க முடியாது. சில கட்டளைகளை எழுத்து வடிவில் அமெரிக்காவிற்கு அனுப்ப வேண்டும். அங்கிருக்கும் அவர்கள் அதை செயல்படுத்த வேண்டும். 

எங்கள் நேரமோ என்னவோ. அமெரிக்கர்கள் மொத்தமாக விடுமுறைக் கொண்டாட்டங்களுக்கு (கிறிஸ்மஸ் நெருங்குகிறது இல்லையா) கிளம்பிவிட்டார்கள் போலும். எங்களைப் போல சிக்கிக் கொண்ட ஓரிரு அமெரிக்கர்கள் அவர்களுடைய நள்ளிரவில் ஓடாய்த் தேய்ந்து கொண்டிருந்தார்கள். நாங்கள் கட்டளைகளைப் பிறப்பித்தால் அதைச் செயல்படுத்த நெடுநேரம் எடுத்துக் கொண்டிருந்தார்கள். இப்படி பிரச்சினையுடனும் அமெரிக்கர்களுடனும் போராடி ஒருவழியாய் பிரச்னையை முடித்து அப்படா என்று நிமிரும் போது மணி ஆறு. ஒவ்வொரு பிரச்சனைகளை முடித்து தலைநிமிரும் போதும் இஸ்ரோவில் ராக்கெட் ஏவிய திருப்தி கிடைக்கும் என்பது எங்களுக்கு மட்டுமே தெரியும். காரணம் நாங்கள் பணிபுரிவது production support-ல். இந்நேரத்தில் சரவணாவும் டெஸ்கிற்கு வந்திருந்தான்.  


சரி வாங்க பிரபு பேமிலி டே எப்படி இருக்குன்னு பார்க்க போவோம் என்றபடி நான் பிரபு சரவணா மூவரும் கிளம்பி வெளியில் வந்தால் பேமிலி டே நடந்ததற்கான தடயங்கள் மொத்தமும் சுத்தமாக அழிக்கப்பட்டு வழக்கமான மயான அமைதி. எஞ்சி ஆங்காங்கு நின்று கொண்டிருந்த மக்களை செக்யுரிட்டிகள் விரட்டிக் கொண்டிருந்தார்கள். ஒரு கொண்டாட்டம் எங்கள் பார்வையில் பட்டு மனதில் பதியாமலேயே கடந்துவிட்டது. ஒரு திருவிழா நடந்தால் ஆங்காங்கு குப்பையாகக் கிடக்கும். அது கூட இல்லை. இது புயலுக்குப் பின்னான அமைதி இல்லை. புயலே இல்லாத அமைதி. மீண்டும் கண்ணாடிக்குள் நுழைந்தோம். மீண்டும் வேறு புதிய பிரச்சனைகள். முடித்துவிட்டுக் கிளம்பும் போது மணி நள்ளிரவுக்கும் அதிகாலைக்கும் இடையிலான மூன்று மணியை நெருங்கிக் கொண்டிருந்தது. சில நாய்களைத் தவிர யாருமற்ற எங்களுக்கான பழைய மகாபலிபுரம் சாலையில் வண்டி உருளத் தொடங்கியது. என்ன செய்வது நாளையும் மற்றுமொரு நாளே. 

14 Nov 2014

பழைய மகாபலிபுரம் சாலை

பழைய மகாபலிபுரம் சாலையில் சுவாரசியமான காட்சிகளுக்கு என்றுமே பஞ்சம் இருந்ததில்லை. அதிலும் நள்ளிரவில் என்றால் சலிக்காமல் பல கதைகள் கூறலாம், அவ்வளவு இருக்கிறது. 

இன்றைக்கு அலுவலகத்தில் இருந்து கிளம்பும் போது மணி ஒன்றை நெருங்கி இருந்தது. லேசான தூறல் வேறு. சிறுசேரியில் இருந்து கிளம்பும் வரையிலும் லேசாக தூறிக் கொண்டிருந்த வானம் நாவலூரைக் கடக்கையில் கொஞ்சம் அடித்துப் பெய்யத் தொடங்கியது. 

நேற்றைக்கும் அலுவலகத்தில் இருந்து கிளம்பும் போது நள்ளிரவு ஒரு மணி. யாருமற்ற அந்த சாலையில், அதில் நிலவும் அமைதியில் பயணிக்கவே அலாதியாய் இருக்கும். அவ்வப்போது கடக்கும் கார்கள், ஒன்றிரண்டு இருசக்கர வாகனங்கள் தவிர யாருமே இருக்க மாட்டார்கள். 



அப்படியிருக்க நேற்றைய தினம் சத்யபாமாவைக் கடக்கையில் ஒரு பெண் சாலையின் ஓரத்தில் மாடல் ட்ரெஸ் அணிந்தபடி துள்ளிக் குதித்து டேன்ஸ் ஆடிக்கொண்டிருந்தாள். யார் அவள், இந்நேரம் ஏன் இப்படி என்ற கேள்விகளுடனேயே கடக்கும் போதுதான் தெரிந்தது அவர் ஒரு திருநங்கை என்று. மீண்டும் மனதில் ஆயிரம் கேள்விகள், அதற்கு ஆயிரம் விடைகள், இவர்களின் வாழ்கையே முறையே வேறு. எளிதில் புரிந்துகொள்ள இயலாதது. தனிமை புறக்கணிப்பு மிரட்டல் தீண்டாமை பாலியல் வன்கொடுமை என்று எத்தனையோ கஷ்டங்கள் நிறைந்தது. வீட்டில் அவரை எதிர்பார்த்து யாரேனும் இருப்பார்களா, முதலில் அவருக்கு வீடு இருக்குமா, எங்கு தங்குவார். அடுத்த சில கிமீ அவரைப் பற்றியே சிந்தித்துக் கொண்டிருந்தேன்.  

இன்றைய நள்ளிரவில் நாவலூர் ஏஜிஸ் கடந்து செம்மஞ்சேரி செக்போஸ்டைக் கடக்கையில் இரண்டு பெண்கள் காதில் ஹெட்செட் மாட்டியபடி தைரியமாக நடந்து கொண்டிருந்தார்கள், ஒருசில வாகனங்களைத் தவிர யாருமே இல்லை. மழை வேறு வலுத்துக் கொண்டிருந்தது. மிக சமீபத்தில் தான் சிறுசேரி பயங்கரம் நடந்து முடிந்துள்ளது. ஆனாலும் அசால்ட்டாக நடந்து கொண்டிருந்தார்கள். அருகில் நடந்து செல்லும் தொலைவில் தான் அவர்கள் ஹாஸ்டல் இருக்க வேண்டும் என்றாலும் அந்த அர்த்த ராத்திரியில் ஒருவருக்கு ஒருவர் துணையாக அவர்கள் எடுத்த முடிவு வீண் வம்பில் சென்றால் அவர்கள் வீட்டிற்கு யார் பதில் கூறுவது. அதிபயங்கரமான இந்த ஆண் சமூகத்தை எப்படி இவ்வளவு எளிதில் நம்பினார்கள்.  

ஏற்கனவே எங்கள் அலுவலகத்தில் பணிபுரிந்த அந்த இளம் பெண்ணுக்கு நேர்ந்த அசம்பாவிதத்தால் அங்கு பணிபுரியும் நாங்கள் அனுபவித்துக் கொண்டிருக்கும் தற்போதைய கஷ்டங்கள் போதாதா? 

இவர்களுக்கு என்ன ஹாயாக ரோட்டில் நடந்து சென்று வம்பில் மாட்டிக் கொள்வார்கள். அவர்களுக்கு என்ன ஹாயாக கார்பரேட் ஆபீசில் அமர்ந்து கொண்டு சிறுசேரியில் என்ன நடக்கிறது, அடிமட்ட ஊழியன் எப்படி கஷ்டப்படுகிறான் என்பதையெல்லாம் புரிந்து கொள்ளாமலேயே நான்கு புதிய சட்டங்களைச் சமைத்து ஈமெயில் அனுப்புவார்கள். மாட்டிக் கொண்டு முழிக்கப் போவது என்னவோ எங்களைப் போல் யாரோ ஒரு நூறு கோயிஞ்சாமி தானே. பாவம் எங்களுக்கு என்ன மயிரே போச்சு. அனுபவிக்கட்டும். ஆனால் நேற்றைக்கு அந்த திருநங்கையைப் பார்த்ததற்கும் இன்று இவர்களைப் பார்த்தற்கும் நிறையவே வித்தியாசம் இருக்கிறது, எத்தனைப் பெரிய முரண்! 

செம்மஞ்சேரி போலீஸ் செக்போஸ்ட்டை நெருங்க நெருங்க தூரத்தில் ஒரு ஏசி பஸ் ரோட்டின் ஓரமாய் பார்க் செய்யபட்டிருந்தது தெரிந்தது. ஆனால் அது நின்று கொண்டிருந்த விதமும் டிசைனும் வித்தியாசமாக இருப்பதைப் பார்த்ததும் ஏதோ ஒரு நெருடல். அந்த இடத்தில் வழக்கமாகவே நான்கைந்து பேரிகட்ஸ் இருக்கும், மேலும் யு டர்ன் போட வசதியான இடமும் கூட. தாறுமாறாக நிறுத்தபட்டிருந்த அந்த அரசாங்கப் பேருந்தைப் பார்த்துக் கொண்டே வண்டியை செலுத்திக் கொண்டிருந்தேன். 

அருகில் செல்லச் செல்ல ஆட்கள் கூட்டமாக இருப்பது தெரிந்தது. வண்டியில் ஓட்டுனரும் நடத்துனரும் அருகில் நின்று கொண்டிருக்க அவர்களோடு நான்கைந்து போலீசார் நின்று கொண்டிருந்தார்கள். 

பேருந்து சாலையின் ஓரத்தில் இருந்த தடுப்புச் சுவரை இடித்து ஒரு பத்தடி முன் நகர்ந்து அசாதாரணமாகத் தொங்கிக் கொண்டிருந்தது. அவ்வளவு பெரிய சாலையில், சாலையின் ஓரத்தில் இருக்கும் இரண்டடி சுவரின் மீது ஏறி அந்தப் பக்கம் போய் இருக்க வேண்டும் என்றால் அந்த பேருந்து எவ்வளவு வேகத்தில் அவ்விடத்தைக் கடக்க முயன்றிருக்க வேண்டும். பாவம் உள்ளிருந்த பயணிகளை நினைத்தாலே கதி கலங்குகிறது. நாங்கள் பார்க்கும் போது யாருமற்ற பேருந்தாக தனித்து தொங்கிக் கொண்டிருந்தது, அருகில் நின்று பார்க்க முனைபவர்களை நிற்க விடாமல் விரட்டிக் கொண்டிருந்தனர் போலீசார். ஒருவன் போட்டோ எடுக்கமுயல நல்லவேளை அவனுக்கு அடி விழவில்லை. 

நான்கைந்து மாதங்கள் இருக்கும் என்று நினைக்கிறன், மதியம் அலுவலகம் சென்று கொண்டிருக்கும் வழியில் சத்யமபாமா தாண்டி இருக்கும் ஆலமரத்து நிறுத்தத்தின் அருகில் மீடியனைத் தாண்டி ஒரு ஆம்னி தலையணையைப் புரட்டிப் போல் குப்புறக் கவிழ்ந்து கிடந்தது. சம்பவம் நடந்த ஐந்து நிமிடங்களுக்குள் நாங்கள் அங்கு இருந்தோம். என்னவென்று விசாரித்ததில் ஆம்னியின் பின் டயர் வெடித்து அது வந்த வேகத்தில் தூக்கி தூர வீசப்பட்டு சாலையின் ஓரத்தில் சோப்பு டப்பாவைப் போட்டது போல் கவிழ்ந்து கிடந்தது. அதிர்ஷ்டவசமாக அந்த ஆம்னியில் இருந்த ஒருவருக்கும் ஒன்றும் ஆகவில்லை, சிவனே என்று சாலையின் ஓரத்தில் நின்று கொண்டிருந்த அந்த புதிய ஹோண்டா சிட்டிக்குத்தான் பலத்த அடி. அந்த காட்சி இப்போதும் கண்ணுக்குள்ளேயே நிற்கிறது. அந்த ஆம்னியின் ஓனர் ஒரு ஓரமாய் நின்று தலையத் தொடைத்துக் கொண்டிருந்தார். மரணபயம் நிறைந்திருந்த அந்தக் கண்களை இன்னும் மறக்க முடியவில்லை.  


ஆனாலும் சொல்கிறேன் நிலைமை எப்படி இருந்தாலும் சென்னையில் பழைய மகாபலிபுரம் சாலையில் வண்டி ஓட்டுவதற்கு இணையான சுகானுபத்தை இதுவரை வேறு எந்த சாலையுமே கொடுத்ததில்லை. காரணம் அது பழைய மகாபலிபுரம் சாலை. 

பின்குறிப்பு : பீக் ஹவர்ஸில் பழைய மகாபலிபுரம் சாலையின் முகம் வேறு மாதிரி இருக்கும். வேறு மாதிரி என்றால் கொஞ்சம் கொடூரமாக இருக்கும். நல்லவேளை எனக்கும் பீக் ஹவர்ஸுக்கும் சம்மந்தமே இல்லை :-) 

படங்கள் : நன்றி இணையம்.

5 Nov 2014

ஒரு கலைஞனின் தரிசனம்

கடந்த ஞாயிறு இரவு. மேற்கு மாம்பலத்தில் வாத்தியாரின் வீட்டின் அருகில் அவரை இறக்கிவிட்டு விட்டு மேடவாக்கத்தை நோக்கி வண்டியைத் திருப்பும் போதுதான் கவனித்தேன் வித்தியாசமானதொரு கனத்த குரலில் ஒலித்துக் கொண்டிருந்த அந்தப் பாடலை. அது ஒரு கூத்துப் பாடல், கூர்ந்து கவனித்தப் போது தெரிந்தது கர்ணன் குறித்த கூத்துப் பாடல் என்று.  

இரவு எட்டு மணி, லேசான தூறலுக்கும் குளிர்ந்த காற்றுக்கும் மத்தியில் கேட்ட அந்த குரலில் ஒரு வசீகரம் இருந்தது.  


ஷட்டர் இழுத்து மூடப்பட்ட கடையின் திண்ணையில் அமர்ந்து இருந்த பெரியவர் ஒருவர், பெரியவர் என்றால் வயது தொண்ணூறு ஆகிறது அவருக்கு. உச்சஸ்தாயில் பாடிக் கொண்டிருந்தார். அவருக்கு அருகில் வேறொரு பெரியவரும், ஒரு அம்மாவும் அமர்ந்திருந்தார்கள். அவர் பாடப்பாட அருகில் இருந்த அந்த இன்னொரு பெரியவர் அந்த கூத்துக்கு ஸ்ருதி சேர்த்து ஜால்ரா போட்டுக் கொண்டிருந்தார். ஆர்வம் தாளவில்லை. வண்டியை அவர்களை நோக்கி நிறுத்திவிட்டு அந்த இன்ஸ்டன்ட் கூத்தை கவனிக்கத் தொடங்கிவிட்டேன். 

வெகு அற்புதமாகப் பாடிக் கொண்டிருந்தார். நம்மூரின் நாட்டுப்புற இசையில், நாட்டார் பாடலில் இருக்கும் வசீகரம் இன்னும் என்னைவிட்டுப் போகவில்லை. ஒவ்வொரு வார்த்தையையும் இழுத்துப் இழுத்து சற்றே ராகம் சேர்த்து பாடிக்கொண்டிருந்தார். பரபரப்பான அந்த சாலையில் அந்தப் பெரியவரை கவனிக்க மனமில்லாமல்/நேரமில்லாமல் அனைவரும் ஓடிக் கொண்டிருக்க, அந்தப் பெரியவரையும், அந்தப் பெரியவரை ரசித்துக் கொண்டிருக்கும் என்னையும் வித்தியாசமாகப் பார்த்தபடி நகர்ந்து கொண்டிருந்தது பொதுஜனம். 

எனக்கும் அவருக்கும் இடையே மூன்று அடி இடைவெளி இருந்தது. அவர்களின் அருகில் சென்று நின்றுகொண்டு அவர் பாடுவதைக் கேட்க ஆசை தான் என்றாலும் ஒருவேளை நான் நெருங்கிச் சென்றால் பாடுவதை நிறுத்திவிடுவாரோ என்ற பயத்தில் விலகியே நின்று கொண்டிருந்தேன். அவ்வபோது ஒலிக்கும் ஹார்ன் ஓசையில், வாகனங்களின் பேரிரைச்சலில் அவர் குரல் கேட்காமல் போனாலும் தொடர்ந்து என்னுடைய கவனம் முழுவதும் அவர் மீதே இருந்தது. பொக்கை விழுந்த வாய், பிய்ந்து போன பொம்மையில் அங்கொன்றும் இங்கொன்றுமாக ஒட்டிக் கொண்டிருக்குமே அது போல் ஒட்டிக் கொண்டிருந்த தலைமயிர். பல வாரங்கள் துவைக்கப்படாமல் அழுக்கு ஏறிப் போயிருந்த சட்டை என பார்ப்பதற்கே மிகவும் பரிதாபமாக இருந்தார். அவரிடம் இருக்கும் அந்தக் கலையும் தமிழகத்தில் தற்போது அதே நிலையில் தான் உள்ளது.  

இந்நேரத்தில் மழை பெரிதாகத் தொடங்க இதுதான் சாக்கு என்று வண்டியை விட்டு இறங்கி அவர்கள் அருகில் சென்று நின்று கொண்டேன், இந்நேரம் அந்தப் பெரியவர் கூத்து பாடுவதை நிறுத்தி தன சொந்தக் கதையை பேசிக் கொண்டிருந்தார், அதவாது அந்தக் காலங்களில் வயலில் நாத்து நாடும் போது ஆரம்பித்து ஒவ்வொரு சமயங்களிலும் என்ன மாதிரியான பாடல்களைப் பாடுவார்கள் என்பதை விவரித்துக் கொண்டிருந்தார். அவருக்கு அருகில் நடுப்புறமாக அமர்ந்திருந்த பெரியவரிடம் மெல்ல பேச்சு கொடுத்தேன். சரளமாக தங்கள் கதையை கூறத் தொடங்கினார்.  

'இவரு பெரிய கூத்து நடிகன், சொந்த ஊரு விழுப்புரம், பாட ஆரம்பிச்சாருன்னா கேட்டுட்டே இருக்கலாம், அதான் கேட்டுகிட்டே அவரோட வம்பிளுத்துட்டு இருக்கேன், என் தாய் மாமன்' என்றபடி அவரிடம் 'மாமா உன் பொண்ண என் கண்ணுல காமியேன் மாமா' என்று வம்பிழுத்தார்.

அதற்கு அவரோ 'ஓத்தா கிழவா, கட்டையில ஏறப்போற உனக்கு என் பொண்ணு கேக்குதோ' என்றபடி ஏதேதோ பேச ஆரம்பித்தார். அவருடைய வாயைத் திறந்தால் சரளமாக வந்துவிழுந்த வார்த்தைகளில் ஒன்று ஓத்தா. பொதுவாகவே கூத்தில் பொதுஜனங்களின் கவனம் திசை திருப்பாமால் இருக்க கொஞ்சம் கவர்ச்சியையும் கொஞ்சம் கவிச்சையையும் சேர்த்துக் கொள்ள வேண்டும்  என்பது நாட்டார் கலைஞர்களின் விதி. 

'காஞ்சிபுரம் மாவட்டத்துல ஆக்கூர்ன்னு ஒரு ஊர் இருக்கு, அந்த காலத்தில, இப்பவும் நடக்குது, அந்த காலத்தில வருசா வருஷம் பெருசா கூத்து நடக்கும், ஜனங்க இவரோட கூத்து பார்கிறதுக்கு வண்டி கட்டி வருவாங்க, அந்த காலத்திலயே கூத்து கட்டி ஐம்பாதாயிரம் பரிசு ஜெயிச்சவரு, பச்சையப்பா காலேஜ் பட்டதாரி. என்று கூறிக் கொண்டிருக்கும் போதே ஒரு சைரன் சத்தம் எங்களைக் கடக்க

அந்தப் பெரியவர் கூறினார் 'ஒத்தா பாடி போவுது பாரு' என்று.

'செவிட்டு மாமா அது பாடி இல்ல போலிசு, உன் மவள தராட்டா உன்ன புடிச்சு கொடுக்கிறேன் பாரு' என்றபடி மீண்டும் வம்பிழுத்தார்.

அதற்கு அவரோ நீ எனக்கு காசு பணம் சொத்து எதுவும் தர வேணாம், கூத்துல நான் பாடுற ஒரு வரிய நீ பாடுறா பொட்ட, அப்புறம் என் மகளை கட்டலாம்.' என்றபடி நீளமாக மூன்று நிமிடத்திற்கு மூச்சு விடாமல் ஒரு பாடலைப் பாடினார், ஒருமுறை அல்ல இருமுறை அல்ல கிட்டத்தட்ட நான்கு முறை அதே வரியை திரும்பத் திரும்ப பாடினார், அவருடைய மருமகனால் அதைப் பாட முடியவில்லை. 'மாமா மாமா நீ பெரிய ஆளு மாமா, என்றபடி பதிலுக்கு அவரைக் கொஞ்ச ஆரம்பித்தார். எனக்கும் சற்றும் சம்மந்தமே இல்லாத உலகம் தான் அது என்றாலும், யாரோ மூவர், சாலையின் ஓரத்தில் தங்கள் இரவுப் பொழுதைக் கழிக்க ஒதுங்கியவர்கள் தான் என்றபோதிலும் தமிழகத்தின் அழிந்து வரும் கலைகளில் ஒன்றின் உயிர்நாடி அவரிகளிடம் ஜீவனோடு ஓடிக் கொண்டுள்ளது என்பதால் நடப்பது அனைத்தையும் வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தேன். சில தருணங்களை நாமாக தேடினாலும் அமைத்துக்கொள்ள முடியாது. ஆனால் சில தருணங்கள் தாமாக அமையும். இது எனக்காகவே, என்னுடைய வரவுக்காகவே காத்திருந்த தருணம் போலத் தோன்றியது.    

நான் வெகு அருகில் நின்று வேடிக்கைப் பார்ப்பதைப் பார்த்ததும் ஒரு கூட்டம் எங்களை சூழ்ந்து கொண்டது, அவர்களும் அந்தப் பெரியவருடன் பேசி சிரிக்க ஆரம்பிக்க, எங்களுக்காக ஒரு பதினைந்து நிமிடம் கர்ணன் போருக்கு செல்லும் பாடலை நடித்துக் காண்பித்தார். 

ஏனோ தெரியவில்லை அவர் நடிக்கத் தொடங்கவும் நம் மக்கள் மெல்ல ஒவ்வொருவராக கழன்று கொண்டனர். அந்த மாபெரும் கலைஞனுக்கு கலைக்கு நம்மாட்கள் கொடுக்கும் மரியாதை அவ்வளவுதான், அவ்வளவு அற்புதமாக நிகழ்ந்து கொண்டிருந்த கூத்தினை ரசிக்காமல் கலைந்து செல்வதைப் பார்த்தபோது என்னவோ போல் இருந்தது. யாருக்குக் கிடைக்கும் இப்படியொரு கலைஞனின் தரிசனம். தேடிவருவதை வேண்டாம் என்று நகரும் இவர்களைக் கையைப் பிடித்தா இழுக்க முடியும். 

அதற்குப் பின் மீண்டும் அந்த இரு பெரியவர்களும் சண்டை போட்டுக் கொள்ள, இவர் அவர் மகளைக் கேட்பதும், அவர் தரமாட்டேன் என்று கூறுவதும், இப்படியாக சண்டை நடந்து கொண்டிருக்க திடிரென அவருடைய மருமகன் ஒரு டயலாக் விட்டார், 'டேய் மாமா நான் உன் மகளை பார்க்கப் போறேன் தூக்கிட்டு அமெரிக்க போறேன், இருக்க சொத்து எல்லாத்தையும் வித்துட்டு அவள அமெரிக்கா தூக்கிட்டுப் போகப் போறேண்டா' என்று கிண்டலடித்துக் கொண்டிருந்தார். 

அவரும் விடாமல் கட்டையில் போறவனுக்கு **** கேக்குதோ என்று மேலும் ஆபாசமாக பேசத் தொடங்கினார். டேய் எனக்குக் கொடுக்க வேண்டிய ஆயிரந்த்தி சொச்சம் பணத்த கொடுடா மொதல, நீயே நடுத்தெருவில நிக்குற நாய் என்று தன மருமகனை திட்டத்தொடங்க, 'மாமா பணம் என்ன மாமா பணம், துட்டு என்ன பொறுத்தவரைக்கும் மாநகராட்சி கொசுக்கு சமம் மாமா' என்றார். அவர்களிடம் பணம் சுத்தமாக இல்லை என்றாலும், பணத்திற்கு அவர் கூறிய ஒப்புமை அத்தனை எளிதில் நம்மால் கூற முடியாதது. அவருடைய வார்த்தைகளில் விரக்தியும் இருந்தது என்பது வேறுவிசயம். 

'டேய் மாமா உன்ட்ட ஒரே ஒரு கேள்வி கேக்குறேன் அதுக்கு மட்டும் பதில் சொல்லுடா பார்க்கலாம்' என்றார், 'டேய் பாடு நீ என்ன கேள்வி கேப்பன்னு எனக்கு தெரியாதா என்ன? சரி கேளுடா' என்றார் அந்தப் பெரியவர். அதற்கு பதிலாக அவர் மருமகனிடம் இருந்து வெளிப்பட்ட அந்தக் கேள்வியை சற்றும் எதிர்பார்க்கவில்லை. அதிர்ச்சியாயிருந்தது. அதிர்ச்சியாயிருந்தது என்பதை விட ஆச்சரியமாய் இருந்தது என்பது தான் உண்மை. 

அவர் கேட்ட கேள்வி, 'டேய் மாமா பிகினிணா என்னன்னு தெரியுமாடா' என்று கேட்க, 'எனக்கு பிகிடியும் தெரியாது பீடியும் தெரியாது. செஞ்சோற்றுக் கடன் தீர்க்க செஞ்சோஓஓஓஓஓஓற்றுக் கடன் தீர்க்கஅஅஅஅஅ' என்று மீண்டும் அவர் உச்சதாயில் பாடத் தொடங்க மேலும் ஒரு பத்து நிமிடம் அவர்களோடு இருந்துவிட்டு நடையைக் கட்டினேன். அவர்கள் உலகம் திரும்பவும் அவர்களுக்காக சுழலத் தொடங்கியது. சுழலட்டும்.

இதற்கு முன் மேடவாக்கத்தில் தற்செயலாய் கண்டு ரசித்த ஒரு தெருக்கூத்தைப் பற்றிய பதிவு 

சென்னை - நடுநிசியில் ஒருகூத்து

3 Nov 2014

பெங்களூரு - டே 1 (சென்னை டூ பெங்களூர்)

பெங்களூரு. மதியம் இரண்டு மணி பரபரப்பிற்கு மத்தியிலும் எவ்வித அவசரமும் காட்டாமல் நிதானமாக இயங்கிக் கொண்டிருந்தது கெம்பெகவுடா சாலையின் ஏதோ ஒரு திருப்பத்தில் அமைந்திருந்த அந்த உணவகம். உணவகம் இருந்த அந்த கட்டிடமே வித்தியாசமாக கட்டபட்டிருந்தது. மாலை வேளையில் நிலா வெளிச்சம் விழும் வகையில் காதலர்களுக்காக, அல்லது காதலர்கள் தங்கள் காதலிகளை நினைத்து குறும்படம் எடுப்பதற்கு ஏதுவாக கட்டப்பட்ட ஒரு பெரிய தேநீர் விடுதி. அதைக்கடந்து முதல் மாடி ஏறினால் உணவகம் The Kingdom. உள்ளே இருந்த இருக்கைகள் மொத்தமும் பெங்களூரு குமரிகளால் நிறைந்திருந்தது. அவர்களைப் பார்த்தால் வேலைக்குச் செல்லும் பெண்களைப் போலத் தோன்றினாலும், கல்லூரி மாணவிகள் என்று கட்டியம் கூறியது அந்தப் பொன்நிறக் கழுத்தில் தொங்கிக் கொண்டிருந்த ஐடி கார்ட். 

சாதாரணமாகவே உயர்தர இடம் போல் தோன்றிய அந்த உணவகத்தின் மதிப்பை சூழலை மேலும் உயர்த்தி இருந்தார்கள் அந்தப் பெண்கள். எதையோ விவாதித்திக் கொண்டிருந்தார்கள். விவாதத்திற்கு மத்தியில் அவ்வபோது உணவருந்தவும் செய்தார்கள். கருப்பு நிற கோட்சூட் கச்சிதமாகப் பொருந்தியிருந்தது அவர்களுக்கு. உடன் ஆண்களும் இல்லாமல் இல்லை, ஆனால் அது ஏன் அசிங்கமாக அவர்களைக் குறிப்பிட்டுக்கொண்டு. 

சென்னையில் இருந்து பெங்களூரை நோக்கி எங்கள் பயணத்தைத் தொடங்கிய போது மணி காலை ஆறு. அதிகாலை நான்கு மணிக்கெல்லாம் கிளம்பிவிட வேண்டும் என்று கூறியிருந்தார் ஆவி. நானோ ஐந்து மணிக்கு நிதானமாகக் கிளம்புவோம் என்று மறுத்தேன். அதற்கு காரணம் இல்லாமல் இல்லை. 

சென்னை டூ பெங்களூர் செல்லும் ஒரு நீண்ட பயணத்தின் இரண்டு மணி நேரங்களை இருளில் கடப்பதில் விருப்பம் இல்லை எனக்கு, எப்படியும் காரில்தான் போகிறோம் என்று முடிவாகிவிட்டது, அதனால் சாலைகளை, அதில் எதிர்படும் மக்களை, ஊர்களை கவனித்துக் கொண்டே செல்ல வேண்டும் என்பது எண்ணம். 'இல்ல கொஞ்ச நேரத்தில உங்களுக்கு இந்த ட்ராவல் போர் அடிச்சிரும், சோ நாலு மணிக்கே கிளம்பலாம்' என்று கூறியிருந்தார் ஆவி. ரெண்டு பேருக்கும் வேணாம் ஐஞ்சு மணிக்கு கிளம்புவோம் என்று அவரை ஒத்துக்கொள்ள வைத்துவிட்டேன். அவரும் சம்மதித்துவிட்டார். ஆனாலும் விதி என்றொரு வஸ்து இருக்கிறதே. அது ஓகே சொல்ல வேண்டுமே. நாங்கள் கிளம்புவதற்கு முந்தைய தினம் பார்த்து அலுவலகத்தில் சிலபல வேலைகளில் மாட்டிக் கொண்டேன். வேலை முடித்து வீட்டிற்கு வரும் போது மணி நள்ளிரவு ஒன்றைக் கடந்திருந்தது. அதுவரைக்கும் ஆவியும் உறங்கி இருக்கவில்லை. அதன் பின் எங்கே ஐந்து மணிக்கு கிளம்புவது. விதி தனது கதவைத் திறந்த போது முழுவதுமாய் விடிந்திருந்தது.  

பொதுவாகவே தாம்பரத்தில் இருந்து பூந்தமல்லி ரெட்ஹில்ஸ் சாலைகளை இணைக்கும் பைபாஸில் பயணம் செய்வதற்கு அருமையாக இருக்கும், அது ஒரு மழைக்கால காலை என்றால் கேட்கவா வேண்டும். பயணத்தின் ஆரம்பமே அட்டகாசமாக இருந்தது. அட்டகாசம் என்பதைவிட ரம்யம் என்ற வார்த்தை பொருத்தமாக இருக்கும். யாருமற்ற அகலமான சாலை. சாலையின் இருபுறமும் ராட்சஸ மலை போல பிரம்மாண்டமாக சூழ்ந்திருக்கும் கார் மேகங்கள், குளிர்ந்த காற்று, மெல்லிய தூறல், இளையராஜா பாடல். ஒரு பயணத்தை இனிமையாக்க இதைவிட வேறு ஏதேனும் அட்டகாசமான காரணிகள் வேண்டுமா என்ன. கல்கத்தா ஆயிரத்தி சொச்சம் கிமீ என்று எழுதியிருந்தது. 'கல்கத்தா போவோமா பாஸ்' என்று ஆவியிடம் கிண்டலாக கேட்க 'ஓ போவோமே' என்றார் சற்றும் யோசிக்காமல். இப்போது நாங்கள் பயணித்துக் கொண்டிருப்பது ஆவியுடைய காராக இருந்திருந்தால் எங்களுடைய பெங்களூரு பயணம் கல்கத்தா பயணமாக மாறியிருப்பதற்கான சாத்தியக்கூறுகள் மிக அதிகம். 



நிச்சயம் ஒருமுறை கல்கத்தா சென்றுவர வேண்டும் என்று கூறிக்கொண்டே பெங்களூரு ஹைவேக்காக திரும்பியிருக்க வேண்டிய இடத்தில் திரும்பாமல் ஒரு பத்து கிமீ சுற்றிவிட்டு நெற்குன்றம் சாலையில் சென்று இணைந்தோம். இந்நேரத்தில் சென்னையின் வாகனப் போக்குவரத்து கணிசமாக அதிகரித்து இருந்தது. அதிகாலையிலேயே கிளம்பி இருக்க வேண்டும் என்று ஆவி கூறியதன் அர்த்தம் அப்போதுதான் விளங்கியது எனக்கு. பூந்தமல்லி ஸ்ரீபெரும்புதூர் சாலையில் நகர்வதற்குக் கூட வழியின்றி நெரிசலில் சிக்கியிருந்தோம்.

ஒரு நீண்ட தூரப் பயணத்தில் நாம் பாட்டுக்கு பயணித்துக் கொண்டே இருந்தால் எதுவும் தெரியாது, கிளட்ச் பிரேக் ஆக்சிலேட்டர் என்று ஒவ்வொன்றாக கால்களை மாற்றும் போதுதான் அதன் வலி தெரியும். ஆவியின் புலம்பல் எனக்கே பாவமாய் இருந்தது. சென்னையின் புறநகரைக் கடந்து ஹோசூர் செல்லும் ஆறுவழிச் சாலையில் இணைந்திருந்த போது மணி எட்டு. ஒருமணி நேரத்தில் கடந்திருந்த வேண்டிய தொலைவை இரண்டு மணி நேரத்தில் கடந்திருக்கிறோம் என்பது மிகப்பெரிய இழப்பு தான். இருந்தாலும் இது ஒரு திட்டமிடப்படாத இலக்கில்லாப் பயணம் என்பதால் பெரிதாய் வருத்தப்படவில்லை.  

இளையராஜாவும் ரஹ்மானும் மாறி மாறி எங்களுக்கு சேவை செய்து கொண்டிருக்க சிக்கலில்லாத அந்த ஆறுவழிச் சாலையில் வழுக்கிக் கொண்டிருந்தது எங்களுடைய வாகனம். சொல்லப்போனால் இந்த சாலையில் செல்லும் பயணம் பெங்களூரு செல்வது போலவே இல்லை, ஏதோ செங்கல்பட்டு கடந்து திருச்சி நோக்கி சென்று கொண்டிருப்பதைப் போல உணர்ந்தோம். இரண்டு திசையில் இருக்கும் சாலைகளுக்கும் பெரிய வித்தியாசம் இல்லை. பயணிக்கும் திசையைத் தவிர. 

மணி எட்டரையைக் கடந்திருக்க எதிர்பட்ட முருகன் இட்லி கடையின் ஓரமாக ஒதுங்கியது எங்கள் வாகனம். சாதாரண கடைகளில் சாப்பிட்டால் தான் மோசமான உணவைக் கொடுக்கிறார்கள் என்று ஓரளவு நல்ல உணவகதிற்குச் சென்றால் அங்கும் சுவை மட்டமாகத்தான் இருக்கிறது. நெடுஞ்சாலைக் கடைகளில் இதற்கு மேல் சுவையை எதிர்பார்க்க முடியாது போலும். சென்னையில் இருக்கும் முருகன் இட்லி கடைக்கும் இந்த நெடுஞ்சாலையில் இருக்கும் கடையின் சுவைக்கும் ஆயிரம் வித்தியாசங்கள். நல்லவேளை காபி மட்டும் காபியைப் போல் இருந்ததில் மகிழ்ச்சி. 

கடந்த பேராவில் சிக்கலில்லாத சாலை என்று குறிப்பிட்டு இருந்தேன் அல்லவா அது எவ்வளவு அபத்தம் என்று இப்போதுதான் புரிந்தது, வேலூரைக் கடந்து நூறுகிமீ வேகத்தில் பயணித்துக் கொண்டிருந்த போது தான், அந்த அசம்பாவிதம் நடக்க இருந்தது. சாலையின் மறுபுறத்தில் இருந்து சென்டர் மீடியன் மீது ஏறி ஏதேனும் வாகனம் வருகிறதா என்பதைக் கூடக் கவனிக்கச் சொரனையற்று ஒரு இருசக்கர வாகனம் நொடிப்பொழுதில் எங்களைக் கடந்தது. அந்த பைக்கை ஓட்டிச் சென்றது பள்ளிக்கூடம் செல்லும் ஒரு சிறுவன், அவனுக்குப் பின்னால் மேலும் இரண்டு சிறுவர்கள் இருந்தார்கள். மிகச்சரியான நேரத்தில் ஆவி வேகத்தைக் கட்டுபடுத்தாமல் இருந்திருந்தார் என்றால் அந்த மூன்று சிறுவர்களும் இந்நேரம் சிவலோக பதவியை அடைந்திருப்பார்கள். 

சாலையில் விபரீதமாக எடுக்கும் முட்டாள்தனமான முடிவு எவ்வளவு பெரிய பின்விளைவுகளை ஏற்படுத்தக் கூடும் என்பதை இங்கு யாருமே நினைத்துப் பார்ப்பதில்லை, நூறுகிமீ வேகத்தில் சென்று கொண்டிருந்த எங்கள் வாகனம் அந்த திடீர் வேகக்கட்டுப்பாட்டை சற்றும் எதிர்பார்த்திருக்கவில்லை, பிரேக்கை மிதித்த வேகத்தில் லேசாக அலும்பி குலுங்கிவிட்டு இயல்பு நிலைக்கு வர சில நொடிகள் தேவைப்பட்டது. ஆனால் நாங்கள் இயல்பு நிலைக்கு வரத்தான் மேலும் சில நிமிடங்கள் தேவைப்பட்டது. ஒருவேளை எங்களுக்குப் பின்புறம் வேறு ஏதேனும் வாகனம் அதே வேகத்தில் வந்து, அதனால் வேகத்தைக் கட்டுபடுத்த முடியாமல் போயிருந்தால் இன்னும் எவ்வளவு பெரிய அசம்பாவிதம் நிகழ்ந்திருக்கும். எதைப்பற்றியும் அக்கறை இல்லாத அந்த சிறுவர்களைத் திட்டுவதா அல்லது முதிர்ச்சி அடையாத சிறுவர்களின் கையில் வாகனத்தைக் கொடுத்த அவர்களது பெற்றோர்களைப் பழிப்பதா. இனி எப்படி கூற முடியும் இந்திய சாலைகள் சிக்கலில்லாதவை என்று.

சாலையும் சாலையின் கூடவே தொடரும் இருப்புப் பாதையும், அதில் திடிரென வந்து செல்லும் ரயிலும் ஒரு சாலைப் பயணத்தை இன்னும் சுவாரசியமாக்கக் கூடியவை. ரயிலில் இருந்து சாலையில் நகரும் வாகனங்களைப் பார்ப்பதற்கும், சாலையில் பயணிக்கும் போது ரயிலைப் பார்ப்பதற்கும் நிறையவே வித்தியாசம் இருக்கிறது. எதையோ தேடி ஓடும் ரயில் சிறுகுழந்தையைப் போன்றது. நம்மையும் குழந்தையாக்கக் கூடியது. (முன்னொருமுறை ரயில் பயணத்தைப் பற்றி சிலாகித்து எழுதியிருந்த அனுபவத்தைப் படிக்க - ரயிலோடும் பாதை

சும்மாவே ஆவி பேச ஆரம்பித்தார் என்றால் அவரைக் கட்டுபடுத்த முடியாது. இந்தப் பயணத்தின் போது நாங்கள் பேசுவதற்கு எங்களிடம் நிறைய விஷயங்கள் இருந்தன. ஸ்ரீப்பெரும்புதுரில் ராஜீவ் காந்தி நினைவிடத்தைக் கடந்த போது தொடங்கிய எங்கள் விவாதம் தமிழ், தமிழ் ஈழம், சுதந்திரப் போராட்டம், தற்கால இளைஞர்கள், இந்தியா, இந்திய சினிமா, உலக சினிமா அரசியல், புத்தகம் சுஜாதா ஜெமோ சாரு இலக்கியம் என்று ஒன்றிலிருந்து மற்றொன்றிற்குத் தாவிக் கொண்டே இருந்தது. அவ்வப்போது எங்களைக் கடந்து செல்லும் வித்தியாசமான கனரக வாகனங்களையும் முட்டாள்தனமாக வண்டியோட்டியபடி கடந்து செல்லும் சில வாகனங்களையும் கடந்தபடி சுமார் நான்கு மணிநேரம் பயணித்திருந்தோம். பயணக் களைப்பு லேசாக கண்ணில் தென்பட சாலையோர காபி கொடுத்த உற்சாகத்தில் தொடர்ந்து பயணிக்கத் தொடங்கினோம். 




ஹோசூரைக் கடந்து பெங்களூர் சாலையில் இணைந்த போது வாகனப் போக்குவரத்து கொஞ்சம் அதிகரித்திருந்தது. சூரியனும் உச்சந்தலைக்கு மேல் உயர்ந்திருந்தான். கர்நாடகா எல்லையினுள் நுழைந்ததும் ஆவி அந்தக் கேள்வியைக் கேட்டார். மைசூர் போவோமா இல்ல சரவணபெலகோலா போவோமா, எதுனாலும் உடனே சொல்லுங்க, இன்னும் கொஞ்ச நேரத்தில நாம மைசூர் போற ரோடுல நாம திரும்பனும் என்றார். 

மைசூர் நான் சென்றதே இல்லை, ஒருவேளை நாங்கள் மைசூர் சென்றாலும் அன்றைய இரவே பெங்களூரு திரும்பியாக வேண்டும். மூன்று மணி நேரத்திற்கு மேல் மைசூரில் இருக்க முடியாது என்பதையும் கூறினார் ஆவி. பெங்களூர் செல்கிறோம் என்று பேஸ்புக்கில் பதிந்திருந்த நிலைத்தகவலைப் பார்த்தது விட்டு ஒரு பிரபலம் எங்களை அழைத்து தானும் பணி நிமித்தம் பெங்களூர் வந்திருப்பதகாவும் மாலை சந்திக்கலாம் என்றும் கூறியிருந்தார். அவரை வேறு சந்திக்க வேண்டும். வேறுவழியில்லை மைசூர் திட்டத்தைக் கைவிட்டு பெங்களூரு சாலையில் திருப்பினோம் வண்டியை

பயணிப்போம்... 


தகவல்:

இத்தனை நாளாக என்னுடைய வலையில் இமெயில் subscription சரிவர வேலை செய்யாமல் இருந்தது. பிளாக்கர் நண்பன் பாசித் அவர்களின் உதவியுடன் அதனை சரி செய்தாயிற்று. ஒருவேளை எனது பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற விரும்பினால் subscribe செய்து கொள்ளுங்கள். சரிசெய்து கொடுத்த பிளாக்கர் நண்பனுக்கு நன்றிகள்.