பழைய மகாபலிபுரம் சாலையில் சுவாரசியமான காட்சிகளுக்கு என்றுமே பஞ்சம் இருந்ததில்லை. அதிலும் நள்ளிரவில் என்றால் சலிக்காமல் பல கதைகள் கூறலாம், அவ்வளவு இருக்கிறது.
இன்றைக்கு அலுவலகத்தில் இருந்து கிளம்பும் போது மணி ஒன்றை நெருங்கி இருந்தது. லேசான தூறல் வேறு. சிறுசேரியில் இருந்து கிளம்பும் வரையிலும் லேசாக தூறிக் கொண்டிருந்த வானம் நாவலூரைக் கடக்கையில் கொஞ்சம் அடித்துப் பெய்யத் தொடங்கியது.
நேற்றைக்கும் அலுவலகத்தில் இருந்து கிளம்பும் போது நள்ளிரவு ஒரு மணி. யாருமற்ற அந்த சாலையில், அதில் நிலவும் அமைதியில் பயணிக்கவே அலாதியாய் இருக்கும். அவ்வப்போது கடக்கும் கார்கள், ஒன்றிரண்டு இருசக்கர வாகனங்கள் தவிர யாருமே இருக்க மாட்டார்கள்.
அப்படியிருக்க நேற்றைய தினம் சத்யபாமாவைக் கடக்கையில் ஒரு பெண் சாலையின் ஓரத்தில் மாடல் ட்ரெஸ் அணிந்தபடி துள்ளிக் குதித்து டேன்ஸ் ஆடிக்கொண்டிருந்தாள். யார் அவள், இந்நேரம் ஏன் இப்படி என்ற கேள்விகளுடனேயே கடக்கும் போதுதான் தெரிந்தது அவர் ஒரு திருநங்கை என்று. மீண்டும் மனதில் ஆயிரம் கேள்விகள், அதற்கு ஆயிரம் விடைகள், இவர்களின் வாழ்கையே முறையே வேறு. எளிதில் புரிந்துகொள்ள இயலாதது. தனிமை புறக்கணிப்பு மிரட்டல் தீண்டாமை பாலியல் வன்கொடுமை என்று எத்தனையோ கஷ்டங்கள் நிறைந்தது. வீட்டில் அவரை எதிர்பார்த்து யாரேனும் இருப்பார்களா, முதலில் அவருக்கு வீடு இருக்குமா, எங்கு தங்குவார். அடுத்த சில கிமீ அவரைப் பற்றியே சிந்தித்துக் கொண்டிருந்தேன்.
இன்றைய நள்ளிரவில் நாவலூர் ஏஜிஸ் கடந்து செம்மஞ்சேரி செக்போஸ்டைக் கடக்கையில் இரண்டு பெண்கள் காதில் ஹெட்செட் மாட்டியபடி தைரியமாக நடந்து கொண்டிருந்தார்கள், ஒருசில வாகனங்களைத் தவிர யாருமே இல்லை. மழை வேறு வலுத்துக் கொண்டிருந்தது. மிக சமீபத்தில் தான் சிறுசேரி பயங்கரம் நடந்து முடிந்துள்ளது. ஆனாலும் அசால்ட்டாக நடந்து கொண்டிருந்தார்கள். அருகில் நடந்து செல்லும் தொலைவில் தான் அவர்கள் ஹாஸ்டல் இருக்க வேண்டும் என்றாலும் அந்த அர்த்த ராத்திரியில் ஒருவருக்கு ஒருவர் துணையாக அவர்கள் எடுத்த முடிவு வீண் வம்பில் சென்றால் அவர்கள் வீட்டிற்கு யார் பதில் கூறுவது. அதிபயங்கரமான இந்த ஆண் சமூகத்தை எப்படி இவ்வளவு எளிதில் நம்பினார்கள்.
ஏற்கனவே எங்கள் அலுவலகத்தில் பணிபுரிந்த அந்த இளம் பெண்ணுக்கு நேர்ந்த அசம்பாவிதத்தால் அங்கு பணிபுரியும் நாங்கள் அனுபவித்துக் கொண்டிருக்கும் தற்போதைய கஷ்டங்கள் போதாதா?
இவர்களுக்கு என்ன ஹாயாக ரோட்டில் நடந்து சென்று வம்பில் மாட்டிக் கொள்வார்கள். அவர்களுக்கு என்ன ஹாயாக கார்பரேட் ஆபீசில் அமர்ந்து கொண்டு சிறுசேரியில் என்ன நடக்கிறது, அடிமட்ட ஊழியன் எப்படி கஷ்டப்படுகிறான் என்பதையெல்லாம் புரிந்து கொள்ளாமலேயே நான்கு புதிய சட்டங்களைச் சமைத்து ஈமெயில் அனுப்புவார்கள். மாட்டிக் கொண்டு முழிக்கப் போவது என்னவோ எங்களைப் போல் யாரோ ஒரு நூறு கோயிஞ்சாமி தானே. பாவம் எங்களுக்கு என்ன மயிரே போச்சு. அனுபவிக்கட்டும். ஆனால் நேற்றைக்கு அந்த திருநங்கையைப் பார்த்ததற்கும் இன்று இவர்களைப் பார்த்தற்கும் நிறையவே வித்தியாசம் இருக்கிறது, எத்தனைப் பெரிய முரண்!
செம்மஞ்சேரி போலீஸ் செக்போஸ்ட்டை நெருங்க நெருங்க தூரத்தில் ஒரு ஏசி பஸ் ரோட்டின் ஓரமாய் பார்க் செய்யபட்டிருந்தது தெரிந்தது. ஆனால் அது நின்று கொண்டிருந்த விதமும் டிசைனும் வித்தியாசமாக இருப்பதைப் பார்த்ததும் ஏதோ ஒரு நெருடல். அந்த இடத்தில் வழக்கமாகவே நான்கைந்து பேரிகட்ஸ் இருக்கும், மேலும் யு டர்ன் போட வசதியான இடமும் கூட. தாறுமாறாக நிறுத்தபட்டிருந்த அந்த அரசாங்கப் பேருந்தைப் பார்த்துக் கொண்டே வண்டியை செலுத்திக் கொண்டிருந்தேன்.
அருகில் செல்லச் செல்ல ஆட்கள் கூட்டமாக இருப்பது தெரிந்தது. வண்டியில் ஓட்டுனரும் நடத்துனரும் அருகில் நின்று கொண்டிருக்க அவர்களோடு நான்கைந்து போலீசார் நின்று கொண்டிருந்தார்கள்.
பேருந்து சாலையின் ஓரத்தில் இருந்த தடுப்புச் சுவரை இடித்து ஒரு பத்தடி முன் நகர்ந்து அசாதாரணமாகத் தொங்கிக் கொண்டிருந்தது. அவ்வளவு பெரிய சாலையில், சாலையின் ஓரத்தில் இருக்கும் இரண்டடி சுவரின் மீது ஏறி அந்தப் பக்கம் போய் இருக்க வேண்டும் என்றால் அந்த பேருந்து எவ்வளவு வேகத்தில் அவ்விடத்தைக் கடக்க முயன்றிருக்க வேண்டும். பாவம் உள்ளிருந்த பயணிகளை நினைத்தாலே கதி கலங்குகிறது. நாங்கள் பார்க்கும் போது யாருமற்ற பேருந்தாக தனித்து தொங்கிக் கொண்டிருந்தது, அருகில் நின்று பார்க்க முனைபவர்களை நிற்க விடாமல் விரட்டிக் கொண்டிருந்தனர் போலீசார். ஒருவன் போட்டோ எடுக்கமுயல நல்லவேளை அவனுக்கு அடி விழவில்லை.
நான்கைந்து மாதங்கள் இருக்கும் என்று நினைக்கிறன், மதியம் அலுவலகம் சென்று கொண்டிருக்கும் வழியில் சத்யமபாமா தாண்டி இருக்கும் ஆலமரத்து நிறுத்தத்தின் அருகில் மீடியனைத் தாண்டி ஒரு ஆம்னி தலையணையைப் புரட்டிப் போல் குப்புறக் கவிழ்ந்து கிடந்தது. சம்பவம் நடந்த ஐந்து நிமிடங்களுக்குள் நாங்கள் அங்கு இருந்தோம். என்னவென்று விசாரித்ததில் ஆம்னியின் பின் டயர் வெடித்து அது வந்த வேகத்தில் தூக்கி தூர வீசப்பட்டு சாலையின் ஓரத்தில் சோப்பு டப்பாவைப் போட்டது போல் கவிழ்ந்து கிடந்தது. அதிர்ஷ்டவசமாக அந்த ஆம்னியில் இருந்த ஒருவருக்கும் ஒன்றும் ஆகவில்லை, சிவனே என்று சாலையின் ஓரத்தில் நின்று கொண்டிருந்த அந்த புதிய ஹோண்டா சிட்டிக்குத்தான் பலத்த அடி. அந்த காட்சி இப்போதும் கண்ணுக்குள்ளேயே நிற்கிறது. அந்த ஆம்னியின் ஓனர் ஒரு ஓரமாய் நின்று தலையத் தொடைத்துக் கொண்டிருந்தார். மரணபயம் நிறைந்திருந்த அந்தக் கண்களை இன்னும் மறக்க முடியவில்லை.
ஆனாலும் சொல்கிறேன் நிலைமை எப்படி இருந்தாலும் சென்னையில் பழைய மகாபலிபுரம் சாலையில் வண்டி ஓட்டுவதற்கு இணையான சுகானுபத்தை இதுவரை வேறு எந்த சாலையுமே கொடுத்ததில்லை. காரணம் அது பழைய மகாபலிபுரம் சாலை.
பின்குறிப்பு : பீக் ஹவர்ஸில் பழைய மகாபலிபுரம் சாலையின் முகம் வேறு மாதிரி இருக்கும். வேறு மாதிரி என்றால் கொஞ்சம் கொடூரமாக இருக்கும். நல்லவேளை எனக்கும் பீக் ஹவர்ஸுக்கும் சம்மந்தமே இல்லை :-)
படங்கள் : நன்றி இணையம்.
