31 Jan 2014

நாடோடி எக்ஸ்பிரஸ் - தேசிய சின்னம் - விவேகானந்தர் பாறை

பத்மனாதபுரம் அரண்மனையை விட்டு வெளியே வந்தபோது ஆதவன் தலைக்கு ஏறியிருந்தான். முத்துவையும் குமாரையும் பார்த்தேன் அவசரமாய் மயங்கிவிழத் தயாராய் இருந்தார்கள். நாகர்கோவிலில் இருந்து பேருந்து ஏறிய அடுத்த நிமிடம் குமரியில் இறங்கிவிட்டது போன்ற பிரமை, மூவருமே ஆழ்ந்த உறக்கத்தில் இருந்திருக்கிறோம் என்பது குமரி வந்தபோதுதான் புரிந்தது. அரைமணிநேர ஆழ்ந்த உறக்கம் கொஞ்சம் உற்சாகத்தை கொடுத்திருந்த போதும் பசி வயிற்றைக் கிள்ளியது.



குமரி இன்னும் மாறவில்லை அல்லது பெரிதாக எவ்வித மாற்றமும் கண்டிருக்கவில்லை. பத்து வருடங்களுக்குப் முன் பார்த்தபோது எப்படியிருந்ததோ அப்படியே இருக்கிறது. கடற்கரைக்கு அழைத்துச் செல்லும் அதே அகலமான அதே சிமிண்ட் ரோடு, அதே போன்ற கடைகள், அதே கடல் வாசம்... பழைய நியாபகங்கள் என்னை வழிநடத்திக் கொண்டிருக்க, திடிரென்று ஒரு இடத்தில் முத்துவும் குமாரும் பெருங்கூட்டத்தை கண்டுபிடித்திருந்தார்கள்.  

'சீனு வா என்னன்னு போய் பார்த்துட்டு வருவோம்' முத்து கையைப் பிடித்து இழுத்தான்.

அருகில் நெருங்கியதும் புரிந்தது அது கூட்டம் இல்லை, விவேகானந்தர் பாறைக்கு செல்வதற்காண பயணச்சீட்டு வாங்கும் நீள் வரிசை என்று, நாங்கள் நின்று கொண்டிருந்த மேடான சாலையில் இருந்து அவ்வரிசையை அளந்தேன், கண்ணுக்கு எட்டிய தூரத்தைத் தாண்டியும் நெளிந்து கொண்டிருந்தது. 'இது ஆவுற காரியம் இல்ல, எவ்ளோ... பெரிய க்யு' பெருமூச்சு விட்டான் குமார். அவர்கள் இருவர் கண்களிலும் அகோரப் பசி. இரண்டரை மணி குமரி வெயில் சென்னைக்கு போட்டி போட்டுக் கொண்டிருந்தது. 

'நீங்க போய் சாப்ட்டு, எனக்கு குடிக்கிறதுக்கு மட்டும் எதவாது வாங்கிட்டு வாங்க' என்றபடி அவர்களை அனுப்பிவிட்டு க்யூவில் நிற்கத் தொடங்கினேன். தென்இந்திய முகங்களைக் காண்பதே அரிதாக இருந்தநிலையில் க்யூவில் பெரும்பாலனவர்கள் வடஇந்தியர்கள். அவர்களுக்கு அடுத்தபடியாக வெளிநாட்டவர்கள். அரைமணி நேரத்திற்கும் மேல் நின்றுவிட்டேன் க்யு நகர்ந்த பாடில்லை. சாப்பிட சென்றவர்களும் வந்தபாடில்லை. க்யு இன்னும் ஒரு கிமீ தூரத்திற்கு நீண்டிருந்தது. க்யூவில் சங்கு சிப்பி போன்ற கடல் பொருட்களை விற்றுக் கொண்டிருந்தவரிடம் மெல்ல பேச்சு குடுத்தேன்.

"எப்போதுமே இவ்ளோ கூட்டம் இருக்குமான்னே"

"இல்ல தம்பி, டிசம்பர்ல எல்லா பக்கமும் லீவு இல்ல, அதனால் கூட்டமா இருக்கு, அப்புறம் சனி ஞாயிறு கொஞ்சம் கூட்டம் அதிகமா இருக்கும், மத்த நாள் ப்ரீயா தான் கெடக்கும்"

"இன்னிக்கு காலைல கூட்டம் இருந்தததான்னே"

"காலைல சரியான கூட்டம் தம்பி, எப்போதுமே சூர்யோதயம் பார்த்துட்டு நேரா க்யுல வந்து நின்றுவாங்க"

எங்கள் பயண திட்டப்படி குமரிதான் முதலில் இருந்தது. ஒருவேளை இங்கு வந்திருந்ததால் குமரியை தவிர வேறு எங்குமே சென்றிருக்க முடியாது! எங்கள் பயண திட்டம் மாறி இருந்ததில் கொஞ்சம் மகிழ்ச்சி அடைந்தேன். குமரிக்கு வருவதாய் இருந்தால் மாலை மூன்று மணியளவில் வரும்படி பார்த்துக் கொள்ளுங்கள். ஒருவேளை குமரியிலேயே ஒருநாள் முழுவதும் செலவழிப்பதாய் உத்தேசம் என்றால் கவலையில்லை. நிதானமாக சுற்றிப் பார்க்கலாம். குமரியம்மன் கோவில், காந்தி மண்டபம், முக்கடல் சங்கமிக்கும் கடற்கரை, கலங்கரை விளக்கம் இன்னும் பல என்று எவ்வளவோ உள்ளன.

நாங்கள் மூவரும் இவற்றை எல்லாம் கல்வி சுற்றுல்லாவிலேயே பார்த்தவர்கள் தாம். இருந்தும் விவேகானந்தர் பாறைக்கு செல்ல வேண்டும், சிலநிமிட பயணம் என்றாலும் கடலில் பயணிக்க வேண்டும்.  

ஒருவழியாக வந்து சேர்ந்த என் சகாக்கள் 'எலேய் கடக்காரன் ஏமாத்றான்ல, எல்லாத்துலையும் MRPய விட பத்து ரூபா அதிகமா வச்சி விக்கரானுங்க', என்றபடி புலம்பினான் குமார். இந்தியா முழுவதும் இருக்கும் எல்லா சுற்றுல்லாத் தளங்களிலும் இருக்கும் தேசியப் பிரச்சனை. என்ன செய்வது இந்தியர் என்பதில் பெருமிதம் கொள்வோம் என்பதைத் தவிர.     

கிட்டத்தட்ட இரண்டு மணி நேரம் க்யூவில் நின்ற நாங்கள் அதன்பின்னும் அரைமணி நேரம் காத்திருந்தே படகில் ஏறினோம். கட்டுகடங்காத கூட்டம்.  வெறும் மூன்றே மூன்று படகுகள் மட்டுமே இங்கும் அங்குமாக சேவை புரிந்து கொண்டிருந்தன. தமிழக அரசின் பூம்புகார் நிறுவனம் படகு சேவையை செவ்வனே செய்து கொண்டுள்ளது. படகுக் கட்டணம் + பாறைக் கட்டணம் சேர்த்து 55/- என்று நினைக்கிறேன், மேலும் இங்கும் வி.ஐ.பி நுழைவாயில் உள்ளது அதற்கு தலா 400/- என்று நினைக்கிறன்.  


'சீனு சின்ன வயசுல இந்த போட்ல நாம போனப்ப, நீ 20 பைசாவ கடல்ல தூக்கி போட்ட, அத பாத்து ஏகப்பட்ட பேரு காச தூக்கி போட்டாங்க நியாபகம் இருக்கா' என்றான் முத்து. மறக்கவே முடியாத நினைவலைகள் அவை. எனக்கு விபரம் தெரிந்த முதல் கடல் பயணம். அப்போதும் இந்த இருவரும் உடன் இருந்தார்கள். இப்போதும்! 

லைப் ஜாக்கெட் என்ற பெயரில் ஒரு வஸ்துவை அணியச் சொன்னார்கள். அதனை அணியாதிருந்தால் தத்தளித்தாவது கரை சேர்ந்துவிடுவீர்கள். காரணம் அவையெல்லாம் விவேகானந்தர்,  பாறைக்கு நீந்திச் சென்ற காலத்தில் வாங்கிய லைப் ஜாக்கெட்டுகள் இவை. ஒரு கவர்ச்சி நடிகையின் ஜாக்கெட்டில் கூட அவ்வளவு கிழிசல்களும் ஓட்டைகளும் இருக்காது. இதில் ஓராயிரம் ஓட்டைகள் கிழிசல்கள். 

வசதியாக ஆளுக்கொரு கடல் ஓர இருக்கையைப் பிடித்துக் கொண்டு ஆழியினை ரசிக்கத் தொடங்கினோம். அப்போதுதான் ரசிக்கத் தொடங்கினோம், அந்தோ பரிதாபம்! அதற்குள் பாறை வந்துவிட்டது.    

விவேகானந்தர் பாறையைப் பற்றிய மேலதிக தகவல்கள் எதுவும் தேவைப்படாது என்று நினைக்கிறன், இருந்தும் சில முக்கிய தகவல்கள் மட்டும். 

விவேகானந்தர் குமரி முனையில் இருந்து இந்த பாறைக்கு நீந்தியே வந்துள்ளார், அவர் வந்து சென்றதை சில மீனவர்கள் உறுதி செய்துள்ளார்கள்.

விவேகானந்தர் பாறையும், குமரி அம்மன் ஆலயமும் ஒரே நேர்கோட்டில் இருப்பதால் இந்த பாறையை விவேகானந்தர் தேர்ந்தெடுத்ததாகவும், மேலும் இங்கு அம்மனின் பாதம் இருப்பதாகவும், அது அம்மன் சிவனை நோக்கி தவம் செய்த போது படிந்த பாதம் என்றும் கூறுகிறார்கள்.  

மூன்று நாட்கள் இங்கிருந்து தவம் புரிந்துள்ளார். குமரி அம்மனின் அருள் பெற்று இங்கிருந்து அவர் நேராக பயணப்பட்டது சிக்காகோவை நோக்கி.

இந்த இடத்தில் நினைவுச் சின்னம் அமைப்பதற்காக ஏக்நாத் ரானடே மிக அதிகமான எதிர்ப்புகளையும் ஏளனங்களையும் சந்தித்துள்ளார். மேலும் இதுபோன்ற எதிர்ப்புகள் அத்தனையையும் மீறி ஒரு தேசியமே ஒன்றிணைந்து, ஒரு நபருக்கு ஒரு ரூபாய் என்றளவில் நன்கொடை வழங்கியது விவேகானந்தர் நினைவுச் சின்னம் காட்டுவதற்காகத் தான் இருக்கும். 

விவேகானந்தர் வங்கத்தை சேர்ந்தவர் என்பதால், வங்கத்தை சேர்ந்தவர்கள் அதிகமான அளவில் வந்து செல்கிறார்கள். 

சுகமான கடல் காற்றால் சூழ்ந்திருந்தது விவேகானந்தர் பாறை.  இவற்றைக் கடந்து நல்ல  விசாலமான மண்டபத்தினுள் கம்பீரமாக நின்று கொண்டிருந்த விவேகானந்தரை கண்சிமிட்டாமல் பார்த்துக் கொண்டிருந்த நேரம், என் அருகில் இருந்த சிறுவனிடம் அவன் அம்மா கூறினார் 'தம்பி விவேகானந்தர் இங்க வந்து தவம் பண்ணும் போது தாண்டா இறந்து போயிட்டாரு, அதான் அவருக்கு இங்க செல வச்சிருக்காக' என்றார். ஊம் கொட்டி கேட்டுக் கொண்டான் அச்சிறுவன், விவேகானந்தரின் ஆன்மாவும் ஊம் கொட்டி கொண்டே சிரித்திருக்குமென நினைக்கிறன். பின்னே அவருக்கும் டைம் பாஸ் வேணாமா!   

விவேகானந்தர் சிலை இருக்கும் மண்டபத்தில் தியானம் செய்வதற்கு அனுமதி இல்லை. அதற்கென்றே கீழ் தளத்தில் ஒரு தியான மண்டபம் இருகின்றது. தவறாது சென்று வாருங்கள். ரம்யமான இடம். மேலும் இங்கே ஒரு புத்தக நிலையம் உள்ளது, கையடக்க சிறிய சிறிய புத்தகங்கள் உங்களுக்குப் பயன்தரலாம்  

கிட்டத்தட்ட ஒரு மணிநேரம் சுற்றிலும் பரந்து  ஓய்வில்லாமல் ஓடிவிளையாடிக் கொண்டிருந்த கடலை அங்கும் இங்கும் அலைந்து கொண்டே ரசித்துக் கொண்டிருந்தோம். இங்கிருந்தே சூர்யாஸ்தமணத்தை ரசித்தோம். அதே கல்வி சுற்றுலாவில் கடல் காற்று என்னை தூக்கிச் செல்லப் பார்த்ததை நினைவுபடுத்தி சிலாகித்தான் முத்து. அந்த சூழ்நிலைக்கு அடிமையாகிருந்த மனது மீண்டும் கரைக்குச் செல்ல விரும்பவேயில்லை. மீண்டும் படகு. மீண்டும் குதுகலம். மீண்டும் கரை. மீண்டும் ஏக்கம். இருள் பரவத் தொடங்கியிருந்தது. இருந்தும் நெடுநாள் ஆசை நிறைவேறியதில் மனம் பிரகாசமாக இருந்தது.


தாழ்நிலை நீர்மட்டம் காரணமாக அய்யன் வள்ளுவன் சிலைக்கான படகுப் போக்குவரத்தை தடை செய்திருந்தார்கள். அங்கு செல்ல முடியாதது கொஞ்சம் வருத்தமாக இருந்தது. மேலும் அதிக காற்று, கடல் கொந்தளிப்புகள் இருந்தால் எந்நேரமும் விவேகானந்தர் பாறைக்கான படகுப் போக்குவரத்தும் நிறுத்தபடலாமாம். அதனால் மழைகாலத்தில் குமரிப் பயணத்தை ஒத்தி வைத்துவிடுவது நலம். 

இந்தப் பதிவோடு குமரி பயணத்தை முடித்து விடலாம் என்று நினைத்தேன்... ஆனால்.. மனதை திடப்படுத்திக் கொள்ளுங்கள் தொடரும்... :-))) 

படங்கள் : இணையம் 

28 Jan 2014

டீம் டின்னர் - நடந்தது என்ன?

ன்னாட்டு நிறுவனத்தில் வேலைக்குச் சேர்ந்தபோதே தெரியும் டீம் டின்னர், டீம் அவுட்டிங் போன்ற இத்யாதி இத்யாதிகளை எல்லாம் எதிர்கொள்ள நேருமென்று. அவுடிங்காவது பரவாயில்லை, தனித்திறமையை வெளிப்படுத்துதல் என்றளவில் ஆடவோ பாடவோ சொல்வார்கள், குறைந்தபட்ச கான(னா)க் குரலில்பாடி தப்பித்துக் கொள்ளலாம். ஆனால், இந்த டீம் டின்னர் இருக்கிறதே...

ர் எல்லையில் காவல் தெய்வத்தின் முன் குத்தி வைக்கப்பட்டிருக்குமே வீச்சருவா, வேல்கம்பு, சூலாயுதம், இவற்றைப் பார்க்கும்போதே கண்களில் ஒருவித திகிலும் மிரட்சியும் ஏற்படும்அதே போன்ற ஒரு உணர்வை உணவகத்தின் சாப்பாட்டு மேஜையின் மீது கிடத்தபட்டிருக்கும் ஸ்பூன், போர்க், கத்தி ஆகிய மூன்றும் ஏற்படுத்தும். எப்போது இவற்றைப் பார்க்க நேரிட்டாலும் 'அது எவனோ வெள்ளைக்காரன் யூஸ் பண்றது, நமக்குத்தான் கை இருக்கே' என்ற மனநிலையிலேயே அவற்றை கடந்துவிடுவேன்.

ருந்தும் அன்றைய தினம் அப்படிக் கடக்க முடியவில்லை மேலும் என்னவெல்லாம் நடக்கக்கூடாதென நினைத்தேனோ, அவையெல்லாம் 'ஆத்தா நான் பாஸாயிட்டேன்' என்ற உற்சாகத்தில் என்னை நெரு(க்)ங்கிக் கொண்டிருந்தன. (i) டீம் டின்னாரில் என் சகாக்களோடு அமர வேண்டும் என்று நினைத்தது, புஸ். (ii) குறைந்தபட்சம் சதீஷ் அண்ணனோடு உட்காரவேண்டும் என்று நினைத்தது. புஸ்ஸ்ஸ் (iii) அதிகபட்சம் அவரின் அருகில் அமரக்கூடாது என்று நினைத்தது புஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ். என்னருகில் அமர்ந்திருந்த சதீஷ் அண்ணன் சைக்கிள் கேப்பில் எங்கோ நகர, அதே கேப்பில் அந்த இடத்தில் வந்து அமர்ந்து கொண்டார் மூன்றாவது புஸ்ஸில் நான் மேற்கோள்காட்டிய அவர், இந்தப் பதிவின் முடிவில் மேற்கோள்காட்டபோகும் அவர் .      

மெரிக்காவில் இருந்து மானேஜர் வந்திருந்ததால் அவருடைய ஏற்பாட்டின்படி எங்களுடைய ஒட்டுமொத்த டீமும் டின்னருக்கு தயாராகி இருந்தோம். கிழக்குக் கடற்கரை சாலையில் அமைந்திருக்கும் பசேரா என்னும் உயர்ரக உணவகத்தில் இரவு விருந்து தடபுடலாக காத்துக் கொண்டிருந்தது எங்களுக்காக. 

ழாம் வகுப்பில் ஆரோக்கிய சார் ட்யுசனில் படிக்கும் போது 'சார்' என்று சுண்டு விரலை காண்பித்துவிட்டு நானும் குமாரும் அவசரவசரமாக கொடிமரம் நோக்கி ஓடுவோம். கொடிமரத்தில் ஒர்ரூவா பரோட்டா உண்டென்று குமார் கூறியதில் இருந்தே, வாரத்தில் இருமுறையாவது அங்கே பரோட்டா சாப்பிட வேண்டும் என்று கங்கணம் கட்டிக்கொண்டோம். பாய் சுடச்சுட போட்டு எடுக்கும் பரோட்டகளில் இரண்டை வாங்கி, ஆவி பறக்கும் சால்னாவில் அப்படியே முக்கியெடுத்து, பாதிமென்றும் பாதிமென்னாலும் முழுங்கிவிட்டு, மின்னல் வேகத்தில் இடத்தை காலி செய்வதுதான் எங்களுடைய பால்யகால டீம் டின்னர்.

தென்காசி பழைய  பேருந்து நிலையம் அருகில் கிருஷ்ணா டூரிஸ்ட் ஹோம் என்ற ஒன்று உண்டு, அப்போதைக்கு அதுதான் தென்காசியிலேயே மிகபெரிய உணவகம். வருடத்தில் என்றாவது ஒருநாள் கார்த்தியம்மா எங்களை கிருஷ்ணாவிற்கு அழைத்துச்செல்வார். கிருஷ்ணாவினுள் நுழையும் அந்தநிமிடம் ஏதோ மிகபெரிய நட்சத்திர விடுதியினுள் நுழைந்ததுபோல இருக்கும் எங்களுக்கு. மேலும் வீட்டில் வைக்கும் சிக்கன் குழம்பு தவிர்த்து, வெவ்வேறு வகைகளிலும் சிக்கனை படுத்தியெடுக்கலாம் என்பதை அங்கு சென்றபோதே அறிந்து கொண்டேன், இது அப்போதைய டீம் டின்னரின் அடுத்த கட்டம்.

சென்னை வந்தபின் அவ்வபோது அஞ்சப்பர், ஆவடி அய்யா போன்ற உணவகங்களுக்கு சென்றிருந்தாலும், காரப்பாக்கம் ஹோலிஸ்மோக் என்னும் உயர்ரக உணவகத்தில் உணவருத்தியதுதான் என் முதல் டீம் டின்னர். 

ற்றே அதிகம் குளிரூட்டப்பட்ட அறை, சற்று குறைவான விளக்கொளி, மெல்லிய இசை, தேவைக்கு அதிகமான அமைதி. போகிறபோக்கில் 'மாஸ்டர் நாலு முட்டை, அதுல ஒண்ணு வெங்காயம், ரெண்டு முக்கா' என்றபடி ஆர்டர் எடுப்பவர்கள் எல்லாரும் பச்சை விளக்குப் பகுதிகளில் தஞ்சம் அடைந்துவிட, இங்கிருப்பவர்களோ நீட்டாக டை கட்டி, லோ டெசிபலில் பேசத்தயங்கும் துறை சார்ந்த படிப்பு படித்தவர்கள். முதன் முறையாக இதுபோல் ஒரு உயர்ரக உணவகத்தினுள் நுழைந்த போது மனம் ஏனோ வித்தியாசமாய் உணர்ந்தது. மேலும் இப்படி ஒரு பெரிய உணவகத்தினுள் முதல்முறை நுழைகிறேன் என்பதை என் கண்களே காட்டிக்கொடுத்தன. இன்னும் சொல்லபோனால் முதல்முறை யானையைப் பார்ப்பவன் மனநிலையில் இருந்தேன் நான்.ஆனால் ஒன்று மட்டும் புரிந்தது , நிச்சயமாக அது டீம் டின்னர் இல்லை, என்னைப் பொருத்தவரையில் ட்ரீம் டின்னர் என்று. 

ணவகத்தில் இருந்த பெரிய பெரிய மேசைகளின் நடுவே இரண்டுக்கு இரண்டு அடியில் ஒரு குழியை வெட்டி வைத்திருந்தார்கள். ஹோட்டலில் இருந்த அது ஒன்று மட்டும் விளங்கவேயில்லை எனக்கு. யாரிடமாவது கேட்கலாம் என்றால், ஹீ ஹீ ஹீ அப்போ என் மனசாட்சி என்ன கேவலமா நினைக்கமாட்டான்? அதனால் பொங்கிப் பிரவாகம் எடுத்த ஆர்வத்தை மட்டுப்படுத்திக் கொண்டு விடையை எதிர்பார்த்து காத்திருந்தேன். சிறிது நேரத்திலேயே கொதிக்கும் கங்குகளால் ஆன ஒரு பாத்திரம் போன்ற அமைப்பைக்கொண்டு அந்த குழியை நிரப்பினார்கள். மீண்டும் ஆர்வம், ஒருவேளை சினிமாவில் காண்பிப்பது போல உயிருள்ள ஒரு கோழியை அதில் தொங்கவிட்டு சாப்பிட சொல்லிவிடுவார்களோ என்றெல்லாம் சிந்திக்கத் தொடங்கினேன்.   

ல்லவேளையாக அப்படி எதுவும் நடக்கவில்லை. வடை சுட பயன்படுத்துவோமே ஒரு நீளமான கம்பி, அதுபோன்ற கம்பிகளில் சிக்கனையும் மட்டனையும் மீனையும் சிறுசிறு துண்டுகளாக வெட்டி கபாப், தந்தூரி இத்யாதி இத்யாதி பெயர்களில் வைத்துவிட்டுச் சென்றார்கள். முழுமையாக சமைக்கப்பட்ட உணவுகளே என்றபோதும் இப்படி சாப்பிடுவதில்தான் பலருக்கும் விருப்பமாம். இதன் பெயர் பார்பிக்யு என்றார்கள்.



ஏற்கனவே டீம் டின்னருக்கு பழக்கப்பட்டவர்கள் அனைவரும் ஒரு கையில் போர்க்கையும், ஒரு கையில் கத்தியையும் ஏந்த, நானோ என்ன செய்வதெனத் தெரியாமல் விழிக்கத் தொடங்கினேன். நல்லவேளையாக எங்களில் பெரும்பாலானோருக்கு அதுதான் முதல் டீம் டின்னர் என்பதால், கைக்கு வெற்றி கிடைக்க, கை ஆளத் தொடங்கியது. அதன்பின் ஒவ்வொருமுறையும் இவர்களுடனேயே செல்வதால் போர்க் ஸ்பூன் கத்தி என எதையும் தொட்டுகூடப் பார்ப்பதில்லை.

னால் இன்றோ நிலைமை வேறு. ஒரு ப்ரொஜெக்டில் இரண்டு மூன்று பெரிய டீம் இருக்கும், ஒவ்வொரு பெரிய டீமிலும் சின்ன சின்ன டீம்கள் இருக்கும். இன்றைய டின்னருக்கு எங்களுடைய சக சின்ன டீம்கள் இணைந்த பெரிய டீமாக வந்திருந்தோம். போதாகுறைக்கு அமெரிக்காவில் இருந்து மானேஜர் வந்துள்ளார். இன்னும் போதாகுறைக்கு அவர் தான் என் அருகிலும் உட்கார்ந்திருக்கிறார். எங்களைச் சுற்றிலும் மற்ற மானேஜர்கள் லீடர்கள். 'எப்புடி வசமா சிக்கிகிட்டு இருக்கேன் பார்த்தியாப்பா' என்றான் என்னுள் இருந்த வடிவேலு. மற்றவர்கள் கூட பரவாயில்லை. அமெரிக்க மனேஜர் முன்னிலையில் எப்படி கைகளால் சாப்பிடுவது?  

சுற்றிலும் நோட்டம் விட்டேன். என் சகாக்கள் அனைவரும் ஆயுதங்களை கைகளில் எடுத்திருந்தார்கள். ஒருவர் கூட கைகளால் சாப்பிடவில்லை. பாய் கடைல பரோட்டா தின்ன பயல போர்க் யூஸ் பண்ண வச்சிருவாயிங்க போலியே என்றபடியே வலக்கையில் போர்க்கை எடுத்தேன். இல்லை போர்க் இடக்கையில் இருக்க வேண்டுமென்பது பாலபாடம். நல்லவேளை மாற்றிவிட்டேன். இருந்தும் சுற்றிலும் ஒருமுறை பார்த்தேன். எல்லாருமே இடக்கையில் தான் வைத்திருந்தார்கள்.


லக்கையில் கத்தியை எடுத்து, போர்க்கை அண்டை கொடுத்து சிக்கனை அறுத்தேன், நழுவியது. மீண்டும் சுற்றிலும் நோட்டம் விட்டேன். அனைவரும் அசால்ட்டாக அறுத்துக் கொண்டிருக்க, என் சிக்கனோ அல்வா போல் நழுவிக் கொண்டிருந்தது. எனக்கு மட்டும் முனை மழுங்கிப் போன கத்தியை கொடுத்து விட்டார்களோ என்று பார்த்தால், மற்றவர்களை விட கூர்மையான கத்தி என்னிடம்தான் இருந்தது. பேசாமல் கைகளுக்கு மாறிவிடலாமா என்று யோசித்தேன், இருந்தும் எப்போது தான் இதனை கற்றுக்கொள்வது? மெல்ல அறுக்கத் தொடங்கினேன், சிக்கனோ வேகமாக நழுவத் தொடங்கியது. என்னை சுற்றி அமர்ந்திருக்கும் அனைவரும் என்னையே பார்ப்பது போன்ற உணர்வு. சாப்பிட முடியவில்லை. அறுக்கவும் முடியவில்லை. 

சுற்றிலும் ஒரு புன்னகையை உதிர்த்துவிட்டு மீண்டும் போராடத் தொடங்கினேன். கொஞ்சம் பழகி இருந்தது. ஆனால் நான் ஒன்றை சாப்பிடுவதற்குள் அவர்கள் பலவற்றையும் காலி பண்ணியிருந்தார்கள். மனம் தளரவில்லை. சிக்கனும் மனம் தளராமல், நழுவிக் கொண்டே இருந்தது. கார்த்திக்கெல்லாம் இட்லி தோசையைக் கூட அசால்ட்டாக போர்க் வைத்து சாம்பாரில் முக்கி சாப்பிடுவார், கார்த்திகைப் பார்த்தேன், சிக்கன் அவரிடம் போராடிக் கொண்டிருந்தது. என்னைப் பார்த்தேன். நான் சிக்கனுடன் போராடிக் கொண்டிருந்தேன். ஒரு கட்டத்தில் தட்டில் இருந்த ஒரு சிக்கன் பறந்து போய் வெளியில் விழுந்தது, நல்லவேளை என்னைத் தவிர யாரும் அதனைப் பார்க்கவில்லை. இன்னும் சிலநிமிடங்கள் போராடிக் கொண்டிருந்தால் அந்த இடமே அலங்கோலமாகிவிட வாய்ப்பு இருந்ததால் என் மீது நானே நம்பிக்கையில்லாத் தீர்மானம் எடுக்கவேண்டிய கட்டாயத்தில் இருந்தேன்.    

தில்மேல் பூனை போல் முடிவெடுக்க முடியாமல் திணறிக் கொண்டிருந்த இடைவெளியில் என் அமெரிக்க மானேஜரை கவனிக்காமல் விட்டிருந்தேன். கவனித்த எனக்கோ அதிர்ச்சி + ஆச்சரியம். அந்த கூட்டத்திலேயே அவர் ஒருவர்தான் சத்தம் இல்லாமல் கைகளால் சாப்பிட்டுக் கொண்டிருந்தார். அடுத்த நொடி என்னிடம் உத்தரவு வாங்காமலேயே நானும் கற்காலத்திற்கு மாறியிருந்தேன் டாட்.

16 Jan 2014

சென்னை புத்தக உலா 2014 - புத்தகம் சரணம் கச்சாமி...!

ரண்டு வருடகளுக்கு முன்பு பச்சையப்பன் கல்லூரி எதிர்புறம் இருக்கும் ஆங்கிலோ இந்திய வழி பள்ளிகூடத் திடலில் நடைபெற்ற புத்தககாட்சிக்கு நேற்றுதான் சென்று வந்தது போல் இருக்கிறது. அட அதுவாவது பரவாயில்லை. கடந்த வருட புத்தக கண்காட்சியின் போது நானும் வாத்தியாரும் அருந்திய தேநீரின் சூடுகூட இன்னுமென் நாவிலிருந்து விலகவில்லை, அதற்குள் சென்னை புத்தககாட்சி - 2014 என்றால் நம்புவதற்கு கொஞ்சம் மிரட்சியாக இருக்கிறது. நம்பமுடியாத வேகத்தில் பயணித்துக் கொண்டிருக்கிறான் காலதேவன். யாராவது அவனைப் பிடித்து நிறுத்தி கொஞ்சம் ஆசுவாசப்படுத்துங்களேன், அந்த இடைவெளியில் நான் கொஞ்சம் ஆசுவாசப்பட்டுக் கொள்கிறேன். 


தீபாவளியையும் பொங்கலையும் இழந்துவிட்ட இக்காலத்தில் மனதிற்கு ஆறுதல் தரும் ஒரே திருவிழா புத்தகக் கண்காட்சிதான். சென்னைக்கும் பபாசிக்கும் நன்றி. புத்தக கண்காட்சி ஆரம்பித்த இரண்டாம் நாளே நான் அண்ணன் ஆவி ரூபக் மற்றும் ஸ்கூல்பையனுடன் சென்றுவிட்டாலும் இரவாட்டம் தடுபாட்டம் போட்டதால் முழுவதும் சுற்ற இயலாமல் பணிக்கு திரும்பி விட்டேன். இருந்தும் நேற்று மிக நிதானமாக மற்றொரு ரவுண்ட் அடித்துவிட்டேன்.

கடந்த வருட புத்தகக் கண்காட்சிகளில் எங்கு திரும்பினாலும் 'அவசர வழி ' தெரிந்ததே தவிர அவசரத்திற்கோர் வழி கண்ணிலேயே படவில்லை. நல்லவேளையாக இம்முறை அரங்க நுழைவாயிலின் அருகிலேயே சுத்தமான சுகாதாரமான தற்காலிக கழிப்பிடம் கட்டி வைத்துள்ள பபாசிக்கு யாராவது கோவில் கட்டினால் அதில் என் பங்காக ரூபாய் ஆயிரத்தி ஒன்று தரலாமென உத்தேசம்

எத்தனையெத்தனை புத்தகங்கள், பதிப்பகங்கள், ஆசிரியர்கள்... மலைமலையாய் குவிந்து கிடக்கும் புத்தகங்களையெல்லாம் பார்க்கும் போதே மலைப்பாய் இருக்கிறது. எங்கிருக்கிறார்கள் இத்தனை எழுத்தாளர்களும். இப்புத்தகங்களைப் பார்க்கும் போது அராத்துவின் புத்தக வெளியீட்டில் மதன் கூறியது நியாபகம் வருகிறது. மனிதன் தன்னுடைய வாழ்நாளில் அத்தனை புத்தகங்களையும் படித்துவிட முடியாது, அதனால் புத்தக தேர்ந்தெடுப்பில் மிகக் கவனமாக இருக்க வேண்டுமென்று. இங்கே வாசகனுக்கு விடப்பட்டிருக்கும் மிகப்பெரிய சவாலும் இதுதான். 

யாரைப் படிப்பது, என்ன மாதிரியான எழுத்துக்களைப் படிப்பது என்பதில் எனக்கென எவ்வித வரைமுறைகளும் இருந்ததில்லை, ஆபத்தும் அதுவே. 'நாங்கள் பதிப்பிப்பது எல்லாமே நல்ல புத்தகங்கள்தான்' என்று மார்தட்டிய சில முன்னனிப் பதிப்பகங்களை நம்பி வாங்கிய புத்தகங்கள், தொடர்ந்து வாசிக்கப் பிடிக்காமல் வீட்டில் இடத்தை அடைத்துக் கொண்டுள்ளன. அதனால் இம்முறை மிகவும் யோசித்து, பார்த்துப்பார்த்து, முக்கியமான எழுத்தாளர்களின் சில படைப்புகளை மட்டுமே வாங்கியுள்ளேன்/வாங்கவுள்ளேன். வரும் வருடத்தில் கி.ரா, அசோகமித்திரன், வண்ணதாசன், நாஞ்சில்நாடன் ஆகியோரின் ஒரு நாவலையோ அல்லது ஒரேயொரு சிறுகதைத்தொகுப்பையோ படித்துவிட வேண்டுமென்று முடிவும் செய்துள்ளேன். 

ஸ்டால்களில் அடுக்கபட்டிருக்கும் பல புத்தகங்களின் தலைப்புகள் ஆச்சரியப்படுத்துகிறது (அ) ஆயாசப்படுத்துகிறது. 'அதிக உயரம் வளர்வது எப்படி', 'ஆண்குழந்தை பிறக்க என்ன செய்ய வேண்டும்?' ஷப்பா முடியல. 

ஒரு பதிப்பகத்தில் அந்த வருடத்திற்கான வருமானம் குறைவெனில் உடனே ஒரு மருத்துவர் பெயரில் அந்தரங்க சந்தேகங்களின் தீர்வுகள் குறித்து புத்தகம் வெளியிடத் தொடங்கிவிடுகிறார்கள். எல்லா பதிப்பகங்களிலும் நமது அந்தரங்க சந்தேகத்திற்கு தீர்வு கிடைக்கிறது. அதேநேரம் இதுபோல் நான்கு புத்தகங்கள் படித்தால், 'ஐந்தாவதை நானே எழுதிவிடுவேனோ?' என ஐயமாகவும் இருக்கிறது. இப்படியான அந்தரங்க புத்தகங்களும் காமசூத்திர புத்தகங்களும் மட்டுமே கண்ணில்பட்ட நிலையில் அந்த ஸ்டாலின் ஒரு அடுக்கில் காமம் + காதல் =கடவுள், நவீன காமசூத்திரம் உங்களுக்காக என்ற புத்தகளுக்கு நடுவே 'செஸ் விளையாட கற்றுக்கொள்வது எப்படி?' என்றொரு புத்தகம் கண்ணில் பட்டது. அட அசிங்கம் புடிச்சவிங்களா இப்படி எல்லாமாடா தலைப்பு வைப்பீங்க என்றபடி மற்றொரு முறை அத்தலைப்பை வாசித்த போதுதான் உணர்ந்தேன் 'க்'கை சேர்த்து வாசித்தது என் தவறு என்று. 

மீனாட்சி புத்தக நிலையத்தில் சுஜாதா சாண்டில்யன் உட்பட பல எழுத்தாளர்களின் புத்தகங்கள் மலிவு விலைக்கு கிடைக்கின்றன. சிலவற்றை பொறுக்கிக் கொண்டேன்.

விகடன் ஸ்டாலினுள் நுழைந்த போது என்னருகே நின்றவர் 'ச்ச என்ன தம்பி புஸ்தகம் ரேட்டு ல்லாம் தாறுமாறா இருக்கு' என்றார் சிரித்துக்கொண்டே. 'அதான் சார் பிரச்சனையே' என்றேன் அமைதியாக. 'இல்ல தம்பி ஒரு புஸ்தகமும் வாங்க முடியலியே என்ன பண்றது' என்றார் தனது ஆதங்கக் குரலில் . 'அதுதான் சார் நம்ம பிரச்சனையே' என்றேன் கொஞ்சம் துடுக்காக, மனிதர் என்ன நினைத்தாரோ தெரியவில்லை அதன் பின் என்னிடம் ஒருவார்த்தை கூட பேசவில்லை. 
  
உயிர்மை, காலச்சுவடு, தமிழினி போன்ற பல பதிப்பகங்கள் மீது கோபம் கோபமாக வருகிறது. சாதாரண சிறிய புத்தகத்திற்குக் கூட யானைவிலை குதிரைவிலை. தரம் இருக்கிறது, இல்லையென்று சொல்லவில்லை. அதற்காக எல்லா புத்தகங்களையுமே வாசகனானவன் பொக்கிஷம் போல் போற்றிப் பாதுகாப்பான் என எப்படிச் சொல்லமுடியும். ஒருமுறை படிப்பான், சுவாரசியம் மிகையென்றால் மேலும் இருமுறை படிப்பான். அப்படிப்பட்ட புத்தகங்களை மிகத்தரமான அச்சிலும், ஏனையவற்றை சாதாரண அச்சிலும் வெளிக்கொணர்ந்தால் எம்மைப் போன்ற மத்யமர்களின் வாசிப்பின் பரப்பும் விரியுமே? அதே மேடையில் சாரு வருத்தபட்டார் என் போன்றவர்களின் புத்தகங்கள் 1000 பிரதிகளைக் கூட தாண்டி விற்பதில்லை என்று. இவ்வளவு விலை வைத்தால் எவன் வாங்குவானய்யா! நடுத்தர வர்க்கமும் வாங்குபடியான (வி)நிலை வராதவரை தமிழ்ச்சமுதாயத்தின் பெரும்பகுதி தன் நேரத்தையும் பணத்தையும் இலக்கியம் நோக்கி செலவழிக்க மறுக்கிறதென ஒவ்வொரு எழுத்தாளனும் பதிப்பகமும் பொங்கும் உங்களின் பொருமல்கலளில், புலம்பல்களில் இம்மியளவு நியாயமும் இருக்கபோவதில்லை.  

மேற்கூறிய பத்தியில் இருக்கும் என் ஆதங்கத்தின் பெரும்பகுதி முத்திரை பதித்த எழுத்தாளர்களையே சென்று சேரட்டும். ஜெயமோகன், கிரா, எஸ்ரா, பாரா, வண்ணதாசன், நாஞ்சில்நாடன், அசோகமித்திரன், சாரு, வாமுகொமு இன்னும்பலர் என யாருடைய எழுத்துக்களும் மலிவு விலையில் இல்லை. தங்களுடைய மிக முக்கியமான புத்தகங்களையாவது மலிவு விலை பிரசுரமாக பிரசுரித்திருக்கலாமே என்ற ஆதங்கம் மட்டுமே என்னிடம் மிச்சமிருக்கிறது. ஒருவேளை அப்படி வெளியிடுவதாய் உத்தேசமிருந்தால் தயவுசெய்து உயிர்மை பக்கம் போய்விடாதீர்கள். அவர்களுடைய அகராதியில் மலிவுவிலை எனப்படுவது நூற்றி ஐம்பதுக்கும் மேல் :-)     

பாரதி புத்தக நிலையம் என்ற ஒன்றைப் பார்த்தேன், தரமான காகிதம், குறைவான விலை நேர்த்தியான அச்சு. என்னவொன்று யாருமே பிரபலமாகாத எழுத்தாளர்கள். என்ன நம்பிக்கையில் வாங்குவது என்றே தெரியவில்லை. இங்கே நிலை இப்படி என்றால், அங்கே நிலை அப்படி. விகடன் கிழக்குப் பதிப்பகங்கள் கிடைத்த தலைப்புகளில் எல்லாம் புத்தகங்களை சரமாரியாக அச்சிட்டுத் தள்ளியுள்ளன. கிழக்கு போகிற போக்கைப் பார்த்தால் 'எங்கே விக்கிபீடியாவில் இருக்கும் எல்லாவற்றையும் மொழி பெயர்த்து விடுவார்களோ' எனப்பயமாக இருக்கிறது. என்னவொன்று அவர்களிடம் தரமான எழுத்தாளர்கள் இருக்கிறார்கள் (பத்திரிக்கையாளர் சமஸ் எழுதியிருந்தார் அவர்களை தரவிறக்க மொழி பெயர்ப்பாளர்கள் என்று). 

பாரா, சொக்கன் மற்றும் பலர் என்று பலரும் அங்கே போட்டிபோட்டுக் கொண்டு எழுதுகிறார்கள்ஏதோ ஒன்று. மேலைக் கலைகளை தமிழில் செப்பா விட்டால் மெல்லத் தமிழினி சாகுமென்று சொன்னான் பாரதி. அதற்கேற்ப பல கற்பித்தல்களையும் தமிழில் புகுத்திக் கொண்டிருக்கும் கிழக்கு மற்றும் விகடனுக்கு வாழ்த்துக்கள். இருந்தும் இப்புத்தகங்களில் இருக்கும் நம்பகத்தன்மை அந்த எழுத்தாளனின் மேல் இருக்கும் நம்பகத் தன்மையே அன்றி வேறொன்றும் இல்லை பராபரமே. தற்போது இந்த பட்டியலில் மதி என்ற ஒரு புத்தக நிலையமும் இணைந்துள்ளது. 

இம்முறை ஆங்கிலப் புத்தகங்க ஸ்டால்களின் எண்ணிக்கையும் குழந்தைசார் புத்தகங்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. எஸ்ரா தன் மகனை கதை கூற சொல்லி அதனை குழந்தைகள் படிக்கும் விதத்தில் எழுதப்பட்ட புத்தகங்களும் அரங்கேறியுள்ளன. குலவிச்சை கல்லாமல் பாகம்ப(டட்)டும்.  

ஜெமோ இணையத்தில் எழுதிய எல்லாவற்றையும் புத்தகமாக்கி விட்டார்கள். விகடனில் ஜோதிஜியின் டாலர் நகரம் கிடைகிறது. இந்த புத்தக சந்தையின் மற்றோர் இன்ப அதிர்ச்சி ரஞ்சனி அம்மா புத்தகம் எழுதியிருப்பது.


கீழைக்காற்று என்னும் கம்யுனிச ஸ்டாலில் புத்தகம் பார்த்துக் கொண்டிருந்த போது கீ.வீரமணி என்னருகே நின்று கொண்டிருந்தார். அவருடன் படமெடுக்க ஒரு கூட்டம் ஓடிக் கொண்டிருந்தது. உயிர்மையில் மனுஷ்யபுத்திரனிடம் கையெழுத்து வாங்க காத்துக் கொண்டிருந்தது ஒரு கூட்டம். ஒரு ஐந்து நிமிடம் அவர் அருகில் நின்று கொண்டிருந்தேன், அதற்குள் ஐம்பது பேராவது கையெழுத்து வாங்கியிருப்பார்கள். ஒரு பெண்மணி அவரிடம் வந்து 'என்ன உங்கள ஒரு வாரமா டிவியில பார்க்க முடியல' என்று நலம் விசாரித்தார். மற்றொரு பெண்மணி 'எம்பொண்ணு நல்லா பேசுவா. அவ பேச்சு போட்டியில கலந்துக்குற மாதிரி ஏதாவது புத்தகம் இருந்தா சொல்லுங்க' என்றபடி டார்ச்சர் செய்ய, தன் மயிரை சிலுப்பிய மனுஷ் வேறொருவருக்கு கையெழுத்து போடுவதில் மும்மரமாகிவிட்டார்.    

டிஸ்கவரியில் வேடியப்பன் செம பிசியாக இருந்தார். வெளியே வா.மணிகண்டனும் விநாயக முருகனும் நின்று கொண்டிருந்தார்கள். வா.மணிகண்டனின் வாயில் நுழையா பெயர் கொண்ட அந்த புத்தகத்தில் கையெழுத்து வாங்கியபோது, அந்த மனிதரின் வெற்றிக்குப் பின்புலமாக இருப்பது அவரது நிசப்தம் வலைப்பூ என்பது கொஞ்சம் பெருமையாக இருந்தது எனக்கு. மேலும் டிஸ்கவரியில் பதிவர்கள் எழுதிய புத்தகங்களை தனியாக ஒரு டேபிளில் அடுக்கி வைத்திருந்தார் திரு.வேடியப்பன்.     

ஸ்பை மற்றும் ரூபகிற்கு மத்தியில் எங்களைப் பிடித்த ஆவி...! 

ஜக்கி வாசுதேவின் புத்தகங்களுக்கு என்றே ஒரு தனி ஸ்டால் திறந்து வைத்துள்ளார்கள். அங்கும் ஒரு கூட்டம் அள்ளுகிறது. நித்தியின் உரைகளை புத்தகமாக எழுதி சாருவும், ஜக்கியின் உரைகளை புத்தகமாக எழுதி சுபாவும் பிரபலமடைந்த நிலையில், எதிர்கால சாமியார் ஒருவரின் இடமும், அவரது உரையை எழுதப்போகும் எழுத்தாளனின் இடமும் இன்றளவிலும் வெற்றிடமாகவே உள்ளது. இதனை எண்ணியெண்ணி வெதும்பிய என் மனதில் கணப்பொழுதில் தோன்றியது அந்த எண்ணம், ஏன் தோழர் அரசனை சாமியாராக்கி அவரது அந்திநேர ஆனந்த உரைகளை புத்தகமாக தொகுத்து வெளியிடக்கூடாது என்று. இதன் மூலம் என் எழுத்தாளனாகும் கனவும் நனவாக வாய்ப்பு இருக்கிறது. தோழர் அரசன் அடுத்த புத்தக காட்சிக்குள் சாமியாராக வேண்டுமென்று நித்தியையும் ஜக்கியையும் வேண்டிக்கொண்டே ஜக்கியின் ஸ்டாலில் இருந்து வெளிவந்தேன்.  

இறைவா இவ்வளவு புத்தகங்களுக்கு மத்தியில் 'நீ எப்ப புத்தகம் எழுதப்போற' என்று என்னை நோக்கி வரும் உசுபேத்தல்களை சமாளிக்கும் வல்லமையைக் கொடு இல்லையேல் இந்த ஜாம்பவான்களோடு போட்டிபோடத் தேவையான ஆற்றலைக் கொடு. இரண்டில் இரண்டுமே நடக்காவிட்டால்... வேண்டாம் அதைப்பற்றி சிந்திக்கப் போவதில்லை. 
         
எனது சிந்தனைகளில் இருந்து சிந்தனைகளில் இருந்து வெளிப்பட்டு மீண்டும் புத்தக கடலுக்குள் மூழ்கியபோது எங்கு திரும்பினாலும் மக்கள் மக்கள் மக்கள். ஒருகட்டத்தில் சுற்றியிருந்த மக்கள் மறைந்து புத்தகங்கள் புத்தகங்கள் புத்தகங்கள் மட்டுமே தோன்றியபோது நிஜமாகவே அது ஒரு புத்தகாதீனமான அனுபவம் என்பதைத் தவிர சொல்வதற்கு வேறொன்றும் இல்லை.     

புத்தகம் சரணம் கச்சாமி...! 

நாடோடி எக்ஸ்பிரஸ் - பத்மநாதபுரம் அரண்மனை - ஒரு விஸிட்

ண்டைக்காடு பயணம் முடித்து தக்கலையில் இறங்கிய போது 'சீனு பத்மனாதபுரம் போவமே' என்றான் குமார். சிறுவயதில் கல்விச் சுற்றுல்லாவில் பார்த்த பத்மனாதபுரம் அரண்மனை யின் நினைவுகள் மூளையின் ஏதோ ஒரு மூலையில் ஒட்டிகொண்டிருந்த போதும், தக்கலையில் இருந்து வெறும் 1.5 கிமீ தூரத்தில், மிஞ்சிபோனால் ஓரிரு மணிநேரத்தில் சுற்றி முடிக்கக் கூடிய இடம் மேலும்  இதேபோல் வேறொரு வாய்ப்பு கிடைப்பது அரிதினும் அரிது. 



க்கலையில் இருந்து திருவனந்தபுரம் செல்லும் அத்துனை பேருந்துகளும் அரண்மனை வழிதான் சென்றாக வேண்டும், இருந்த போதும் இவ்வழியே செல்லும் நகர மற்றும் புறநகர்ப் பேருந்துகள் மிகக்குறைவு.வெறிச்சோடிக்கிடந்த பேருந்து நிலையத்தில் 'எப்போதும் கிளம்புமோ?' எனத்தெரியாத மினிபஸ் ஒன்று தேவுடு காத்து கொண்டிருந்தது. 'நாப்பது ரூவா கொடுத்தா போலாம் தம்பி' என்றார் ஒரு ஆட்டோ. '35 ரூபாய் நுழைவுக் கட்டணம்' என்றார் அரண்மனை அலுவலக ஓபிசர். அரண்மனை தமிழகத்தில் இருந்தாலும், நிர்வாகம் கேரளா. 

ரண்மனை வளாகமானது வட இந்தியர்களாலும், வெளிநாட்டு கலா ரசிகர்களாலும் நிரம்பி வழிந்த நிலையில் தென்னிந்திய முகங்களைக் காண்பதோ அரிதிலும் அரிதாக இருந்தது. அரண்மனையினுள் காலணி அணிய அனுமதியில்லை, ஓபீஸ் அருகில் காலணி பாதுகாக்கும் இடம் இருக்கிறது, அங்கே காலணிகளை வைத்துவிட்டு வாருங்கள் உள்ளே செல்வோம்.

வாயில் சூயிங்கம் மென்று கொண்டிருந்தால், துப்பிவிட்டு வாருங்கள், இல்லையேல் உள்ளே விடமாட்டார்கள். அரண்மனையின் ஓரிடத்தில் ஒரு தூணில் எவனோ ஒருவன் ஒட்டி வைத்திருந்த சூயிங்கம்மை, பிய்த்து எடுக்க பிரயத்தனப்பட்டு, எடுக்க முடியாமல் அலங்கோலமாக மாறியிருந்த ஒரு தூணை உங்களிடம் காண்பிக்கிறேன், அப்போது பெருமைப்பட்டுக் கொள்ளுங்கள் நாமெல்லாம் இந்தியர்கள் என்று. அதனால் தானோ என்னவோ அரண்மனைப் பராமரிப்பு விசயத்தில் மிக கவனமாக இருக்கிறார்கள். மிக கண்டிப்புடனும் இருக்கிறார்கள்.  



வெளியிலிருந்து பார்த்தால் அரண்மனையானது ஏதோ ஒரு சாதாரண பழைய பங்களா போல்தான் தோன்றும். திரைப்படங்களில் காட்டுவது போல் பிரமாண்டமான கோட்டை, கோட்டையை சுற்றி ஆயிரக்கணக்கான படை வீர்கள், பிரம்மாண்ட முகப்பு என்று எவ்வித இத்யாதிகளையும் உங்களால் காண முடியாது, இருந்தும் சாதரணமான முகப்பைப் பார்த்து ஏமாந்து விடாதீர்கள், உள்ளே உங்களை ஆச்சரியபடுத்த வேண்டுமென்றே சில விஷயங்கள் காத்துக்கொண்டுள்ளன. மேலும் அரண்மனையின் உட்புறம் செல்ல செல்ல அரண்மனைப்பகுதிகள் அனுமாரின் வால் போல வெகுதூரத்திற்கு நீண்டு செல்கின்றன. 

கிபி 1550ல் இந்த வழியாக சென்று கொண்டிருந்த சேர மன்னன் ரவிவர்ம குலசேகர பெருமாளுக்கு ' இயற்கை எழில் கொஞ்சும் இந்தப் பகுதியையே தலைநகராகக் கொண்டு ஏன் ஆட்சி புரியக்கூடாது' என்ற எண்ணம் உதயமாகியிருக்க வேண்டும், மேலும் தனது அரசை பலப்படுத்த, பாதுகாக்க கம்பீரமான மேற்குத்தொடர்ச்சி மலை இருக்கிறது, வாணிபத்திற்கு முக்கடல் இருக்கிறது, இதனை விட வேறு என்ன வளம் வேண்டும். திருவிதாங்கூர் மாகாணத்தின் தலைநகரமானது பத்மநாதபுரம்.

ராஜ ரவிவர்மா மற்றும் அவர் வழிவந்தவர்கள் கொஞ்சம் கொஞ்சமாக செதுக்கிய, தற்போது கேரள அரசாங்க பராமரிப்பில் இருக்கும் இந்த அரண்மனையின் உள்புறம் தாய்க்கொட்டாரம் என்று ஒரு கட்டிடம் உண்டு, அதுவே இந்த  அரண்மனையில் முதன்முதலாக கட்டப்பட்ட கட்டிடமாகும். 

லையடிவாரம் என்பதால் இயற்கையாகவே அரண்மனை முழுவதும் குளிர்ச்சியான சூழ்நிலை நிலவுகிறது. போதாகுறைக்கு மொத்த அரன்மையையும் தேக்கு கொண்டு இழைத்திருக்கிறார்கள். மேலும் அரண்மனையினுள் எவ்வித அலங்கார மின்விளக்குகளும் கிடையாது. இயற்கை தரும் வெளிச்சம் கொண்டே அரண்மனை முழுமையையும் சுற்றிப்பார்க்க வேண்டும் என்பதால் மாலை 4.30 மணி வரை மட்டுமே அரண்மனை உலாவிற்கு அனுமதி.           

ரண்மனையினுள் முக்கியமான இடங்களிலெல்லாம் நிற்கும் அரண்மனை ஊழியர்கள் அந்த இடங்களின் சிறப்பை, அதன்பின் இருக்கும் வரலாற்று புராணத்தை நமக்குக் கூறுகிறார்கள். அனைவருமே மலையாளிகள், ஆங்கிலம் ஹிந்தி சரளமாக பேசுகிறார்கள், தமிழ் புரிந்து கொள்கிறார்கள், பேச்சு அவ்வளவு சரளமில்லை. இருந்தும் அவர்களது மலையாளத் தமிழ் நமக்கு புரியும் படியாகவே இருக்கிறது.  

ஆசியாவிலேயே மரத்தால் (தேக்கால்) ஆன மிகபெரிய அரண்மனையினுள், நுழைந்த அடுத்த வினாடி நம்மை வரவேற்பது குதிரை வீரன் விளக்கு. விளக்கின் மேற்புறம் ஒரு குதிரைவீரன் போருக்கு செல்வதற்கு தயார் நிலையில் இருப்பது போல் வடிவமைக்கப்பட்டதே இவ்விளக்கின் பெயர்காரணமாகும். 




தேக்காலான வரவேற்பு மண்டபத்தின் மேற்கூரையில் இருந்து கீழ்நோக்கி தொங்கிக் கொண்டிருக்கும் சிக்கலான வடிவமுடைய இரும்புச் சங்கிலி இந்த விளக்கை தாங்கிப் பிடித்துக் கொண்டுள்ளது மேலும் விளக்கை நீங்கள் எந்த திசையில் அல்லது கோணத்தில் திருப்பினாலும் அது அந்த திசை நோக்கியே வெளிச்சம் கொடுக்கும், எத்தனை பலமாக காற்றடிப்பினும் அசையவே அசையாது, விளக்கின் முகமும் மாறாது. தொடாதீர்கள். இங்கிருக்கும் எந்த ஒரு பொருளையும் தொட்டு ரசிப்பதற்கு அனுமதியில்லை. 

குதிரைவீரன் விளக்கை தவிர்த்து குறிப்பிடும்படியான மற்றொரு விஷயமும், விளக்கு தொங்கிக் கொண்டிருக்கும் தேக்கால் ஆன மேற்கூரையில் ஒன்றிற்கொன்று ஒற்றுமையில்லாத தொண்ணூறு விதமான தாமரை மலர்கள் மிகமிக நெருக்கமாக அருகருகே பொறிக்கப்பட்டுள்ளன. சீன தேசத்தவர்கள் அன்பளிப்பாக வழங்கிய நாற்காலி மற்றும் கட்டிலையும் அந்த மண்டபத்தில் பார்வைக்கு வைத்துள்ளார்கள். 

முகப்பு மணடபத்தின் ஓரத்தில் குறுகலான அமைப்பையுடைய மர ஏணி மேல்தளம் நோக்கி ஏறுகிறது. (இங்கே மரம் எனப்படுபவை அனைத்தும் தேக்காலனவை) இந்த ஏணியின் அருகில் இருக்கும் கண்ணாடிப் பேழையினுள் அரசர்களுக்கு வந்த ஓண வாழ்த்து அட்டைகளை பார்வைக்கு வைத்துள்ளனர். 

ணியானது நம்மை அழைத்துச் செல்லுமிடம் அரசவையின் மந்திராலோசனைக் கூடம். அரசர் தன் குழாமுடன் இணைந்து ஏதேனும் முக்கிய முடிவுகள் எடுக்க வேண்டுமாயின் அம் மந்திராலோசனை இங்கு வைத்தே நடைபெறும். மிக சிறிய இடமாயினும் அரசரின் அரியணை, மந்திரி, தளபதி இன்னபிறர் அமரும் இருக்கைகள்,  ஊர்ப் பெரியவர்கள் மற்றும் ஊரார் அமரும் இடம் என்று அனைவருக்கும் இடமளிக்கப்பட்டுள்ளது. 



கேரளா பாணியில் கட்டப்பட்டுள்ள இந்த அரண்மனையின் ஜன்னல்கள் உள்ளிருந்து பார்த்தால் வெளிப்புறம் தெரியும்படியாகவும், வெளியிலிருந்து பார்ப்பவர்களுக்கு வெறும் இருளாய் தெரியும் படியாயும் கட்டப்பட்டுள்ளது. ஒரு அறையில் இருந்து இன்னொரு அறைக்கு செல்லும் வாயில்கள் மிகக் குறுகலாகவே கட்டப்பட்டுள்ளன. இந்த அரண்மனையில் இருக்கும் பெரும்பாலான அறைகளின் தரைப்பகுதி நல்ல வளுவளுப்பாக இருப்பதன் காரணம் முட்டை ஓடு, முட்டையின் வெள்ளைக்கரு, தேங்காய் செரட்டை, சுண்ணாம்பு. 

ந்திராலோசனைக் கூடம் கடந்து அடுத்ததாக நாம் நுழையும் இடம் அன்னதான மண்டபம். இரண்டு தளங்களாக அமைந்திருக்கும் அன்னதான மண்டபத்தில் ஒரேநேரத்தில் இரண்டாயிரம் ஆயிரம் பேர் வரை அமர்ந்து உணவருந்த முடியும். மேலும் தினசரி இங்கே அன்னதானம் நடைபெறுமாம். உணவு சமைக்கும் இடம், ஊறுகாய் பராமரிக்க பயன்படுத்திய சைனா களிமண்ணால் செய்யப்பட்ட தாளிகள் போன்றவற்றை பத்திரமாக பராமரித்து வருகிறார்கள். 

ன்னதான மண்டபம் தொடர்ந்து வருவது தாய்க்கொட்டாரம். மிகபெரிய கூட்டுக்குடும்பம், அங்கே வாழ்ந்ததற்கான சாட்சியங்களை விட்டுச் சென்றுள்ளது இந்த தாய்க்கொட்டாரம். ராஜா ரவிவர்மா முதன் முலில் கட்டிய தாய்க்கொட்டாரத்தை சுற்றியே அவரைத் தொடர்ந்து சமஸ்தானத்தை ஆட்சி புரிந்தவர்கள், அரண்மனை மொத்தத்தையும் விஸ்தரித்துள்ளார்கள். தற்போது அமைந்திருக்கும் அரண்மனையின் மொத்த பரப்பளவு ஆறரை ஏக்கர். 

தாய்க் கொட்டாரத்தைத் தொடர்ந்து வருவது மூன்று அடுக்குகளைக் கொண்ட ராஜ மாளிகை. இங்கு மன்னரின் படுக்கையறை மற்றும் ஓய்வெடுக்கும் அறைகள் அமைந்துள்ளது. மன்னரின் படுக்கையறையில் இருக்கும் கட்டிலானது 64 மூலிகைகள் சேர்த்து செய்யப்பட்ட மருத்துவ குணமுடைய கட்டிலாகும். மேலும் இக்கட்டிலை டச்சுகார்கள் மன்னருக்கு நட்பு நிமித்தமாக பரிசளித்துள்ளனர் . 


ந்த அறையைத் தொடர்ந்து வருவது அரச குமாரிகளின் அந்தபுரம். இங்கு அரசனைத் தவிர வேறு யாருக்குமே அனுமதி இல்லை. நல்ல நீளமான அறைகளையுடைய அந்தபுரத்தின் இருபக்க சுவர்களிலும் ரசம் மங்கிய ஆளுயர பெல்ஜியம் கண்ணாடிகள் தொங்குகின்றன. ஒரு கண்ணாடியின் அருகில் ஒப்பனை செய்துகொள்ள வசதியாக ஊஞ்சல் ஒன்று கட்டித்தொங்க விடப்பட்டுள்ளது. 

திருவிதாங்கூர் அரச குடும்பத்தைப் பொருத்தவரையில் பெண்களுக்கே அதிக மரியாதைகள் மற்றும் சலுகைகளை வழங்கியுள்ளனர். மேலும் இங்கே ராணியின் மகள்வழிப் பேரனே ஆட்சிப் பொறுப்பை ஏற்று நடத்த வேண்டும் என்றொரு விதியும் உள்ளது.

ந்தபுரத்தைத் தொடர்ந்து வரும் மற்றொரு நீளமான அறையில் மன்னரின் ஆட்சிகாலத்தில் நடைபெற்ற சாதனைகள், போர்கள், மன்னரிடம் அடிபணிந்தவர்கள், மற்ற முக்கிய நிகழ்வுகள் முதலியவை ஓவியங்களாக வரையப்பட்டு தொங்க விடப்பட்டுள்ளன. 

தைத் தொடர்ந்து வருவது இந்திர விலாசம். இந்திர விலாசமானது மாட வீதிககளை நோக்கியபடி அமைந்துள்ளது. மாட வீதிகளில்  இறைவன் உலா வரும்போது தரிசிக்கும் வண்ணமாக அமைக்கப்பட்டுள்ளது. மேலும் மன்னர் நகர்வலம் செல்லும் போது யானையின் அம்பாரியில் ஏறி அமர்வதற்குண்டான இடமும் இங்கே இருக்கிறது. வெளிநாட்டில் இருந்து வரும் விருந்தினர்களுடன் மன்னர் உரையாடும் இடம் இந்திரவிலாசம் என்பதால் சற்றே நவீனபாணியில் கொஞ்சம் அகலமாக விசாலமாக கட்டப்பட்டுள்ளது.

தைத் தொடர்ந்து வரும் இடம், முழுக்க முழுக்க கற்களால் கட்டப்பட்ட நவராத்திரி மண்டபம். மன்னர்கள் வாழ்ந்த காலத்தில் இங்கிருந்த சரஸ்வதி சிலை தற்போது இல்லை. அரண்மனையின் கலாசாலையும் இம்மண்டபமே. அரசி மற்றும் அரச குடும்பத்துப் பெண்டிர் கலை நிகழ்சிகளை பார்த்து ரசிக்கும் படியாக மரத்தாலான மறைவான தடுப்பு ஒன்றும் இவ்விடத்தில் இருக்கிறது.



ரண்மனையின் வெளிப்புறதில் மிகபெரிய தடாகம் ஒன்றை கட்டியுள்ளார்கள். மன்னரின் அறையில் இருந்தும், அந்தபுரத்தில் மற்றும் கோவிலில் இருந்தும் தடாகத்தினுள் செல்லும் படியாக மொத்தம் மூன்று வழிகளை அரண்மனையின் உட்புறம் இருந்து அமைத்துள்ளார்கள். 

ரண்மனையினுள் மிக ஒடுக்கமான ஆயுதசாலைகள் உள்ளன, ஈட்டி, வேல்கம்பு, கையெறி குண்டு, துப்பாக்கி முதலான போர்க்கால ஆயுதங்களை மிகவும் ரகசியமாக மற்றும் பாதுகாப்பாக வைத்திருந்திருக்கிறார்கள். மேலும் இந்த பகுதியை சுற்றி கடுமையான காவல் இருந்துள்ளது. ஆங்கிலேயே ஆட்சி காலத்தில்  பெரும்பாலான ஆயுதங்கள் மிலேச்சர்களால் அபகரிக்கப்பட்டதாக கூறுகின்றனர், எஞ்சிய ஆயுதங்களை அருகில் இருக்கும் அருங்காட்சியகத்தில் பார்வைக்கு வைத்திருக்கிறார்கள்.

திரைப்பட ஷூட்டிங்களுக்கு வாடகைக்கு விட்டே நாயக்கர் மகாலைநாசம் செய்துவிட்டோம், முறையான பராமரிப்பின்றி, வேலூர், செஞ்சி மற்றும் இன்னபிற கோட்டைகளின் முக்கால்வாசி வீதம் அழிந்தே போய்விட்டது. தமிழகத்தில் உருப்படியாய் இருக்கும் ஒரே ஒரு அரண்மனை இதுவாகத்தான் இருக்கவேண்டும் .அதுவும் பாழ்பட்டுப் போகுமுன் ஒருமுறை நேரில் சென்று பார்த்துவிடுங்கள். 

ரண்மனையை சுற்றிப்பார்த்துவிட்டுத் திரும்புபோது 'ஏ இங்கதாண்டி சந்திரமுகி படமும் ராரா பாட்டும் எடுத்தாங்களாம்' என்று கூறிக்கொண்டே கடந்த அந்த அழகிய மங்கையை உள்ளிருக்கும் மன்னர்களின் ஆன்மா மன்னிக்கவே போவதில்லை :-)  

படங்கள் : நன்றி கூகுள் 

பயணிப்போம்...