Showing posts with label புத்தகம். Show all posts
Showing posts with label புத்தகம். Show all posts

16 Jan 2014

சென்னை புத்தக உலா 2014 - புத்தகம் சரணம் கச்சாமி...!

ரண்டு வருடகளுக்கு முன்பு பச்சையப்பன் கல்லூரி எதிர்புறம் இருக்கும் ஆங்கிலோ இந்திய வழி பள்ளிகூடத் திடலில் நடைபெற்ற புத்தககாட்சிக்கு நேற்றுதான் சென்று வந்தது போல் இருக்கிறது. அட அதுவாவது பரவாயில்லை. கடந்த வருட புத்தக கண்காட்சியின் போது நானும் வாத்தியாரும் அருந்திய தேநீரின் சூடுகூட இன்னுமென் நாவிலிருந்து விலகவில்லை, அதற்குள் சென்னை புத்தககாட்சி - 2014 என்றால் நம்புவதற்கு கொஞ்சம் மிரட்சியாக இருக்கிறது. நம்பமுடியாத வேகத்தில் பயணித்துக் கொண்டிருக்கிறான் காலதேவன். யாராவது அவனைப் பிடித்து நிறுத்தி கொஞ்சம் ஆசுவாசப்படுத்துங்களேன், அந்த இடைவெளியில் நான் கொஞ்சம் ஆசுவாசப்பட்டுக் கொள்கிறேன். 


தீபாவளியையும் பொங்கலையும் இழந்துவிட்ட இக்காலத்தில் மனதிற்கு ஆறுதல் தரும் ஒரே திருவிழா புத்தகக் கண்காட்சிதான். சென்னைக்கும் பபாசிக்கும் நன்றி. புத்தக கண்காட்சி ஆரம்பித்த இரண்டாம் நாளே நான் அண்ணன் ஆவி ரூபக் மற்றும் ஸ்கூல்பையனுடன் சென்றுவிட்டாலும் இரவாட்டம் தடுபாட்டம் போட்டதால் முழுவதும் சுற்ற இயலாமல் பணிக்கு திரும்பி விட்டேன். இருந்தும் நேற்று மிக நிதானமாக மற்றொரு ரவுண்ட் அடித்துவிட்டேன்.

கடந்த வருட புத்தகக் கண்காட்சிகளில் எங்கு திரும்பினாலும் 'அவசர வழி ' தெரிந்ததே தவிர அவசரத்திற்கோர் வழி கண்ணிலேயே படவில்லை. நல்லவேளையாக இம்முறை அரங்க நுழைவாயிலின் அருகிலேயே சுத்தமான சுகாதாரமான தற்காலிக கழிப்பிடம் கட்டி வைத்துள்ள பபாசிக்கு யாராவது கோவில் கட்டினால் அதில் என் பங்காக ரூபாய் ஆயிரத்தி ஒன்று தரலாமென உத்தேசம்

எத்தனையெத்தனை புத்தகங்கள், பதிப்பகங்கள், ஆசிரியர்கள்... மலைமலையாய் குவிந்து கிடக்கும் புத்தகங்களையெல்லாம் பார்க்கும் போதே மலைப்பாய் இருக்கிறது. எங்கிருக்கிறார்கள் இத்தனை எழுத்தாளர்களும். இப்புத்தகங்களைப் பார்க்கும் போது அராத்துவின் புத்தக வெளியீட்டில் மதன் கூறியது நியாபகம் வருகிறது. மனிதன் தன்னுடைய வாழ்நாளில் அத்தனை புத்தகங்களையும் படித்துவிட முடியாது, அதனால் புத்தக தேர்ந்தெடுப்பில் மிகக் கவனமாக இருக்க வேண்டுமென்று. இங்கே வாசகனுக்கு விடப்பட்டிருக்கும் மிகப்பெரிய சவாலும் இதுதான். 

யாரைப் படிப்பது, என்ன மாதிரியான எழுத்துக்களைப் படிப்பது என்பதில் எனக்கென எவ்வித வரைமுறைகளும் இருந்ததில்லை, ஆபத்தும் அதுவே. 'நாங்கள் பதிப்பிப்பது எல்லாமே நல்ல புத்தகங்கள்தான்' என்று மார்தட்டிய சில முன்னனிப் பதிப்பகங்களை நம்பி வாங்கிய புத்தகங்கள், தொடர்ந்து வாசிக்கப் பிடிக்காமல் வீட்டில் இடத்தை அடைத்துக் கொண்டுள்ளன. அதனால் இம்முறை மிகவும் யோசித்து, பார்த்துப்பார்த்து, முக்கியமான எழுத்தாளர்களின் சில படைப்புகளை மட்டுமே வாங்கியுள்ளேன்/வாங்கவுள்ளேன். வரும் வருடத்தில் கி.ரா, அசோகமித்திரன், வண்ணதாசன், நாஞ்சில்நாடன் ஆகியோரின் ஒரு நாவலையோ அல்லது ஒரேயொரு சிறுகதைத்தொகுப்பையோ படித்துவிட வேண்டுமென்று முடிவும் செய்துள்ளேன். 

ஸ்டால்களில் அடுக்கபட்டிருக்கும் பல புத்தகங்களின் தலைப்புகள் ஆச்சரியப்படுத்துகிறது (அ) ஆயாசப்படுத்துகிறது. 'அதிக உயரம் வளர்வது எப்படி', 'ஆண்குழந்தை பிறக்க என்ன செய்ய வேண்டும்?' ஷப்பா முடியல. 

ஒரு பதிப்பகத்தில் அந்த வருடத்திற்கான வருமானம் குறைவெனில் உடனே ஒரு மருத்துவர் பெயரில் அந்தரங்க சந்தேகங்களின் தீர்வுகள் குறித்து புத்தகம் வெளியிடத் தொடங்கிவிடுகிறார்கள். எல்லா பதிப்பகங்களிலும் நமது அந்தரங்க சந்தேகத்திற்கு தீர்வு கிடைக்கிறது. அதேநேரம் இதுபோல் நான்கு புத்தகங்கள் படித்தால், 'ஐந்தாவதை நானே எழுதிவிடுவேனோ?' என ஐயமாகவும் இருக்கிறது. இப்படியான அந்தரங்க புத்தகங்களும் காமசூத்திர புத்தகங்களும் மட்டுமே கண்ணில்பட்ட நிலையில் அந்த ஸ்டாலின் ஒரு அடுக்கில் காமம் + காதல் =கடவுள், நவீன காமசூத்திரம் உங்களுக்காக என்ற புத்தகளுக்கு நடுவே 'செஸ் விளையாட கற்றுக்கொள்வது எப்படி?' என்றொரு புத்தகம் கண்ணில் பட்டது. அட அசிங்கம் புடிச்சவிங்களா இப்படி எல்லாமாடா தலைப்பு வைப்பீங்க என்றபடி மற்றொரு முறை அத்தலைப்பை வாசித்த போதுதான் உணர்ந்தேன் 'க்'கை சேர்த்து வாசித்தது என் தவறு என்று. 

மீனாட்சி புத்தக நிலையத்தில் சுஜாதா சாண்டில்யன் உட்பட பல எழுத்தாளர்களின் புத்தகங்கள் மலிவு விலைக்கு கிடைக்கின்றன. சிலவற்றை பொறுக்கிக் கொண்டேன்.

விகடன் ஸ்டாலினுள் நுழைந்த போது என்னருகே நின்றவர் 'ச்ச என்ன தம்பி புஸ்தகம் ரேட்டு ல்லாம் தாறுமாறா இருக்கு' என்றார் சிரித்துக்கொண்டே. 'அதான் சார் பிரச்சனையே' என்றேன் அமைதியாக. 'இல்ல தம்பி ஒரு புஸ்தகமும் வாங்க முடியலியே என்ன பண்றது' என்றார் தனது ஆதங்கக் குரலில் . 'அதுதான் சார் நம்ம பிரச்சனையே' என்றேன் கொஞ்சம் துடுக்காக, மனிதர் என்ன நினைத்தாரோ தெரியவில்லை அதன் பின் என்னிடம் ஒருவார்த்தை கூட பேசவில்லை. 
  
உயிர்மை, காலச்சுவடு, தமிழினி போன்ற பல பதிப்பகங்கள் மீது கோபம் கோபமாக வருகிறது. சாதாரண சிறிய புத்தகத்திற்குக் கூட யானைவிலை குதிரைவிலை. தரம் இருக்கிறது, இல்லையென்று சொல்லவில்லை. அதற்காக எல்லா புத்தகங்களையுமே வாசகனானவன் பொக்கிஷம் போல் போற்றிப் பாதுகாப்பான் என எப்படிச் சொல்லமுடியும். ஒருமுறை படிப்பான், சுவாரசியம் மிகையென்றால் மேலும் இருமுறை படிப்பான். அப்படிப்பட்ட புத்தகங்களை மிகத்தரமான அச்சிலும், ஏனையவற்றை சாதாரண அச்சிலும் வெளிக்கொணர்ந்தால் எம்மைப் போன்ற மத்யமர்களின் வாசிப்பின் பரப்பும் விரியுமே? அதே மேடையில் சாரு வருத்தபட்டார் என் போன்றவர்களின் புத்தகங்கள் 1000 பிரதிகளைக் கூட தாண்டி விற்பதில்லை என்று. இவ்வளவு விலை வைத்தால் எவன் வாங்குவானய்யா! நடுத்தர வர்க்கமும் வாங்குபடியான (வி)நிலை வராதவரை தமிழ்ச்சமுதாயத்தின் பெரும்பகுதி தன் நேரத்தையும் பணத்தையும் இலக்கியம் நோக்கி செலவழிக்க மறுக்கிறதென ஒவ்வொரு எழுத்தாளனும் பதிப்பகமும் பொங்கும் உங்களின் பொருமல்கலளில், புலம்பல்களில் இம்மியளவு நியாயமும் இருக்கபோவதில்லை.  

மேற்கூறிய பத்தியில் இருக்கும் என் ஆதங்கத்தின் பெரும்பகுதி முத்திரை பதித்த எழுத்தாளர்களையே சென்று சேரட்டும். ஜெயமோகன், கிரா, எஸ்ரா, பாரா, வண்ணதாசன், நாஞ்சில்நாடன், அசோகமித்திரன், சாரு, வாமுகொமு இன்னும்பலர் என யாருடைய எழுத்துக்களும் மலிவு விலையில் இல்லை. தங்களுடைய மிக முக்கியமான புத்தகங்களையாவது மலிவு விலை பிரசுரமாக பிரசுரித்திருக்கலாமே என்ற ஆதங்கம் மட்டுமே என்னிடம் மிச்சமிருக்கிறது. ஒருவேளை அப்படி வெளியிடுவதாய் உத்தேசமிருந்தால் தயவுசெய்து உயிர்மை பக்கம் போய்விடாதீர்கள். அவர்களுடைய அகராதியில் மலிவுவிலை எனப்படுவது நூற்றி ஐம்பதுக்கும் மேல் :-)     

பாரதி புத்தக நிலையம் என்ற ஒன்றைப் பார்த்தேன், தரமான காகிதம், குறைவான விலை நேர்த்தியான அச்சு. என்னவொன்று யாருமே பிரபலமாகாத எழுத்தாளர்கள். என்ன நம்பிக்கையில் வாங்குவது என்றே தெரியவில்லை. இங்கே நிலை இப்படி என்றால், அங்கே நிலை அப்படி. விகடன் கிழக்குப் பதிப்பகங்கள் கிடைத்த தலைப்புகளில் எல்லாம் புத்தகங்களை சரமாரியாக அச்சிட்டுத் தள்ளியுள்ளன. கிழக்கு போகிற போக்கைப் பார்த்தால் 'எங்கே விக்கிபீடியாவில் இருக்கும் எல்லாவற்றையும் மொழி பெயர்த்து விடுவார்களோ' எனப்பயமாக இருக்கிறது. என்னவொன்று அவர்களிடம் தரமான எழுத்தாளர்கள் இருக்கிறார்கள் (பத்திரிக்கையாளர் சமஸ் எழுதியிருந்தார் அவர்களை தரவிறக்க மொழி பெயர்ப்பாளர்கள் என்று). 

பாரா, சொக்கன் மற்றும் பலர் என்று பலரும் அங்கே போட்டிபோட்டுக் கொண்டு எழுதுகிறார்கள்ஏதோ ஒன்று. மேலைக் கலைகளை தமிழில் செப்பா விட்டால் மெல்லத் தமிழினி சாகுமென்று சொன்னான் பாரதி. அதற்கேற்ப பல கற்பித்தல்களையும் தமிழில் புகுத்திக் கொண்டிருக்கும் கிழக்கு மற்றும் விகடனுக்கு வாழ்த்துக்கள். இருந்தும் இப்புத்தகங்களில் இருக்கும் நம்பகத்தன்மை அந்த எழுத்தாளனின் மேல் இருக்கும் நம்பகத் தன்மையே அன்றி வேறொன்றும் இல்லை பராபரமே. தற்போது இந்த பட்டியலில் மதி என்ற ஒரு புத்தக நிலையமும் இணைந்துள்ளது. 

இம்முறை ஆங்கிலப் புத்தகங்க ஸ்டால்களின் எண்ணிக்கையும் குழந்தைசார் புத்தகங்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. எஸ்ரா தன் மகனை கதை கூற சொல்லி அதனை குழந்தைகள் படிக்கும் விதத்தில் எழுதப்பட்ட புத்தகங்களும் அரங்கேறியுள்ளன. குலவிச்சை கல்லாமல் பாகம்ப(டட்)டும்.  

ஜெமோ இணையத்தில் எழுதிய எல்லாவற்றையும் புத்தகமாக்கி விட்டார்கள். விகடனில் ஜோதிஜியின் டாலர் நகரம் கிடைகிறது. இந்த புத்தக சந்தையின் மற்றோர் இன்ப அதிர்ச்சி ரஞ்சனி அம்மா புத்தகம் எழுதியிருப்பது.


கீழைக்காற்று என்னும் கம்யுனிச ஸ்டாலில் புத்தகம் பார்த்துக் கொண்டிருந்த போது கீ.வீரமணி என்னருகே நின்று கொண்டிருந்தார். அவருடன் படமெடுக்க ஒரு கூட்டம் ஓடிக் கொண்டிருந்தது. உயிர்மையில் மனுஷ்யபுத்திரனிடம் கையெழுத்து வாங்க காத்துக் கொண்டிருந்தது ஒரு கூட்டம். ஒரு ஐந்து நிமிடம் அவர் அருகில் நின்று கொண்டிருந்தேன், அதற்குள் ஐம்பது பேராவது கையெழுத்து வாங்கியிருப்பார்கள். ஒரு பெண்மணி அவரிடம் வந்து 'என்ன உங்கள ஒரு வாரமா டிவியில பார்க்க முடியல' என்று நலம் விசாரித்தார். மற்றொரு பெண்மணி 'எம்பொண்ணு நல்லா பேசுவா. அவ பேச்சு போட்டியில கலந்துக்குற மாதிரி ஏதாவது புத்தகம் இருந்தா சொல்லுங்க' என்றபடி டார்ச்சர் செய்ய, தன் மயிரை சிலுப்பிய மனுஷ் வேறொருவருக்கு கையெழுத்து போடுவதில் மும்மரமாகிவிட்டார்.    

டிஸ்கவரியில் வேடியப்பன் செம பிசியாக இருந்தார். வெளியே வா.மணிகண்டனும் விநாயக முருகனும் நின்று கொண்டிருந்தார்கள். வா.மணிகண்டனின் வாயில் நுழையா பெயர் கொண்ட அந்த புத்தகத்தில் கையெழுத்து வாங்கியபோது, அந்த மனிதரின் வெற்றிக்குப் பின்புலமாக இருப்பது அவரது நிசப்தம் வலைப்பூ என்பது கொஞ்சம் பெருமையாக இருந்தது எனக்கு. மேலும் டிஸ்கவரியில் பதிவர்கள் எழுதிய புத்தகங்களை தனியாக ஒரு டேபிளில் அடுக்கி வைத்திருந்தார் திரு.வேடியப்பன்.     

ஸ்பை மற்றும் ரூபகிற்கு மத்தியில் எங்களைப் பிடித்த ஆவி...! 

ஜக்கி வாசுதேவின் புத்தகங்களுக்கு என்றே ஒரு தனி ஸ்டால் திறந்து வைத்துள்ளார்கள். அங்கும் ஒரு கூட்டம் அள்ளுகிறது. நித்தியின் உரைகளை புத்தகமாக எழுதி சாருவும், ஜக்கியின் உரைகளை புத்தகமாக எழுதி சுபாவும் பிரபலமடைந்த நிலையில், எதிர்கால சாமியார் ஒருவரின் இடமும், அவரது உரையை எழுதப்போகும் எழுத்தாளனின் இடமும் இன்றளவிலும் வெற்றிடமாகவே உள்ளது. இதனை எண்ணியெண்ணி வெதும்பிய என் மனதில் கணப்பொழுதில் தோன்றியது அந்த எண்ணம், ஏன் தோழர் அரசனை சாமியாராக்கி அவரது அந்திநேர ஆனந்த உரைகளை புத்தகமாக தொகுத்து வெளியிடக்கூடாது என்று. இதன் மூலம் என் எழுத்தாளனாகும் கனவும் நனவாக வாய்ப்பு இருக்கிறது. தோழர் அரசன் அடுத்த புத்தக காட்சிக்குள் சாமியாராக வேண்டுமென்று நித்தியையும் ஜக்கியையும் வேண்டிக்கொண்டே ஜக்கியின் ஸ்டாலில் இருந்து வெளிவந்தேன்.  

இறைவா இவ்வளவு புத்தகங்களுக்கு மத்தியில் 'நீ எப்ப புத்தகம் எழுதப்போற' என்று என்னை நோக்கி வரும் உசுபேத்தல்களை சமாளிக்கும் வல்லமையைக் கொடு இல்லையேல் இந்த ஜாம்பவான்களோடு போட்டிபோடத் தேவையான ஆற்றலைக் கொடு. இரண்டில் இரண்டுமே நடக்காவிட்டால்... வேண்டாம் அதைப்பற்றி சிந்திக்கப் போவதில்லை. 
         
எனது சிந்தனைகளில் இருந்து சிந்தனைகளில் இருந்து வெளிப்பட்டு மீண்டும் புத்தக கடலுக்குள் மூழ்கியபோது எங்கு திரும்பினாலும் மக்கள் மக்கள் மக்கள். ஒருகட்டத்தில் சுற்றியிருந்த மக்கள் மறைந்து புத்தகங்கள் புத்தகங்கள் புத்தகங்கள் மட்டுமே தோன்றியபோது நிஜமாகவே அது ஒரு புத்தகாதீனமான அனுபவம் என்பதைத் தவிர சொல்வதற்கு வேறொன்றும் இல்லை.     

புத்தகம் சரணம் கச்சாமி...!