29 Sept 2012

தாண்டவம் விக்ரதாண்டவம்


படமும் படம் சார்ந்த கதையும் :  

" தாண்டவம் படத்துக்கு போலாமா " இதை நண்பன் என்னிடம் கேட்ட அடுத்த நொடி, நான் சொல்லிய பதில் " தெரியாத மொக்க படத்துக்குலாம் நான் வார மாட்டேன். நல்ல படமா வந்தா சொல்லுங்க போகலாம்"

"லேய் அது விக்ரம் படம்ல, விஜய் டைரெக்சன், வா நாம போகலாம்". 


விக்ரமிற்காக இல்லாவிட்டாலும் விஜய்க்காகவாவது செல்லலாம் என்று முடிவெடுத்துவிட்டோம். தேவி சினிமாஸ். சென்னையின் மிகப் பிரபலமான மிகப் பெரிய தியேட்டர். தேவியில் படம் பார்க்க எனக்கு மிகவும் பிடிக்கும். பெரிய ஸ்க்ரீன், அதில் படம் பார்பதற்கே அவ்வளவு அருமையை இருக்கும். சிங்கம் படம் நண்பன் மணிகுமாருடன் தேவியில் தான் பார்த்தேன், பத்து ருபாய் டிக்கெட், இரண்டாவது வரிசை.. சூர்யா வண்டியில் இருந்து இறங்கினால் எங்கள் தலையில் தான் கால் வைப்பார். சண்டைக் காட்சிகளில் வில்லன்கள் அனைவரும் எங்கள் மீது தான் வந்து விழுந்தார்கள், அப்படி ஒரு அருமையான உணர்வைக் கொடுக்கக் கூடிய திரையரங்கு. தேவியும் தேவி பாரடைசும் அருமையான அரங்கங்கள். சென்னையில் படம் பார்க்க வேண்டும் என்று விரும்பினால் ஒருமுறையாவது இங்கு சென்று படம் பாருங்கள். 

தாண்டவம் 

விக்ரம் மற்றும் விஜய் படம், அனுஷ்கா, சந்தானம், ஜீ.வி, நீரவ்ஷா, அன்டோனி என்று பழைய கூட்டணி ( இந்த விஷயங்கள் அனைத்தும் பட டைட்டில் போடும் பொழுது தான் எனக்குத் தெரியும்). படம் பற்றிய சிறு விஷயம் கூட தெரிந்து வைத்திருக்கவில்லை மேலும் படம் மீது எதிர்பார்ப்பு எதுவும் இல்லை. சொல்லப்போனால் சுந்தரபாண்டியன் படம் மீது இருந்த எதிர்பார்ப்பு கூட இதில் இல்லை, எங்கே எப்படி இந்த தவறு நிகழ்ந்திருக்கக் கூடும் என்று கணகாலமாய் நானும் சிந்தித்துப் பார்கிறேன், சடுதியில் விடையும் சிக்கமாட்டேன் என்கிறது. ( படம் பார்த்த பாதிப்பில் இது ஒன்று தான் மிச்சம் என்று நினைக்கிறன்).       

காட்சிகள் லண்டனில் விரிகிறது, ஹாலிவூட் தரத்திற்கு முயற்சித்து இருகிறார்கள், படத்தின் ஆரம்பக் காட்சிகள் மணிரத்னத்தை நினைவு கூர்கின்றன, ஆனால் மணி சார் பட வசனம் போல எதுவும் சுவாரசியம் இல்லை. சந்தானம் ஆள் மேருகேறியிருகிறார், படத்தில் காமெடி செய்வதற்கான வாய்ப்பில் வாய்ப்பூட்டு போடப்பட்டு விட்டதால், கொடுத்த காசுக்கு "அழகாக" நடித்துச் சென்றிருக்கிறார். தெய்வத்திருமகள் சந்தானத்தை தாண்டவமாட விடாமல் செய்துள்ளார் இயக்குனர் விஜய். இருந்தும் புதுமையாய் சில காமெடிக் காட்சிகளை முயற்சி செய்து பார்த்திருப்பது குஸ்காவில் கிடைத்த தக்குனூன்டு சிக்கன் பீஸ்.  

டம் சீரியசான படம் என்பதாலோ அல்லது சீரியசான படமாக காண்பிக்க முயல்வதாலோ, காட்சி நகர்வுகளில் வரும் அனைவருமே தங்கள முகத்தை சீரியசாய் வைத்துள்ளனர். விஜய் சார் "இயக்கம் விஜய்" என்று போட்டாலே நாங்கள்  கண்டுபிடித்து விடுவோம், படம் சீரியசான படம் என்று. இதற்காக நீங்கள் இவ்வளவு மெனக்கெட்டிருக்க வேண்டிய அவசியமில்லை. நாசர், அவரை அவ்வளவு புத்திசாலியாக அறிமுகம் செய்ததைப் பார்த்த பொழுது தான் நிமிர்ந்து உட்கார்ந்தேன், கொஞ்சம் ஓவராக நிமிர்ந்து விட்டேன் போல முதுகு வலிக்கிறது. நாசர் அறிமுகப்படுத்திய tab என்ன விலை சார், அழகாய் இருந்தது, பின்னாட்களில் வாங்கலாம் என்று முடிவெடுத்துள்ளேன். அதையும் அவர் மூலமாகவே கூறி இருந்தால் உபயோகமாய் இருந்திருக்கும். அடுத்த படத்தில் இது போன்ற சிறு பிழை கூட நேராமல் பார்த்துக் கொள்ளுங்கள்.   


எமி ஜாக்ஸன், ஒரு பாடலில் நடந்தார், சிறிது ஆடினார், சிறிது டமில் பேசினார், சிறிது நேரத்தில் காணாமல் போய்விட்டார். அழகான பாத்திரப் படைப்பு. லக்ஸ்மி ராய் தாம்தூம் ரஷ்ய பயணத்தை முடித்த கையோடு அதே உடையுடன் லண்டனுக்கு பறந்து வந்துவிட்டார். வந்த வேகத்தில் கதையில் இருந்தும் பறந்து போய்விட்டார் ( கடைசி வரை உயிரோடு தான் இருப்பார் என்பதை சொல்லிக் கொள்கிறேன்). அனுஷ்கா, இவரைப் பார்த்தால் எனக்கு ஹீரோயின் என்ற பிரமை கூட ஏற்படவில்லை, ஆண்டி ஹீரோயின் என்று வேண்டுமானால் சொல்லிக் கொள்ளலாம். இவருக்கும் ஏன் இவ்வளவு சீரியசான முகபாவம் பாத்திரப்படைப்பு என்பது அனுஷ்காவிற்கே  வெளிச்சம். ஆனால் சில இடங்களில் ரசிக்க வைக்கிறார். குறிப்பாக முதலிரவு காட்சி. ஹி ஹி ஹி படத்த பாருங்க பாஸ் என்ன நடக்கும்னு தெரியும். 

ன்னும் பல கதாபாத்திரங்கள் திரையில் உலவும். அவை அனைத்தும் நம்மைக் குழப்ப வேண்டும் என்று ஏற்படுத்தப்பட்டு பின்னர் கதையையே குழப்பிய பாத்திரங்கள், அவை எல்லாவற்றையும் கூறி உங்களைக் குழப்ப நான் விரும்பவில்லை.ஒளிப்பதிவைப் பொறுத்தவரை  நீரவ்ஷா எனக்கு மிகவும் பிடித்த ஒளிப்பதிவாளர், ஒளிப்பதிவில் எந்த குறையும் வைத்திருக்கவில்லை, சில சமயங்களில் சாதாரண காட்சி அமைப்புகளைத் தவிர. இசை ஜீவி, ஜீவித்திருக்கலாம், வசனம் சில இடங்களில் ஈர்க்கிறது.      

விக்ரதாண்டவம் 

டத்தின் ஹீரோ, தோன்றிய முதல் காட்சியிலிருந்து இறுதி வரை இறுக்கமாகவே வருகிறார், அளவெடுத்துத் தைத்த சட்டையை விட, அளவெடுத்து வைத்திருக்கும் அந்த மீசை மிக அழகாய் இருக்கிறது, சீயானுக்கு பொருந்திப் போகிறது. பார்வை அற்றவனாய் வரும் பொழுது செய்யும் அவரின் மானரிசன்கள் மட்டுமே படத்தின் பலம். விக்ரமின் உடற்கட்டு அசரவைக்கிறது. அனுஸ்காவை இம்ப்ரெஸ் பண்ண முயலும் காட்சிகள் கவிதை, கணவனின் தொழில் என்னவென்றே அறியாமல் இருக்கும் ஹீரோயினின் காட்சிகள் கண்கட்டு வித்தை. விக்ரம் யார் என்று அனுஷ்காவிற்கு தெரியவரும் காட்சி பற்றி என்னவெல்லாமோ கற்பனை செய்திருந்தேன், அவ்ளோ பெரிய ஆபிசரை அறிமுகம் செய்து வைக்கும் பொழுது ஏற்படும் அதிர்வுகள் என்னுள்ளேயே ஏற்படவில்லை, பாவம் அனுஷ்கா என்ன செய்வார். அந்தக் காட்சி விவரிப்பில் இன்னும் மிடுக்கு ஏற்றி இருக்கலாம். நீங்கள் குறைந்தது ஒரு ஹரி படமாவது பார்த்திருந்தால் இது போன்ற விசயங்களில் கோட்டை விட்டிருக்க மாட்டீர்கள்.  

விக்ரம் என்ற நடிகன் உங்களுடன் இருந்ததால் தப்பித்தீர்கள், விக்ரம் வரும் காட்சிகளை வேண்டுமானால் மீண்டும் ஒருமுறை பார்க்கலாம். உங்கள் அடுத்த படத்திற்கு விமர்சனம் படிக்காமல் செல்வது இல்லை என்று முடிவெடுத்துவிட்டேன். என்னை போன்ற தமிழ் சினிமா ரசிகர்கள் உங்கள் படங்களையும் நம்பிப் பார்க்க ஆரம்பித்திருகிறார்கள். நீங்கள் தாண்டவமாடாவிட்டாலும் பரவாயில்லை ருத்திர தாண்டவம் ஆடாமல் இருந்தால் சரி. 

விளம்பரம் :


பின்குறிப்பு : தாண்டவம் படத்தில் ஹீரோவின் பெயரும், விளம்பரத்தில் இருக்கும் ஹீரோவின் பெயரும் சிவகுமார் தான் என்பது தற்செயலாக நடந்த விசயமே அன்றி யாம் ஒன்று அறியோம் பராபரமே  

தாண்டவம் விக்ரதாண்டவம்

நீங்கள் வந்து சென்ற எஸ் டி டி மிக முக்கியம் அமைச்சரே (வசனஉதவி : அண்ணன் எஸ்-டி-டி சுவடுகள்


25 Sept 2012

நைட்ஷிப்ட் - எஞ்சோகக் கதையக் கேளு தாய்குலமே


மெரிக்கா விழித்துக் கொண்டிருக்கும் நேரம் எவன் ஒருவன் இந்தியாவில் விழித்துக் கொண்டு, அவனது இந்தியக் குடும்பத்திற்காகவும், அமெரிக்காவின் வர்த்தகக்  குடும்பத்திற்காகவும் உழைக்கிறானோ, அவனின் ஒருநாள் இருளில் விடிந்து, விடியலில் படுக்கையைத் தேடுவதற்கான இடைப்பட்ட வேளை அல்லது வேலை தான் நைட்ஷிப்ட். 

ரவு பத்து மணியளவில் கம்பெனிக்குள் நுழையும் நேரம், மொத்த கம்பெனியும் தூக்கத்தைத் தேடி வீட்டை நோக்கி ஓடிக் கொண்டிருக்கும். பகலில் நூறு பேருக்கு மேல் வேலை செய்யும் ப்ரோஜெக்ட்டில் நைட்ஷிப்ட்டில் பத்து பேர் இருந்தால் அதுவே அதிசயம். அங்கொன்றும் இங்கொன்றுமாக ஆளுக்கொரு கணினியில் முகம் புதைத்து தங்கள் இருப்பை அமெரிக்கர்களுக்கு தெரிவித்துக் கொண்டிருப்பர். பதினோரு மணியளவில் ஆங்காங்கு இருக்கும் லவுட் ஸ்பீக்கரில் இருந்து மெல்லிய சங்கீதம் கசியத் தொடங்கும். ஸ்பீக்கரின் மொழயில் இருந்து அமர்ந்திருப்பவனின் தாய்மொழி தெலுங்கா ஹிந்தியா மலையாளமா என்று தெரிந்து கொள்ளலாம். எந்த ஒரு ஸ்பீக்கரிலிருந்து தெலுங்கு ஹிந்தி தமிழ் என்று பல மொழிப்பாடல்கள் ஒலிபரப்பப் படுகிறதோ, உறுதியாகச் சொல்லலாம் அவன் தமிழன் என்று!

பொதுவாக நைட்ஷிப்ட்களில் வேலை அதிகம் இருக்காது. ஒருவேளை அன்றிரவு நாம் முழித்தவர் முகத்தின் ராசியைப் பொறுத்து ஐந்து பேருக்கான வேலையை தனியொருவன் செய்ய வேண்டிய கட்டாயத்திற்கும் தள்ளப்படலாம். போர்களத்திற்கு செல்லும் வீரனும், நைட் ஷிப்டிற்கு செல்லும் சூரனும் எதற்கும் தயாராகத் தான் செல்ல வேண்டும். பனிரெண்டு மணி வரை ஒன்றுமே தெரியாது, அதற்க்கு மேல் கால தேவனுக்கும் ஓய்வு தேவைப்படும் போல், நகரவே மாட்டான். 

நிமிடங்கள் நகர நகர பசிக்கும் நமக்குமான சண்டை ஆரம்பமாகும். சரவணபவனை தவிர அனைத்து மலிவு விலை பணக்காரக் கடைகளும் தங்கள் கடையை சாத்தியிருப்பார்கள். சரவணபவனில் இட்லி தோசையை எதிர்பார்த்துச் சென்றால் சட்னியாகி வெளியே வரவேண்டியது தான். பானிபூரி, பேல்பூரி மட்டுமே கிடைக்கும். அவற்றைச் சாப்பிடாதே என்று மனசு சொல்லும். "அடேய் எதையாவது தின்னுத் தொலை" என்று வயிறு அடம் பிடிக்கும். வேறுவழியே இல்லாமல் அங்கு கிடைக்கும் மலிவு விலை காபியை வாங்கினால், பதினெட்டு ருபாய் மூன்றே உரிஞ்சல்களில் காலியாகி இருக்கும். காலியான டம்லரையே  முறைத்துப் பார்த்துக் கொண்டிருந்தால், சொத்தையே சரவணபவனுக்கு எழுதிக் கொடுத்தது போன்ற பிரமை ஏற்பட்டுவிடும். அப்படியோரு நிலைக்கெல்லாம் வந்துவிடக் கூடாது. காரணம் ஐந்து மணிக்கு சொத்தை எழுதிக் கொடுக்க மீண்டும் வந்து தான் ஆகவேண்டும். 

மெதுவாக நடக்க ஆரம்பித்தால், செக்யுரிட்டிகள் தமக்கான இடத்தில உட்கார்ந்துகொண்டு சாமியாடிக் கொண்டிருப்பார்கள். டாஞ்சூர் பொம்மை (தஞ்சாவூர் என்பதை டாஞ்சூர் என்று சொல்லாவிட்டால் நான் தமிழன் இல்லை) இவர்களிடம் தோற்றுவிடும். வலமும் இடமுமாக ஆடும் பொழுது புவிஈர்ப்பு விசை இவர்களை கீழ்நோக்கி இழுத்தாலும், தூக்கத்தில் கூட மீசையில் மண் ஒட்டி விடக்கூடாது என்ற பாதுகாப்பு விசை மேல்நோக்கி இழுத்துக் கொண்டே இருக்கும். இருந்தும் அதிகாலையில் கொட்டும் பனியில் இவர்களைப் பார்ப்பதற்கே கஷ்டமாக இருக்கும். 

காப்பி குடித்துவிட்டு அலுவலகத்திற்குள் நுழைந்தால் பலரும் கண்ணை மூடி வானம் பார்த்துக் கொண்டிருப்பார்கள். இவர்கள் அனைவரையும் கண்காட்சிப் பொருள் போல் பார்த்துவிட்டு கணினியில் அமர்ந்தோமானால் ஒரு மணியில் இருந்து நான்கு மணி வருவதற்குள் நான்கு யுகங்கள் கடந்து இருக்கும். எவ்வளவு தான் அதிகமான வேலை பார்த்திருந்தாலும், வேலை பார்த்தது போலவே இருக்காது. நைட் ஷிப்டில் இருக்கும் ஒரே ஒரு நன்மை இது தான். எந்தவிதமான தொந்தரவும் இருக்காது. நைட் ஷிப்டிற்கு பழகி விட்டோமானால், மூளை வேலையை தவிர வேறு எதையும் யோசிக்காது. ஆக்கப்பூர்வமான சிந்தனைகள் எளிதில் பிறக்கும்.

வ்வளவு பெரிய கொம்பனாக இருந்தாலும், நான்கு மணி வந்தே தீரும். சாமி ஆடியே ஆக வேண்டும். சில சமயங்களில் மணியைப் பார்க்காமலே உற்சாகமாக வேலை பார்பதுண்டு, தப்பித்தவறி மணியை பார்த்துத் தொலைத்து, மணியும் நான்கைக் காட்டிவிட்டதென்றால் அவ்வளவு தான், புவி ஈர்ர்ப்பு விசை தன் வேலையைக் காட்டத் தொடங்கிவிடும். இந்த நேரங்களில் லவுட் ஸ்பீகர்கள் ம்யுட்டிற்கு சென்று இருக்கும். எதாவது ஒரு மூலையில் இருந்து மெல்லிய குறட்டை ஒலி பரவத் தொடங்கும். மணி ஐந்தைத் தொடும் பொழுது சாயா குடிக்கச் சென்று விட வேண்டும். இல்லை என்றால் "சாய்ந்து சாய்ந்து நான் தூங்கும் பொழுது அடடா" தான். அடுத்த நாள் ஷிப்டிற்கு வருபவன் வந்து மூஞ்சியில் தண்ணீர் தெளித்தால் மட்டுமே மயக்கம் கலையும்.

ம் சாரதியின் துணையுடன் வீட்டிற்கு வந்தால் ஒன்பது மணி வரை கட்டாயம் முழித்திருக்க வேண்டும். இல்லை என்றால் காலை மதியம் இரண்டு வேளை சாப்பாட்டையும் மறந்து, இரவு வேளை சாப்பாட்டை மட்டுமே சாப்பிட வேண்டிய நிலைமைக்குத் தள்ளப்படுவோம். ஒன்பது மணிவரை வீட்டில் இருப்பவர்களிடம் எரிந்து விழுந்து கொண்டு, தூக்கத்தில் ஏதாவது உளறிக்கொண்டிருந்தால், வீட்டிலிருப்பவர்களுக்கு நல்ல டைம் பாஸ் ஆகும். வீட்டில் இருந்தால் கெஞ்சி கொஞ்சியாவது சாப்பிட வைத்துவிடுவார்கள்.

ண்பர்களுடன் ரூமில் இருப்பவர்கள் வாழ்விலோ நைட் ஷிப்ட் என்பது சற்றே கொடுமையான விஷயம். எது வேண்டுமானாலும் கடைக்குத் தான் செல்ல வேண்டும். அதற்க்கு வருத்தப்பட்டே உணவைத் தியாகம் செய்யும் பலரும் உண்டு, ஒரு காலத்தில் நான் உட்பட. விடுமுறை தின நைட் ஷிப்ட் இன்னும் கொடுமையானது. மொத்த நண்பர்கள் கூட்டம் ரூமில் கொட்டம் அடித்துக் கொண்டிருக்கும். அதுவரை கேட்டிராத பிரபல பாடல்கள் அனைத்தையும் அன்றைக்குத் தான் அபூர்வமாகக் கேட்பது போல் ரசித்து சத்தமாகப் பாடிக் கொண்டிருப்பார்கள். அலறும் டிவி அடிதடி சண்டை, ஸ்ஸ்ஸப்பா எப்படிக் கண்ணைக் கட்டும்.

ப்படியே ஒருவழியாகத் தூங்கினாலும், நமது தொலைதூர அணைத்து நன்பேண்டாக்களுக்கும் அப்போது தான் நம் நியாபகம் வரும். " மச்சி நைட் ஷிப்ட்டா, பகல் நேரத்துல தூங்குறியே வெக்கமா இல்ல" இப்படியெல்லாம் பேசி, அன்பாக கடுப்பைக் கிளப்புவார்கள். நல்ல தூக்கத்திலிருந்து திடிரென்று முழிப்பு வந்தால், சர்வமும் வெளிச்சமயமாக இருக்கும். இதைத் தடுக்கவே நான்கு கர்சீப் ஐந்து போர்வை தேவைபடும். கரண்ட் கட் புழுக்கம் என்று அரசும் தான் பங்கிற்கு கடுப்பைக் கிளப்பும். இவ்வளவு இன்னலுக்கு மத்தியிலும் தூங்கி எழுந்து மொபைலில் மணி பார்த்தால், மணி ஆறைத் தொட்டிருக்கும்.  அது காலை ஆறு இல்லை, மாலை ஆறு என்று மூளை மனதிடம் சொல்லும் பொழுது மனம் சோகமாக சொல்லும் "எஞ்சோகக் கதையக் கேளு தாய்குலமே,  நம்ம  தாய்குலமே".          

அமெரிக்கா விழித்துக் கொண்டிருக்கும் நேரம் எவன் ஒருவன் இந்தியாவில் விழித்துக் கொண்டு, அவனது இந்தியக் குடும்பத்திற்காகவும், அமெரிக்காவின் வர்த்தகக்  குடும்பத்திற்காகவும் உழைக்கிறானோ, அவனின் ஒருநாள் இருளில் விடிந்து, விடியலில் படுக்கையைத் தேடுவதற்கான இடைப்பட்ட வேளை அல்லது வேலை தான் நைட் ஷிப்ட்.


*************************

விளம்பரம் ஒன்று : 

எனது சகோதரி ஸ்ரீமதி அவளும் தன் பங்கிற்கு வலைபூ ஒன்று ஆரம்பிதுள்ளாள். மேடம் பிறந்து வளர்ந்தது எல்லாம் தங்லீஷ் நாட்டில் என்பதால் ஆங்கிலத்தில் தான் வலைபூ எழுதுவார்களாம். நாம் தமிழ் பிரபலங்கள் ஆக நினைத்தால், அவளோ உலக மகா பிரபலம் ஆக நினைக்கிறாள். நீங்கள் விரும்பினால் உங்களுக்குத் தெரிந்த ஆங்கில வலைப்பூ பற்றிய அறிமுகமும் தகவல்களும், ஆங்கில வலைப்பூவை பிரபலப்படுத்தும் வழிகளும் அவளுக்குச் சொல்லிக்கொடுங்கள். சத்தியமா எனக்குத் தெரியாது.   

விளம்பரம் இரண்டு :


விளம்பரம் மூன்று : 

எனது வலைப்பூவில் விளம்பரம் என்பது புதிய பகுதி. இங்கே செலவில்லாமல் விளம்பரம் செய்து தரப்படும். இனி என் ஒவ்வொரு பதிவின் முடிவிலும் விளம்பரம் தொடரும். எனக்குப் பிடித்த பதிவு பற்றிய விளம்பரங்கள் இங்கே தவறாது இடம்பெறும்.  
      

நைட்ஷிப்ட் பற்றிய எனது பதிவிற்கான உங்கள் கருத்துக்களை தவறாது சொல்லிச் செல்லுங்கள். 




20 Sept 2012

நாடோடி எக்ஸ்பிரஸ் - சித்தரைத் தேடி பொதிகையில் ஒரு பயணம்


டர்ந்த காட்டுக்குள் எட்டு கி.மீ மலையேற வேண்டும். வழித்துணைக்கு வருவது ஒரு ஒத்தையடிப் பாதை மட்டுமே. அடர்ந்த காட்டிற்குள் நுழைய நுழைய ஒத்தையடிப் பாதையும் மறைந்து ஒரு கட்டத்தில் நாம் மட்டும் தனித்து விடப்பட்டிருப்போம். சூரியஒளி நுழைய தயங்கும் மேற்குத்தொடர்ச்சி மலை. மூலிகை வனம், சித்தர் காடு என்ற பெருமை தாங்கிய காடுகளுக்குள் அத்திரி மகரிஷியின் சீடரான கோரக்கரைத் தேடி நாம் செல்லும் பயணம் சற்றே வித்தியாசமாய்த் தான் இருக்கும்.

னது அண்ணனும், விகடனில் மாணவப் பத்திரிகையாளனாக இருந்த அவன் நண்பனும் ஒரு ஆய்வுக் கட்டுரைக்காக கோரக்கரைத் தேடிச் சென்று வந்திருந்தனர். சித்தரைத் தேடிச் செல்லும் எங்கள் பயணத்திற்கான பாதையும் இங்கு தான் போடப்பட்டது. வழக்கமான ஒரு கல்லூரி தினத்தின், வாத்தியார் இல்லாத பாடவேளையில் ரிலாக்சாக முடிவு செய்யப்பட்ட சற்றே ரிஸ்கான திட்டம். என்.எஸ்.எஸ் கேம்ப் மூலம் கோரக்கர் கோவில் இருக்கும் மலைபகுதியில் ட்ரக்கிங் சென்ற அனுபவமுள்ள மணிகுமரனும் மணிகண்டனும் வழிகாட்டுவதாகக் கூறவே பயணத்திற்கு ஆயத்தமானோம்.


ல்லூரியை கட் அடிப்பது முதல் பிளான். கோரக்கரை தேடி செல்வது இரண்டாவது பிளான். அடர்ந்த காட்டிற்குள் தனியாக செல்ல வேண்டாம் என்று சிலரும்  பாதுகாப்பு இல்லை போக வேண்டாம் என்று சிலரும் மிரட்டினார்கள். இது போன்ற உற்சாகமூட்டும் சொற்களைக் கேட்க கேட்க சித்தரைத் தேடிச் செல்வதில் இருந்த ஆர்வமும் அதிகமாகியது. முடிவு செய்த ஆறுபேரும் அடுத்த நாளே கிளம்பினோம். எங்கள் கல்லூரி இருக்கும் ஆழ்வார்குறிச்சியில் இருந்து பத்து கி.மீ தொலைவில் உள்ளது கடனாநதி அணை. அங்கிருந்து ஒரு கி.மீ நடந்தால் மலையடிவாரத்தை அடையலாம். வித்தியாசமான பயணத்தின் ஆரம்பநொடி தொடங்கும் இடமும் இங்கு தான்.       

லையேறும் பொழுது பசித்தால் சாப்பிட தேவையான திராட்சை அல்வா மிக்சர் முறுக்கு பிஸ்கட் போன்றவற்றை கிலோ கணக்கிலும், பெப்சி மிரண்டா போன்றவற்றை லிட்டர் கணக்கிலும் வாங்கிக்கொண்டோம். தென்காசியில் இருந்து கடனாநதி செல்லும் பேருந்தல் கல்லூரி செல்வது தான் வழக்கம். அம்பையில் இருந்து வரும் நண்பர்கள் அந்த பேருந்து கல்லூரியைக் கடக்கும் பொழுது அதில் ஏறிக்கொள்ள வேண்டும் என்று ஒப்பந்தமானது. கல்லூரியைக் கட் அடித்துவிட்டு துணிச்சலான கொஞ்சம் வித்தியாசமான எங்கள் முதல் பயணம் ஆரம்பம் ஆகியது. 

லையடிவாரத்தை நோக்கி நடக்கத் தொடங்கும் பொழுதே எங்கள் கோட்டம் ஆரம்பித்துவிட்டது. ஆனால் மலையடிவாரத்தின் ஆரம்பத்தை பார்த்தபொழுது தான் அதுவரை வெளிவரமால் இருந்த பயம் எட்டிப்பார்க்கத் தொடங்கியது. செக்போஸ்டில் இருந்த வனக்காவலர்கள் எங்களை அழைத்து மிரட்டத் தொடங்கினார்கள். எங்கே அனுமதிக்க மறுத்து விடுவார்களோ, போட்ட திட்டம் எல்லாம் வீணாகிவிடுமோ என்றெல்லாம் சிந்திக்க ஆரம்பித்தோம். புத்தகப் பையினுள் மது சிகரெட் வைத்துள்ளோமா என ஆராய்ந்தனர். நாங்கள் பரமகல்யாணி மாணவர்கள் என்று தெரிந்ததும் வனத்திற்குள் செல்ல இன்முகத்துடன் அனுமதித்தனர். காரணம் எங்கள் கல்லூரி நிறுவனருக்கு அங்கே அதிகமான மதிப்பும் மரியாதையும் உண்டு. பிளாஸ்டிக் குப்பைகள் போட வேண்டாமென்று மட்டும் அறிவுறுத்தினர்.   

புலிகள் காப்பகம். புலிகள் கொடிய வன விலங்குகள் உள்ள வனப்பகுதி என்ற எச்சரிக்கைப் பலகை கொடூரமாக எங்களை வரவேற்றது. வனகாவலரிடம் சென்று விளக்கம் கேட்டோம். புலிகள் நடமாட்டம் குறிப்பிட்ட மாதங்களில் தான் அதிகமாக இருக்கும் என்றும் அந்த நேரங்களில் வனகாவலர்கள் ஆங்கங்கே பாதுகாப்பிற்கு இருப்பார்கள் என்றும் வயிற்றில் பாலை வார்த்தனர். ஆனால் அடுத்த நொடியே அடுத்த குண்டைத் தூக்கிப் போட்டார்கள். வனத்திற்குள் மிக அமைதியாக செல்லுங்கள். ஒருவேளை புலி எதுவும் குறுக்கிட்டால் சத்தம் இடாதீர்கள். யானை மற்றும் நரிகள் உண்டு. மனிதர்களைப் பார்த்தால் மிரண்டு தாக்கக் கூடும். அதனால் கையில் கம்பு ஒன்று வைத்துக்கொள்ளுங்கள், கூட்டமாக ஓடாதீர்கள் என்றெல்லாம் அறிவுரை கூறினார்கள். 

எங்களை அடுத்து வரவேற்றது அதிக அழுத மின் வேலிகள் தொடாதீர்கள். இதை பார்த்த அடுத்த நொடி யாரால் தான் அடுத்த அடி எடுத்து வைக்க முடியும். அங்கருந்த வனகாவலரிடம் " வேறு பாதை இல்லையா, எப்படி காட்டிற்குள் செல்வது" என்று கேட்டோம். கிண்டலாக சிரித்துக் கொண்டே கூறினார், " அதுல கரண்ட் வந்தே பலகாலம் ஆகுது, சட்டை கிழியாம பார்த்து நுழைஞ்சு போங்க" . இருந்தும் ஒருவித பயத்துடனே வேலிக்குள் நுழைந்து மலையேறத் தொடங்கினோம். குற்றாலத்தின் ஆரம்ப அருவியான செண்பகாதேவிக்கும் வனத்தினுள் தான் செல்லவேண்டும். ஆனால் அது அடர்ந்த வனம் இல்லை. பகல் வேலைகளில் ஆள் நடமாட்டமும் உண்டு.  ஆனால் இங்கோ அப்படி இல்லை. ஆரம்பம் முதலே அடர்ந்த வனம் ஆரம்பமாகிவிட்டது. எப்போதாவது சூரிய வெளிச்சம் ஊடுருவும். மிகவும் குளுமையான சூழ்நிலை. சில இடங்களில் பாதை இரண்டு மூன்றாகவும் பிரிந்து குழப்பத்தை உண்டு பண்ணியது. வரும் பொழுது தடம் மாறிவிடக் கூடாது என்பதற்காக வழித்தடங்களை போட்டோ பிடித்துக் கொண்டோம். 

மேற்குத்தொடர்ச்சி மலையில் அதிகம் அறியப்படாத நதி கடனா நதிதண்ணீர் வரைந்து குறையுமே தவிர வற்றாத ஜீவ நதி. கடனா அணை தயவில் விவசாயம் அமோகமாக நடந்து வருகிறது. பாதையில் குறுக்கிடும் கடனா நதியைத் தாண்டி தான் கோரக்கரைப் பார்க்கச் செல்ல வேண்டும். தண்ணீர் விசயத்தில் எங்களுக்கு எச்சரிக்கை ஜாஸ்தி. மேலும் எங்கள் நண்பர்கள் கூறிய முக்கியமான விஷயம் " திடீர்னு மழை பெஞ்சா வெள்ளம் அதிகமா வரும். ஆத்த கடகாதீங்க திரும்ப வந்த்ருங்க. அந்தப் பக்கம் மாட்டிகிட்டா வெள்ளம் குறையுற வரை கரையிலேயே நில்லுங்க. காட்டாறு வெள்ளம் திசையறியாது கொடூரமானது. மிக முக்கியமான இந்தக் கருத்தை மட்டும் செவிமடுத்துக் கேட்டுக் கொண்டோம்.

ற்றில் தண்ணீர் மிகக் குறைவாகவே இருந்தது. பாதம் நனையாமல் அக்கறைக்கு சென்று விடும் அளவிற்கு பாறைகள் தங்கள் இருப்பைக் காட்டிக் கொண்டிருந்தன. இருந்தும் எங்களுக்குள் ஒரு விவாதம். விவாதத்தின் இறுதியில் ஆற்றில் இறங்கி குளிக்கலாம் என்ற முடிவுக்கு வந்தோம். அந்நேரம் பெரிய கோடாலியுடன் விறகுவெட்டி ஒருவர் வந்தார். அவரிடம் குளிப்பது பற்றி கேட்டோம். இங்கு ஆழம் இருக்காது என்றும் சற்று தள்ளி குளிப்பதற்கு ஏற்ற வகையில் ஆழம் இருக்கும் என்றும் ஒரு இடத்தைக் காட்டினார். அங்கு சென்று குளிபதர்க்கு நாங்கள் தயங்கவே, அவரும் எங்களுடன் இறங்கிக் குளிக்க வந்தார். அவர் பல வருடங்களாக இங்கு தான் விறகு வெட்டி கொண்டிருப்பதாகவும், பச்சை மரங்களை வெட்டத் தான் தடை. பட்டுப் போன காய்ந்த மரங்களை வெட்டிக்கொள்ள அனுமதி உண்டு என்று கூறினார். பொதிகை மலை முழுவதும் மூலிகைகள் நிறைந்து காணப்படுவதால் ஆடு மாடு மேய்க்கத் தடை இருபதாகவும் கூறினார்.

சித்தர்கள் குறித்து கேட்டதற்கு , லேசாக சிரித்தார். காவி உடை உடுத்திய சாமியார்களை அதிகம் பார்க்கலாம் என்றும், யார் சித்தர் யார் சாமியார் என்றெல்லாம் கண்டுபிடிக்க முடியாது. ஆனால் சாமியார்கள் கொடுக்கும் மூலிகை மருந்துகள் சக்தி வாய்ந்தவை. அந்த செடிகளை நம்மால் இனம் காண முடியாது என்றெல்லாம் பல தகவல்களைக் கூறினார். குளித்து முடித்து நாங்கள் கிளம்பும் வரை பொறுமையாக  எங்களுக்குக் காத்துக்கொண்டிருந்த அவர் சிறிது தூரம் எங்களுடனே வந்தார். ஒரு இடத்தில ஒரே போன்ற அமைப்புள்ள பாதை இரண்டாகப் பிரிந்தது. சரியான பாதையை அடையாளம் காட்டி தான் பாதையில் அவரும் எங்கள் பாதையில் நாங்களும் பிரிந்து நடக்கத் தொடங்கினோம். ஒருவேளை அவரே சித்தராக இருப்பாரோ என்றெல்லாம் கிண்டல் செய்து கொண்டே கோரக்கரைத் தேடி பயணித்தோம்.

கோரக்கர் அமர்ந்து தவம் செய்யும் குகையை கண்டோம். பார்பதற்கே ரம்மியமாய் இருந்தது. இன்றும் அவர் அங்கு வந்து தவம் செய்கிறார் என்பது கூடுதல் தகவல். அந்தக் குகையின் அருகில் ஒரு சிறு ஊற்று அருவி போல் செல்கிறது. அதனைப் பற்றி அடுத்து வரும் வரிகளில் கூறுகிறேன். கோவிலைத் தேடி விடைதெரியா பாதையில் ஏதோ ஒரு சந்தோசத்துடன் எதிர்பார்ப்புடன் நடக்க ஆரம்பித்தோம். கரடு முரடான மலையில் திடிரென்று ஒரு பெரிய சமதளப் பரப்பு. இங்கு தான் கோரக்கனாதர் கோவில் உள்ளது. நண்பர்கள் அனைவரும் கோவிலைச் சுற்ற ஆரம்பித்தோம் மணிகுமார் மட்டும் பயணக் களைப்பாய் இருக்கிறது, பிறகு வருகிறேன் என்று கூறினான். பின்பு வந்து பார்த்த பொழுதுதான் தெரிந்தது ஒரு கிலோ திராட்சையையும் தனியொருவனாக தின்று தீர்த்திருந்தான் என்பது. 

(சந்தன மழை பொழியும் மரம்)

கோவிலுக்கு நாங்கள் வருமுன்பே பூஜை முடிந்து நடை சாத்தப்பட்டிருந்தது. தினசரி பூஜை உண்டு. வெளியூரில் இருந்து வருகிறோம் என்றால் அய்யரிடம் முன்பே தகவல் தெரிவிக்க வேண்டும். ஆழ்வார்க்குறிச்சியில் தான் அய்யரின் வீடு உள்ளது. அங்கு யாரிடம் கேட்டாலும் சொல்வார்கள். உங்கள் வருகையை தெரிவித்தால் அவரே உங்களை அழைத்தும் செல்வார் என்பதை எல்லாம் பின்பு தான் நாங்கள் தெரிந்து கொண்டோம். 

கோரக்கர் தான் மூலவர். அவரைத் தான் சந்திக்க முடியவில்லையே தவிர, அவரின் குருக்களான அத்திரியும் அகஸ்தியரும் மரத்தடியில் தான் அமர்ந்திருந்தனர். அவர்கள் தரிசனம் எப்போதும் நமக்கு உண்டு. இங்குள்ள மரத்தில் சித்ரா பௌர்ணமி அன்று சந்தனமழை பொழியும் என்று கூறுகிறார்கள். அன்று எல்லா சித்தர்களும் இங்கு வந்து ஆகாய கங்கையில் நீராடுவதகவும் கூறுகிறார்கள். ஆகாயகங்கை என்பது அங்குள்ள ஊற்று, அதன் சிறப்பு கீழே உள்ள படத்தில் தெளிவாக குறிபிடப்பட்டுள்ளது. கிளிக்கி படித்துக்கொள்ளுங்கள். இரண்டு மணி நேரத்திற்கும் மேல் அங்கிருந்து அந்த இடங்களை ஆராய்ந்துவிட்டு மெதுவாக கீழே இறங்கினோம். 

(ஆகாய கங்கை ஊற்று பற்றிய குறிப்பு)

திரும்பும் பொழுது வந்த வழி மறந்து பாதை மாறிவிட்டோம், எப்படி எங்கே செல்வது என்று தெரியாமல் தனித்து விடப்பட்ட நேரம் கோடைக் காலம் எங்களுக்குக் கைகொடுத்தது. கோடை வெயிலில் கடனா டாம் முக்கால்வாசி வற்றிய நிலையில் இருந்ததால் அதில் இறங்கி நடக்க ஆரம்பித்தோம். வற்றிய அணையில் நடந்தது கூட வித்தியாசமான அனுபவமாகத் தான் இருந்தது. எங்களால் மறக்க முடியாத உற்சாகமான பயணம் அது.  

(கடனா அணை )

காடும் காடு சார்ந்த இடங்களும் ஏதோ ஒரு வகையில் மனிதனின் கவலைகளை மறக்கச் செய்கிறது. மனிதன் தான் எந்த விதமான கவலையும் இன்றி காடுகளையே இல்லாமல் செய்து கொண்டுள்ளான். வாய்ப்பு கிடைத்தால் காடுகள் இருக்கும் பொழுதே அங்கெல்லாம் சென்று வந்துவிடுங்கள் இல்லையேல் கற்பனையில் தான் அவற்றைக் காண வேண்டிய நாள் வரும்.  


நாடோடி எக்ஸ்பிரஸ் குறித்த உங்கள் கருத்துக்களை தவறாது பகிர்ந்து கொள்ளுங்கள். 


17 Sept 2012

புதிய பதிவரை மதிக்காத கே ஆர் பியும், மறந்த கேபிளும்


நண்பனின் நண்பனின் நண்பன் எனக்கும் நண்பனே - பசி குமார் 

வாழ்கையில் ஒருமுறையாவது பைவ் ஸ்டார் ஹோட்டல் செல்ல வேண்டும் என்பது என்(எங்கள்) சிறுவயது ஆசை. அடையார் கேட் என்றழைக்கப்படும் பார்க் ஷெரட்டன் ஹோட்டலில் தான் எனது சித்தி பையன் வேலை பார்த்தான். அப்போது முதலே அவனிடம் கேட்டுக் கொண்டு இருப்போம் அவன் அழைத்துச் சென்றதே இல்லை. சரி நம் சொந்தக் காசில் தான் செல்ல வேண்டும் என்று இருந்தால் செல்லும் நாள் வரும் பொழுது சென்று கொள்ளலாம் என்று விட்டுவிட்டேன்.


நண்பனின் நண்பனின் நண்பனுக்கு திருமண வரவேற்ப்பு பார்க் ஷெரட்டனில் நடைபெறுகிறது வருகிறாயா என்று கேட்டான் எனது நண்பன். செல்லலாம் என்றாலும் ஏதோ ஒன்று தடுத்தது, அதன் பெயர் தன்மானமாக இருக்கலாம் என்பது எனது ஆகச் சிறந்த அவதானிப்பு. அன்றைய மாலை பொழுதில் பதிவர் சந்திப்பு இருந்ததால் என் நண்பனிடம் வரவேற்ப்புக்கு வரமுடியது என்று கூறிவிட்டேன். என் நண்பனுக்கு அதில் உடன்பாடு இல்லை. இறுதியில் என்னை வரவழைக்க அவன் எடுத்த முயற்சி தோல்வி அடையவில்லை. நாங்கள் சென்றது சின்னத்திரை மற்றும் குறும்படங்களில் நடித்து வரும் ஒரு நடிகரின் திருமண வரவேற்பிற்கு. பைவ்ஸ்டார் ஹோட்டல் விருந்து என்பது ஒருபுறம், திரையில் பார்த்தவர்களை தரையில் பார்க்கிறோம் என்ற ஆனந்தம் ஒருபுறம் என்பதால் இந்த வாய்ப்பை நான் இழந்து விடக்கூடாது என்பதில் நண்பன் ஆண்டோ மிகத் தீவிரமாக இருந்தார்.      

சென்று சேர்ந்தோம். மடித்து விடப்பட்ட முழுக்கை சட்டை. இருபது நாள் ஷேவ் செய்யப்படாத தாடி சகிதம் சென்றேன். அங்கு வந்த  ஆஜானுபாகு மனிதர்கள் எல்லாரும் அவர்களைப் போலவே ஒரு ஆஜானுபாகுவான வாகனங்களில் வந்து இறங்கினார்கள். அந்த வாகனங்களையும் அதில் இருந்து இறங்கிய மனிதர்களையும்(!) கண்காட்சிப் பொருளைப் போல் வேடிக்கைப் பார்த்து நின்ற என்னை தலையில் அடித்து உள்ளே இழுத்துச் சென்றான் நண்பன் மணி. உள்ளே நுழையும் வேளை மொபைலை காட்டச் சொன்னார்கள். நோக்கியாவின் புதிய வெளியீடான 101i யை சிறிது வெட்கத்துடன் காண்பித்தேன். அடுத்தது என் நண்பனின் முறை சிரித்துக் கொண்டே தனது மொபலை எந்தவிதமான வெட்கமும் இல்லாமல் காண்பித்தான். அவனது மொபைல் நோக்கியாவின் தரமான வெளியீடு 1100 அதில் டிஸ்ப்ளே பேனலில் மிகப் பெரிய விரிசல் மட்டுமே இருந்தது அதனால் அதைக் காண்பிக்க அவன் வெட்கப்பட வேண்டிய அவசியமும் இருந்திருக்காது.

படியேறி முதல் மாடி செல்ல வேண்டும். படியேறி தான் முதல் மாடி செல்ல வேண்டும் என்பது  கூடவா எங்களுக்கு தெரியாது  என்று நீங்கள் நினைக்கலாம். இங்கே தான் அடுத்த ட்விஸ்ட் நடந்தது. படியேறும் போது ஒரு அழகு மங்கை கீழிறங்கிக் கொண்டிருந்தாள். அவளைப் பார்த்த அடுத்த கணம் ஸ்லிப் ஆகியம் மனம் இல்லை மானம். ஆமாம் ட்விஸ்ட் ஆகியது கதையில் இல்லை என் காலில். வழுக்கி விழப் பார்த்தேன். தோள் கொடுத்தான் நண்பன். இல்லையேல் என் மானம் இல்லையேல் தான். அதன் பின் நடந்த சம்பவங்கள் அனைத்தும் ஒரு வழக்கமான திருமண வரவேற்பு சம்பவங்கள் தான். அவற்றை சொல்லி உங்கள் பொன்னான பொழுதை வீணடிக்க விரும்பவில்லை. காரணம் அந்த பொன்னான தருணங்களில் நாங்களும் கலந்து கொள்ளவில்லை. சாப்பாடு தான் மிக முக்கியம் நமக்கு. முதல் துண்டு சிக்கனை வாயில் வைக்கும் பொழுது நான் எண்ணியது 

நண்பனின் நண்பனின் நண்பன் எனக்கும் நண்பனே - பசி குமார் 

                                                         *******************************
இன்றைய பதிவுலக செய்திகள் வாசிப்பது, வாசிப்பது வேறு யாரும் இல்லை நீங்கள் தான்( ஆமாங்க எழுதினது தான நானு, வாசிப்பது நீங்க தானங்க)     

புதிய பதிவரை மதிக்காத கே ஆர் பி 

டீ நகர் நடேசன் பூங்காவில் ஜீரோ பட்ஜெட்டில் பதிவர் சந்திப்பு நடைபெற்றது. நான் சிவா மதுமதி ஜெய் பாலகணேஷ் சார் மோகன் குமார் சார் எனது நண்பன் மணிகுமார் உடன் பதிவுலக நாட்டமை கே ஆர் பியும் கலந்து கொண்டார். கேஆர்பி வருவதற்கு முன்பு வரை பதிவர் சந்திப்பாக நடந்து கொண்டிருந்தது, அவர் வருகைக்குப் பின் சந்திப்பின் திசையை மாற்றி புதிய பதிவர்  ஒருவரை மதிக்காமல் ஓரம் கட்டிவிட்டார். ஒரு கட்டத்தில் இதைப் பொறுக்க முடியாமல் அந்த பதிவர் வெளிநடப்பு செய்தார் என்பது தனிகதை. 

(மேற்கூறிய என் கருத்துக்களுக்கும் மெட்ராஸ் பவன் சிவகுமாருக்கும் எந்த சம்மந்தமும் இல்லை என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்). 

புதிய பதிவரை மறந்த கேபிள் 

வெளிநடப்பு செய்த பதிவர், நேரே சென்ற இடம் அடையார் கேட் என்றழைக்கப்படும் பார்க் ஷெராட்டன். பைவ் ஸ்டார் ஹோட்டலையே அதிசயமாக பார்த்தபடி சுற்றித் திரிந்த நமது பதிவர், பதிவுலக சூப்பர் ஸ்டாரை கண்டு கொண்டார். அவரைக் கண்டதும் "கேபிள் சார் எப்படி இருக்கீங்க, என்னைத் தெரியுதா?" என்று கேட்கவும், " உங்களை எங்கயோ பார்த்த மாதரியே இருக்கு" என்று பல்பு கொடுத்தார். "இன்னா சார் பதிவர் சந்திப்புல தோள் மேல எல்லாம் கைப் போட்டு போட்டோ எடுதுகினோம்        , என்னப் போயி மறந்துட்டேன்னு சொல்டீங்களே" என்று புதியவர் செண்டிமெண்டாக, இன்னும் கொஞ்ச நேரம் இருந்தால் இவன் நம்மை மெண்டல் ஆகிவிடுவான் என்று "ஹல்லோ தம்பி அந்த பொக்கே எங்கே?" என்று எங்கோ பறந்து சென்று ஏமாற்றம் அளித்தார்.

(மேற்கூறிய என் கருத்துக்களுக்கும் மெட்ராஸ் பவன் சிவகுமாருக்கும் சத்தியமா எந்த சம்மந்தமும் இல்லை என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்).

நன்றி 

சென்ற பதிவில் பதிவர் சுரேஷ் பற்றி கருத்து ஒன்று கூறியிருந்தேன். அதற்க்கு அவர் என்னுடன் சண்டை போடுவார் என்று எதிர்பார்த்தேன் , ஆனால் அவர் எனக்கு அளித்த பதில் என்னை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியது. இவரையா இப்படி சொல்லிவிட்டோம் என்ற அளவுக்கு என்னை சிந்திக்கச் செய்தது. இருந்தும் என் கருத்துகளை மதித்து உங்களை மாற்றிக் கொண்ட உங்களுக்கு நன்றி. சுரேஷ் எனக்களித்த கமேன்ட்டை கீழ்காணும் இந்த படத்தில் க்ளிக்கி கண்டிப்பாகப் படியுங்கள்.


கோட்டான கோடி நன்றி 


நூறு பாலோவர்களை பெற்றுகொண்டேன். என்னை மென்மேலும் உற்சாகப்படுத்தும் உங்களுக்கு கோட்டான கோடி நன்றிகள்.  




15 Sept 2012

பதிவுலக அரசுப் பயங்கரவாதி ஓர் அறிமுகம்


தமிழ்மணம்.திரட்டிகள். பின்னூட்டங்கள் என்று பதிவுலகில் நடைபெறும் சர்ச்சைகளுக்கு மத்தியில் எழுதும் இந்தப் பதிவை மிக முக்கியமானதாகவே கருதுகிறேன். 

பகுதி ஒன்று 

குதி இரண்டு தான் எழுத வேண்டும் என்று தொடங்கினேன். பகுதி ஒன்றையும் எழுத வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுவிட்டது. பகுதி ஒன்றை படிக்காவிட்டாலும் பரவாயில்லை தயவு செய்து இரண்டை(யும்)  படித்துவிடுங்கள்.  


லைபூ ஆரம்பித்த புதிதில் உங்களில் பெரும்பாலானோருக்கு கிடைத்த அனுபவம் தான் எனக்கும். எந்த ஒரு நண்பனையும் விட்டுவைக்க மாட்டேன். அவனிடம் கணினியும் இணையமும் இருக்கிறதென்றால், நிச்சயம் அவன் என் வலைப்பூவை படித்தாக  வேண்டும், அல்லது படித்தது போன்றவது காட்டிக்கொள்ள வேண்டும். நம் எழுத்து பலபேரை சென்று சேர வேண்டும். அதில் இரண்டு பேராவது "நல்லா எழுதி இருக்கீங்க" என்று கூறி உற்சாகப்படுத்த வேண்டும். நீங்கள் வலைபூ ஆரம்பிக்கும் பொழுது இப்படி சிந்தித்து இருந்தீர்களா என்று தெரியாது. ஆனால் நான் இப்படித் தான் சிந்தித்தேன். இந்தப் பதிவை விட அடுத்த பதிவை நன்றாக எழுத வேண்டும் என்று சிந்தித்துக் கொண்டும் உள்ளேன். "இப்போ எதுக்கு இந்த சுயசரிதம்" என்று கேட்கிறீகளா? 


லைப்பூ ஆரம்பித்த புதிதில் மூன்றாவது பதிவின் முடிவிலேயே என் நண்பர்கள் எரிச்சல் படத் தொடங்கினார்கள். பதிவைப் படிக்க முடியாது ஆர்வம் இல்லை என்று நேரடியாகவே கூற ஆரம்பித்தார்கள். என்னுடைய நான்காவது பதிவிலேயே வலைபூவிற்கு மூடு விழா நடத்தி விடலாம் என்று இருந்தேன். இங்கு தான் ஒரு சிறு திருப்பம். எப்படியோ என் வலைப்பூவை அறிந்து கொண்டு எனக்கும் பின்னூட்டம் இட சிலர் வந்தார்கள். கவனிக்க இந்த நேரங்களில் ஒரு திரட்டியில் கூட என்னை இணைத்திருக்கவில்லை. ஆனால் நான் படிக்கும் பதிவுகளில் என் பதிவைப் பற்றிய குறைந்தபட்ச விளம்பரம் செய்ய ஆரம்பித்தேன். பேய்கள் ஓய்வதில்லை புகழ் சுரேஷ் செய்து வருகிறாரே அவர் போல. நீங்க இப்படி செஞ்சதே இல்லையா சார் என்று கேட்பவர்களுக்கான பதில், புதிய பதிவர்கள் இவ்வாறு செய்தால் அவர்களை உற்சாகப்படுத்துங்கள். அவர்கள் தளங்களுக்கு செல்லுங்கள். எழுத்துப் பிடித்திருந்தால் அவர்களை தட்டிகொடுங்கள். குறைகளை சுட்டிக்காட்டுங்கள்.    

புதிய பதிவர்களுக்கு ஒரு வேண்டுகோள், உங்கள் தளத்திற்கு தொடர்ந்து வர நினைக்கும் உங்கள் நண்பர் வரத் தோடங்கிவிட்டார் என்றால் அவர் தளத்தில் விளம்பரம் செய்வதை நிறுத்திவிடுங்கள். வலைப்பூவில் பத்து நண்பர்களை சம்பாதித்துக் கொள்ளுங்கள், அதன்பின் விளம்பரம் செய்வதை நிறுத்திவிடுங்கள். மற்ற நண்பர்களை உங்கள் எழுத்து சம்பாதித்துக் கொடுத்து விடும். அதையும் மீறி தொடர்ந்து விளம்பரம் செய்தால் செல்லமாகக் குட்டப்படுவீர்கள். இந்த செல்லக் குட்டை பாலகணேஷ் சாரிடம் இருந்து நான் வாங்கியுள்ளேன் (இதை கூறுவதில் வருத்தப்பட ஏதுமில்லை). அதன் பின்னும் நீங்கள் திருந்தாவிட்டால் ஒதுக்கப்படுவீர்கள். சுரேஷ் சார் உங்களை நீங்கள் மாற்றிக் கொள்ள வேண்டிய நேரமிது. ஒருவேளை இங்கும் உங்கள் விளம்பரம் இருந்தால் !@#$%^&*. 

டுத்தது கமென்ட். மெட்ராஸ்பவன் சிவகுமார் என்னிடம் சொன்னார், படிக்க முடிந்தால் படித்து பின்னூட்டமிடு இல்லையேல், படிக்காதே பின்னூட்டமும் இடாதே. காரணம் நாளை உனக்கு வரும் பின்னூட்டமும் அப்படிப்பட்டதாகத் தான் இருக்கும். எங்கள் முதல் சந்திப்பில் அவர் எனக்குக் கூறிய அறிவுரை இது. நியாயமான ஒன்று. ஆனாலும் பின்னூட்டம் ஒருவருக்கு எவ்வளவு உற்சாகம் அளிக்கும் என்பது எனக்கு வரும் பின்னூட்டம் மூலம் நான் அறிவேன். நான் தொடரும் ஒவ்வொருவரின் பதிவையும் படிக்க வேண்டும் படித்தால் பின்னூட்டம் இட வேண்டும் என்று நினைப்பவன். உங்களையும் அப்படி இருக்கச் சொல்லவில்லை. பதிவில் இருக்கும் கருத்துக்கள் பிடித்தால் தவறாது பகிர்ந்து கொள்ளுங்கள். குறை இருந்தால் சுட்டிக்காட்டுங்கள். இங்கு இடம் பொருள் ஏவல் மிக முக்கியம். செவிமடுத்துக் கேட்பவர் யார் செருப்பெடுத்து அடிப்பவர் யார் என்றெல்லாம் இனம் காண வேண்டியது உங்கள் பொறுப்பு.  

ங்களையும் உங்கள் எழுத்துகளையும் பிடித்தவர்கள் மட்டுமே எப்போதும் வருவர். உங்களை தொடர்பவர்கள் அனைவரும் உங்களுக்கு கருதிட வேண்டும் என்று எதிர்பார்க்காதீர்கள். சிலருக்கு சினிமா, சிலருக்கு தொழில்நுட்பம்.சிலருக்கு கதைகள். இப்படி அந்த சிலருக்கான சில பதிவுகளைப் பதியும் பொழுது மட்டுமே அந்த சிலர் உங்களைத் தேடி வருவர். சில பதிவுகளை விரும்பிப் படிக்கும் அந்த சிலரில் நீங்களும் ஒருவர் என்பதை நினைவில் கொள்க. புரிவதற்குக் கடினமாக இருக்கும் இது போன்ற வாக்கியங்களை எழுதுவதைத் தவிர்க்க வேண்டும் (எனக்கு நானே சொல்லிக்கொண்டது). உங்கள் தளத்தில் உங்கள் கருத்துக்கள் மட்டுமே இருக்கட்டும். காப்பி பேஸ்ட்டை  முடிந்த அளவிற்கு தவிருங்கள்   மற்றபடி இது உங்கள் தளம் உங்கள் களம். விளையாடுங்கள்.மேற்கூறிய அனைத்து கருத்துக்களும் எக்காலத்திற்கும் எப்பொழுதும் எனக்கும் பொருந்தும் என்பதை தாழ்மையுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.  

  *********************************************

பகுதி இரண்டு 

லைபூ துவங்கிய சிறிது காலத்திற்குள் எனக்கு அறிமுகம் ஆனவர். பதிவு எழுதுவதில் என் ஆரம்பக் கால சோர்வை நீக்கி உற்சாகம் கொடுத்ததில் இவருக்குப் பெரும் பங்கு உண்டு. சரியோ தவறோ வெளிப்படையாக சொல்லி விடுவார். பதிவுகளில் நான் செய்த பிழைகளை சுட்டிக் காட்டுவார், இது இப்படி இருந்தால் நன்றாக இருந்திருக்கும் என்று அறிவுரை கூறுவார். அதே நேரத்தில் நன்றாக எழுதி இருந்தால் இவரது பாராட்டு தனித்து நிற்கும். எனது ஆரம்பக் காலப் பதிவுகளைப் பார்த்தீர்கள் என்றால் என் எழுத்துக்கள் மீது இவர் காட்டிய அக்கறை புரியும். முக்கியமான விஷயம் எனக்கும் அவருக்கும் கருத்து வேற்றுமைகள் அதிகம். எங்களுக்குள் நடந்த சொற்போர் அதிகம். அவர் பெரியார் பக்தன். நானோ பெரிய பக்தன். அவரைப் பொறுத்தவரையில் அணு உலை வேண்டாம். எனக்கு வேண்டும். இன்னும் எவ்வளவோ விஷயங்கள் சொல்லலாம்.

ங்கே இவரை நான் குறிப்பிட விரும்புவதன் நோக்கம், அவர் கருத்துக்கள் பலராலும் அறியப்படாமல் சென்று சேராமல் இருக்கிறது. முதலில் அவரை யார் என்று சொல்கிறேன், பின்பு அவர் பதிவுகளைப் பற்றிக் கூறுகிறேன். தம்பி என்னும் பெயரில் வலைபூ எழுதி வரும் இவர் தன்னை அரசு பயங்கரவாதி என்று அறிமுகம் செய்துகொள்கிறார். உண்மையைச் சொல்லப் போனால் பயங்கரவாதிகளை அடிபணியச் செய்யும் எல்லை காவல் படையில் பயிற்சியாளராக பண்புரிகிறார். இவர் எழுத்துக்கள் மீது ஈர்ப்பும் மரியாதையும் வரக் காரணம் இந்த ஒரு விஷயம் தான். தன்னை ஒரு சமூகப் போராளியாக அடையாலப்படுதுவதையே பெரிதும் விரும்புகிறார்.

மீபத்தில் இவரது மகன் பாரதி பிறந்த தினம் வந்தது. முகப்புத்தகத்தில் "இன்று இந்த எம்டன் மகன் சே பாரதிக்கு பிறந்த நாள்..சிறந்த மனிதாபிமான மனிதனாக சக மனிதனுக்காக போராடும் போராளியாக வளர உங்கள் ஆசிர்வாதங்கள் மிக அவசியம்...ஆசிர்வதியுங்கள் !!!"  என்ற வாசகங்களுடன் தன் மகனின் புகைப்படத்தையும் இணைத்திருந்தார். கழுத்தில் டாலர் தொங்கியது. முருகன் டாலராகவோ அல்லது விநாயகர் டாலராகவோ இருக்கும் சண்டை போடலாம் என்ற எண்ணத்தில் அவர் மகனின் கழுத்தில் இருந்த டாலரை உற்றுநோக்கினேன் ஆச்சரியம், அதில் இருந்தது சே.கு.வ.ரோவின் உருவம். வாழ்த்துக்கள் அண்ணா. நிச்சயம் பிரமித்துப்போனேன். தலை வணங்குகிறேன்.      



உங்களுக்கு சில வேண்டுகோள்கள்

மூக பிரச்சனைகள், சிறுபான்மையினர் பிரச்சனைகள், சினிமா விமர்சனம், கம்யுனிசம் எழுத என்று பலர் இந்த வலைப்பூவில் உள்ளார்கள். ஆனால் ராணுவத்தைப் பற்றி அதில் நீங்கள் படும் கஷ்டங்கள், சவால்கள், பயணங்கள் இன்ப துன்பகள் போன்றவற்றை எழுத நீங்கள் மட்டுமே இருக்கிறீகள். உங்களைப் போன்றவர்களின் அனுபவங்களை நாங்கள் அறிய ஒரு வாய்பாக இத்தளம் அமையட்டும். 

ற்ற கட்டுரைகளை எழுத வேண்டாமென்று கூறவில்லை. ஆனால் எல்லைப் பாதுகாப்பு படையில் உங்கள் அனுபவங்கள், உங்கள் நண்பர்கள் அனுபவங்கள் பற்றி எழுதுங்கள். உங்கள் மனதிற்கு பிடித்த பதிவு இரண்டு எழுதினால், எல்லைப் பாதுகாப்பு படை பற்றிய பதிவு ஒன்றாவது எழுதுங்கள். திட்டியும் எழுதுங்கள், அதே நேரத்தில் சவால்களையும் சாகசங்களையும் சேர்த்து எழுதுங்கள். 


ந்தப் பதிவின் தாக்கம் இன்றும் என்னுள் இருக்கிறது அதுவும் அந்த வேலிக்குள் வேலை செய்யும் ராணுவ வீரனும் அவர்களை பற்றி நீங்கள் கூறிய கருத்துகளும் நினைத்துப் பார்க்கவே சிலிர்பாய் உள்ளது. உங்களால் தரமான எழுத்துக்களை தர முடியும் என்னும் பொழுது நான் உங்களிடம் கேட்கும் வேண்டுகோள் நியமானது தான்.


உங்கள் பதிவுகள பலரையும் சென்று சேர வேண்டும் என்று எதிர் பார்க்கும் உங்கள் தம்பி.




13 Sept 2012

நாடோடி எக்ஸ்பிரஸ் - ராமேஸ்வரம் தனுஷ்கோடி


யணங்கள் வாழ்கையில் திடிரென்று ஏற்படும் வெற்றிடதையோ அல்லது வெற்றிடம் போன்ற தோற்றத்தையோ உடைக்கவல்ல சிறந்த கருவி. எனது ஆசை உலகத்தை சுற்ற வேண்டும் என்பதில் இல்லை  தமிழகத்தை  சுற்ற வேண்டும். தமிழகத்தில் ஒரு இடம் விடாமல் சுற்ற வேண்டும். அதன் பின் நேரமிருந்தால் இந்தியாவை சுற்ற வேண்டும். ஆம் இந்த நாடோடி பயணங்களின் அடிமை. நான் ராமேஸ்வரம் சென்று வந்த கதையைத் தான் இங்கு பகிரலாம் என்றுள்ளேன். இந்தப் பயணக் கட்டுரை சற்றே உபயோகமானதாய் இருக்க வேண்டும் என்பதற்காக என் அனுபவங்களுடன் சில முக்கியமான விசயங்களையும் சேர்த்துள்ளேன். பின்னலில் நீங்கள் ராமேஸ்வரம் சென்றால் நிச்சயமாய் உங்களுக்கு உதவியாய் இருக்கும். சற்றே பெரிய பதிவு. நேரமிருந்தால் என் அனுபவங்களைப் படியுங்கள். இல்லையேல் ராமேஸ்வரம் தனுஷ்கோடி பற்றிய தகவல்களை மட்டும் அறிந்து கொள்ள நீல நிறத்தில் இருக்கும் எழுத்துக்களை படியுங்கள். 

சென்னை டூ ராமேஸ்வரம் அதிவேக விரைவு வண்டி புறப்படும் நேரமிது. 

ரே ஒரு நாள் பயணம் காலை ஐந்து மணி முதல் மாலை ஐந்து மணிக்குள் எவ்வளவு ஊர் சுற்ற முடியுமோ சுற்ற வேண்டும். மீண்டும் மாலை ஐந்து மணி வண்டி பிடித்து சென்னை திரும்ப வேண்டும். அக்னி தீர்த்தம் என்றழைக்கப்படும் ராமேஸ்வரம் கடலில் குளிப்பது, கோவிலன் உள்ளே இருக்கும் இருபத்தி இரண்டு தீர்த்தங்களில் நீராடல் பின்பு சாமி தரிசனம், தனுஷ்கோடி பயணம் அதன் பின் நேரம் இருந்தால் வேறு ஏதேனும் அருகாமை இடங்களை சுத்தி பார்க்கலாம் என்று தான் திட்டம் தீட்டி இருந்தோம். இதில் எங்காவது ஒரு இடத்தில சறுக்கல் ஏற்பட்டாலும், மொத்த பயணமும் வீணாகிவிடும். பயணம் ஆரம்பித்த முதல் நொடியில் இருந்து இது தான் எங்களின் பெரும் கவலையாக இருந்தது. இருந்தும் ராமேஸ்வரம் மண்ணின் மைந்தன் எனது நண்பன் சுந்தர் மொத்தப் பொறுப்பையும் ஏற்றுக் கொண்டதால் சிறிது மகிழ்ச்சியாகவும் இருந்தது. 

திகாலை நான்கு மணியளவில் பாம்பன் பாலத்தில் ரயில் செல்லும் பொழுது மனதிற்குள் இனம் புரியா மகிழ்ச்சி. ராமேஸ்வரம் என்னும் தீவுக்குள் சென்று கொண்டிருக்கிறோம் என்ற இன்பமே அலாதியாய் இருந்தது. நிச்சயமாய்   ராமேஸ்வரம் ஒரு ஆழி சூழ் உலகு. ஞாயிற்றுக் கிழமை ஆதலால் மிக அதிகமான கூட்டம். வரலாற்றுச் சிறப்பு மிக்க ராமேஸ்வரம் எங்களை வரவேற்றதும் ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க அடையாளத்துடன் தான். ராமேஸ்வரம் ரயில் நிலையத்தில் இரண்டாவது பிளட்பாரம் அமைக்க தோண்டும் பொழுது கண்டெடுத்த தட்சிணாமூர்த்தி சிலையை ரயில் நிலையத்தின் உள்ளே வைத்து வழிபட்டு வருகின்றனர். சென்னையில் ரயில் ஏறும் போதே ஒரு விஷயத்தை கவனித்து இருந்தேன், அது ராமேஸ்வரத்தில் உறுதியானது. ராமேஸ்வரம் முழுவதுமே வட இந்தியர்களை அதிகமாகக் காண முடிந்தது. காசிக்குச் சென்றால் ராமேஸ்வரம் செல்ல வேண்டும் என்று கூற கேள்விபட்டிருக்கிறேன். மேலும் வட இந்தியர்களுக்கான தென்னாட்டுத் தலங்களில் ராமேஸ்வரம் மிக முக்கியமான தலம்.   

சுந்தரின் வீட்டைப் பற்றிக் குறிபிட்டே ஆக வேண்டும். கடற்கரைக்கு மிக அருகில் இருக்கும் புராதனமான வீடு. வீட்டின் பின்வாசலில் தொட்டு விடும் தூரத்தில் இருந்து விரிகிறது வங்காள விரிகுடா. எங்கள் பயண அட்டவணை மாற்றப்பட்டதும் இங்கு தான். கடல் மற்றும் தீர்த்தங்களில் குளித்தபின் நேராக தனுஷ்கோடி செல்வோம், மாலை மூன்று மணி அளவில் கோவிலில் கூட்டம் குறைவாக இருக்கும், அந்நேரம் சாமி தரிசனத்திற்கு செல்வோம் என்று பயணத் திட்டத்தில் சிறிது மாற்றம் செய்து கொடுத்தார்கள் சுந்தர் அம்மாவும் உறவினர்களும் ( டிப்ஸ் :இது அருமையான யோசனை கவனித்துக் கொள்ளுங்கள்). எங்களுக்கு இந்தத் திட்டத்தில் அவ்வளவு உடன்பாடு இல்லை. ஆனால் தீர்த்தங்களில் குளிக்கச் செல்லும் போது பார்த்த கூட்டத்தை வைத்து, இதை விட வேறு நல்ல திட்டம் ஏதும் இருக்க முடியாது என்ற நிலைக்கு வந்தோம். 

மைதியான ஆற்பரிக்காத பெண் கடல். கடல் என்று சொல்வதை விட அக்னி தீர்த்தம் என்பது தான் மிகச் சரியான பெயர். இங்கே பல விதமான சம்பிரதாயங்கள் செய்யப்படுகின்றன. நேர்த்திக் கடன்கள் தீர்க்கப்படுகின்றன. இங்கு குளிக்கும்பொழுது கடலில் குளிப்பது போன்ற உணர்வு நிச்சயமாய் இல்லை. பாபநாசம் ஆற்றில் குளிப்பது போன்ற உணர்வு தான் ஏற்பட்டது. காமெரா கொண்டு செல்வது பாதுகாப்பு இல்லை மற்றும் போட்டோ எடுப்பது சற்று சிரமம் என்பதால், அங்கு சுற்றி திரியும் போட்டோகிராபர் ஒருவரிடம் போட்டோ எடுத்துக் கொள்ளுங்கள். (விலை ருபாய் ஐம்பது). கடலின் ஆரம்பம் சற்றே அழுக்கை இருப்பது போல் தோன்றினாலும் தைரியமாய் உள்ளே இறங்கி குளிக்கலாம் ஜாக்கிரதையாக. 



கோவிலின் வெளிப் பிரகாரத்தில் இருபத்தி இரண்டு தீர்த்தங்கள் உள்ளன.  நண்பன் சுந்தருடன் சென்றதால் ஒவ்வொன்றையும் தெளிவாக விளக்கிக் கொண்டே வந்தான். ராமன் ஒரு சத்ரியன், ராவணன் ஒரு பிராமணன். பிராமணனைக் கொன்ற பிரம்ம்ஹத்தி தோஷம் நீங்க சிவனை ராமன் வழிபட்டதால் ராம ஈஸ்வரம். ராமன் வழிபட்ட சிவனை, இருபத்தி இரண்டு தேவதைகள் தங்களுக்கென தனித் தனி தீர்த்தங்கள் அமைத்து அவற்றில் இருந்து நீர் எடுத்து வழிபட்டு வருவதாக நம்பிக்கை. அந்த  தீர்த்தங்களில் நீராடி வழிபட்டால் சகல தோஷமும் நீங்கும். சந்-தோசம் பெருகும். 

தீர்த்தங்களில் நீராட கட்டணம் ருபாய் இருபத்தி ஐந்து. நுழைவுச் சீட்டு வாங்குவதற்கே பயங்கர கூட்டம். இந்தக் கூட்டத்தில் அகப்பட்டு இருந்தோம் என்றால் நிச்சயமாக கிணறுகளில் மட்டுமே நீராடியிருப்போம். எங்கள் மொத்த திட்டமும் அம்பேல் ஆகியிருக்கும். சுந்தரின் அம்மா எங்களுக்கு துணைக்கு வந்திருந்தார்கள். உள்ளூர், கோவிலின் மிக அருகிலயே வீடு என்பதால் கிணறுகளில் நீர் எடுத்து ஊற்றுபவர் மூலம் எளிதாக டிக்கெட் எடுத்து உள்ளே சென்றோம். நிற்க பிளக்கில் டிக்கெட் விலை ரூபாய் நூறு. தெரிந்தவர்கள் மூலம் சென்றதால் எங்களிடம் எழுபத்தி ஐந்து ருபாய் மட்டுமே வாங்கினார்கள். வெள்ளை வேட்டி வெள்ளை சட்டை இது தான் கிணறுகளில் நீர் இறைத்து ஊற்றுபவர்கள் யூனிபோர்ம். நீங்கள் செல்லாவிட்டாலும் அவர்களே வளைய வளைய வந்து கேட்பார்கள். இவர்கள் மூலம் சென்றால் அணைத்து கிணறுகளிலும் தண்ணீர் தெளிக்கபடுவதில் இருந்து தப்பித்து, ஒரு வாளி தண்ணீர் நம்மீது ஊற்றப்படுவதற்கான பாக்கியம் பெறுவோம்    

தீர்த்தங்களின் பெயர்கள் 

  1. மகாலட்சுமி தீர்த்தம் 
  2. சாவித்திரி தீர்த்தம் 
  3. காயத்ரி தீர்த்தம் 
  4. சரஸ்வதி தீர்த்தம் 
  5. சங்கு தீர்த்தம் 
  6. சக்கர தீர்த்தம் 
  7. சேதுமாதவ தீர்த்தம் 
  8. நள தீர்த்தம் 
  9. நீல தீர்த்தம் 
  10. கவய தீர்த்தம் 
  11. கவாச்ச தீர்த்தம் 
  12. கந்தமாதன தீர்த்தம் 
  13. பிரம்மஹத்தி விமோசன தீர்த்தம் 
  14. சர்வ தீர்த்தம் 
  15. சிவா தீர்த்தம் 
  16. சத்யமிர்த்த தீர்த்தம் 
  17. சந்திர தீர்த்தம் 
  18. சூரிய தீர்த்தம் 
  19. கங்கா தீர்த்தம் 
  20. யமுனா தீர்த்தம் 
  21. கயா தீர்த்தம் 
வறட்சியின் தாக்கம் தீர்த்தங்களையும் விட்டு வைக்கவில்லை. மழை இல்லாததால், கிணறுகளில் நீர் மிகக் குறைவாகவே ஊருகிறது. சில கிணறுகளில் மிக மிகக் குறைவாகவே நீர் உள்ளது. அங்கெல்லாம் வாளியில் தண்ணீர் மொண்டு நம் தலை மீது தெளித்து விடுகிறார்கள். அளவுக்கு அதிகமான கூட்டம். இருந்தும் தெளித்து விடுவதால் ஒரு சொட்டு நீராவது எங்கள் மீது பட்டு பாக்கியவான்கள் ஆனோம். வார நாட்களில் கூட்டம் மிக மிக குறைவாகவே இருக்கும். தீர்த்தங்களில் நீராடி முடிபதற்கு மட்டும் மூன்று மணி நேரதிருக்கும் மேல் ஆனது.கோவிலுக்கு எதிரில் இருக்கும் வசந்த பவனில் காலை உணவை முடித்தோம். காலை டிபன் மிக அருமையாக இருந்தது. விலையும் குறைவு தான். 

எங்களுடைய அடுத்த பயணம் தனுஷ்கோடி நோக்கி ஆரம்பமானது. வேன் அல்லது ஜீப் மூலம் மட்டுமே செல்ல முடியும். வேனில் பதினைந்து பேருக்கு மேல் ஏற்ற மாட்டார்கள். தனுஷ்கோடி சென்று திரும்ப வேனுக்கு ஆகிய தொகை ஆயிரத்து எழுநூறு. ஜீப் பற்றி தெரியவில்லை. 

தனுஷ்கோடி ஒவ்வொரு இந்தியனும் ஏன் ஒவ்வொரு மனிதனும் பார்க்க வேண்டிய இடம். அவ்வளவு அழகு அவ்வளவு அருமை. வேனில் செல்லும் பொழுது அருகில் இருந்த நபர்களுடன் பேசவில்லை சுற்றி இருந்த இடங்களையே பார்த்துக் கொண்டு சென்றோம். சென்னையின் கிழக்குக் கடற்கரையில் ஒரு பக்கம் விரியும் கடலை பார்ப்பதற்கே அவ்வளவு அழகாய் இருக்கும். தனுஷ்கோடி செல்லும் பாதையில் நம் இரு பக்கமும் கடல் விரிகிறது. ஒரு பக்கம் வங்காள விரிகுடா இன்னொரு பக்கம் இந்தியப் பெருங்கடல். இங்கே இன்னும் ஒரு ஆச்சரியம் நிறைந்த இறைவனின் படைப்பை எண்ணி வியக்கலாம். அதனை இன்னும் ஒரு சில வரிகளில் சொல்கிறேன். 

மிக மிக வெண்மையான பட்டு போன்ற மணல். ஒரு குறிப்பிட்ட தூரம் வரை மட்டுமே சாலை, அதன் பின்னான பயணங்கள் அனைத்துமே கடல் மணலில் தான், வாகனம் மணலில் எங்காவது சிக்கிக் கொண்டால் நம் கதி என்னவென்பது ? குறி தான். விடுமுறை நாள் என்பதால் அதிகமான சுற்றுல்லாப் பயணிகளை காண முடிந்தது. சுற்றுல்லாப் பயணிகளின் எண்ணிக்கை எங்களையும் சேர்ந்து முப்பதைத் தண்டி இருக்கும். இதில் நாங்கள் மட்டுமே பதினைந்து பேர் என்பதை கவனத்தில் கொள்க.

வேன்களும் ஜீப்புகளும் வந்து சென்ற வண்ணமாகத் தான் இருந்தன. ஆனாலும் யாரும் பதினைத்து நிமிடத்திற்கு மேல் அங்கு இருக்கவில்லை. நாங்கள் மட்டும் தான் ஒரு மணி நேரத்திற்கும் மேல் அங்கே ஆட்டம் போட்டு கொண்டிருந்தோம் என்று நினைக்கிறன். நேரம் அனுமதிக்காததால் மட்டுமே அங்கிருந்து கிளம்பினோம்.

கடல் நீர் அவ்வளவு சுத்தமாக இருக்கிறது. சென்னை திருச்செந்தூர் கன்னியாகுமரி என்று எங்குமே இல்லாத கடலை இங்கு பார்க்கலாம். கடலின் அழகும், பரந்து விரியும் கடற்கரையும் கவிதை பேசுகிறது. காமிராக் கண்களுக்கு ஏற்ற விருந்து. தனுஷ்கோடியின் மிக முக்கியமான சிறப்பு என்னவென்றால் இங்கே வங்காள விரிகுடாவும், இந்தியப் பெருங்கடலும் ஒரே இடத்தில சங்கமிகின்றன. வங்காள விரிகுடா பெண்கடல். இந்தியப் பெருங்கடல் ஆண் கடல். சாதுவான பெண் கடல் அலைகள் ஏதுமின்றி அமைதியாய் ஒருபக்கமும். ஆற்பரிக்கும் ஆண்கடல் மிரட்சியாய் அதன் அருகிலும் காட்சியளிப்பதை பார்த்துக்கொண்டே இருக்கலாம். 

தனுஷ்கோடியில் இன்றும் பல குடும்பங்கள் வாழ்ந்து வருவதை அங்கிருக்கும் குடிசைகள் குறிப்பிடுகின்றன. புயலால் அழிந்த இடங்கள் யாவும் இன்று அழிவின் சின்னங்கள் இல்லை அழியாச் சின்னங்கள். அவைகளின் அருகில் சென்று பார்க்க நேரம் இல்லை. தூரத்தில் இருந்தே பார்த்தோம். அடுத்த முறை அங்கு செல்லும் பொழுது நிச்சயம் செல்ல வேண்டும். ராமேஸ்வரம் திரும்பும் வழியில் இந்தியப் பெருங்கடல் அவ்வளவு அழகாய் தோன்றவே, வேனை நிறுத்தி அங்கும் ஒரு பத்து நிமிடம் ஆட்டம் போட்டுவிட்டே திரும்பினோம்.   

தனுஷ்கோடியில் இருந்து வரும் வழியில் இருக்கிறது கோதண்டராமர் கோவில். ராமன் விபீஷணனுக்கு இங்கு தான் பட்டாபிஷேகம் செய்து வைத்ததாக கூறுகிறார்கள். முன்னொரு காலத்தில் இந்தக் கோவிலை கடல் சூழ்ந்து இருந்ததாகவும், இப்போது பல மீட்டர்கள் பின் சென்று விட்டதாகவும் சுந்தர் கூறினான். மதிய உணவு ராமேஸ்வரத்தில் ஆரிய பவனில் சாப்பிட்டோம். மிக மிக அருமையான உணவு. விலையும் குறைவு. அன்லிமிடெட் மீல்ஸ் என்பதை கவனத்தில் கொள்க.     

இரண்டு மணிக்கெல்லாம் மதிய உணவை முடித்து விடவே அடுத்து நாங்கள் சென்ற இடம் ராமர் பாதம். ராமர் இங்கு இருந்து தான் இலங்கையை முதன் முறையாகப் பார்தரம். அது ஒரு சிறிய குன்று. ராமேஸ்வரத்தின் மொத்த காட்சியையும் இங்கிருந்து காணலாம். கண்ணுக்கெட்டிய தூரத்தில் மணல் திட்டு தெரிந்தது. இலங்கையா என்று கேட்டோம் மன்னார் வளைகுடா என்று பல்பு குடுத்தான் நண்பன். ராமேஸ்வரம் தீவை முழுமையாக இங்கிருந்து காணலாம். செல்லத் தவறாதீர்கள். அதன் பின் நாங்கள் சென்ற இடம் பஞ்சமுக ஆஞ்சநேயர் கோவில். இங்கே ராமர் பாலம் கட்ட உதவிய மிதக்கும் கற்களை வைத்துள்ளனர். மேலும் ஆஞ்சநேயருக்காக முப்பது வருடங்களுக்கும் மேல் எரியும் அணையா விளக்கு ஒன்று உள்ளது.

ராமநாதசுவாமி கோவில். சீதை செய்த மணலால் செய்த லிங்கம். ராமனால் வழிபடப்பட்ட லிங்கம், அனுமன் வாலை அறுத்த லிங்கம் அகஸ்தியரால் போற்றப்பட்ட லிங்கம் என்று இந்த லிங்கத்திற்கு பல சிறப்புக்கள் உள்ளன. மாலையில் கூட்டம் மிகக் குறைவாகவே இருந்தது. திருப்தியான சாமி தரிசனம். ராமநாத சுவாமி கோவில் வரலாறு எழுதினால் பதிவு இன்னும் பல பக்கங்களுக்கு நீளும் அபாயம் உள்ளது. அதனால் ஒரு சிறு தகவல், சீதை செய்த சிவ லிங்கத்தை தன் வாலால் அகற்ற முயன்ற அனுமனின் வால் துண்டாகிப் போனது. அந்த வால் விழுந்த இடம் அனுமன் குண்டம். அவர் வாலில் இருந்த ரத்தம் பட்டதால் அங்கிருக்கும் மண் சிவப்பாக இருக்கும் என்னும் கதையை நண்பன் கூறினான். இந்த ஒரு இடத்திற்கு தான் எங்களால் செல்ல முடியவில்லை.

சரியான நேரத்திற்கு எல்லா இடங்களையும் சுற்றிவிட்டு, மிகச் சரியான நேரத்திற்குப் சிங்காரச் சென்னைக்குப் புறப்பட்ட ரயிலையும் பிடித்துவிட்டோம். அதிகாலையில் ரசிக்க முடியாத பாம்பன் பாலப் பயணத்தை மாலை நேரம் அணு அணுவாக ரசித்தோம். கிட்டத்தட்ட ஒன்றரை கி மீ பயணம் அது. மண்டபம் கேம் என்னும் இடத்தில தான் அகதிகள் முகாம் உள்ளது. கூரை வேய்ந்த வீடுகள் தாயகத்தை இழந்து தவிக்கும் மனிதர்கள். அந்த இடத்தை நாங்கள் கடந்த பிறகும் வெகு நேரம் அவர்களைப் பற்றித் தான் பேசிக் கொண்டு வந்தோம்.   

எனது சகோதரர்கள், பள்ளி மற்றும் இளநிலை முதுநிலை கல்லூரி நண்பர்கள் என்று அனைவரையும் சேர்த்துக் கொண்டு ஊர் சுற்றியதால் என்னைப் பொறுத்தவரை இது மிக முக்கியமான மறக்க முடியாத பயணம். மொத்தம் பதினைந்து பேர் சேர்ந்து சென்றோம். என்னை ஏன் அழைத்துச் செல்லவில்லை என்று கேட்கும் நண்பர்களுக்கான பதிலை இன்னும் தேடிக் கொண்டிருக்கிறேன். நான் எதிர்பார்த்த சில பிரச்சனைகள் எழுந்த போதும் ஒரே ஒரு செல்லச் சண்டை தவிர்த்து இனிமையான அனுபவமாக அமைந்த பயணம் இது. என்னுடன் வந்த நண்பர்கள் அனைவரும் என்னை மட்டுமே அறிந்தவர்கள். இருந்தும்  என் நண்பர்கள் அனைவரும் தங்களுக்குள் நெடுநாள் நட்பு போல பழகியது, நிச்சயம் எங்கள் நட்பிற்கு கிடைத்த வெற்றி. நட்பால் நட்பில் மட்டுமே இது சாத்தியம். என்நிலை அறிந்து தன்நிலை புரிந்து நடந்து கொண்ட அனைத்து நண்பர்களுக்கும்

"ஆண்டவரே கோட்டான கோட்டி நன்றிகள் ஆண்டவரே கோட்டான கோட்டி நன்றிகள்".


ராமேஸ்வரம் சென்று வந்த மறுநாளே இந்தப் பதிவை எழுதத் தொடங்கி விட்டேன். இருந்தும் எழுதும் மனநிலையும் சூழ்நிலையும் வாய்க்காததால் இன்றுதான் எழுத முடிந்தது. பதிவு அனுமார் வாளின் நீளத்தை விட கொஞ்சம் குறைவு என்று நினைக்கிறன். இரண்டு பகுதிகளாக எழுதி இருக்கலாம். இரண்டாவது பகுதி எழுதுவதற்குள் ஒருவேளை என் மனநிலை மாறிவிட்டால் சொல்ல வந்த கருத்துக்களை சொல்லாமல் விட்டுவிடும் அபாயம் உள்ளது. அதனால் தான் இந்த விபரீத முயற்சி.  

உங்கள் மனத்தில் தோன்றிய கருத்துக்களை சொல்லிவிட்டுச் செல்லுங்கள்.