9 Jan 2014

கவிதை எழுதுவது எப்படி?

"என்ன பாத்து ஏன்டா இந்தக் கேள்விய கேட்ட?" கிட்டத்தட்ட நானும், கவுண்டரின் மனநிலையில்தான் இருந்தேன். ஒருவேளை சொப்பனசுந்தரி குறித்து கேட்டிருந்தால் கூட சமாளித்திருப்பேன் போலும், சமாளிக்கவே முடியாத ஒரு கேள்வியைக் கேட்டு என்னை நிலைதடுமாறச் செய்துவிட்டனர் என் அலுவலக சகாக்கள்.

சம்பவம் 1:

கிறிஸ்மஸ் சீசன் என்பதால் 'கிறிஸ்மா பிரண்ட்' என்னும் ஒரு புதுவித விளையாட்டை விளையாடிக் கொண்டிருந்தார்கள் அலுவலக தோழர்கள், மெல்ல அவர்களிடம் சென்று 'அப்படின்னா' என்றேன். 'அயைய்யோ உங்களுக்கு இது கூடத்தெரியாதா?" என்ற பதிலிலேயே எனது உலகறிவு பல்லிளித்துவிட்டது. அதன்பின்னும் 'அப்படின்னா' என்றால் 'அப்டியே போயிருங்கன்னா' என்று கூறி விடக்கூடும் என்பதால் அதற்கு மேல் எதுவும் கேட்காமல் ஒதுங்கிக் கொண்டேன்.

கூட்டமாய் சுற்றி நின்றுகொண்டு, ஒரு சின்ன டப்பாவில் இருந்த காகிதங்களைப் பிரித்துப்படித்து, அதில் இருப்பதை செய்யச் சொல்லி இம்சித்துக் கொண்டிருந்தார்கள். சிக்கிய ஆடுகள் வெட்டப்பட்டுக் கொண்டிருந்தன. இந்த உலகில் ஜனனம் எடுத்தபோதே பிரம்மா என் தலையில் ' இவன் வேடிக்கை பார்க்க மட்டுமே லாயக்கு' என்ற ஒரு முத்திரையை குத்தி அனுப்பிவிட்டதால் எனக்கு நானே ஒரு பாதுகாப்பு வளையத்தை உருவாக்கிக் கொண்டு எட்ட நின்று வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தேன். விதி பாதுகாப்புவளையத்தை அத்துமீறும் என்று சற்றும் நினைத்துப் பார்க்கவில்லை. ஹரிஷ் மெல்ல என்னருகில் வந்து 'அண்ணா ஒரு சீட்ட எடுத்து பெர்பார்ம் பண்ணுங்கன்னா' என்றான். 'செவல தாவுடா தாவு' என்ற விதியின் ஏளனக் கெக்கரிப்பு மெல்ல என் காதில் கேட்டது. இந்நேரம் மொத்தகூட்டமும் என்னை நோக்கி திரும்பியிருந்தது. 

என் முகபாவம் கொஞ்சம் பரிதாபத்தை உண்டு பண்ணியிருக்க, 'எதாவது பேசுங்க அதுவே போதும்' என்றளவில் கொஞ்சம் இறங்கி வந்தார்கள். 'ம்ம்ம்கும்'. மசியவில்லை. அப்போதுதான் ஹரிஷ் என்னைப் பார்த்து அந்தக் கேள்வியைக் கேட்டான் "அண்ணா நீங்க எதுவும் பண்ண வேண்டாம், ஒரே ஒரு கவித சொல்லுங்க அதுவே போதும்" என்றான். "என்னது கவிதையா" என்று நான் டரியலாகியது அப்போதுதான். "வேண்டாம் ப்ரோ கவிதயெல்லாம் நமக்கு வராது" என்றாலும் விடுவதாயில்லை. "அண்ணா நீங்க நல்லா எழுதுவீங்கன்னு தெரியும் ஒரு கவித சொல்லுங்கண்ணா" என்றபடி என் கையைப் பிடித்துக்கொண்டான். ஒருவழியாய் தப்பித்துவிட்டாலும் அந்தக் கேள்வி என்னை ஏனோ உருத்திக்கொண்டே இருந்தது.

சம்பவம் 2:

அன்றிலிருந்து சரியாக ஒருவாரத்தில் அலுவலகத்தில் புத்தாண்டு விளையாட்டு விளையாடிக் கொண்டிருந்தார்கள். அன்றைய தினம் விதி என்னை விடுவதாய் இல்லை. இப்போது நான் எதாவது செய்தாக வேண்டிய கட்டாயம். பவித்ரா கூட்டத்தினரிடம் எனது வலைப்பூவை பற்றி ஆங்கிலத்தில் ஏதோ நாலு வார்த்தை கூறிவிட்டு மெல்ல என்னை நோக்கி திரும்பி "அண்ணா அட்லீஸ்ட் ஒரே ஒரு கவிதையாவது சொல்லுங்கண்ணா" என்றாள்.  கவிதை எப்போது எனக்கு அட்லீஸ்ட் ஆனது என்று தெரியவில்லை. அவளும் விடுவதாயில்லை. கடைசியில் பாரதியின் அக்கினிக்குஞ்சு கைகொடுக்க (பலத்த கரகோசத்தின் நடுவே) ஒருவழியாய் விடைபெற்றேன்.

மேற்கூறியது போல் பல்வேறு சம்பவங்கள் பல்வேறு தருணங்களில் நடந்திருந்தாலும் இவை உதாரணங்களே. 

கவிதைக்கும் எனக்கும் ஏழுஜென்மத்துப் பகை என்றாலும் பலமுறை கவிதைக்கு நல்லெண்ண முறையில் நட்பு தூது விடுத்துள்ளேன், ஆனால் கவிதை அதனை ஏற்றுக்கொண்டதா என்றால்? 

ஐந்தாம் வகுப்பு படிக்கும் போது நம்பி எப்போதுமே பையில் ஒரு சின்ன சிட்டையோடு அலைவான்.(சிட்டை என்றால் ஒரு குட்டி கையேடு. நவீன எளிய தமிழில் பாக்கெட் டைரி.) தனது மேல்சட்டையில் சிட்டையை வைத்து அதன்மீது ஒரு கையை வைத்து அழுத்திப் பிடித்துக் கொண்டேநடப்பான், ஓடுவான், சாப்பிடுவான்,பாடம் கவனிப்பான். ஆனால் யாரிடமும் காட்டமாட்டான். ஒருநாள் அவனிடம் வேண்டி விரும்பிக் கேட்டதற்கிணங்க என்னிடம் மட்டும் காட்டினான். அந்த சிட்டை முழுவதுமே கவிதைகள். அத்தனையும் படித்ததும் பிடித்துப் போகும்படியான நட்புக்கவிதைகள்.

கடலிலே இருக்கு உப்பு 
கால்வாயில இருக்கு கப்பு     
நம்மகிட்ட இருப்பதோ நட்பு 

வானத்திலே இருக்கு மேகம் 
மரத்தில இருக்கு காகம் 
நட்புல வேணாம் சோகம் 

அந்த சிட்டை முழுவதுமே மேற்கூறிய நட்பு வகையறா கவிதைகளே, அட இவ்வளவு  எளிமையானவை தான் கவிதைகளா! ஆர்வம் தாங்கமால் அன்றைய மாலையே பொன்னையா கடையில் ஒரு சிட்டயை வாங்கி கவிதைகளாக எழுதி நிரப்பத் தொடங்கினேன். கவிதையின் முடிவுகளை மட்டும் நட்பு என்று முடியுமாறு பார்த்துக்கொண்டேன். அவ்வளவுதான் அடுத்தநாள் வகுப்பில் நான்தான் ஹீரோ, அனைவருக்கும் எனது கவிதை பிடித்துவிட்டது. நேராக சிஸ்டரிடம் காட்டுவதற்கு ஓடினேன். சிலுவைமேரி சிஸ்டர் அலுவலில் பிசியாக இருந்தார். மெல்ல அவரிடம் சென்று சிட்டையை நீட்டினேன். படித்துவிட்டு, சிரித்துவிட்டு, நெற்றியில் சிலுவையை வரைந்துவிட்டு மீண்டும் பிசியாக விட்டார். 

"சிஸ்டர்" என்றேன். கவிதையைப் பற்றி எதுவும் சொல்லவில்லையே என்ற ஆதங்கம் என் குரலில் இருந்தது. "என்ன" என்றார், "கவிதை எப்படி இருக்கு சிஸ்டர்" மெல்ல என்னை நோக்கி புன்னகைத்து "நம்பிய விட நல்லா எழுதி இருக்க" என்றபடி மீண்டும் அலுவலில் ஆழ்ந்துவிட்டார். எனக்கோ இருப்பு கொள்ளவில்லை, அந்த சிட்டையை போல் பல சிட்டைகள் நிறைய கவிதைகள் எழுதி அவற்றையெல்லாம் வைத்து புத்தகம் போட வேண்டும் எனுமளவிற்கு சிந்திக்கத் தொடங்கிவிட்டேன். ஆனால் அதற்கடுத்தநாளே அந்த சிட்டை எலிசா டீச்சரிடம் சிக்கி சின்னாபின்னமான தருணம் கவிதை என்னிடமிருந்து எட்ட நிற்கப் பழகிக்கொண்டது.        

ஒன்பதாம் வகுப்பில் ஒருநாள் தமிழம்மா அழைப்பதாக உத்தரவு வந்தது. சென்று பார்த்தால் குற்றாலம் ரோட்டரி கிளப்பில் ஒரு கவிதைப் போட்டி நடத்துவதாகவும் என்னைக் கண்டிப்பாக கலந்து கொள்ளும்படியாகவும் கூறினார். பால்கனி டீச்சர் கூறினால் மறுப்பேதும் கூறாமல் அதை செய்து முடிப்பது எங்கள் கடமை. காரணம் தமிழம்மாவின் அன்புக்கு நாங்கள் அடிமை. 

அமெரிக்காவின் இரட்டை கோபுரத்தை ஒசாமா தகர்த்திருந்த நேரம் என்பதால் ஒசாமாவின் மீது கடுமையான கோபத்தில் இருந்தேன். என் கோபத்தை வடிகாலாக்க ஒருவழி கிடைக்கவே ஒசாமாவை திட்டி கவிதை எழுதத் தொடங்கினேன். ஒபாமா என்ன ஒபாமா நேற்று வந்தவர். நான் அன்றே ஒசாமாவிற்கு சவால் விடுத்துவிட்டேன். முதல் வரியே "ஏ ஒசாமாவே" என்று ஆரம்பித்து நான்கு பக்கத்திற்கு நீளும். டீச்சர் சிலபல பிழைகளை திருத்திக் கொடுக்க எனக்குதான் முதல் பரிசு என்ற மிதப்பில் அரங்கினுள் நுழைந்தால் ஒரு பெருங்கூட்டமே கவிதை வாசிக்க நிரம்பியிருந்தது. "என்னடா இது கவிதைக்கு வந்த சோதனை" என்றபடி பலரும் வாசித்த காமெடிகளை கேட்டுக் கொண்டு என் முறை வந்த போது "ஏ ஒசாமாவே" என்று ஒசாமாவை மிரட்டிவிட்டு ஒரு பலத்த கைதட்டலை எதிர்பார்த்து இறங்கிய எனக்கோ அந்தோ பரிதாபம் ஒருவருமே கைதட்டவில்லை. இருந்தும் ஒரு நப்பாசை நமக்கு முதல் பரிசு கிடைக்காதா என்று.      

அடுத்தநாள்  எனக்கு பரிசு கிடைத்துள்ளதாகவும், வந்து வாங்கிக்கொள்ளும் படியாகவும் பால்கனி டீச்சரிடமிருந்து அழைப்பு வந்தது. ஆர்வத்தோடு ஓடிச்சென்றால் நெற்றியில் சிலுவையை வரைந்துவிட்டு சர்டிபிகேட்டை நீட்டினார். 'ஆறுதல் பரிசு' என்று எழுதியிருந்தது. அவரது மேஜையில் ஒரு தாள் இருந்தது. எடுத்துப் பார்த்தேன். போட்டியில் கலந்து கொண்டவர்களின் மதிப்பெண் பட்டியல் அது. அவசரமாக எனது பெயரைத் தேடினேன், கீழிருந்து இரண்டாவதாக இருந்தது. கவிதைக்கும் எனக்குமான ஏழு ஜென்மத்துப் பகை உறுதியான தினமது .     

அதன்பின் கவிதைப்பக்கம் தலைவைத்துக் கூடப் படுப்பதில்லை. பாரதியின் கவிதைகள் மட்டும் முழுவதுமாக பிடித்துபோக அவ்வபோது விகடனின் சொல்வனத்தில் வெளிவரும் சில கவிதைகளுடன் எனது கவித்தாகம் தீர்ந்துகொண்டது. எந்தநேரத்தில் வலையுலகில் நுழைந்தேன் என்று தெரியவில்லை எங்கு திரும்பினாலும் கவிதைமயம். இவர்களில் வெகுசிலரின் கவிதைகள் மட்டுமே பிடித்துப்போக எங்கே மீண்டும் என்னை கவிதை எழுத வைத்து விடுவார்களோ என்ற பயத்தில் பலரது கவிதைகளின் பக்கம் டெம்ப்ளேட் கமெண்ட் போடுவதற்குக்கூட போனதில்லை.      

    

எனது நிலைமையானது இப்படியிருக்க, எந்த நம்பிக்கையில் இந்த உலகம் என்னை கவிஞனாகப் பார்க்க ஆசைப்படுகிறது என்றே தெரியவில்லை. ஒருவேளை இந்த உலகம் என்னைக் கவிஞனாய்ப் பார்க்க ஆசைப்பட்டால் இந்த ஜென்மத்துக் கடவுள்களிடம் நான் வேண்டிக்கொள்வது  "ஆண்டவா அடுத்த ஜென்மத்திலாவது கவிதை எழுதுவது எப்படி? என்ற புத்தகம் எழுதும் புலமையுடன் நான் அவதரிக்க வேண்டும் " என்ற ஒன்றைத்தான். 

34 comments:

  1. வாழ்த்துக்கள் நீங்கள் ஆறுதலாக அடுத்த ஜென்மத்திலேயே கவிதைகளை
    எழுதுங்கள் அப்போதும் நான் வலைத்தளத்தில் எழுதிக்கொண்டிருந்தால்
    முதல் பரிசு வழங்குபடி சிபாரிசு செய்து விடுகின்றேன் :))

    ReplyDelete
  2. அட என் வாழ்த்துத் தான் முதல் வாழ்த்தா !! அப்ப சரி நீங்கள் வைத்த
    தலைப்புக்கு ஏற்ப திடங்கொண்டு போராடுங்கள் நிட்சயம் வெற்றியும்
    கிட்டும் :)

    ReplyDelete
  3. Ungalaal mudiyum ...!
    Muyalungal...

    ReplyDelete
  4. இந்த க்றிஸ்மா, க்றிஸ் சைல்ட் விளையாட்டு எனக்கும் ரொம்ப வருடங்களாக புரிய மாட்டேன் என்கிறது... நல்லவேளையாக எங்கள் அலுவலகத்தில் விளையாடுவதில்லை...

    பொது ஜனத்தை பொறுத்தவரையில் தமிழில் ஏதாவது கிறுக்கினாலே கவிஞன் என்று அவர்களே முடிவு கட்டிவிடுவார்கள் தெரியுமோ ?

    ஆனாலும் அந்த பவித்ரா பொண்ணு உங்களை அண்ணா'ன்னு சொன்னதை படிக்கிற என்னாலேயே தாங்கிக்க முடியல... நீங்க எப்படி தாங்கினீங்களோ...?

    ReplyDelete
    Replies
    1. பவித்ரா உங்களை ஏன் அண்ணான்னு கூப்பிட்டாங்கன்னு எனக்கும், பவித்ரா பக்கத்தில் நின்றிருந்த அந்த மற்ற பெண்ணுக்கும் தெரியுமே? (சும்மா கொளுத்தி போடுவோம்)

      Delete
  5. கவிதை... கவித... கவத...
    வேணாம் எனக்கு வரல்ல....

    ReplyDelete
  6. சீனுவே ஒரு கவிதை
    சீக்கரம் ஒரு தூரிகையாள்
    சிறந்த ஒரு கவிப்பா புனைய
    சின்னவன் நானும் வாழ்த்துகின்றேன்!

    ReplyDelete
  7. சீனு தம்பி கவிதை எப்படி எழுதுறன்னு எங்கிட்ட கேட்டு இருக்கலாம்ல? உன் கஷ்டம் பார்த்து எனக்கு மனழு வலிக்குது. அதனால் நான் உனக்கு சொல்லி தாரேன். அது ரொம்ப ஈஸி......தம்பி. நீ என்ன சொல்ல நினைகிறாயோ அதை யாருக்கும் புரியாத மாதிரி வரிகளை உடைச்சு உடைச்சு எழுதுவதுதான் கவிதை. படிகிறவனுக்கு அது புரியாது ஆனா அதை அவன் வெளிக்காட்டினால் அவனை அறிவிலி என்று உலகம் தூற்றும் என்பதால் அவன் அதை ஆஹா ஒகோ என்று புகழ்ந்திடுவாங்க அப்புறம் நீயும் ஒரு பெரிய கவிஞன்

    கவிதையில் நான் தொடர்வது ரமணி சார் & தென்றல் சசி மட்டுமே ரமணி சாரின் கவிதைகளில் கருத்து இருப்பதை புரிந்து கொள்ள முடிகிறது தென்றல் சசியின் கிராமத்து பாணி எளிதாக எல்லோருக்கும் புரியும் மற்றவர்களின் கவிதைகளையும் படிப்பேன் சில கவிதைகளை அவர்கள் நன்றாகவே எழுதுகிறார்கள் ஆனால் பல கவிதைகளில் வார்தைகளை அழகாக தொகுத்து இருப்பார்கலே தவிர கருத்து ஏதும் இருக்காது..

    ReplyDelete
  8. வணக்கம்
    சீனு(அண்ணா)

    அடுத்த ஜென்மத்தில் இல்லை இந்த ஜென்மத்தில்மனதில் திடங்கொண்டுகவிதை எழுதுங்கள் இந்த வலையுலகில் உங்களுக்கென்று ஒரு இடம் கிடைக்கும்..நிச்சயம்....மேலும் தொடர எனது வாழ்த்துக்கள்.
    ((ஊந்து வரும் தண்ணீர்தான் கல்லை உடைக்கும் என்பார்கள்)) இதை புரிந்து கொண்டல் சரிதான்.அண்ணா.

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  9. நிறைய தமிழ்ச் சொற்கள் கற்றுக் கொண்டேன். சிட்டை.. அழகான சொல்.
    செவல தாவு - சத்தியமாகப் புரியவில்லை, தமிழ் தானா?

    அடுத்த ஜென்மத்தில் நீங்கள் கவிஞராக இருந்து உங்களைக் கட்டுரை எழுதச் சொன்னால்?

    ReplyDelete
    Replies
    1. அது செவல, தாவு என்றிருக்க வேண்டும்!!

      Delete
    2. அப்படியே அர்த்தமும் சொல்லிப்போட்டிருக்கலாமே ஆவி! நன்றி.

      Delete
    3. முரளியும் வடிவேலுவும் நடித்த ஒரு படத்தில், வடிவேலுவின் பெயர் செவல... அந்தக் காட்சியில் முரளி வடிவேலுவைப் பார்த்தும் சொல்லும் டயலாக் அது.. முடிந்தால் youtube link கிடைகிறதா என்று பார்கிறேன்

      Delete
  10. // கவிதை எப்போது எனக்கு அட்லீஸ்ட் ஆனது என்று தெரியவில்லை.//

    :)

    ReplyDelete
  11. // அவற்றையெல்லாம் வைத்து புத்தகம் போட வேண்டும் எனுமளவிற்கு சிந்திக்கத் தொடங்கிவிட்டேன். // எதோ உள்குத்து இருக்கும் போலையே ??

    ReplyDelete
  12. சுண்டக் காய்ச்சிய உரை நடைதான் கவிதை
    இத்தனை அருமையாக கவித்துவமாக
    கட்டுரை எழுதிய உங்க்களுக்கா கவிதை வராது ?

    நாங்களெல்லாம் வரும் என்று நம்பியா எழுதுகிறோம்
    எழுதியதை கவிதையென நம்புகிறோம்
    தொழில் ரகசியம் அம்புட்டுத்தான்

    ReplyDelete
  13. ஆஹா.... அருமை சீனு.

    நானும் இந்த விஷயத்தில உங்க கட்சி தான். சிலவற்றை கிறுக்கிப் பார்த்து, எனக்கே பிடிக்காது போனதால் முயற்சியை ஒன்றிரண்டு கவிதைகளிலேயே முடக்கிவிட்டேன்!

    இப்போது ரசிப்பது மட்டுமே!

    ReplyDelete
  14. 'ஆறுதல் பரிசு' என்று எழுதியிருந்தது. வாழ்த்துகள்..!

    ReplyDelete
  15. அய்யய்யோ நானில்லை நானில்லைங்கோ.....

    ReplyDelete
  16. சீனுவுக்கு

    உங்கள் உரையே கவித்துமான நடையில்தான் இருக்கிறது கவிதை ஒரு வடிவத்தில் அடைத்து வைக்க இயலாத உணர்வுகளின் தழும்பல் எதை ஆழ்ந்து சுவாசிக்கிரோமோ அதன் பிரசவம்தான் கவிதை அதை நாம் படையலிடும் விதம்தாம் மற்றவரை ரசிக்க வைக்கிறது அதற்கு முதலில் உங்கள் எழுத்தை நீங்கள் நேசியுங்கள் ...

    மேலும் ஆறுதல் பரிசு வாங்கும் அளவிற்கு திறமைகள் உள்ள உங்களுக்கு மிகப்பெரும் ஆளுமையாக வரக்கூடிய வாய்ப்பு இருக்கிறது முயற்சி திரு வினியாயாகட்டும் வினையாகட்டும்

    ReplyDelete
  17. நீங்களும் அண்ணன் ஜோதிஜியும் ஒன்று போல...!

    ReplyDelete
  18. வார்த்தைகளை கோர்த்து வரிகளை உடைத்து எதுகை மோனை சேர்த்து எழுதிவிட்டால் கவிதை என்பது பலரின் நினைப்பு. புதுக் கவிதை என்ற ஒன்றில்லாமல் மரபுக் கவிதை மட்டுமே என்றிருந்தால் இன்று கவி எழுதும் பலரும் காலாவதி ஆகியிருப்பர்.

    --- விவரணம். ---

    ReplyDelete
  19. கவிஞர் சீனு வாழ்க! வாழ்க!

    ReplyDelete
  20. ஆவியை தொடர்ந்து சீனு புத்தக வெளியீட்டு விழாவா!? அடுல நான் தலைமை ஏத்துக்கனுமா!? ஓக்கே! இன்னிக்கே கடைக்கு போய் ஒரு சேலை வாங்கி எம்ப்ராய்டரி போட ஆரம்பிக்குறேன்

    ReplyDelete
  21. கவிதை எழுதுவது எப்படி என்பதை நானும் கற்றுக் கொண்டேன்! சீனு!

    ReplyDelete
  22. aiyooooooo enkaum kavithiakum kodda rommmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmma thoram pa

    ReplyDelete
  23. ஏதோ நானும் கவிஞன்! நானும் கவிஞன்னு சொல்லிக்கிட்டு பொழைப்பை ஓட்டிக்கிட்டு இருக்கேன்! நீங்க கவிதை எழுத ஆரம்பிச்சி போட்டியா வந்திருவிங்களோன்னு நினைச்சேன்! தப்பிச்சேன்! சும்மா காமெடிக்குத்தான் சீனு! கவிதை எழுதுவதை இப்படி காமெடியா அழகா உங்களாலே சொல்ல முடியறப்ப கவிதையும் வசப்படும்! விரைவில் வசப்பட வாழ்த்துக்கள்! நன்றி!

    ReplyDelete
  24. ஏதோ நானும் கவிஞன்! நானும் கவிஞன்னு சொல்லிக்கிட்டு பொழைப்பை ஓட்டிக்கிட்டு இருக்கேன்! நீங்க கவிதை எழுத ஆரம்பிச்சி போட்டியா வந்திருவிங்களோன்னு நினைச்சேன்! தப்பிச்சேன்! சும்மா காமெடிக்குத்தான் சீனு! கவிதை எழுதுவதை இப்படி காமெடியா அழகா உங்களாலே சொல்ல முடியறப்ப கவிதையும் வசப்படும்! விரைவில் வசப்பட வாழ்த்துக்கள்! நன்றி!

    ReplyDelete
  25. என்னுடைய கவிதைகளைப் படித்தபின்னும் உங்களுக்கு ஏன் இப்படி ஒரு சந்தேகம்? - அரசவைக் கவிஞரின் கேள்வி!

    ReplyDelete
  26. என்னுடைய காலும் அரையும் என்ற ஒரே ஒரு கவிதையை மட்டும் படித்தால் போதும்... மரபுக்கவிதையோ புதுக்கவிதையோ மிக எளிதாக எழுதமுடியும்... :-)

    ReplyDelete
  27. :) உங்களோட இந்த பதிவின் மூலம் கவிதை மீதான தங்கள் அவதானிப்பை அறிய முடிகிறது , சீனு அண்ணா நீங்க எழுதுகிற பதிவுகளில் ( சில நேரங்களில் சில பதிவுகளில் ! :) ) சில இடங்களில் வரும் வார்த்தைகளை என்டர் தட்டி போட்டால் கவிதை போலவே இருக்கும் ,இப்போது பெரும்பாலானவர்கள் இந்த Methodology யை பயன்படுத்தித் தான் கவிதை எனும் பெயரில் எழுதுகிறார்கள் ! //கவிதை எப்போது அட்லீஸ்ட் ஆனது// :) :)
    ஒரு முறை கவியரசர் கண்ணதாசனிடம் நீங்க ஜோதிடம் கற்றுக்கொடுக்கிறீர்கள் அல்லவா அதேமாதிரி கவிதை கற்றுக்கொடுக்க ஒரு வகுப்பெடுக்கலாமே னு யாரோ கேட்டாங்களாம் !! ,ஜோதிடத்தை கற்றுக்கொடுக்க முடியும் ஆனால் கவிதை என்பது கற்றுக்கொடுப்பதால் கற்றுக்கொள்ளக்கூடிய விசயமில்லை,அதை கற்றுக்கொடுக்கவும் முடியாது னு சொன்னாராம் . கவிதை என்பது மொழியில் செய்யக் கூடிய அலங்காரம் ஆரிகாமி கலையில் (origami) பேப்பர்ல பூ செய்ற மாதிரி, மொழி மூலம் செய்ய முடிந்த அலங்காரம் கவிதை,அதேமாதிரி அலங்கார சொற்கள் என்பதையும் தாண்டி கவிதைகள் உணர்வு பதிவுகளாகவும் இருக்கின்றன. வார்த்தைகளை அடுக்கி அடுக்கி உணர்வுகளை சொல்ல முயலும் போது அது கவிதையாகிறது, சொற்களால் சொல்ல முடியாத விசயங்களை சொற்களால் சொல்ல முயலும் போது கவிதை எனும் கலைவடிவம் கைகொடுக்கிறது ! கவிதைகளை எழுதுபவர்கள் தற்சமயம் ரொம்பவே அதிகரித்துவிட்டார்கள் :) பதிவுலகில் சில பேர் கவிதை என்கிற பெயரில் எழுதிப்போடும் கவிதைகளை கடந்து செல்லவே பயமாக இருக்கிறது ! :) கவிதைகளை வாசிக்கும் போது கவிஞன் கொண்ட மனநிலையை,உணர்வுகளை,உள்ளக் குமுறல்களை,களிப்பை,குழப்பத்தை இப்படி கலந்துக்கட்டியாக இருக்கும் பல விசயங்களை வாசகன் அடைய வேண்டும் என்னைப் பொருத்தவரையில் அது போதும் கவிதைக்கு !

    ReplyDelete
  28. காதலிக்க தெரிஞ்சா கவிதை தானாவே வரும் தம்பி

    ReplyDelete
  29. //அதன்பின்னும் 'அப்படின்னா' என்றால் 'அப்டியே போயிருங்கன்னா' என்று கூறி விடக்கூடும்//
    அப்படி எல்லாம் நீங்கள்
    படக் கூடாது கூச்சம்!
    அது என்னவென்று கேட்டு
    சொல்லுங்கள் எனக்கும்! :P

    மேலே இருக்கிறது
    பார்த்தீர்களா?
    அது ஒரு கவிதை!

    அதற்கு கீழே மூன்று வரிகளில் இருப்பதுவும் ஒரு கவிதை! ;) சின்ன சின்ன வரிகளில் எழுதப் படும் யாவுமே கவிதைகள் தான்! :D

    ReplyDelete