20 Apr 2013

பிணந்தின்னி மருத்துவமனைகள்


முன்குறிப்பு : உங்களால் இதைப் படிக்க முடியவில்லை என்றால் தயவு செய்து படிக்காதீர்கள்.  

மேஜையில் கிடத்தி இருந்த எனது உடலைச் சுற்றி நின்ற நான்கு மருத்துவர்களும் மெதுவாக எனது உடலை அறுக்கத் தொடங்கி இருந்தனர். கத்தி எனது உடலை கிழிக்கும் பொழுது வலி தெரியவில்லை. கடைசி மூன்று தினங்களில் எவ்வளவோ வலியைச் சந்தித்து விட்டேன் மேலும்இந்த வலியை உணரும் நிலையில் நான் இல்லை. அவசரமாக மிக அவசரமாக செய்ய வேண்டிய காரியம் ஒன்று உள்ளதுஅது எனது பிறப்புறுப்பை அறுப்பது.

அவர்கள் இன்னும் எனது பிறப்புறுப்பை அறுத்திருக்கவில்லை. அறுப்பார்களா என்றும் தெரியவில்லைஅவர்களுக்குத் தெரியாமல் மெதுவாக அதை அறுக்கத் தொடங்கினேன். எனக்குப் பின் அறுபடுவதற்காக பின்னால் பலரும் வரிசையாக பாலீத்தீன் உடை சகிதம் காத்துக் கொண்டுள்ளார்கள். மருத்துவர்களும் துரிதமாக இறுதிகட்ட பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். பிணவறை வாசனை , கிருமிகளின் தொற்று அதைத் தடுக்க கெமிக்கல் வாசனை என்று வித்தியாசமாய் தான் அந்த சூழல் இருந்திருக்க வேண்டும். எதுவுமே எனக்குத் தெரியவில்லை. அருபமாய் நின்று காண மட்டுமே முடிகிறது, உணர முடியவில்லை. அதைப் பற்றி எல்லாம் எனக்கு கவலை இல்லை

அறுத்தெடுத்த உறுப்பை கையில் ஏந்திக் கொண்டு வேக வேகமாக வெளியில் வந்தேன். எனக்குத் தெரிந்தவர்கள். என்னைத் தெரிந்தவர்கள் இவர்கள் யாருக்கும் இப்போது நான் தெரியவில்லை.

"மனுஷனுக்கு அறுபது வயசு ஆகுது, ஆனாலும் பாத்தா அப்டித் தெரியாதுப்பா. சாவு இப்டி தான் வரணும்ன்னு இருந்தா யாரால தான் என்ன செய்ய முடியும்"

"எப்போதும் என்கடையில தான் டீ குடிக்க வருவாரு, அன்னிக்கு கூட என் கடையில இருந்து தான் கிளம்பி பேங்குக்குப் போனாரு. சவத்து மூதி போவயிலையே எங்க போரீர்ரூன்னு கேப்பனா, ஒரேடியா போய் சேந்துட்டாரே", டீ கட நாட்டான் எம் மேல இவ்வளவு பாசம் வச்சிருக்கானா என்ன?. மூனு நாளா அழுது அழுது அவனுக்கு கண்ணீர் கூட வத்திபோச்சு, இவன் பக்கத்துல நிக்க நேரமில்ல,அந்த வேலைய முடிக்கணும்.

"தற்செயலா அந்தப் பக்கம் போனேன், ரத்த வெள்ளத்துல கிடக்காரு, எப்பான்னு அலறத் தான் தோணுச்சு, சுத்தி நின்னு வேடிக்க பாத்தானுவள தவிர ஒரு பய கை குடுக்கல, தோள்ள தூக்கிப் போட்டு வளத்தவர என் தோளுல தூக்கிட்டு ஓடினேன்...." கிறுக்குப் பயல அழாதட, அப்பனுக்கு வேற வேல இருக்கு

வேகமாக நடையைக் கட்டினேன். எனக்காக கருப்பு வாகனம் காத்திருக்கிறது. அதில் வீட்டுக்குத் தான் போக முடியும், அவன் வீட்டிற்கு போக முடியாது. இப்போது இது தான் முக்கியம். சாவகாசமாய் அழுது கொள்ளலாம், அறுதல்படுத்திக் கொள்ளலாம், பட்டுக் கொள்ளலாம். இன்னும் வேகமாய் நடக்க வேண்டும். கையில் இருக்கும் உறுப்பை நழுவ விட்டுவிடக் கூடாது. கிடைத்த வாய்ப்பையும் சேர்த்து தான்.            

... இந்த இடம், மூன்று நாட்களுக்கு முன் இறுதியாய் நான் உயிரோடு இருந்த இடம். எங்கே இருந்து அந்த லாரிக்காரன் அவ்வளவு வேகமாய் வந்தான் என்று தெரியவில்லை. அவன் என்னை இடப்புறமாய் ஒதுக்க, நான் இடது புறம் ஒதுங்க, அதே இடதுபுறம் எனக்குக் கிடைத்திருக்க வேண்டிய இடத்தை வேகமாய் மற்றொரு பைக் கடக்க முயல, எனது ஹேன்ட்பரும் அவனது ஹேன்ட்பரும் ஒன்றில் ஒன்று சிக்கிக் கொள்ள, நான் வேகத்தை குறைக்க முயல, அவனோ பதட்டத்தில் வேகத்தை அதிகரிக்க தூக்கி வீசப்பட்டேன்.

"யோவ் அண்ணாச்சி எங்கையா போறீரு, சத்த பொறுத்து போவும், வெயில் மண்ட காயிது"

"இருடே, பேங்க் வர சத்த போயிட்டு வரேன். அடுத்த வாரம் சின்னையன் மவளுக்கு தாலி ஏறுதுலா, நாலு ரூவா கேட்டான், பேங்குல மாத்திவிட சொல்லிட்டு வாரேன்."

நாட்டானுக்கு எப்போதும் என்ன அவன் கடையில உக்காரவச்சி ஊருக்கத பேசணும். ரெண்டு பேரும் ஒரே ஊரு, விட்டு குடுக்க மாட்டான். டி குடிச்சா துட்டும் கேக்க மாட்டான். கேட்டா வாங்குன பணத்த இப்டி களிசிக்கிறேன்ம்பான்   

"ஹெல்மெட்ட எங்க வச்சீரு, உம்ம கூடவே தான இருக்கும்"

" எழ இந்த பக்கத்துல இருக்க எடத்துக்குப் போவ, வெயில்ல அந்த சவத்த வேற  எதுக்கு தூக்கிட்டுப் போவனும்ன்னு தான் வச்சிட்டு வந்துட்டேன்"

சவம் நா கீழ விழும் போது மண்டையில ஹெல்மெட் இல்ல. விழுந்த இடத்துல அங்க மட்டும் லேசான அடி. ச்செவப்பு கொஞ்சம் அதிகமாத் தான் போயிட்டு. ஹெல்மெட் போட்ருக்கலாம்

கூட்டத்தப் பார்த்து ஒதுங்குன பய தோள்ள தூக்கிப் போட்டுட்டுப் போறான். ஆஸ்பத்திரி உள்ள போறான் வண்டியில உருட்ருறான். அழுறான், பதர்றான்கொண்டு போயி கண்ணாடி அறையில தள்ளிட்டானுங்க

" உங்க அப்பாவ காப்பாத்ததான் முயற்சி பண்ணுறோம், கொஞ்சம் பொறுமையா இருங்க, பணம் செலவு பண்ண தயங்காதீங்க"

சவத்து மூதி என்ன காப்பாத்தப் போறானா, எப்டி காப்பாத்தப் போறான், பாக்கத் தான போறேன், என்ன காப்பாத்தப் போறதா சொன்ன அந்த மூத்த வைத்தியன் பின்னாடியே போனேன். ரூம் உள்ள போனான். குண்டா ஊதின ஒரு மூதி உக்காந்திருந்தது. வெல்ல சொக்கா, ஒரு பேண்ட்டு

"முதலாளி, வார வழியிலையே ஆள் அவுட்டு, என்ன பண்ணலாம்"

"எத்தன நாளிக்கி தாங்குவான்" கடிச்சி கடிச்சி பேசுறான், தமிழ் வாட இல்லை, பண வாட தான்.

" நல்ல வெயிட்டு பாடி, நாளுனாலாது தாங்கும், நம்ம சர்கிள்ள தான் ஆக்சிடென்ட்"

"அப்ப, மார்ச்சுவரி டாக்டர்டே நா பேசிக்கி..றேன், நீ ஆகா வேண்டியதே பாரு"

வெளியே வந்தவன் 

"மூளை இடம் மாறிருக்குன்னு ரிப்போர்ட் சொல்லுது, இனிசியல் சர்ஜரி பண்ணனும், அதுக்கு அப்புறம் 24 மணி நேரம் கழிச்சு தான் என்ன வேணா சொல்ல முடியும். சர்ஜரிக்கு ரெண்டு லட்சம், வெண்டிலேட்டெர் ஒருநாளைக்கு ஒன்னற லட்சம்கொஞ்சம் நேரம் எதோ யோசிச்சான், "ஆமா கட்டிற முடியும் தானா, அப்பாப்பா அப்பா" இதக் கேட்டதும் அழுதுட்டே வெளியில போயிட்டான் என் மகன். அவனுக்கு எண்ணப் பண்ணனும்ன்னு கூட தெரியாதே

"டேய் அநியாயக் காரனுங்களா, நா செத்துப் போயிட்டேன் டா, உடம்பக் கொடுத்தா அழுதுட்டு எரிச்சிருவான், அவ்ளோ பணத்துக்கு எங்கடா போவான்.

"அம்மா, அப்பா ரிடையர்மென்ட் பணம் தான் இப்ப உதவும், அத எடுத்து தான் ஆகனும், வேற வழியில்ல" போனில் அழுதுட்டு இருக்கான்.

அய்யோ அந்தப் பணத்த  சின்னையன் மவ கல்யாணத்துக்கு கொடுக்கணுமே, மன்னு பாத்த பய, மண்ண விக்க போறேண்ணா, நா தான் தடுத்து பணம் தாரேன்னேன்.

டேய் உன்ன ஏமாத்துறாங்க டா, செத்துப்போனவனுக்கு சீர் செனத்தி செய்யனும்ன்ன்றான், நீயும் தலையாட்டிட்டு போறியே, வெக்கமா இல்ல. உன் அப்பன் இத தான் கத்துக் கொடுத்தானா உனக்கு

போகாதடா என்னையும் கூட்டிட்டு போடா, இதுக்கு மேல என்னால கத்த முடியல தம்பி.


அய்யோ இங்க நடக்கத தட்டிக் கேக்க யாருமே இல்லையா. டேய் அநியாயம் பண்ற நீங்கல்லாம் நல்லா இருக்கேங்கலேடா, கொஞ்சம் கொஞ்சம் சம்பாரிச்ச பணத்த புழு அறிக்க போறவன் தலையில கொட்டுரீங்கலேடா, என் சத்தம் உங்களுக்கு கேக்கவே கேக்காதா.

" ச்சு, சும்மா சத்தம் போடாம இருங்க" என்ன என்னால கேக்க முடியுமா, நீ என் கூட பேச முடியுமா, குரல் வந்த திசையை நோக்கி ஆச்சரியமாய் திரும்பி அவளையேப் பார்த்தேன்

" ஆமா, இனி உங்களால என் கூட மட்டும் தான் பேசும் முடியும், வந்து ரெண்டு நாளாவது, எவ்வளவோ பார்த்துட்டேன், இதுக்கு மேலையும் கத்த தண்ணி இல்ல, நடக்கத மட்டும் பார்த்துட்டு கமன்னு இருங்க"

"ஏய் ஏய், அண்ணிக்கு...முந்தாநா சிக்னல்ல தண்ணி லாரி ஏருணவ தான நீ, சாக வேண்டிய வயசா டீ இது, இருபத்தி ரெண்டு இருக்குமா உனக்கு" அழகான சுடிதார், நீலக்கலரு சுடிதாரு, நீலக்கலரு பைக்கு, வளவி, கம்மலு, செருப்பு மொதக் கொண்டு நீலக்கலரு.

" ஆமா நீ இன்னுமா இங்க இருக்க, அன்னிக்கு ஆம்புலன்ஸ்ல நா தான உன்ன ஏத்தினேன்,.... உனக்கும் இன்னும் வைத்தியம் நடக்குதா சபாஷ்...அப்போ ஒருத்தரையும் விட்டு வைக்கல அப்டி தான"

"விடமாட்டேன் ஒருத்தனையும் விடமாட்டேன், என் கல்யாணத்துக்கு சேத்து வச்ச மொத்த சொத்தையும் புடிங்கிடானுங்க, இதுக்கு பதில் சொல்லியே ஆகனும்" என்னை சமாதனப்படுத்த முயன்றவள் அழுகிறாள். இவளப் பார்க்கும் பொழுது எனக்கு நடப்பது சாதாரணமானது தான். இருந்தாலும் பதில் சொல்ல வேண்டும், எனது பணத்தை ஏமாற்றியவன் எனக்கு பதில் சொல்லியே ஆக வேண்டும். எப்படி. நிறைய நேரம் இருக்கிறது யோசிக்க வேண்டும்

" ரெண்டுனாளாவது, பொழைப்பாரா தெரியல, இதுக்கு மேல செலவு பண்ண துட்டும் இல்ல, ஆக வேண்டியத சொன்னா, கவர்மெண்ட் ஆஸ்பத்திரிக்கு மாத்திருவோம்".. வற்றிய முகத்துடன் சுரத்தை இல்லமால் பேசிக் கொண்டிருந்தான் என் மகன்.  இப்பவாது புள்ளைக்கு புத்தியக் கொடுத்தியே ஆத்தா.

எப்டியும் இப்ப உண்மை தெரியத் தான போகுது, உயிரோட என்ன எம்புள்ளகிட்ட கொடுக்க முடியுமா என்ன?  இப்ப என்ன சொல்லுவானுங்க?மாட்டட்டும், இவனுங்க எல்லாத்தையும் உள்ள தூக்கிப் போடணும். பணத்த மட்டும் திங்க வைக்கணும், குடிக்க வைக்கணும்.

"வீ  ரியலி சாரி டூ செ திஸ் சார், மைல்ட் ஹார்ட் அட்டாக். இட் வாஸ் மைல்ட் அட்டாக் ஒன்லி, பட் அட்  மொமென்ட் ஹி வாஸ் எக்ஸ்பையெர்ட், ". 

வெறும் பத்து நிமிடம். என் மகன் என்னைக் கேட்டதில் இருந்து சரியாக பத்து நிமிடம். எனக்கு அட்டாக் வந்து இழுத்துக் கொண்டு போய்விட்டது என்கிறான்.   
பொறக்கும் போதே நடிப்ப படிசானுங்களா இல்ல பணத்தைப் பார்த்ததும் கத்துக்கிடானுன்களா. புடுங்கறத எல்லாம் புடிங்கிட்டு, புடுங்க ஒன்னும் இல்லன்னு ஆனதும் ஒரேடியாப் போயிட்டனா. இப்டி உங்க ஆஸ்பத்திரியா வளத்து என்னடா பண்ணப் போறீங்க

"ஸார் கவர்மெண்ட் ஆஸ்பத்திரிக்கு பாடிய அனுப்பிருவோம், நாங்களே டாக்டர் கூட ஏற்பாடு பண்ணிட்டோம், அதுக்கு ஒரு அமவுண்ட், அதையும் சேர்த்து எல்லாத்தையும் பே பண்ணிட்டா, யு கேன் டேக் ஹிம் ஆப் ஸார்".          

வட்ட மேஜையில் கிடத்திய போது தான் அந்த எண்ணம் வந்தது. என்னை வீட்டுக்கு கொண்டு போவதற்கு முன் இந்த வேலையை முடிக்க வேண்டும் . அதனால் தான் கொஞ்சம் கூட யோசிக்காமல் அறுத்து எடுத்துக் கொண்டு கிளம்பிவிட்டேன்.

மதியம் ஒன்னரை மணி. இனிமேல் மணியும் கிடையாது, ஒன்னரை மணி சாப்பாடும் கிடையாது. என்னவெல்லாம் கிடைக்கப் போகிறது என்பதும் தெரியாது

அரண்மனை. செத்தவனைக் கிடத்தி கொள்ளையடித்த காசில் அரண்மனை. செத்தவனைக் கொண்டு கட்டினால் இது எப்படி அரண்மனையாக முடியும். இதுவும் குளிரூட்டப்பட்ட பிணவறை தான். செத்தவனை வைத்து பணம் பண்ணப் படித்த இவனது மொழியில் சொல்லுவது என்றால் "சென்ட்ரலைஸ்ட்  ஏர்கண்டிசன்ட் ராயல் பியுட்டிபுல் மார்ச்சுவரி"

செத்துப்போன பிராணிகள் அவனை சுற்றி. வாய் நிறைய அள்ளி அள்ளி குதப்பிக் கொண்டிருந்தான். எப்படியாவது உனது நிர்வாகம் என்னைக் காப்பாற்றி விடும்  என்று நம்ப வைத்துக் கழுத்தறுத்த உனக்கு சுவையாய் மதிய சாப்பாடு ஒரு கேடு.     

நான் வந்த வேலை முடியப் போகிறது. அறுத்து எடுத்துக் கொண்டு வந்தஇதோ என் கையில் இருக்கும் உறுப்பை அவனது தட்டில் போடப் போகிறேன், அதற்காகத் தான் இங்கு வந்தேன். தின்னு இதைத் தின்னு. அழுகிய எதற்குமே உதவாத இதைத் தின்னு.என்னுள் பொங்கிய மொத்த கோவத்தையும் கொண்டு அவனது தட்டில் தூக்கி எறிந்தேன். எறியும் பொழுது தான் கவனித்தேன் அங்கே இன்னும் இரண்டு உறுப்புகள் கிடந்தன.

பின்னால் அவள் நின்று ரசித்து சிரித்துக் கொண்டிருந்தாள்.          

பின் குறிப்பு : பிணம் தின்னும் மருத்துவமனைகளை நடத்தும் நிர்வாகத்தைப்  பற்றி மட்டுமே எழுதியுள்ளேன். ஒட்டுமொத்த உயிர்காக்கும் மருத்துவத் துறையையும் அல்ல.

"கல்வியும், மருத்துவமும் இலவசமாக வேண்டும்

நன்றி...      

35 comments:

  1. அருமை அருமை
    மருத்துவர்களின் பணவெறி குறித்து
    அனைவரிடமும் பொங்கித் ததும்பும் ஆற்றாமையை
    மிக நேர்த்தியாகப் பதிவு செய்துள்ளீர்கள்
    மனம் கவர்ந்த பதிவு.வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. முதல் வருகைக்கும், உன்ர்ஹச்கமான உங்கள் பாராட்டிற்கும் மிக்க நன்றி சார்

      Delete
  2. அன்புசால் பெருந்தகையீர்! வணக்கம்.
    தங்களின் கருத்துக்கு அமைத்துக்கொண்ட கதைக்களம் மிகவும் நேர்த்தியாக உள்ளது.
    தொடருங்கள்.
    .
    //அவனது தட்டில் தூக்கி எறிந்தேன். எறியும் பொழுது தான் கவனித்தேன்அங்கே இன்னும் இரண்டு உறுப்புகள் கிடந்தன.//
    .
    மிக உன்னதமாக வரிகள். ஆக நமக்கு முன்பே கோபம் கொள்ள சிலர் உள்ளார்கள்.

    ReplyDelete
    Replies
    1. //ஆக நமக்கு முன்பே கோபம் கொள்ள சிலர் உள்ளார்கள்.// ஆம் சார் அது தான் உண்மை... மிக்க நன்றி தங்களின் வருகைக்கும் கருத்துப் பகிர்விற்கும்

      Delete
  3. Replies
    1. மிக்க நன்றி சார்

      Delete
  4. கதையை இறந்தவருடைய பார்வையில் கொண்டுபோனது மிகவும் பொருத்தமானது. வேறு எவருடைய பார்வையிலும் இந்த அளவுக்கு உணர்வுகளை தெளிவாக கூறியிருக்க முடியாது. சந்தடி சாக்கில் ஹெல்மெட் போடாததால் இறக்க நேரிட்டது என்பதையும் சொன்னது சிறப்பு. பின் குறிப்பையும் முன் குறிப்புடன் சேர்த்திருக்கலாம். மொத்தத்தில் விருது கொடுக்கப்படவேண்டிய கதை.... வாழ்த்துக்கள் சீனு...

    ReplyDelete
    Replies
    1. கிட்டத்தட்ட ஒரு உண்மைச் சம்பவத்தை மையமாய் வைத்து எழுதினேன். அதிலும் ஹெல்மெட் போடாதது தான் இறப்பிற்கு முக்கியமான காரணம்.

      //. பின் குறிப்பையும் முன் குறிப்புடன் சேர்த்திருக்கலாம். // பின் குறிப்பை சொல்லிவிட்டால் எதிர்பார்ப்பு குறைந்து, என்ன சொல்லவருகிறேன் என்பது முழுவதுமாய் தெரிந்துவிடுமோ என்ற எண்ணத்தில் தான் ஸார் பின்குறிப்பாய் மாற்றினேன்.

      //மொத்தத்தில் விருது கொடுக்கப்படவேண்டிய கதை.... // இதை விட வேறு என்ன விருது பெரிதாய் இருந்துவிடப் போகிறது மிக்க நன்றி... வருகைக்கும் கருத்துப்பகிர்விற்கும்.

      Delete
  5. அழுத்தமான கோபம் அழகான நடையில் சிறுதையாக பொங்கி வெளிப்பட்டிருக்கிறது. ஆன்மாக்கள் கோபம் கொண்டால்... என்ற கோணத்தை மிக ரசித்தேன். (எழுத்தில் அங்கங்கே திருநெல்வேலி்த் தமிழ் வாடை... அங்கங்கே சாதாரணத் தமிழ் வாடை... நெல்லைத் தமிழ் வசப்பட, ‘சுகா’வின் தளத்தை விடாமல் படிக்கவும்)

    ReplyDelete
    Replies
    1. அழுத்தமான கோபம் தான் ஸார். மிக அழுத்தமான கோபம். தினமும் அந்த மருத்துவமனையைக் கடந்து செல்லும் போதெல்லாம் வரும் கோபம். மிக்க நன்றி ஸார்.

      நாட்டானும் கதாநாயகனும் ஒரே ஊர் என்பதால் அவர்கள் பேசும் பொழுது நெல்லை தமிழையும், மற்ற இடங்களில் சாதாரண தமிழையும் பயன்படுத்தினேன், அப்டி பயன் படுத்த வேண்டும் என்பது தான் எனது திட்டமும், சிலைடங்களில் அது எனையும் மீறி வரம்பு மீறி விட்டதை கவனித்தேன். அடுத்த முறை நிச்சயம் கருத்தில் கொள்கிறேன்.

      முக்கியமான ஒரு விஷயத்தை சொன்னதற்காக நன்றிகள் பல வாத்தியாரே...

      Delete
  6. Replies
    1. உங்களுடைய பின்வந்த கமெண்ட் தான் கொஞ்சம் பயங்கரமாக உள்ளதோ.. ஹா ஹா ஹா

      Delete
  7. அலைபேசி அடிக்குது பாருங்க சீனு... அனேகமா ஏ ஆர் முருகதாஸ் கிட்டேயிருந்துதான் இருக்கும். அசிஸ்டன்ட் வேணுமாம்...

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி ஸார்.. அவ்ளோ வொர்த்தான கதையான்னு தெரியல.. இருந்தாலும் அந்த உயரத்துக்கு கொண்டு சென்ற உங்கள் கருத்துரைக்கு மிக்க மிக்க நன்றி சார்.

      Delete
    2. உண்மையிலையே சிறப்பு தான் இறந்தவர் பார்வையில் கதை புதிது

      Delete
  8. மிக நேர்த்தியான சிறுகதை சீனு... எழுத்து நடை அப்பாரம்.

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி மணிமாறன்... நேற்று தான் உங்களைப் பற்றி நினைத்தேன், சமீபகாலமாய் உங்களை உங்கள் பதிவுகளில் கூட காணோமே என்று...

      Delete
  9. நல்ல நடை. கடைசியில் திருப்பமும் நன்று.
    பிறப்புறுப்பு - எல்லாமே பிறப்புறுப்பு தானே? சொலல  வேண்டியதைத் துணிச்சலா சொல்லுங்க.

    ReplyDelete
    Replies
    1. //நல்ல நடை. கடைசியில் திருப்பமும் நன்று.// மிக்க நன்றி சார்

      ஹா ஹா ஹா துணிச்சல் இல்லாமல் இல்லை சார்.. அதிகமாய் அருவருப்பை ஏற்படுத்தி விடக் கூடாதே என்று தான் எல்லா இடங்களிலும் பயன்படுத்த வில்லை.... இருத்தும் மூத்தோர் சொல் நிச்சயம் கருத்தில் கொள்கிறேன்

      Delete
    2. கதைச் சம்பவத்தை விடவா அருவருப்பு? 
      மணித உடலின் பாகங்களில் எதுவும் அருவருப்பில்லை. அழகான மனதில் தான் அருவருப்புச் சுரங்கம் இருக்கிறது. 
      தின்னுடா என எறிகையில் சரியான சொல் சரியான தாக்கத்தைத் தந்திருக்கும் என்று நினைக்கிறேன் 

      Delete
  10. நல்ல சிறுகதை. பணம் தின்னி கழுகுகள்.... இப்படித்தான் பலரும்....

    இங்கே ஒரு நண்பரின் உறவினர் இறந்து இதே போலத் தான் செய்துவிட்டார்கள். கூடவே அவர் இறந்து சில மணி நேரங்களுக்குள் கண் போல சில உடலுறுப்புகளையும் எடுத்து [அனுமதி இல்லாமலே] மற்ற நோயாளிகளுக்கு விற்று விட்டார்கள்....

    ReplyDelete
    Replies
    1. நீங்கள் கூறிய விசயமும் மிகப் பெரிய அவலம் ஸார்.. மனித உயிர்களை மனித மனங்களை மனிதமே இல்லாமல் கூறு போடும் அவலம்

      Delete
  11. சவம்..மனசை கலக்கிடுச்சில்லா.....

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றிண்ணே... கிட்டத்தட்ட இந்த அவலத்தை நேரில் சந்திக்க நேர்ந்த பொழுது என்னுடை உணர்வும் அப்படித்தான் இருந்தது

      Delete
  12. என்னலே நாஞசிலார் புத்தகம் படிச்சீரா...? அந்த சாயல் வருதுலே..!

    ReplyDelete
    Replies
    1. நாஞ்சில் நாடன் புத்தகம் படிக்க வேண்டும் என்பது எனது நெடுநாளைய ஆசை.... இதுவரை படித்தது இல்லை... அவருடைய பனுவல் போற்றுவதும் என்ற புத்தகம் பார்த்து வைத்துள்ளேன் சீக்கிரம் வாங்க வேண்டும்... நல்ல புத்தகம் இருந்தால் சொல்லுங்கள்....

      Delete
  13. miga arumaiyaana siru kathai....

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி நண்பா.. தங்கள் முதல் வருகைக்கும் கருத்துரைக்கும்

      Delete
  14. kalviyum maruthavuaumum illavasa maga vendum............atharikiren

    ReplyDelete
  15. The best from you so far.. கலக்குங்க நண்பா :-)

    ReplyDelete
  16. மிக அருமையான கதை! அழகான நடையில் சொல்ல வேண்டியதை அழுத்தமாய் சொல்லியவிதம் சிறப்பு! ரமணா பார்த்த நினைவு வந்தது! வாழ்த்துக்கள் நண்பா!

    ReplyDelete
  17. படிக்கும் எல்லோருக்கும் ரௌத்திரத்தை உணர வைக்கும் பதிவு,
    கொன்னுட்டுடா சீனு என சொல்ல தோணுது.,

    ReplyDelete
  18. ஆவி பற்றிய கதைன்னு ஆரம்பிச்சேன். கலக்கல் சீனு! கட்டாய சிசேரியனில் ஆரம்பித்து காசு மட்டுமே பிரதானமயிடுச்சு மருத்துவ மனைகளில். நல்ல விழிப்புணர்வு பதிவு.

    ReplyDelete
  19. சீனு... கதை கரு கனமாக இருந்தாலும், எதார்த்த நடையில், பிணத்திற்கும் ஓர் மனசு இருந்தால் அது படும் வேதனையை விழிப்புணர்வாக சொல்லியிருக்க...

    இக்கால பணம் தின்னி மருத்துவமனைகள் இருக்கும் வரை பிணங்களும் விழித்திருக்க வேண்டும்..... என உணர்த்துகிறது,,,


    வித்தியாச பார்வையில் அருமையான கதை..

    ReplyDelete
  20. சமூக சாடலுடன் கூடிய ஒரு பதிவு . பெருங்கோபத்தையும் , பேரன்பையும் மிக அழுத்தமாக பதிந்து சென்றுள்ளீர் . அழகு ...!

    ஏன்யா இவ்ளோ தெறமை வச்சுட்டு அப்பப்ப ....... பதிவெல்லாம் போடுறீரு ...?

    திருமதி தமிழ் படத்துக்கு போயிட்டு வந்து எழுதியிருக்க ஒரு பதிவு படிச்சேன் . இவனா அவன்னு சந்தேகமாப்போச்சு . ஒரே ஒரு வேண்டுகோள் சினிமா விமர்சனம் எழுதாதமாட்டேன்னு முடிவு பண்ண மாதிரி , மொக்க சினிமா பாத்துட்டு வந்து சில நாட்களுக்கு எந்த பதிவையும் போடுவதில்லைன்னும் ஒரு முடிவெடுப்பா ...!

    சிலை வடிக்கும் திறமை கொண்ட சிற்பி கல் உடைக்கலாமா .....?

    ReplyDelete