22 Apr 2013

நாடோடி எக்ஸ்பிரஸ் - நாகலாபுரம் நடந்தது என்ன

பகுதி ஒன்று


சுரீரென்று அடிகின்ற வெயில், நா வறண்ட தாகம், உடல் முழுவதும் வியர்வை அருவி, முதுகு நிறைய பாரம், மனம் நிறைய சோகம் இந்நிலையில்  ஒதுங்க சிறு நிழல் கிடைத்தால் எவ்வளவு சந்தோசமாய் இருக்கும், திடிரென்று தென்றல் வீசி நம்மை குளிர்வித்தால் எவ்வளவு இதமாய் இருக்கும், இதையெல்லாம் விட இருபது அடி ஆழத்தில் இருபது பேர் நின்று குளிக்கும் அளவிற்கு ஒரு அருவியே கிடைத்துள்ளது, இது போதாதா கொண்டாடுவதற்கு.




மேற்கூறிய அந்த அருவியைத் தான் நாங்கள் முதலிலேயே கண்டு காண்டாகி இங்கெல்லாம் குளிக்க மாட்டோம் என்று மலையேறத் தொடங்கினோம். தற்போது உடல் நனைய வேண்டும், வியர்வை போக குளிக்க வேண்டும் அது போதும் அது மட்டுமே போதும், இங்கு கவனிக்கப் பட முக்கியமான வேண்டிய விஷயம் இயற்கை மாறவில்லை ஆனால் காட்சி மாறியுள்ளது என்பது மட்டுமே. 

மிக சிறிய அருவி மற்றும் குட்டை, சுற்றிலும் உயர்ந்து வளர்ந்த மரங்கள்  ஏற்படுத்திய குளுமை. எல்லாம் இயல்பாக இருந்தும் பாறைகளின் நிழல் பட்டு கருப்பு நிறத்தில் தெரிந்த நீர் ஒரு கணம் கூவத்தை ஜெராக்ஸ் எடுத்து காண்பித்தது மட்டும் மனதை என்னவோ செய்தது.

முதலில் தயங்கினாலும் இருவர் வழிகாட்ட வரிசையாக எல்லாருமே ஆனந்தக் குளியலுக்கு தயாராகி விட்டோம். இந்நேரத்தில் தான் அந்த சம்பவம் நிகழ்ந்தது. நாம் இந்தியர்கள் என்ற அடையாளத்தை செல்லும் இடங்களில் எல்லாம் விட்டுச் செல்ல வேண்டும் என்பது நமது மரபாயிற்றே அதனால் வந்த வினை.

அருவிக்கு வருபவர்கள் கையோடு சரக்கையும் எடுத்து வருவது வழக்கம். (நாங்கள் வெறும் முறுக்கு மட்டும் தான் எடுத்து சென்றோம் என்பதை இந்த சமூகம் நம்ப வேண்டும் மை லார்ட்). அப்படி சரக்கடித்து மட்டையான  திருவாளர் குடிமகன்கள் கண்ணாடி பாட்டில்களைக் கொண்டு சிதறு தேங்காய் போட்டிருந்தனர். எவ்வளவோ கவனித்து நடந்த போதிலும் உடன் வந்த ஒருவரது காலை ஒரு கண்ணடித் துண்டு பதம் பார்த்துவிட்டது. நல்லவேளையாக முதலுதவிப் பொருட்கள் இருந்ததால் காயத்தைக் கழுவி மருந்து போட உதவியாய் இருந்தது. மேலும் மிகப் பெரிய அளவில் காயம் ஏற்படவில்லை என்பதால் சிறிது நேரத்தில் இயல்பு நிலைக்கு திரும்பி ஜல ஜாலத்தில் ஐக்கியமாகத் தொடங்கினார். 

அய்யா குடிமக கனவான்களே குடியுங்கள் வேண்டாம் என்று சொல்லவில்லை, உங்கள் உடலுக்கு மட்டும் உபாதை வரும் வகையில் குடியுங்கள். 

குளிக்கும் பொழுது நீருக்குள் கூட கண்ணடித் துண்டுகள் இருக்கலாம் என்ற  எச்சரிக்கை உணர்வுடனேயே குளிக்கத் தொடங்கினோம்.



அருகில் இருந்த பாறையில் ஆலமர விழுதைக் கட்டி தொங்க விட்டுள்ளனர். இங்கு வந்து ஆலமர விழுதைக் கட்டித் தொங்க விட்டது யார் மற்றும் ஏன் என்ற கேள்வி எழலாம்? பதில் CTC. சென்னை ட்ரக்கிங் கிளப் என்று ஒரு கிளப் உள்ளது, இந்த கிளப் மூலம் பலரும் இம்மலையில் ட்ரக்கிங்கிற்காக வருவது வழக்கம். அவர்கள் தான் இவ்விழுதுகளை கட்டித் தொங்க விட்டுள்ளனர். அதைப் பிடித்து சில பல சாகசங்களுடன் உயிரைப் பணயம் வைத்து சிறிது தூரம் வரை சிலர் மட்டும் ஏறிப் பார்த்தோம். ஏறுவதில் கூட சிக்கல் இல்லை, இறங்கும் பொழுது பிடிமானமே இல்லை, எப்போது பாறை வழுக்கி கீழே விழுவோமோ என்ற எண்ணத்திலேயே தான் இறங்கினோம்.

எவ்வளவு நேரம் தான் குளிப்பது, வராத மற்றும் தெரியாதா நீச்சலை முயற்சிப்பது. இவ்வேளையில் கையில் சிக்கியது ஒரு வாட்டர்கேன், இரு அணியாகப் பிரிந்து அதை வைத்து கேட்ச் பிடித்து விளையாட ஆரம்பித்தோம், இப்படி ஒரு விளையாட்டை விளையாண்டோம் என்பதை வாசிப்பதற்கும்  கற்பனை செய்து பார்பதற்கும் வேண்டுமானால் மொக்கையாய் இருக்கலாம், உணர்ந்து பாருங்கள் அவை குழந்தையாகும் தருணங்கள்.     



ஒரு மணி நேரம் நீரில் ஆட்டம் போட்ட களைப்பில் பசியறியத் துவங்கிய பொழுது கொண்டு வந்திருந்த புளியோதரையும் இட்லியும் சைட்டிஷ் முறுக்கும் பார்சலை விட்டு வந்த வேகத்தில் காணமல்போகத் தொடங்கின. மணி ஒன்று தான் ஆகியிருந்தது. அடிகின்ற வெயிலில் அதற்குள் சென்னையை நோக்கி கிளம்ப முடியாது, உண்ட உடன் நீந்தவும் முடியாது, நீந்த தெரியாது என்பது வேறு விஷயம்.

அமர்ந்த இடத்தில் இருந்தே விளையாடுவது என்று முடிவாயிற்று, விளையாட்டின் பெயர் "மாபியா கேங்". என்ன மாதிரியான விளையாட்டு என்று எளிதாக சொல்லவேண்டும் என்றால் சிறு வயதில் வட்டமாக உக்கார்ந்து ராஜா ராணி விளையாண்டு இருப்போமே அதில் திருடன் யார் என்று போலிஸ் கண்டுபிடிக்க வேண்டும். இவ்விளையாட்டிற்கு மூளை தேவை இல்லை. அதிர்ஷ்டம் மட்டும் கை கொடுத்தால் போதும்.



மாபியா கேங் விளையாட்டில் கிராமத்தான்கள் எல்லாரும் சேர்ந்து யார் மாபியா யார் என்று கண்டு பிடித்துக் கொல்ல வேண்டும். மாபியாக்கள் கூட்டு சேர்ந்து கிராமத்தான்களை கொலை செய்யவேண்டும், இறுதியில் யார் பக்கம் எண்ணிக்கை அதிகம் இருக்கிறதோ அவர்களே வென்றவர்கள். எழுத்தால் விளக்க சற்றே சிரமமான காரியம், விளையாண்டு பார்த்தால் மட்டுமே புரியும். மூளையை மிக அதிகமாக உபயோகிக்க வேண்டும், மூளை மட்டும் போதாது பேச்சு சாமர்த்தியம் வேண்டும். வாழ்கையில் கற்றுக் கொண்ட மற்றுமொரு உருப்படியான விளையாட்டு. மிக மிக அற்புதமான விளையாட்டு.

மணி இரண்டைத் தொட்டிருந்த பொழுது எங்கள் வாட்டர்கேனுடன் மீண்டும் ஒரு குளியலுக்கு தயாராகி இருந்தோம்.இம்முறை விளையாட்டு சற்றே விறுவிறுப்பாயும் உற்சாகமுமாகவும் இருந்தது. கடந்து சென்ற ஒரு மணிநேரமும் உற்சாகமான தருணங்கள்.

மூன்று மணிக்கு தண்ணீரைவிட்டு வெளியே வந்தபொழுதும் வெயில் குறைந்த பாடில்லை. எங்களைத் தயார்படுத்திக் கொண்டு, வந்த வழியில் நடக்கத் தொடங்கினோம். தமிழ்நாட்டிலிருந்து வந்த ஒரு இளைஞர் இளைஞியர் பட்டாளாம் சோறு பொங்கத் தொடங்கி இருந்தார்கள். வெயில் காய வண்டிகளை நிறுத்தி இருந்த இடம் நோக்கி நடந்து கொண்டிருந்தோம்.

வெயிலின் வேகத்தில் தொண்டை வறண்டு தாகம் தாக்கத் தொடங்கியது.  பைக் வெயில் காய்ந்து கொண்டிருந்தது. இன்னும் இரண்டு கி.மீக்கு மிக மோசமான பாதையில் வண்டியோடு வண்டியாய் உருளத் தொடங்க வேண்டும், தொடங்கினோம். வரும் பொழுது இருந்த உற்சாகம் சுறுசுறுப்பு அனைத்தும் மிஸ்ஸிங். அவசரத் தேவை நீர்.

நாகலாபுரத்தை அடைந்ததும் ஒரு கடையில் சரணணடைந்து என்னன்ன கலரில் எல்லாம் நீர் கிடைத்ததோ அததனையும் வாங்கி குடிக்கத் தொடங்கினோம். பெப்சி, 7அப், மிரண்டா, ஸ்லைஸ், கோலி சோடா, பன்னீர் சோடா, தண்ணீர் எதையும் விட்டுவைக்கைல்லை. 

இளைப்பாற எங்காவது இடம் கிடைக்குமா என்று பார்த்துக் கொண்டே நகர்ந்து கொண்டிருந்தோம். வசமாக சிக்கியது ஒரு வயவெளி. மரநிழல்களில் தஞ்சமடைந்து கொண்டுவந்திருந்த நொறுக்குத்தீனிகள் மற்றும் மீதமிருந்த புளியோதரைகளையும் காலி செய்யத் தொடங்கினோம். பின்னர் மற்றொரு இடத்தில் போட்டோ செஷன்.       

வெயில் குறைந்த பொழுது மணி ஐந்தாகியிருந்தது. தமிழக சாலைகளை நோக்கி ஆந்திர சாலைகளில் மீண்டும் எங்கள் பயணம் தொடங்கியது.ஆந்திர சாலைகளைப் பற்றி குறிப்பிட்டே ஆக வேண்டும். கொஞ்சம் சிமெண்ட் கலரில் இருந்த தார் சாலைகள். ஒரு சின்ன இடத்தில கூட விரிசலோ பள்ளங்களோ இல்லை. மழைக் காலத்தில் கூட சறுக்காத சாலைகள். அதில் வண்டியை ஓட்டும் பொழுது சற்றே ஏக்கமாய் தான் இருந்தது.


     
தமிழக எல்லைக் காவல் எங்களை இனிதே வரவேற்றது. பைக்கில் முதலில் சென்றவரை வழிமறித்த காவல் 

" என்ன தம்பி எங்க இருந்து வாறீங்க"

"சென்னைல இருந்து வாரோம் சார்"

உயரதிகாரி ஆந்திர எல்லையைப் பார்த்து முறைத்து விட்டு, பதில் சொன்ன தம்பியை சந்தேகக் கண்களோடு பார்த்தார் 

" என்ன மப்பா"

"அதெல்லாம் ஒன்னும் இல்ல சார், எல்லாரும் நாகலாபுறம் பால்ஸ்க்கு போயிட்டு வாரோம்"

"அப்போ ஆந்திரால இருந்து வந்துட்டு சென்னையில இருந்து வாரோம்ன்னு சொல்றியே, எங்க ஊது மப்பான்னு பாக்லாம்" 

நண்பர் ஊதவும் உயரதிகாரியின் முகம் மாறுகிறது 

"சார் இவங்க எல்லாம் புளி சாதம் தின்ன கோஷ்டி ஸார், போ போ போப்பா.. சீக்கிரம் இடத்த காலி பண்னு"   

மொக்கை வாங்கியது நாங்கள் இல்லை அந்த உயரதிகாரிதான் என்பதை நீங்கள் நம்பியே ஆக வேண்டும் மைலார்ட்.

இந்நேரத்தில் களைப்பு தாங்காமல் வண்டி ஓட்டும் பொழுதே இருவர் தூங்கிவழிய, நல்லவேளையாக அவர்கள் மற்றவர்களிடம் வண்டியைக் கொடுத்துவிட்டு பின்னால் அமர்ந்து தூங்கத் தொடங்கினர்.

இம்மாதிரி நெடுந்தூரம் பைக் ரைட் செல்பவர்கள் தனிதனி பைக்கில் செல்வதை விட இரண்டு இரண்டு பேராக செல்வது கொஞ்சம் பாதுகாப்பானது. பேசிக் கொண்டு வரலாம், களைப்படையும் பொழுது மாற்றி மாற்றி ஓட்டிக் கொள்ளலாம். இம்மாதிரி பயணங்களில் மற்றொரு விஷயம் சும்மா அமர்ந்து வருவதை விட வண்டியே ஓட்டிவிடலாம் எனும் நிலைக்கு வந்துவிடுவோம், இல்லையேல் சும்மா கிழி கிழி ன்னு கிளிகிலியா தான். 

பெரியபாளையத்தில் நமது ரூபக் ( கனவு மெய்பட) வந்த வண்டி ஸ்டார்ட் ஆக மறுத்தது. பெட்ரோல் டேன்க் புல், பெட்ரோல் ஓவர் ப்ளோ ஆகத் தொடங்கியதால் வந்த பிரச்னை. இது தான் பிரச்னை என்பதை கவனித்த பிரபாகர் சிறிது நேரத்தில் சரி செய்தார்.

பைக் ரைடில் கற்றுக் கொண்ட அடுத்த பாடம், வண்டிக்கு வரும் பிரச்சனைகளைத் தீர்க்கும் அடிப்படை அறிவு நிச்சயம் வேண்டும். எல்லாருக்கும் இல்லை என்றாலும் நம்மோடு பயணிப்பவர்கள் சிலருக்காது இருக்கும், அதனால் கூடுமானவரை அனைவரும் ஒன்றாக பயணிப்பதே நல்லது. மேலும் வண்டிக்கு ஏற்படும் பிரச்சனைகளை குறித்து அறிந்து கொள்வது மிகவும் நல்லது.      



இருபது கி.மீக்கு ஒருமுறை வண்டியை நிறுத்தி நிறுத்தி பயணித்த நாங்கள், கடைசியாக மதுரவாயல் டோல்கேட்டில் நிறுத்தி உற்சாகபானங்களை அருந்தி அங்கிருந்து அவரவர், அவரவர் வீடு நோக்கி பயணிக்கத் தொடங்கினோம்.

ஒரு பயணத்தில் பயணித்த இடம் மட்டும் தான் நமக்கு மகிழ்ச்சியையும் மன நிறைவையும் கொடுக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. பயணம், பயணித்த இடம், உடன் பயணித்தவர்கள் இதில் எது வேண்டுமானாலும் அதே அளவு மகிழ்ச்சியைக் கொடுத்து விட முடியும். முதலில் பயணித்த இடம் சோர்வடைய வைத்தாலும், பயணமும் பயணித்தவர்களும் கொடுத்த உற்சாகம் பயண சுகத்தை மும்மடங்காக்கியது என்பதே உண்மை.              

நாகலாபுரம் நாடோடி எக்ஸ்பிரசில் என்னுடன் பயணித்த உங்களுக்கு மிக்க நன்றி.


ராசா வேறு எங்காவது வண்டியை விட்டால் மீண்டும் நாடோடி எக்ஸ்பிரசில் ஏறி இடம் பிடித்துக் கொள்ளுங்கள். மீண்டும் சந்திப்போம் மற்றொரு நாடோடி எக்ஸ்பிரசில் .   

15 comments:

  1. //ஒரு பயணத்தில் பயணித்த இடம் மட்டும் தான் நமக்கு மகிழ்ச்சியையும் மன நிறைவையும் கொடுக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. பயணம், பயணித்த இடம், உடன் பயணித்தவர்கள் இதில் வேண்டுமானாலும் அதே அளவு மகிழ்ச்சியைக் கொடுத்து விட முடியும். முதலில் பயணித்த இடம் சோர்வடைய வைத்தாலும், பயணமும் பயணித்தவர்களும் கொடுத்த உற்சாகம் பயண சுகத்தை மும்மடங்காக்கியது என்பதே உண்மை.// நல்லா சொன்னிங்க சீனு.

    //(நாங்கள் வெறும் முறுக்கு மட்டும் தான் எடுத்து சென்றோம் என்பதை இந்த சமூகம் நம்ப வேண்டும் மை லார்ட்).// முறுக்கு மட்டும் சாப்படற நம்மைப் போன்றவரை பார்த்து இந்த சமூகம் திருந்த வேண்டும்.

    நாங்கள் எடுத்து சென்ற சாப்பாட்டு பொட்டலங்கள் மற்றும் கவர்களை அங்கு போடாமல் மொத்தமாக எடுத்துக்கொண்டு வந்து, வழியில் இருந்த குப்பை தொட்டியில் போட்டோம்(ன்). யார் கொடுத்த ஐடியா என்று தெரியவில்லை. அந்த நல்ல உள்ளம் வாழ்க!

    ReplyDelete
  2. 100% பசங்க. இதுக்கு பேரு அவுட்டிங்?

    ReplyDelete
    Replies
    1. அப்ப அதை wasting என்று சொல்லலாமா ????

      Delete
  3. //குளிக்கும் பொழுது நீருக்குள் கூட கண்ணடித் துண்டுகள் இருக்கலாம் என்ற எச்சரிக்கை உணர்வுடனேயே குளிக்கத் தொடங்கினோம்.


    //

    பொய் சொல்லாதிங்க நீங்க தான் குளிக்க மாட்டிங்களே ???

    ReplyDelete
  4. நன்றாக என்ஜாய் செய்திருக்கிறீர்கள். குடிமகன்கள் போட்ட பாட்டில்கள் பற்றிப் படிக்கும்போது ஜெமோவின் யானை டாக்டர் நினைவுக்கு வந்தது. மனிதன் செய்யும் எத்தனையோ பொறுப்பற்ற செயல்களில் ஒன்று. நாங்களும் சுவாரஸ்யமாகப் படித்தோம். குளிக்குமிடத்துக்கு இறங்கவே சாகசம் செய்ய வேண்டியிருந்திருக்கும் போல!

    ReplyDelete
  5. இதே போல ஆந்திரா வரதைய பாளையம் அருகேயும் ஒரு பால்ஸ் இருக்கிறது! ஐந்து வருடம் முன் அங்கு குடும்பத்துடன் சென்று அவஸ்தை பட்ட கதை சுவாரஸ்யமானது! நேரம் கிடைக்கும் போது பகிர்கிறேன்! சுவையான பகிர்வுக்கு நன்றி!

    ReplyDelete
  6. பல இடங்களின் "நம்ப வேண்டும்" என்று சொல்வது தான் சிறிது சந்தேகமாக இருக்கிறது... ஹிஹி... வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  7. சுவாரஸ்யமான பயணம். அத்துடன் அங்கங்கே நல்ல மெசேஜ்களையும் சொல்ல உன் சமூகக் கடமையை பொறுப்புடன் நிறைவேற்றி விட்டாய் தம்பி! வாழ்த்துக்கள்! கடைசிப் பாரா டாப்!

    ReplyDelete
  8. Sorry to say ....! .................... something missing in this post...!

    ReplyDelete
  9. இதென்ன எல்லாரும் டவுசர் சட்டை போட்டுக் குளிக்கிறீங்க?

    குழந்தையாகும் தருணங்கள் - இதில் மொக்கை என்ன இருக்கிறது? வருடத்துக்கு நாலைந்து முறையாவது இத்தகைய தருணங்களை அமைத்துக் கொள்வது உளநலனுக்கு உகந்தது. பாய் பிராண்டும் காலத்தைக் கொஞ்சம் ஒத்தி வைக்க உதவும். நீங்கள் இப்படி உங்களை மறந்து விளையாடுவது படித்ததும் சந்தோசமாக இருந்தது. எல்லாருக்கும் கிடைப்பதில்லை இந்த வாய்ப்பு. எஞ்சாய். மாபியா கேங்க்
    ஆட்டம் தெரிஞ்சுக்கணுமே? ரொம்ப மூளையை உபயோக்கணுமோ.. ம்ம்ம்.

    நீண்ட பயணங்கள், குறிப்பாக road trip, போகையில் அதிகமாகச் சாப்பிடாமல் இருப்பது நல்லது. இப்படி இட்லி, புளிசாதம், முறுக்கு, வகைக்கொரு சோடா என்று திணித்தால் தூக்கம் வராமல் என்ன செய்யும் தலைவரே?

    ReplyDelete
  10. சுவாரஸ்யமான பயணம் என்று புரிகிறது. குடிமகன்கள் இங்கு மட்டும் இல்லை சீனு. எங்கும் இருக்கிறார்கள். சமீபத்தில் பொன்முடி [கேரளம்] சென்றிருந்தபோது அங்கே மலைமேலே நிறைய பாட்டில்கள் - முழுதாயும் உடைத்துப் போடப் பட்டும்...

    அங்கேயும் கீழே வரும்போது பலத்த போலீஸ் செக்கிங்! போகும்போது ஒரு போலீஸ்காரர் கூட இல்லை!

    நன்கு ரசித்து இருக்கீங்கன்னு தெரியுது. தொடரட்டும் சுவையான பயணங்கள்.....

    ReplyDelete
  11. பிணந்தின்னி மருத்துவமனைகள் வாசித்தேன் மிகவும் பிடித்தது...

    ReplyDelete
  12. hello dear fiends.. naanum unga group la join pannikkalaama?.. bcoz naanum naadoti thaan.. see my face book id bike-rider pollachi.... jakpollachi@gmail.com

    ReplyDelete