16 May 2017

எழுத்தெனும் நிம்மதி

அன்புள்ள சீனு (Srinivasan Balakrishnan),

வணக்கம்! நலமா?

நாம் சந்தித்துப் பேசி பல நாட்கள் ஆகிவிட்டன. கடைசியாக நீங்களும் உங்கள் மனைவியும் அமெரிக்கா செல்வதற்கு சென்னை விமான நிலையத்தில் அந்த நீண்ட வரிசையில் நின்றுகொண்டிருந்தீர்கள். அப்போது பேசினோம்.

தொலைபேசியில் பேசலாம் என்றால்...

எனக்கு ஒரு பழக்கம் இருக்கிறது. நண்பர்களிடம் பேசுவதென்றால், நான் நேரம் காலம் பார்த்துத்தான் பேசுவேன். இரவு எட்டு மணிக்கு மேல், யாரையும் தொலைபேசியில் அழைக்கமாட்டேன், ஒன்பது மணிக்குள் வீட்டில் அடைந்துவிடுவேன். எப்போது தொற்றிக்கொண்ட பழக்கம் என்று தெரியவில்லை.

ஷிப்டில் வேலை செய்யும் நண்பர்கள் நான் அழைக்கும் நேரம் பேசுவதற்கு உகந்த நேரமாக இருக்குமா என்று தெரியாது. அதனால், பெரும்பாலும் பேசுவதைத் தவிர்த்துவிடுவேன். உங்களுக்கே தெரியும், எத்தனை முறை நான் சொல்லியிருக்கிறேன். இப்போது அமெரிக்காவில் வேறு இருக்கிறீர்கள். அதனால், எந்த நேரத்தில் பேசமுடியும் என்று எனக்குத் தெரியாது என்பதால் நான் அழைப்பதில்லை.

நிற்க. இந்தப் பதிவு உங்களுடைய நியூயார்க் பயணத்தைப் பற்றியது. காலையில் நீங்கள் எழுதிய “எதை எழுத, எதை நிராகரிக்க” என்ற வாசகத்தைப் பார்த்ததும், ஏன் இதை ஒரு தொடராக எழுதவேண்டும், ஒவ்வொரு பகுதியும் தனித்தனியாகப் படித்தாலும் புரியக்கூடிய வகையில் எழுதலாமே என்று தோன்றியது. அது எனக்கு வகுப்பிற்கான நேரம் என்பதால் அப்போது எதுவும் சொல்ல முடியவில்லை. இப்போதுதான் இரண்டாவது பதிவைப் படித்தேன். நான் சொல்ல நினைத்ததுபோலவே இரண்டாம் பாகம் தனியாகப் படித்தாலும் புரியும் வகையில் இருந்தது.

முதல் பதிவு மிக மிக சுவாரசியம். காரணம், தொடங்கிய புள்ளி மிகச் சரியாக அமைந்துவிட்டது. இரட்டை கோபுரத்தைத் தகர்த்த நாளை யாரும் அத்தனை எளிதில் மறக்கமாட்டார்கள். நாம் விரும்பிப் படிக்கும் ஒரு பதிவர், அதிலும் நமக்கு நெருக்கமானவர் அதை எப்படி அணுகியிருக்கிறார் என்பதை அறிந்துகொள்வதில் ஒரு ஆர்வம். நீண்ட நாட்களுக்குப் பிறகு நீங்கள் எழுதிய நாடோடிப் பதிவு என்பதாலும் வெகுவாக ஈர்த்தது. அந்தக் கட்டடத்திற்குள் நுழைய முடியாமல் போய்விடுமோ என்ற பதற்றத்தையும் வாசிப்பவர் தலையில் வைத்துவிட்டீர்கள். அதிலும், அந்த நூற்று இருபதாவது மாடிக்குச் சென்றதைக் கூறும் பத்தியும், அதனைத் தொடர்ந்த படமும் உண்மையிலேயே அங்கு அழைத்துச் சென்றது.

இரண்டாம் பதிவு சுவாரஸ்யம்தான் என்றாலும், ஏதோ அவசரம் அவசரமாக எழுதியது போன்ற உணர்வு. அப்படித்தானா? இந்தியர்கள் என்றாலே ‘இந்தி’யர்கள் என்று நினைக்கிறார்களே, அங்குள்ளவர்கள்? பங்களாதேஷிகள் இந்திய உணவகம் என்ற பெயரில் நம்மை ஈர்க்க முயல்கிறார்கள். பல விஷயங்களுக்கு விளக்கங்கள் கொடுத்திருந்தாலும், இதுவரை கடல் கடந்திராத எனக்கு அது அந்நியமாகவே படுகிறது. சரியான திட்டமிடலுடன்தானே சென்றிருப்பீர்கள், இருந்தாலும் ஏன் டாக்சி, பேருந்து போன்ற குழப்பங்கள்? எனினும், அடுத்தடுத்த பதிவுகளுக்காகக் காத்திருக்கிறேன்.

இன்னும் பேசுவோம்.

***

அன்புள்ள ஸ்கூல் பையன் (அதுதானே உங்கள் பெயர் :-) )

வணக்கம். நன்றாக இருக்கிறீர்களா? அத்தனையும் நேற்று நடந்தது போல் இருக்கிறது. அந்தக் குறைந்த ஒளியில் நடேசன் பார்க் அருகில் நீங்களும் ரக்ஷித்தும் காத்திருந்தீர்கள். நானும் வாத்தியாரும் வந்து சேர்ந்தோம். அதுதான் நம் முதல் சந்திப்பு. ஆனால் பாருங்கள் அந்த முதல் சந்திப்பு நிகழ்ந்து ஐந்து வருடங்கள் பறந்து விட்டன. இடையில் எத்தனயோ சந்திப்புகள் பயணங்கள் - இவ்வளவு ஏன் - சுருக்கமாகச் சொல்வதென்றால் பெரும்பாலான வார இறுதிகளை ஒன்றாகக் கழித்திருக்கிறோம். அப்படி இருந்த இவனுக்கு என்ன ஆயிற்று? 'ஏன் ஒரு போன் கூட பண்ணல? அமெரிக்கா போனதும் கொம்பு மொளைச்சிருச்சா?' என்று நீங்கள் யோசித்திருக்கலாம். கலாம் தான் :-) கலாமலும் இருக்கலாம் :-) 

உங்களுக்கு மட்டும் இல்லை யாரையுமே நான் தொடர்பு கொள்ளவில்லை. மிஞ்சிப்போனால் ஒரு இரண்டுமுறை உங்களை அழைத்திருப்பேன். ஒன்று எனக்கு கல்யாணம் என்று சொல்வதற்கு. இன்னொன்று கல்யாண விடுப்பு முடிந்து அமெரிக்கா வந்து சேர்ந்துவிட்டேன் என்று சொல்ல. உங்கள் பிறந்த நாள் தொடங்கி யாருடைய பிறந்த நாளுக்கும் அழைத்து வாழ்த்து கூடச் சொல்லவில்லை. இப்போது நினைத்தாலும் வருத்தமாக இருக்கிறது. 

***

2007. அப்போதிருந்துதான் கைபேசி உபயோகிக்க ஆரம்பித்தேன். அம்மாவைப் பார்ப்பவர்கள் அத்தனை பேரும் என்னைப் பற்றி குறை கூறுவார்கள். 'என்ன இது உம்புள்ள எப்போ பார்த்தாலும் செல்லும் கையுமா இருக்கான். அதுல அப்டி என்ன தான் பண்ணுவான்' என்று என் காதுபட ஏற்றிவிடுவார்கள். அம்மா எவ்வளவோ கூறிப்பார்த்தும் நான் விடுவதாக இல்லை. கார்த்தியாமாவிடம் இருந்து வாங்கியிருந்த அந்த 1600   - வை நோண்டிக் கொண்டே இருப்பேன். என்னிடம் இருந்து செல்லகூடிய forward message -க்கு என்று ஒரு தனி ரசிகக் கூட்டம் இருந்தது. அண்ணன் வேலைக்குப் போய் booster pack - போட ஆரம்பித்ததில் இருந்து யாருடனாவது பேசிக்கொண்டே இருப்பேன். conference call அறிமுகமான புதிது. பெரும்பாலும் நான்கைந்து பேர் சேர்ந்து மொபைலை மொபைல் குட்டிச்சுவர் ஆக்கியிருந்தோம். 'அப்படி அதில என்னதான் இருக்கோ' என்று அம்மா புலம்பாத நாள் இல்லை. வேலைக்குச் செல்லும் வரையில் பேசிக்கொண்டு இருந்தேன் என்றால் வேலைக்குப் போன நேரமும் பேஸ்புக்கும் ஒன்றாக சூடுபிடிக்க 'அந்த விரலும் கண்ணும் என்னத்துக்கு ஆகப்போகதுன்னு தெரியலல' என்பது தான் அதன்பின்னான அம்மாவின் புலம்பலாக இருந்தது. 

இணையமும் வலைப்பூவும் அறிமுகமானதில் இருந்து கணினி ஒன்றே கதி. எந்நேரமும் அதில் தான் இருப்பேன். எதையாவது வாசித்துக் கொண்டோ இல்லை எழுதிகொண்டோ இருப்பேன். பேசுவது கொஞ்சம் கொஞ்சமாக குறைந்தது. நடுவீட்டில் அப்பாவும் அம்மாவும் அண்ணனும் - ஊரில் இருந்து வந்திருக்கும் உறவினர்கள் என யார் பேசிக் கொண்டிருந்தாலும் கவலைப்பட மாட்டேன். என் கதி கணினியே என்று கிடப்பேன். வலைப்பூ ஆரம்பித்த புதிது. எதைப்பார்த்தாலும் எழுத வேண்டும் என்கிற கிறுக்கு. அந்தக் காலகட்டம் தான் என் பேச்சு குறைந்து எழுத்து அதிகமான காலகட்டம். யார் அழைத்தாலும் இரண்டு மூன்று முறைக்குப் பின் தான் அழைத்துப் பேசுவேன். உடனே துண்டித்தும் விடுவேன். இல்லை பேசுபவர்கள் பேச கேட்டுக்கொண்டு மட்டும் இருப்பேன். உங்களுக்கே கூட அந்த அனுபவம் இருக்ககூடும். நான் கணினி அருகில் இருப்பேன். மொபைல் எங்காவது கிடக்கும் பெரும்பாலும் சைலண்டில். எப்போதும் அம்மா திட்டிக்கொண்டே இருப்பார் - உறவினார்களுக்கு போன் பண்ணி பேசு, அட்லீஸ்ட் நான் பேசும் போதாது பேசு. நீ பேசவே மாட்டன்றன்னு எல்லாரும் வருத்தப்படுறாங்க' என்று. 

எப்போது ஆன்சைட் வந்தேனோ அப்போதிருந்து சுத்தம். இருபத்தி நான்கு மணி நேரத்தில் இருபத்து ஐந்து மணி நேரங்களும் வேலையைப் பற்றியே சிந்தித்தாக வேண்டிய கட்டாயம். எழுதுவது சுத்தமாகக் குறைந்து பேசுவது அடியோடு ஒழிந்துவிட்டது. இன்று வரைக்கும் அம்மாவிடம் பேசினால் ஒரு பெரிய லிஸ்ட் கொடுத்து இவங்ககிட்ட எல்லாம் பேசியாகணும் என்று உத்தரவிடுகிறார். ஆனால் நான் திருந்துவதாயில்லை. இரண்டு பக்கமும் கடிவாளம் கட்டிய குதிரையாய் / மாடாய் ஓடிக்கொண்டிருக்கிறேன். கொஞ்ச நேரம் ஓய்வு கிடைத்தாலும் அந்த ஓய்விலும் அலுவலக பணியை யோசிக்கத்தான் மனது சொல்கிறது. உங்களுக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. ஆனால் ஆவிக்குத் தெரியும். கிட்டத்தட்ட பத்து கிலோவிற்கு புத்தகங்களை அள்ளி வந்திருக்கிறேன். அதில் ஒன்றைக் கூட முழுதாக முடிக்கவில்லை. ஒரு புத்தகத்தையாவது முடித்துவிட வேண்டும் என்று எவ்வளவோ முயன்றும் தோற்றுக் கொண்டிருக்கிறேன். அதற்காக என் மீது கழிவிரக்கம் எல்லாம் வேண்டாம். எவ்வளவு சீக்கிரம் இந்த சுழலில் இருந்து வெளிவர முடியுமோ வந்துவிடுவேன் :-) 

நான் பேச ஆரம்பித்தால் எவ்வளவு பேசுவேன் என்று உங்களுக்கே தெரியும். எனக்கு சமமாக வர்ஷனா பேசுவதால் மிகப்பெரிய ஆறுதலாக இருக்கிறது. எனக்கும் அவளுக்கும் இடையில் ஆரம்பிக்கும் வாக்குவாதம் எங்கோ தொடங்கி எங்கெங்கோ சென்று பல சண்டைகளின் வழியாக புதிதான ஒன்றில் வந்து நிற்கும். அருகில் இருக்கும் மிகப்பெரிய ஆறுதல் :-) 

ந்யூயார்க் பயணக் கட்டுரையைப் பற்றி கேட்டிருந்தீர்கள் இல்லையா? முதலில் உங்களுக்கும் ஆவிக்கும் நன்றியைக் கூறிக்கொள்கிறேன். ஒரு பதிவை எழுதி முடித்தபின் திருப்தி ஏற்படும் அல்லது ஒருவித ஒவ்வாமை ஏற்படும். முதல் பதிவில் திருப்தியும் இரண்டாவது பதிவில் நான்கூறிய அந்த ஒவ்வாமையும் ஏற்பட்டது உண்மை. ஏதோ ஒன்று குறைவது எனக்கே தெரிந்தது. ஆனாலும் அதில் அதற்கு மேல் நேரம் ஒதுக்க முடியவில்லை. நேரமும் இல்லை. பதிவிட்டு தூங்கியெழும்போதே ஆவி மெசெஜ் செய்திருந்தார். பதிவில் இருந்த குறைகளைக் கூறியிருந்தார். முதல் விமர்சனம். முதல் நிம்மதி. அவர் அந்த நிம்மதியைக் கொடுத்திருக்காவிட்டால் அந்த நாள் முழுக்க குழப்பத்திலேயே கழிந்திருக்கும். 

அடுத்த ஆறுதல் நீங்களும் கூறியிருந்தது. ஆவி என்ன கேட்டாரோ அதையேத்தான் நீங்களும் கேட்டிருக்கிறீர்கள். அவசரவசரமாக எழுதிய பதிவு என்பதை விட கொஞ்சம் அலுப்பில் எழுதிய பதிவு என்பது தான் உண்மை. அலுப்பாக இருந்தால் எழுதாதே உன் அலுப்பு வாசகனையும் ஒட்டிக்கொள்ளும் என்பது தெரிந்தது தான் என்றாலும் எப்படியாவது என்னை என் எழுத்தின் மூலம் மீட்டெடுக்க வேண்டும் என்கிற வேகத்தில் எழுதிய பதிவு அது. அதனால் கூட கொஞ்சம் வேகவேகமாக இருந்திருக்கக் கூடும் :-) 

இந்த இடைப்பட்ட நாட்களில் எத்தனையோ பதிவுகளை எழுதி எழுதி அழித்திருக்கிறேன். அத்தனையும் அவ்வளவு மொக்கையாக மொண்ணையாக வந்த பதிவுகள். இன்னும் இரண்டு பதிவுகள் அழிக்கவும் மனமில்லாமல் பதிவேற்றவும் மனமில்லாமல் உறங்கின்றன. பட்டி டிங்கரிங் பார்க்க ஒரு சோம்பல். இருந்தும் வெகுநாட்களுக்குப் பின் எப்படியேனும் எழுதிவிட வேண்டும் என்ற உந்துதலில் எழுதுவதால் எழுதியதால் வந்த வினை அந்த இரண்டாம் பதிவு. :-) கொஞ்சம் நேரம் கொடுங்கள் அதையும் திருத்திக் கொள்கிறேன் :-) 

அப்புறம் விரைவில் அழைக்கிறேன். விரைவில் அழைக்கிறேன் என்ற வார்த்தையை வாத்தியாரிடம் கூறி ஒருவாரத்திற்கும் மேல் ஆகிறது என்பது கூடுதல் தகவல். ஆனால் பார்த்தீர்களா எழுதச் சொன்னால் எப்படி எழுதுகிறேன் என்று. ஒருவேளை நான் அழைக்காவிட்டால் அடுத்தமுறையும் கடிதமே எழுதிவிடுங்கள். எழுதப் பிடித்திருக்கிறது. :-)   

எழுதுவோம்...
  

5 comments:

  1. நல்லது. உடனடி மறுமொழி. மகிழ்ந்தேன். எனக்கென்னவோ இதை இப்பட்யே தொடர்ந்தால், பதிவுலகில் மீண்டும் ஒரு புதிய போக்கைக் கொண்டுவர முடியும் எனும் நம்பிக்கை பிறந்திருக்கிறது. தொடர்ந்து அடுத்த பதிவு ஒன்றை எழுதுகிறேன்...

    ReplyDelete
  2. ஆஹா !!! மிக்க மகிழ்ச்சி இருவரின் கடிதம் பார்த்ததில் ..தொடருங்கள் கடிதங்களில் சந்திப்போம்

    ReplyDelete
  3. நீங்கள் இருவராவது வலைப்பூவை தொடர்வது மிகவும் மகிழ்ச்சி தருகிறது...

    ReplyDelete
  4. கடிதங்கள் தொடரட்டும்

    ReplyDelete