28 Apr 2020

ஹிப்பி - அய்யனார் விஸ்வநாத்


ஹிப்பி – அய்யனார் விஸ்வநாத்

என்றைக்காவது நீங்கள் ஒரு ஹிப்பியாக மாற ஆசைப்பட்டிருகிறீர்களா?

ஹிப்பி - இந்த வார்த்தையே வித்தியாசமாக இருக்கிறது இல்லையா? இந்த வார்த்தையை யார் எனக்கு அறிமுகம் செய்திருக்கக்கூடும் என்று யோசித்துப் பார்க்கிறேன். சத்தியமாகத் தெரியவில்லை. ஆனால் மனதளவில் நான் ஒரு ஹிப்பியாக வேண்டும் என்று ஆசை கொண்டிருக்கிறேன். அதாவது ஹிப்பி என்ற வார்த்தையின் அர்த்தம் தெரியும் முன்னமே. எனக்குத் தெரிந்தளவில் ஹிப்பி என்பவர்கள் வீடற்றவர்கள். நாடற்றவர்கள். கட்டுப்பாடற்று தங்கள் விருப்பம்போல் சுற்றக்கூடியவர்கள். இதுவும்தான். ஆனால் இதற்கும் மேலானாவர்கள் என்பது புரியும்போது ஏனோ ஹிப்பிகளின் மீது இருந்த ஆர்வம் நீர்த்துப் போய் இருந்தது.



ஹிப்பிக்களும் நாடோடிகளும் ஒரே போன்றவர்களா என்ற கேள்வியை என்னுள்ளே கேட்டிருக்கிறேன். ஹிப்பிகள் அனைவரும் நாடோடிகளே ஆனால் நாடோடிகள் அனைவரும் ஹிப்பிகள் அல்ல. ஹிப்பிகள் கலகக்காரர்கள். ஒரு கட்டமைப்பிற்குள் வராதாவர்கள். தங்களை சுற்றி எழுப்பப்படும் வரையறைகளை கேள்வி கேட்பவர்கள். உயிரின் மீது ஆசையற்றவர்கள். அதனால் பயமற்றவர்கள்.

ஒரு நைட்ஷிப்ட் அன்று பீகாரி நண்பன் ஒருவனுடன் பேசிக்கொண்டிருந்தேன். நல்ல போதையில் அலுவலகம் வந்திருந்தான். ஆனால் துளி வாசம் இல்லை. எப்படி என்றேன். ஒரு போதைப் பொருளின் பெயரைச் சொல்லி இது ஹிப்பிகள் உபயோகிப்பது என்றான். அவனுடைய தலைமுடி கூட ஹிப்பியைப்போலவே இருக்கும்.

“எனக்கு கூட ஹிப்பிக்கள் மேல ஆர்வம் உண்டு”, என்றேன்.

“சரக்கடிப்பியா? தம்?, போதை?”, என்று அடுக்கிக்கொண்டே சென்றான். அனைத்திற்கும் இல்லை என்றேன். “அப்போ உன்னால ஹிப்பியாக முடியாது”,  என்றான். அன்றைய இரவில்தான் ஹிப்பிகள் குறித்து பாடம் எடுத்தான். “இன்னும் சில மாதங்களில் இந்த வேலையைவிட்டுவிட்டு என் அப்பாவின் தொழிலில் இறங்கிவிடுவேன். அதன்பின் ஆறுமாதம் ஹிப்பி ஆறுமாதம் வீடு என்று இருக்கலாம்”, என்று கூறினான். எனக்கு ஆச்சரியமாக இருந்தது. அவன் சொன்னதைப் போலவே சில வாரங்களில் வேலையை விட்டுவிட்டேன் என்று மெசேஜ் அனுப்பினான். ஹிப்பியாக மாறினானா என்றெல்லாம் தெரியவில்லை.

அவன் கூறியதைப்போன்ற கலகக்காரர்கள் நம்மிடையே உண்டா? அதுவும் நம் ஊரில்? என்றெல்லாம் யோசித்து உண்டு. எனக்குத் தெரிந்து ஹிப்பிகள் யாரையும் இதுவரையும் சந்தித்தது இல்லை. ஒருவேளை என்னையுமறியாமல் எங்கேனும் ஓரிடத்தில் அவர்களைக் கடந்து சென்றிருக்கக் கூடும். யோசித்துப் பார்த்தால் கற்றது தமிழ் பிரபாகரன் கூட தன் ஆனந்தியைத் தேடி ஒரு ஹிப்பிபோல்தானே அலைந்து திரிந்தான். அவனைத் தவிர வேறு யார் இருக்கிறார்கள் உதாரணம் சொல்வதற்கு.

அப்படி இதுவரை நான் சந்தித்திராத மனிதர்கள் நம்மூரிலேயே இருக்கிறார்கள், நம்முடனேயே இருக்கிறார்கள். அவர்கள் இன்னின்ன காரியங்கள் எல்லாம் செய்கிறார்கள் என்று அந்த ஹிப்பி கூட்டத்தைச் சுற்றி ஒரு புனைவை எழுப்பியிருக்கிறார் அய்யனார் விஸ்வநாத்.
  
குடிகார அப்பாவின் மூலம் குடும்பத்தை இழக்கும் பதின்ம வயது இளைஞன் ஒருவன், திருவண்ணாமலையில் தான் சந்திக்கும் ஹிப்பி கூட்டத்தின் மூலமாக அவனும் ஒரு ஹிப்பியாக மாறுகிறான். அந்த சூழ்நிலையில் அவனைச் சுற்றி நிகழும் ஒவ்வொரு சம்பவமும் அதிர்சிகள் நிறைந்த ஒன்றாக இருக்கிறது. அதை அவன் எப்படிக் கடக்கிறான். ஒரு சாதாரண ஆட்டோ டிரைவரான அவனை அந்த ஹிப்பி கூட்டம் முழுமையாக ஏற்றுக்கொண்டதா இல்லை அங்கேயும் போட்டி பொறாமை வஞ்சம் சூழ்ச்சிகள் எல்லாம் இருக்கிறதா என ஹிப்பி கதைக்களத்தை மையமாகக் கொண்டு தன் நாவலை எழுதியுள்ளார் அய்யனார் விஸ்வநாத்.

உங்களுக்குக் ஹிப்பி கலாச்சாரத்தின் மீது ஆர்வம் இருந்து அதுகுறித்த ஒரு புனைவை வாசிக்க வேண்டும் என்றால் இந்நாவல் நல்லதொரு ஆரம்பம். குறுநாவல் என்பதால் சில மணிநேரங்களில் வாசித்துவிடலாம். ஆனாலும் ஒரு பெரு நாவலுக்கான கதைக்களமாக இருந்தபோதிலும் அதனை வளர்க்காமல் குறுநாவலாக முடித்துக் கொண்டது ஏன் என்று தெரியவில்லை. எழுத்தென்ற வகைமையில் சுவாரசியமாக இருந்தபோதிலும் ஆரம்பிக்கும் முன்பே கதை முடிந்ததைப் போல் தோன்றியது எவ்வித அதிர்வுகளையும் ஏற்படுத்தாமல்.

3 comments:

  1. ஹிப்பி - நல்லதொரு அறிமுகம். நன்றி சீனு.

    ReplyDelete
  2. ஹிப்பி ஹேர் ஸ்டைல் ரொம்ப காலத்தில ரொம்ப பிரபலம். நிறைய முடி வ்ச்சுருந்தா ஹிப்பின்னு சொல்வாங்க

    ReplyDelete
  3. தலை முடி அதிகமாக இருந்தால், "என்னடா... ஹிப்பி வைத்திருக்கே...? போய் வெட்டிட்டு வா" என்று இங்கும் சொல்வார்கள்...

    ReplyDelete