19 Mar 2018

பார்பியும் சில புனைவுகளும்

கதை சொல்வதில் பல வழிமுறைகள் உள்ளன. கதையானது கதைசொல்லியின் விருப்பத்திற்கேற்ப ஆரம்பித்து வளர்ந்து பின் முடிவை நோக்கிச் செல்பவையாக அமையும். இந்த வளர்ச்சிப் பரிமாற்றம் எப்படி வேண்டுமானாலும் அமையலாம். ஒரு படைப்பு எதைப்பற்றி வேண்டுமானாலும் பேசலாம் என்றாலும் ஒரு கதையின் கட்டமைப்பில் சில முக்கியக்கூறுகள் இருக்கின்றன. கதைக்களம், கதை மாந்தர்கள், கதை வளரும் போக்கு என. இவை எல்லாவற்றையும் விட முக்கியமானது கதையின் தேவை, கரு அல்லது மையம். கருவானது பெரும்பாலும் கதைக்களத்தினுள் அடங்கிவிடும் என்றபோதிலும் கதையின் களம் எப்போதும் ஒரே தளத்தில் நிகழ வேண்டும் என்ற அவசியமில்லை. வேறு வேறு களங்கள் ஒரு புள்ளியில் இணையலாம் அல்லது ஒரு புள்ளி வெவ்வேறு தளங்களாக விரியலாம்.

ஆழி சூழ் உலகு ஒரே களத்தில் நிகழும் வெவ்வேறு மனிதர்களைப் பற்றிக் கூறும் கதை. காடு (நீலி) , சாய்வு நாற்காலி போன்ற நாவல்கள் வரலாற்றுப் புனைவுகளின் வழி சென்று அதன் தேவையை நிகழ் கதைக்குள் இணைப்பவை. பூனைக்கதை இருவேறு களங்களை ஒரு மெல்லிய இழையின் மூலம் கோர்ப்பவை. இதைக்கூறுவதன் காரணம் மேற்சொன்ன எதுவுமே கதையின் தேவையை அதன் காரணத்தை எவ்வகையிலும் குலைக்காது குறைக்காது என்பதை மேற்கோள்காட்டவே. 

பார்பி புனைவு நிகழ்த்திய கேள்விகளின் வழியே நாவலின் தன்மையை அதன் கட்டமைப்பைப் புரிந்துகொள்ள எனக்குள் சில கேள்விகளை எழுப்பினேன். கதைசொல்லி எப்போதுமே தனக்கான கட்டற்ற சுதந்திரத்தை எடுத்துக்கொள்பவன். அந்த சுதந்திரம் எல்லைக்கு அப்பாற்பட்டது. விதிமுறைகள் அற்றது என்ற போதிலும் படைப்பானது கண்ணுக்குத் தெரியாத மெல்லிய இழையால் கோர்க்கப்பட்டிருக்கும். அந்த இழையை லாவகமாக வடம் பிடிக்க வேண்டியது படைப்பாளியின் பொறுப்பு. அந்த இழை கட்டற்று அலையும் போது சில பிரச்சனைகள் வரலாம். தவிர்க்கவும் செய்யலாம். பிரச்சனைகளைத் தவிர்த்தல் என்பதும் கட்டுமீறல் என்பதும் படைப்பாளியின் திறமை சார்ந்தது. தனித்துவமான படைப்பை மீட்டிக்கொடுப்பது.   



பார்பி நாவல் ஹாக்கி விளையாட்டு வீரனை மையமாகக் கொண்டு அவனது அனுபவங்களின் வாயிலாக, அவனுடைய பின்னணியாக இருக்கும் சமுக சாதிய அரசியல் மற்றும் விளையாட்டு அரசியல் வழியாக அவன் அடையும் இழப்புகளையும் முன்னேற்றங்களையும் பற்றிப் பேசுகிறது. கூடவே பார்பி குறித்தும்.

சரவணன் சந்திரனின் பலமே அவருடைய அலுக்காமல் சலிக்காமல் கதை சொல்லும் குணம். அவருடைய பலவீனமும் அதுதானோ என்று நினைக்கத் தோன்றுகிறது. எங்கே எந்தக் கதை வர வேண்டும் என்று முடிவு செய்வதை விட எது வரக்கூடாது என முடிவெடுப்பது அவசியம். அப்படியில்லை என்றால் கூற வந்ததை விட்டுவிட்டு கதை எனகென்ன என வேறெங்கோ போய்க்கொண்டிருக்கும். பார்பி சிக்கித் தவிப்பது கூட இப்படி ஒரு சூழலில் தான். 

இதுவரை யாரும் பேசாத அல்லது யாராலும் பெரிதாக கவனிக்கபடாத ஹாக்கி உலகத்தையும் அது சார்ந்த அரசியலையும் அந்த அரசியலையும் மீறிய சாதியப் பிரச்சனைகளையும் களமாக எடுத்துவிட்டு கதை எதை நோக்கிப் பயணிக்கிறது என்பதில் தெளிவில்லாமல் போனது வருத்தத்திற்குரியது. கதைக்கான ஆரம்பம் மிகக் கச்சிதமாகவே நிகழ்ந்திருக்கிறது. ஆனால் கதையினுள் பார்பி நுழையும் தருணத்தில் இருந்து கதையும் வேறெங்கோ நழுவிப்போகத் தொடங்குகிறது.   

ரோலக்ஸ் வாட்ச்சில் கவனித்த ஒரு விஷயம், சரவணன் சந்திரன் யாரையேனும் குறிப்பிட வேண்டுமென்றால் அந்தத் தம்பி, ஒரு தம்பி, அந்த அண்ணன், அந்தத் தம்பியின் அண்ணனின் இன்னோர் தம்பி என்றெல்லாம் எழுதுவார். அந்தத் தம்பி யார்? அந்தத் தம்பியின் பெயர் என்ன? தம்பி எப்படி இருப்பார் என்பதெல்லாம் நமக்குத் தேவையில்லாததாகி இருக்கும். இப்படி எழுதிவதில் இருக்கும் பிரச்சனை என்னவென்றால் அந்தத் தம்பியின் கதாப்பாத்திரத்தை நம்மால் தகவல் ரீதியாக கடந்து போக இயலுமே தவிர உணர்வு ரீதியாக ஒன்ற முடியாது. ஒன்றிரண்டு தம்பிகள் தகவல் ரீதியாக வந்தால் பரவாயில்லை வரும் அத்தனைத் தம்பிகளும் தகவலாகவே வந்தால் உணர்வுப் பிணைப்பு நிகழ்வது எங்கே? அதே பிரச்சனை தான் பார்பியிலும். செல்லம்மா மதினியைத் தவிர அனைவருமே அந்த மதினியாகவும், அந்தத் தம்பியாகவும், அந்த அண்ணனாகவும் வந்து போகிறார்கள். இப்படியான கதாப்பாத்திரங்கள் உள்நுழையும் போதெல்லாம் கதை தனக்கான பாதையில் இருந்து விலகி தகவல்களாக சம்பவங்களாக உருமாற்றம் கொள்கிறது. சில சமயங்களில் 'ஏன் இதையெல்லாம் கூறுகிறார்' என்ற எண்ணம் வருகிறது.  

பார்பி நாவல் முழுக்கவே ஒருவகையான புலம்பலின் கீதம் வெளிப்படுகிறது. இழந்தவைகளைப் பற்றியும் இழக்க இருப்பவற்றைப் பற்றியும். சில இடங்களில் இவை தன்மீதான கழிவிரக்கத்தின் மூலமும் வெளிப்படும். கதையின் நாயகன் எந்த ஒரு பணியிலுமே உச்சம் தொடாதவன். உச்சம் தொடும் வாய்ப்பு இருந்தும் அதனை துச்சமாக மதித்து ஆற்றில் இருக்கும் காலை எடுத்து சேற்றில் வைத்து போய்க்கொண்டே இருப்பான். கிட்டத்தட்ட இந்நாவல் சரவணன் சந்திரனின் பயோபிக் உணர்வை அளிப்பதால் மேற்சொன்ன வரிகளை இவரோடு தொடர்புபடுத்திப் பார்ப்பதில் தடையேதுமில்லை. காரணம் நாவல் எங்குமே உச்சமடையவில்லை. முழுமை பெறவில்லை பார்பியின் கதாநாயகனைப் போல. 

கதை சிவகாசி விருதுநகரில் நிகழ்ந்து கொண்டிருக்கும் போதே நெல்லைக்குத் தாவும் அங்கிருந்து சென்னைக்கு சென்னையில் இருந்து எங்கு தாவி இப்போது எங்கு நிகழ்கிறது என்றத் தெளிவின்மையின் மூலம் நாவல் பல இடங்களில் கட்டுப்பாடில்லாமல் அலைகிறது. இதற்குக் காரணம் நாவல் முழுக்கவே கதைகளும் சம்பவங்களும், சம்பவங்களும் கதைகளுமாக மாறிமாறி எழுதப்பட்டிருப்பதுவே.

அட நம்மூர்ல இவ்ளோ தீவிரமா ஹாக்கி விளையாடுவாங்களா என்று தென்மாவட்டங்களை வியப்பாகப் பார்க்கவைக்கும் அழுத்தப்பூர்வமான காட்சிகள் எங்குமே இல்லை. 

"பல்பீந்தர் சிங் ரைட் எக்ஸ் பொசிஷன். நான் ரைட் இன்னர். இரண்டு பொசிஷன்களும் புருஷன் பொண்டாட்டி மாதிரி இருக்க வேண்டும் ஹாக்கியில். ஒருத்தன் மூஞ்சியைத் தூக்கினாலும் அந்த கெமிஸ்ட்ரி கோல் ஆகவே ஆகாது." நாவலின் ஆரம்பித்தில் வரும் இதைப்போன்ற டீடெயிலிங், ஆங்காங்கு தென்படும் ஒற்றைவரிகளோடு முடிந்து போவது பெருஞ்சோகம். தகவல்களைச் சொல்வதில் வெளிப்படும் ஆர்வம் டீடெயிலிங்கில் இருந்திருந்தால் நாவல் நிச்சயமாக வேறொரு தளத்திற்கு சென்றிருக்கும். 

நாவலின் பிற்பாதி ஓரளவுக்கு நன்றாக வந்திருக்கிறது. இழப்பின் மூலமும் வஞ்சிக்கப்படுதலின் மூலமும் நாட்களைக் கடத்தும் ஒருவனின் காமத்தை, அவனை அடுத்தபடி நிலைக்குக் கொண்டு செல்ல வேண்டிய விளையாட்டின் மீதான தீவிரத்தைப் பற்றிக் கூறும் பிற்பகுதிகள் ஓரளவிற்கு மூச்சுவிட வைக்கின்றன. இருந்தும் அந்த இறுதிப் போட்டியை இன்னமும் பரபரப்பாக விவரித்திருக்கலாம் என்ற ஏக்கம் இல்லாமல் இல்லை. 

பொதுவாகவே ஒரு புத்தகத்தைப் படித்துமுடித்த பின்னரே முன்னுரையையும் பிற உரைகளையும் படிப்பது என் வழக்கம். முன்னுரையில் ஜெயமோகன் உங்களிடம் கூறியதாக ஒன்றை எழுதி இருக்கிறீர்கள் சரவணன். அது "எழுதுவதற்கு பொறுமை தேவையில்லை. திருத்துவதற்குதான் பொறுமை தேவை." என்பது எத்தனை சரி என்பதை ஒருமுறை பொறுமையாக பார்பியைப் படித்துப் பாருங்கள் புரியும். 
   
   
நன்றி
நாடோடி சீனு

3 comments:

  1. நிறைய வாசிக்கிறீங்க போல இருக்கு! வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  2. தங்களுடைய contact number வேண்டும்.
    My mail : duraimanikandan1994@gmail.com

    ReplyDelete
  3. My relatives all the time say that I am killing my time here
    at web, but I know I am getting familiarity everyday by reading thes good articles or reviews.

    ReplyDelete