27 Jun 2019

சுந்தர் பிச்சை ரிக்வஸ்ட் கொடுத்திருக்கிறார்!!!

சற்றும் எதிர்பார்த்திருக்கவில்லை. சுந்தர் பிச்சையிடம் இருந்து நட்பு அழைப்பு வருமென. மீண்டும் மீண்டும் சரிபார்த்துக் கொண்டிருக்கிறேன். அது அவர்தானா. இல்லை அவருடைய போலியா என. சுந்தர் பிச்சையின் பக்கத்திற்குள் நுழைந்து அத்தனை தகவல்களையும் ஆராய்கிறேன், அவையனைத்தும் 'சுந்தர் பிச்சையாகிய நான்' என்கிறது. உலகம் ஒருமுறை நின்று சுற்றுவது போல் இருக்கிறது இல்லையா. இல்லை. உங்களுக்கெப்படித் தெரியும். அவர் நட்பழைப்பு விடுத்தது எனக்கல்லவா. ஆகலையால்...

அவருடைய முகப்புப் படத்தையே மிகக் கூர்மையாக கவனித்துக் கொண்டிருக்கிறேன். அதெப்படியெனத் தெரியவில்லை, பெரிய மனிதர்களுக்கெல்லாம் அட்டகாசமான முகப்புப்படம் கிடைத்துவிடுகிறது. முகம் முழுக்கப் பிரகாசம், லேசாக ஒரு பக்கம் திரும்பிய, அதீத மலர்ச்சியுடனான, பாந்தமான முகம். தேவையை விட கொஞ்சம் கூட அதிகமாக சிரிக்காத விழிகள். கொஞ்சமே கொஞ்சம் நரைத்த தாடி என பக்கத்து வீட்டு அண்ணனைப் போல் இருக்கிறார் சுந்தர் பிச்சை. கூகுள் சுமந்தாலும் தமிழ்ப்பிள்ளை அல்லவா (முக்கிய குறிப்பு : சாதி அல்ல). 

சுந்தர் பிச்சையிடம் பிடித்ததே அந்த பவ்யம் தான். என்றைகாவது ஒருநாள் அவரோடு அமர்ந்து காபி சாப்பிடும்போது அவரிடம் இதைக் கூற வேண்டும் என்று நினைத்திருந்தேன். கூறியிருந்தால் அதற்கும் அதே பவ்யத்தோடு சிரித்திருப்பார், லேசாக தலையசைத்திருப்பார். உள்ளுக்குள் கொஞ்சம் பெருமைப்பட்டிருப்பார். 

சுந்தர் பிச்சையின் மீது அதீத நேசம் வந்த சம்பவத்தைக் கூற வேண்டும் எனில் அது தமிழன் ஒருவன், அகில உலகின் மிக முக்கியப் பொறுப்பில் இருக்கும் நிர்வாகி ஒருவன், உலகின் மெத்தப் படிப்பையெல்லாம் படித்ததாக நம்பும் உலகில் தலைசிறந்த நீதிபதிகளாக தங்களைக் கூறிக்கொள்பவர்களின் முன் அதே பவ்யத்தோடு அமரிந்திருந்த, கதைத்த அந்த நொடிகளைத்தான். அரியாசனத்தில் கம்பீரமாக அமர்ந்துகொண்டு பவ்யமாக பதில் கூறுபவனை விட, பவ்யமாக அமர்ந்துகொண்டு கம்பீரமாக பதில் கூறுவதில்தான் சாமர்த்தியமும் திறமையும் இருக்கிறது என சுந்தர் பிச்சை நிகழ்த்திக் காட்டிய கணங்கள் அவை. நீங்கள் அந்த காட்சியை பார்த்திருக்கிறீர்களா தெரியவில்லை. ஆனால் நான் பார்த்ததில்லை. பார்த்தவர்கள் சொன்னார்கள். பார்த்தவர்கள் சொன்னதையெல்லாம் நம்பிவிடும் ஆசாமி நான் இல்லை என்றாலும் சுந்தர் பிச்சையைக் குறித்து யார் சொன்னாலும் நம்பியிருப்பேன். (குறிப்பு : நல்ல விதமாக). 

கூகுளை கூக்ளி என அழைத்த நாட்களில் இருந்தே கூகுள் அறிமுகம் எனக்கு. ஆனால் சுந்தர் பிச்சை அப்படியில்லை. அவருக்கும் எனக்குமான நட்பு இன்னும் கணங்களைக் கடந்திருக்கவில்லை. அவரோடு பேசவேண்டியதும் நட்பு பாராட்ட வேண்டியதும் ஏராளம் இருக்கிறது. எத்தனை பெரிய மனிதர். தனக்குக் கிடைத்த அப்ரைசல் ஹைக்கை உதறித்தள்ளவெல்லாம் தனி மனதைரியம் வேண்டும்.  

கூகுளில் ஒரு தொழிற்பயிற்சி வகுப்பு நடைபெற இருக்கிறது எனக்கூறி சாண்டி என்னை அங்கு அழைத்துச் சென்றபோது கூட நம்பவில்லை, நானும் அமேரிக்கா வருவேன், கூகுள் நிறுவத்தினுள் காலடி எடுத்து வைப்பேன் என, ஆனால் பாருங்கள் இன்றைக்கு சுந்தர் பிச்சை ரிக்வஸ்ட் கொடுத்திருக்கிறார். நண்பர் சுந்தர் நிர்வகிக்கும் கூகுள் நிறுவனம் பூலோக சுவர்க்கம். அப்படித்தான் இருக்கிறது அங்கிருக்கும் பணிச்சூழல். ஸ்டார்பக்ஸ் காபி இலவசமாக தருகிறார்கள் என்பதைவிட வேறென்ன எளிமையான உதாரணத்தைக் காண்பித்துவிட முடியும் உங்களுக்கு. 

பல மாடி கட்டிடத்தின் உயரத்தில் அமர்ந்திருக்கும் அந்த காபிடேரியாவில் இருந்து பார்த்தால் ஆஸ்டினின் மொத்த அழகும் தெரியும், அதன் வலது ஓரத்து இருக்கைகளில் அமர்ந்து "வணக்கம் சுந்தர்" என்றபடி அவரோடு ஒரு காபி குடிக்க ஆசைப்பட்டேன். ஆசைப்பட்டதெல்லாம் நடந்துவிடுமா என்றால்? அதற்காக ஆசைப்படாமல் இருக்க முடியுமா? தர்க்க அதர்க்கங்களை எல்லாம் விடுங்கள் இதோ சுந்தர் பிச்சை ரிக்வஸ்ட் கொடுத்திருக்கிறார். அப்படி அவரோடு காபி குடிக்கும் போது அவரிடம் சிக்மென்ட் ஃப்ராய்ட் படித்திருக்கிறீர்களா என்று கேட்க வேண்டும். அவரிடம் அவரைப்பற்றி அதிகம் பேச வேண்டும். இந்த அவரிடம் என்ற இடத்தில் சுந்தர் பிச்சையையும், அவரைப்பற்றி என்ற இடத்தில் நண்பர் ஃப்ராய்டையும் என்று வாசித்துக்கொள்ளுங்கள். 

ஃப்ராய்ட் மனித இயல்புகளை மிக நுப்டமாக கவனித்து அதை மனிதர்களுக்கு சற்றும் எளிதில் புரியாதபடி மனிதர்களிடமே சொல்வதில் வல்லவர். பல்கோண முக்கோணத்தின் எண்கோண கணிதத்தை மனம்போன போக்கில் எழுதவெல்லாம் தனித்திறமை வேண்டும். அப்படி ஒரு திறமை அவருடையது. அவர் எழுத்துகளைப் படிக்கும் போது அப்படித்தான் தோன்றுகிறது எனக்கு. தலையைப் பிய்த்துக் கொள்ளலாமா, பதினைந்து மாடி கட்டிடத்தில் இருந்து குதித்து விடலாமா என்றெல்லாம் தோன்றும். என்னைப் போல எளிமையாக எழுதக் கற்றுக்கொள்ளுங்கள் ஃப்ராய்ட் என்று அவரிடம் கூறவேண்டிய நிமித்தம் ஒன்று இருக்கிறது. சரி அதை விடுங்கள் சுந்தர் பிச்சைக்கு வருவோம். சுந்தர் பிச்சை ரிக்வஸ்ட் கொடுத்திருக்கிறார்.    

மனிதனின் மனதை மிகத்துல்லியமாக காண்பிக்கும் கண்ணாடி ஒன்று இருக்கிறது. ஃப்ராய்ட் அதனைக் கனவு என்கிறார். நான் அதனை சுந்தர் பிச்சை ரிக்வஸ்ட் கொடுத்திருக்கிறார் என்கிறேன்.    

3 comments:

  1. வரிகளில் பெருமிதம் உற்சாகம்...!

    வாழ்த்துகள்...

    ReplyDelete
  2. அட! வாழ்த்துகள் சீனு! எழுதிய விதம் அருமை

    துளசிதரன், கீதா

    ReplyDelete
  3. எழுதிய விதத்தில்... ஒரு குழந்தையின் குதூகலம் தெரிகிறது. :-)

    ReplyDelete