5 Mar 2018

மாஷா அல்லாஹ்

மாஷா அல்லாஹ் 

கென்யா தலைநகர் நைரோபியாவில் இருந்து மண்டீராவை நோக்கிக்  கிளம்பும் பேருந்தில் ஏறும் முன்பே பேருந்து நிறுத்த ஊழியரிடம் 'போலீஸ் பாதுகாப்பு உண்டா, இல்லை வழக்கம் போல் தீவிரவாதிகள் எங்களை கொன்றுவிடுவார்களா?' என விசாரித்திருந்தார் யுவா எனும் கிறஸ்தவப் பெண்மணி. 

கென்யா மற்றும் சோமாலிய எல்லையில் அல்-ஷபாப் எனும் பயங்கரவாத இயக்கத்தின் அச்சுறுத்தல் அதிகமாகி இருந்த டிசம்பர் 2015. கண்ணில் தென்படும் கிறஸ்தவர்கள் அனைவரையும் ஈவிரக்கம் இல்லாமல் கொன்று சாய்த்துக் கொண்டிருந்தது அந்த இயக்கம். கிறஸ்தவ மதமாற்றம் இஸ்லாமை அழிக்கிறது அதனால் அவர்களை நாங்கள் அழிக்கிறோம் என்கிறது இவ்வியக்கம். 

நாடு முழுக்க பலரும் மாண்டு போகிறார்கள். குழந்தைகள் பெண்கள் என யாரையும் இவர்கள் விட்டுவைக்கவில்லை.  

இப்படியொரு பதட்டமான சூழலுக்கு மத்தியில் யுவாவின் பயணம் நிகழ்கிறது. கிட்டத்தட்ட முப்பத்தியிரண்டு மணிநேர பேருந்துப்பயணம். அவரிடம் எஞ்சியிருப்பது உயிரும் அதன் மீதான பயமும் மட்டுமே. கண்களில் கொலைநடுக்கம். கண்ணில் தென்படும் இஸ்லாமியர்கள் அனைவரையும் விரோதியாகவேப் பார்க்கிறாள். சொல்ல முடியாத பெருஞ்சோகம் ஒன்று அவளை சூழ்ந்திருக்கிறது. பேருந்தில் ஏறி அதன் பின் பகுதியில் தனக்கென ஒரு இடம் தேடி அமர்கிறார். ஒரு கண் அவரை தீவிரமாக உற்று நோக்குகிறது. பயந்து மிரளுகிறாள். அவசர அவசரமாக தன் பையினுள் இருக்கும் சிலுவை பூட்டிய பச்சைநிற மாலையை எடுத்து தேவனின் பாதுகாப்பை நாடுகிறார். பேருந்தினுள் நுழையும் எவரையும் ஒருவித பயத்துடனேயே அணுகுகிறார். பயணம் தொடர்கிறது. அப்பேருந்தில் உடன் பயணிக்கும் பெரும்பாலான பயணிகள் இஸ்லாமியர்கள். அந்த இரவைக் கடந்த அடுத்த நாள் காலையில் பேருந்தில் தண்ணீர் விற்கும் சிறுவனின் மீது வெறுப்பை உமிழ்கிறாள் யுவா. காரணம் அவன் மதம் இஸ்லாம். அவளின் அருகில் அமர்ந்திருக்கும் இஸ்லாமியப் பெண்ணையும் வெறுப்புடன் அணுகுகிறாள். பின்னொரு சமயத்தில் அவளிடம் பேச்சு கொடுக்கும் இஸ்லாமிய ஆசிரியர் எதனால் எங்கள் மீது இவ்வளவு வெறுப்பு நாங்கள் மனிதர்கள் தானே என்கிறார். என் மனைவிக்கு இது ஐந்தாவது பிரசவம் நான் ஊருக்கு செல்கிறேன் என்கிறார். 

நாங்களும் மனிதர்கள் தான் ஏன் எங்களைக் கொல்கிறீர்கள். போனவராம் நிகழ்ந்த பயங்கரவாதத் தாக்குதலில் என் கணவன் மற்றும் குழந்தைகள் கொல்லப்பட்டார்கள். எஞ்சியிருப்பது நான் மட்டுமே என்று கூறிவிட்டு அழுகிறாள். அவள் மீதான அனைவரது பார்வையும் மாறுகிறது. ஒருவித இரக்க மனப்பான்மையோடு அவளை அணுகத் தொடங்குகிறார்கள். 

இடைநிறுத்தமாக பேருந்து நின்ற ஊரில் அவர்களுக்கு பாதுகாப்பாக வந்த போலீஸ் வாகனம் பழுதாகிப்போக அங்கிருந்து எவ்வித பாதுகாப்பும் இல்லாமல் தன் பயணத்தைத் தொடர்கிறது பேருந்து. 

பாலைவனம் போல் இருக்கும் கென்யாவின் வெம்மை அடர்ந்த பகுதியில் அல்-ஷாபாப் தீவிரவாதிகள் துப்பாக்கி முனையில் பேருந்தைச் சுற்றி வளைக்கிறார்கள். எது நிகழக்கூடாது என யுவா நினைத்தாரோ அது நிகழ இருக்கிறது. நடக்கப்போகும் அபாயம் பேருந்து முழுக்க பற்றிக்கொள்கிறது. யுவாவின் அருகில் அமர்ந்திருக்கும் பெண்மணி துரிதமாக செயல்பட்டு யுவாவின் கைகளில் இருக்கும் சிலுவை கொண்ட அந்த ஜெபமாலையைப் பிடுங்குகிறார். யுவா அதனைத் தரமறுக்க அவள் எதிர்ப்பையும் மீறி பிடுங்கி பின் யுவாவின் முகத்தில் புர்காவை அணிவித்து இஸ்லாமியத் தோற்றத்திற்கு மாற்றுகிறாள். பேருந்து மொத்தமும் பலரையும் இதுபோல் இஸ்லாமியத் தோற்றத்திற்கு மாற்றுகிறது. இவையனைத்தும் துரிதகதியில் நிகழ்கின்றன.



பேருந்தில் இருந்து அனைவரையும் இறங்கச் சொல்லும் பயங்கரவாதிகளின் தலைவன், இஸ்லாமியர்கள் தனியாகவும் கிறிஸ்தவர்கள் தனியாகவும் பிரிந்து நிற்கச்சொல்கிறான். அனைவரின் முகத்திலும் அங்கு நிகழ இருக்கும் பயங்கரவாதத்தின் கோரம் தெரிகிறது. அனைவரும் நடுங்குகிறார்கள். தப்பியோடும் ஒரு சிறுவனை சுட்டுக்கொல்கிறார்கள் பயங்கரவாதிகள். 

யாருமே எதிர்பார்க்காத வகையில் இங்குதான் அந்த அற்புதம் நிகழ்கிறது. இஸ்லாமியர்கள் அனைவரும் கிறிஸ்தவர்களுக்கு அரணாக மாறுகிறார்கள். 

ஓர் உண்மையான இஸ்லாமியன் என்றால் இங்கிருக்கும் கிறிஸ்துவர்களை அடையாளம் காட்டுங்கள் என்று ஆணையிடுகிறான் கூட்டத்தலைவன். 

மிகப்பெரிய இறைவன் அடுத்த உயிர்களைக் கொல்ல நமக்கு அனுமதியளிக்கவில்லை. இங்கு அனைவரும் இறைவனின் குழந்தைகள் என வாக்குவாதத்தில் ஈடுபடுகிறார் அந்த ஆசிரியர். வாக்குவாதம் வலுத்து முற்றும் நிலையில் அனைவரையும் மொத்தமாக கொல்லப்போவதாக மிரட்டுகிறான். அதன் முதல்பலியாக ஆசிரியர் மீது குண்டு பாய்கிறது. அனைவரும் பயந்து நடுக்கும் வேளையிலும், தங்கள் உயிரே போனாலும் யாரும் யாரையும் காட்டிகொடுப்பதாயில்லை என்ற உறுதியோடு அங்கு நிற்கிறார்கள். யுவாவின் கண்களில் பயத்தையும் மீறிய ஆச்சரியம். நிகழும் அற்புதத்தின் மத்தியில் அங்கு தலைதூக்கி இருக்கும் மனிதத்தைத் எண்ணி வியக்கிறார். நல்லவேளையாக போலீஸ் வாகனம் வந்து சேர பயங்கரவாதிகள் பயணிகளை விடுத்து தப்பி ஓடுகிறார்கள். 

அனைவரும் நிம்மதிப் பெருமூச்சுவிட, அந்த இஸ்லாமியப் பெண் யுவாவின் கைகளில் அவளுடைய ஜெபமாலையை மீண்டும் கொடுப்பதைப் போல நிறைவடைகிறது அந்தக் குறும்படம். டிசம்பர் 2015, 21 அன்று கென்யாவில் நிகழ்ந்த உண்மைச் சம்பவத்தை மையமாகக் கொண்டு இப்படத்தை எடுத்திருக்கிறார்கள். கொஞ்சம் சொதப்பினாலும் ஒரு ஆவணப்படம் ஆகியிருக்கக் கூடிய நிலையில் அங்கு நிகழ்ந்த சம்பவத்தை நம் கண்முன் நிகழச் செய்திருக்கிறார்கள். ஆஸ்கர் பரிந்துரையில் இருக்கும் இப்படத்தின் பெயர் watu wote - all of us

மனிதம் எத்தனை மகத்துவமானது என்பதை மிக அழகாக வெளிப்படுத்தி, இதுதான் உண்மையான இஸ்லாம் என்று கூறியிருக்கிறார்கள் அன்றைய தினத்தில் அப்பேருந்தில் பயணித்த இஸ்லாமியர்கள். அந்தப் பேருந்தில் எழுதப்பட்டிருந்த வாசகம் மாஷா அல்லாஹ் - இறைவனின் விருப்பம். 

3 comments:

  1. நல்லதோர் அறிமுகம். பார்க்க வேண்டும். மாலை பார்க்கிறேன்.

    ReplyDelete
  2. செமையா இருக்கும் போல இருக்கு படம்...பார்க்க முடிந்தால் பார்கக்ணும்

    கீதா

    ReplyDelete