10 Mar 2018

கிருஷ்ணனின் ஆயிரம் நாமங்கள் - போகன் சங்கர்

கிருஷ்ணனின் ஆயிரம் நாமங்கள் - போகன் சங்கர்

இந்த புத்தகத்தின் சில சிறுகதைகளை வாசிக்கும் வரையிலும் இதுதான் எனக்கும் போகன் சங்கருக்குமான முதல் பந்தம் என்ற நினைப்பிருந்தது. அப்படியெல்லாம் இல்லை சில சிறுகதைகளை விகடனிலோ வேறெங்கோ வாசித்த ஞாபகம் இருக்கிறதென உள்ளிருந்து ஒரு குரல் கேட்டது. நடிகன் மற்றும் யாமினி அம்மா. இந்த இரண்டு சிறுகதைகளையும் ஏற்கனவே வாசித்திருக்கிறேன். அதிலும் நடிகன் கதையை வாசித்த சில நாட்களுக்கு பாலவிளை கணேசன் நினைப்பாகவே இருந்தது. ஏதோ ஓர் இனம்புரியா பாதிப்பை அல்லது அச்சத்தை ஏற்படுத்திய கதை எனலாம். மிக சரளமான கதைசொல்லி போகன் என்பதையும் தாண்டி அந்தக்கதை ஏற்படுத்திய பாதிப்பு ஏனோ வீரியம் மிக்கதாகத் தெரிந்தது. அதேபோன்ற ஒன்று யாமினி அம்மா கதை. கதை வாசித்த சில நாட்களுக்கு யாமினியின் நினைவு. இவ்வளவுதான் வாழ்க்கையா அல்லது இதுதான் வாழ்க்கையா என ஒரு பெரும் கேள்விக்குறியை வரையும் கதையது. 

கிருஷ்ணனின் ஆயிரம் நாமங்கள் சிறுகதைத் தொகுப்பில் மொத்தம் பன்னிரண்டு கதைகள். பன்னிரெண்டுமே வாழ்வின் தீராத சோகத்தை, அந்த சோகத்தின் ஊடாகப் பாயும் காமத்தை அல்லது வலியைப் பேசும் கதைகள். இந்தநூலில் கற்றுக்கொள்வதற்கு நிறையவே இருக்கிறது. இப்படியெல்லாம் கதை எழுத முடியுமா என்பதைத் தாண்டி இப்படியெல்லாம் கதையை வளர்க்க முடியுமா என்று பாடம் எடுத்திருக்கிறார் போகன். கதை எங்கோ ஓர் புள்ளியில் ஆரம்பித்து அதிலிருந்து வேறெங்கோ நூல் பிடித்து நகர்ந்து பின் முடிவை அடையும் கதைகள்.

சிறுகதை என்றாலே திடீர் பகிர் திருப்பங்கள் என்றெல்லாம் இல்லாமல் சோக கீதம் கதைக்கும் ஒரு வயலின் கம்பிகளின் மென் நரம்புகளின் மீட்டலைப் போல் நம்முள் கடந்து நிறைகின்றன. கதை ஆரம்பிக்கும் தருணங்களைப் போலவே அவை வளரும் தருணங்கள் மிக முக்கியமானவை. மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி கையில் கையில் வைத்திருக்கும் முட்டையை பட்டென தரையில் போட்டுடைக்கும் தந்திரமல்ல இவர் கதைகள். முதல் சில பத்திகளுக்குள்ளாகவே கதையின் மையத்தை, ஒரு மாபெரும் சுமையை நம்மில் பொதித்துவைத்துவிட்டு சாவகாசமாக பின்கதை முன்கதை என்று அதன்போக்கிற்கு கதையை நகர்த்துகிறார் போகன் சங்கர்.



ஆடியில் கரைந்த மனிதன் என்ற சிறுகதையில் ஒரு வரி எழுதி இருப்பார் 'என் மனத்தில் இதுபோல நிறைய உணர்வுகள் ஒன்றுக்கு ஒன்று தொடர்பின்றிச் சிக்கிக் கிடக்கின்றன. அல்லது விழித்திருக்கும் புத்தியின் கண்ணுக்குப் புலப்படாத எதோ ஒரு தர்க்கத்தில் அவை கோக்கப்பட்டுக் கிடக்கின்றன.' கிட்டத்தட்ட ஒட்டுமொத்த கதைகளுமே இதுபோன்ற ஒரு உணர்வுப் பெருக்கில் கோர்க்கப்பட்ட கதைகளாகவே எனக்குப் புலனாகின்றன. கொஞ்சம் இலகுவான கதை சுரமானி என்று நினைத்தால் அதிலும் ஒரு அதிர்ச்சி வைத்தியத்தைத் தந்து முடிக்கிறார். 

ஜெயமோகனின் பாதிப்பில் உருவான கதைகள் என்று போகன் கூறியிருந்தாலும் ஜெயமோகனுக்கு சமர்ப்பித்திருந்தாலும் சில இடங்களில் வலிந்து திணித்த ஜெயமோகத்தனங்களை மட்டும் தவிர்த்திருக்கலாம். பூ, நடிகன், யாமினி அம்மா, மீட்பு, பொதி கதைகள் எனக்கு மிகவும் பிடித்தவை. விட்டால் அனைத்தையுமே கூறிவிடுவேன். தவறக்கூடாத சிறுகதைத் தொகுப்பு. 

நன்றி
நாடோடி சீனு

No comments:

Post a Comment