18 Oct 2014

டெக்கான் ட்ராவல்ஸ் - பெங்களூர் டூ சென்னை


டெக்கான் ட்ராவல்ஸில் பெங்களூரு டூ சென்னை புக் செய்யும் போதே ஆவி கூறினார் 'முன்னபின்ன ட்ராவல் பண்ணாத பஸ்ஸு, எப்படி இருக்கும்னு தெரியாது வேணாம் என்றார். நன்கு அறிமுகமான ட்ராவல்ஸ் எல்லாவற்றிலும் செமி ஸ்லீப்பர் கட்டணம் எழுநூறு ரூபாயாக இருக்க டெக்கானிலோ ஏசி ஸ்லீப்பருடன் கூடிய பேருந்துக்குக் கட்டணம் 800 ரூபாய். நூறு ரூபாய் தான் வித்தியாசம். மற்றவை என்றால் உட்கார்ந்து கொண்டே வரவேண்டும். தூங்க முடியாது. இன்றைக்கு அலுவலகம் வேறு இருக்கிறது, ஸ்லீப்பர் என்றால் ஓரளவிற்கு தூங்கவாவது முடியும். அதற்காகவே ரிஸ்க் எடுக்கலாம் என்று தோன்றியது. ரிஸ்க்கும் எடுத்தாயிற்று. 



பேருந்தை அதன் வெளியில் இருந்து பார்க்கும் போது சாதாரண பேருந்து போல் இருந்தாலும், பேருந்தின் உள்ளே அட்டகாசமாக இருந்தது. படுக்கை பஞ்சனை போல் இருக்க, மிதமான குளிர். மெல்லிய கதகதப்பிற்கு ஒரு போர்வை. வாட்டர் பாட்டில் வைக்க ஓர் இடம், ரீடிங் லைட் என்று வசதி செய்யப்பட்டிருந்தது. இவை வழக்கமாக எல்லா பேருந்துகளிலும் இருப்பது தான்.  

ஆனால் இதிலோ அது மட்டுமில்லாமல் வேறொரு வசதியும் இருந்தது. அது தலைக்கு மேல் கண்ணாடி வைப்பதற்கென ஓர் இடம். கண்ணாடி அணிபவர்களுக்கு மட்டும் தான் தெரியும் பயணத்தின் போது கண்ணாடி எவ்வளவு இடையூறு என்று. கண்ணாடி வைக்கும் புட்டி இருந்தாலாவது பத்திரமாக அதில் வைத்துக் கொள்ளலாம், நானோ வாங்கிய மறுநிமிடமே அந்த டப்பாவை தூர எறிந்துவிடுபவன். அதன் அவசியம் இது போன்ற தருணங்களில் தான் தெரியும். 

எப்போதுமே பேருந்தில் ஏறியவுடன் கண்ணாடியை சொருக எங்காவது இடம் இருக்கிறதா என்பதைத்தான் முதலில் தேடுவேன். விண்டோ சீட் என்றால் திரை கட்டியிருக்கும் கயிற்றில் சொருகி விடலாம், அப்படியில்லை எனில் துணிமணிக்குள் பத்திரமாக ஒளித்து வைக்க வேண்டும். என்ன ஒன்று பல சமயங்களில் நான் எடுத்துச் செல்லக்கூடிய பை தான் எனக்கு தலையனையாகவும் பயன்படும். ஒருவேளை தூக்கத்தில் எசகுபிசகாக அழுத்தம் கொடுத்தால் கண்ணாடி உடைந்து போய்விடும் சாத்தியக்கூறுகள் மிக அதிகம். 

இப்போது யோசித்துப்பாருங்கள். என்னைப் போன்ற குணநலன்களை உடைய ஒரு ஆசாமிக்கு கண்ணாடி வைப்பதற்கென்றே கிடைத்திருக்கும் ஒரு இடம் எவ்வளவு சந்தோசத்தைக் கொடுத்திருக்கும் என்று. அதில் பத்திரமாக கண்ணாடியை வைத்துவிட்டு சுகமாக தூங்கத் தொடங்கினேன். அருகில் படுத்திருந்தவன் அவன் காதலியுடன் போனில் ரொமான்ஸ் செய்து கொண்டிருந்தான். நல்லவேளை அவன் இந்திக்காரன். எனக்கு இந்தி தெரியாது என்பதால் தப்பித்தான். இல்லை எனின் இந்நேரம் அவன் பேசியதை வைத்தே மூன்று நான்கு பதிவு எழுதியிருப்பேன். புரியாத அந்த ரொமான்ஸை கேட்டபடியே நான் தூங்க, 'கோயம்பேடு வா, கோயம்பேடு வா, கோயம்பேடு வா' என்ற சத்தம் தான் என்னை எழுப்பிவிட்டது. 

மணி ஆறு. இரண்டு நாள் தொடர்ந்து பெங்களூரை சுற்றிய அலுப்பில் காட்டுத்தனமாக தூங்கியிருக்கிறேன். தூக்கம் கலைந்து எழும் போது ரொமான்ஸ் பார்ட்டி நிம்மதியாக உறங்கிக் கொண்டிருந்தான். 'தூங்கித் தொல' என்று அவனை எழுப்பாமல் என்னுடைய சக உதிரிகளை எல்லாம் எடுத்துவிட்டு இறங்க ஆயத்தமானேன். 

பேருந்தைச் சுற்றிலும் திரை போட்டிருக்கவே வெளியில் என்ன நடக்கிறது என்றே தெரியவில்லை, அதன் முன்புறம் வந்த போதுதான் தெரிந்தது மழை வெளுத்து வாங்கிக் கொண்டிருப்பதை. அப்போதுதான் மற்றொன்றையும் கவனித்தேன், அவன் கோயம்பேடு என்று என்னை, எங்களை இறக்கி விடப்போவது கோயம்பேடு கிடையாது, அதற்கும் இரண்டு கிமீ முன்பு என்று. அவ்வளவு தான் அறச்சீற்றம் பீறிட்டது, 'சார், கோயம்பேடு இன்னும் டூ கிலோமீட்டர்ஸ் போகணும், செம மழை பெய்யுது, எப்படி போறது' என்றேன். 

என் முகத்தைப் பார்த்து முழித்தான். நன்றாக அவனை உற்று நோக்கினேன், பீகாரி முகசாயல். 'டேய் இப்ப இங்கயும் வந்துடீங்களா, அது சரி'. பேருந்தில் இருந்து இறங்கி ஒதுங்க ஒரு இடம் தேடினேன். அத்தனை இடங்களிலும் மக்கள் நீக்கமற ஒதுங்கியிருந்தனர். இச் ஜகத்தினில் எனக்கொரு இடம் இல்லாததைக் கண்டு மனம் குமுறியது. ஒரு டீக்கடையின் ஓரத்தில் பாதி நனைந்து பாதி நனையாமல் இருக்க ஓர் இடம் கிடைத்தது. ஓடிப்போய் சொருகிக்கொண்டேன். 

'தல சூடா காபி'

அட அந்த டீ கடைகாரனுக்கு என் மேல் எவ்வளவு அக்கறை. அருகில் ஒரு ஜக்கில் நீரும் இருந்தது. அடித்துப் பெய்து கொண்டிருந்த மழையில் எதுவுமே துல்லியமாக தெரியவில்லை. ஒரு காப்பி சொல்லிவிட்டு, நனைந்திருந்த தலையை கைகுட்டையால் ஈரமாக்கியபபின், கண்ணாடியைத் துடைக்கலாம் என்று கண்ணுக்கு அருகில் கையைக் கொண்டு சென்ற போதுதான் கவனித்தேன், கண்ணாடியைக் காணோம். மறதி ஒரு தேசியவியாதி இல்லை என்னுடைய தீரா வியாதி. 'வட போச்சா' என்று நினைத்துக் கொண்டே எதற்கும் என்னை இறக்கிவிட்ட இடத்திற்கு வேகவேகமாக ஓடினால், நல்லவேளை பேருந்தை பத்து நிமிடமாக அங்கேயே நிறுத்தி இருப்பான் போல, அப்போதுதான் கிளப்பிக் கொண்டிருந்தான். அவசர அவசரமாக பேருந்தின் முன்னால் போய் விழுந்தேன். முறைத்தான். மை ஸ்பெக்ஸ், மை ஸ்பெக்ஸ் என்றபடி மேலே ஏறினேன். 

உள்ளே சென்றால் வைத்த இடத்தில் கண்ணாடியைக் காணோம். வேறு எங்காவது விழுந்திருக்குமா என்றால் ம்கும் அதில் இருந்து கீழே விழ வாய்ப்பே இல்லை. பேருந்தே இருள் சூழ்ந்து எதுவுமே தெளிவாகத் தெரியாதநிலையில் கண்ணாடி கிடைக்கவில்லை என்றால் இனி எதுவுமே தெளிவாகத் தெரியபோவதில்லை.

என்ன செய்வது என யோசித்துக் கொண்டிருக்கும் போதே,  சற்றே புரண்டுபடுத்த அந்த ரொமான்ஸ் மெதுவாக கண்களைத் திறந்து பார்த்தான். 'க்யா' என்றான். 'மை ஸ்பெக்ஸ்' என்றேன். என்னை ஒரு நிமிடம் உற்று நோக்கியவன். அவசர அவசரமாக தன் பையைத் துழாவினான். இப்போது அவன் கையிலிருந்த கண்ணாடி என் கைக்கு மாறியிருந்தது. மீண்டும் புரண்டு படுத்துக் கொண்டான்.  


'டேய் அத ஏண்டா சுட்ட' என்று கேட்கலாம் போல் தோன்றியது. கேட்கவில்லை. கேட்டாலும் அவனுக்குப் புரியபோவதில்லை. புரிந்தாலும் அவன் கூறப்போகும் பதில் எனக்குப் புரியபோவதில்லை. பேருந்தில் இருந்து இறங்கினேன். அந்த டீக்கடையில் இதற்குமுன் நான் நின்று கொண்டிருந்த இடத்தில் வேறு ஒருவன் நின்று கொண்டு காபி குடித்துக் கொண்டிருந்தான். அடித்துப் பெய்துகொண்டிருந்த மழையில் கோயம்பேடை நோக்கி மெதுவாக நடக்கத் தொடங்கினேன்.  முதலில் அந்த கண்ணாடி டப்பாவை தேட வேண்டும். 

10 comments:

  1. //முன்னபின்ன ட்ராவல் பண்ணாத பஸ்ஸு, எப்படி இருக்கும்னு தெரியாது வேணாம் என்றார்//

    ட்ராவல் பண்ணாத பஸ்ஸும் ஆறு வீல், சேர், ஜன்னல் எல்லாம் வச்சி தான ஓய் இருக்கும்.

    ReplyDelete
  2. //
    என்னைப் போன்ற குணநலன்களை உடைய ஒரு ஆசாமிக்கு//

    அப்படி வேற ஒருத்தர் ஈரேழு லோகத்ல இருக்க வாய்ப்பே இல்லையே....

    ReplyDelete
  3. இதே போல பெயர் தெரியாத ஆனால் வசதியான பஸ்சில்தான் நானும் மதுரை சென்றேன். மூக்குக் கண்ணாடி பற்றி நீங்கள் சொல்லியிருப்பது முற்றிலும் உண்மை. எனக்கும் அனுபவம் உண்டு. என்ன நேரம்தான் கொஞ்சம் முன்னபின்ன ஆகும்! இரவு 12 மணிக்கு பெருங்களத்தூரில் ஏற நேரம் கொடுத்திருந்தார்கள். பஸ் வரும்போது கொஞ்சம் லேட். இரவு 1.45க்கு வந்தது.

    அவன் பயில் போட்டுப் புரண்டெல்லாம் படுத்தும் கண்ணாடி உடையாமல் இருந்ததா? அட!

    ReplyDelete
  4. நலமாண்ணே? எப்பவும் படிச்சிட்டு கமெண்ட் போடாம சைலண்ட்டா ஓடிர்றோமேன்னு இன்னைக்கு ச்ச்சும்மா ஒரு அட்டென்டென்ஸ் :)

    ReplyDelete
  5. ஒரு பேருந்து பயணத்தையும் இவ்வளவு சுவாரஸ்யமாக எழுத உங்களால்தான் முடியும்! எப்படியோ கண்ணாடி கிடைச்சதாலே எங்களுக்கு ஒரு பதிவும் கிடைச்சிருச்சு! நன்றி!

    ReplyDelete
  6. ஆமாம் சீனு! கையில் கொண்டு போகும் பேக் தான் தலைக்கடியில் இருக்கும் படுக்கும் போது!! அதே கண்ணாடி....ஹிஹி....துளசி செம கேர்ஃபுல் அவரு கரெக்ட்டா டப்பாக்குள்ள போட்டுக்குவாரு.....ஆனா கீதா உங்களப் போல....ஹிஹிஹி..

    ஹிந்தியே தெரியாது இதுல எப்படி அவரு ரொமான்ஸ் பேசினாருன்னு அப்படின்னு...ஹஹஹ்ஹ...

    கோயம்பேடு வா....கோயம்பேடு வா....னீங்க இதுதான் கோயம்பேடுவா..அப்படினு கேட்டு "கோயம்பேடு வராது...இன்னும் 2 கிலோமிட்டர் போணும் நு ....சொல்லுய்யா......சரவணன் சார்/ஆவியின் டயலாக் நினைவுக்கு வந்துருக்குமே!

    ReplyDelete
  7. ட்ரவல்ஸ் அது இதுன்னு சேரன் சைக்கில் போல பதிவு போகுமோன்னு பயந்துகிட்டே சரி படிப்போம்னு படிக்க ஆரம்பிச்சேன். இங்கே நான் படிக்கிற நாலாவது பதிவு இது:) நாங்கலாம் வடிவேல் நடு பஸ்ல பாலன்ஸ் பண்ணி நிக்கிற மாதிரி காண்டக்ட் லென்ஸ் சை நைட்டு பஸ்ல ரிமூவ் பண்ணிட்டு காலைல ச்பெக்ஸ் போடுற அளவு எக்ஸ்பீரியன்ஸ் பார்டியாக்கும்:)))) பின்ன நாலாவது படிக்குபோதே ச்பெக்ஸ் போட்டுட்டேனே:)
    பாருங்க நீங்க திடிர்னு பஸ்ஸை விட்டு இறங்கி டீ கடைக்கு போடீங்களா, நானும் நீங்க பதறுகிற வரை கண்ணாடி மிஸ் ஆனதை கவனிக்கலை, அவ்ளோ துல்லியமான விவரிப்பு.
    **ஹிந்தியே தெரியாது இதுல எப்படி அவரு ரொமான்ஸ் பேசினாருன்னு அப்படின்னு.*** நியாயமான கேள்வி சகாஸ்:)

    ReplyDelete
  8. நல்ல அனுபவம். ஸ்லீப்பர் பேருந்து எனச் சொல்லி ஐந்து அடிப் படுக்கை - அதனால் இதில் பயணிப்பது இல்லை! - நம்ம உயரத்துக்கு இது உதவாது சீனு....

    கண்ணாடி வைப்பதற்கென்று ஒரு இடம் - நல்ல யோசனை..... இருந்தாலும் அதை எடுத்து வைத்துக் கொண்டிருக்கிறானே இந்த ஊரு ஆளு ஒருத்தன்! :)

    ReplyDelete
  9. ///முதலில் அந்த கண்ணாடி டப்பாவை தேட வேண்டும்///

    கூடவே அந்த மறதியையும் எங்காவது தொலைத்து விட வேண்டும்

    ReplyDelete
  10. பதிவின் நீளம் கம்மியா இருக்கே...
    ஓ.. ஓ... கண்ணாடி கெடச்சதுனால அவ்ளோதான் தேத்த முடிஞ்சது போல...
    கெடைக்காட்டி நாவலே எழுதியிருப்பிங்க....

    ReplyDelete