"எம்மா திங்கதுக்கு ஏதாது இருக்கா"
"ஒன்னுமே இல்ல ல, வேணும்னா போய் ஆளுக்கு அம்பது அல்வாவும் மிச்சரும் வாங்கிட்டு வா"
வீட்டிலிருந்து பழைய ஆஸ்பத்திரி லாலா கடை நோக்கி கால்கள் வேகமாக நடக்கும் அல்லது ஓடும். கடையை அடைந்தது மூச்சு வாங்கிக் கொண்டே...
"அல்வா சூடா இருக்கா, நேத்து செஞ்ச அல்வான்னா வேணாம்ன்னே "
"அந்த அல்வா நேத்தே காலியாயிட்டுடே, இத இப்ப தான் அடுப்புல இருந்து இறக்கியிருக்கேன், சுட சுட இருக்கு, பாரு எப்படி ஆவி பறக்குன்னு"
"அப்டியே அம்பது மிச்சரும் குடுங்க, அல்வா நாலு மிச்சர் நாலு"
வாழை இலையை சரக்கென்று கிழித்து, கைகளாலேய அளவெடுத்து கரண்டியில் அள்ளிய அல்வாவை அதற்கென்றே கிழித்த வாழை இலையில் வைத்தால் தராசு மிகச் சரியாக அம்பதைக் காட்டும். அந்த இலையை அப்படியே ஒரு தினசரியின் வயிற்றுக்குள் வைத்து சுருட்டி பொட்டலமாக்கி அதன் காதை திருக்கி மடித்தார் என்றால் அல்வா பொட்டலமாகியிருக்கும்.
வீட்டிற்கு வந்து சூடாக இருக்கும் அந்த அல்வா பார்சலை பிரிக்கும் பொழுதே கை கொதிக்கும். தினமலரையோ தினத்தந்தியையோ கொண்டு சுருட்டப்பட்ட அல்வா பொட்டலம், அதனுள் சுருட்டபட்ட வாழை இலை, அதனுள் வழுவழு அல்வா. கொஞ்சம் வேகமாக வாழை இலையைப் பிரித்தால் அவ்வளவு தான் ஆசையாக வாங்கிய அல்வா நழுவி தரையில் உருளத் தொடங்கி விடும்.
ஒருவேளை நழுவாமல் கையில் சிக்கிய அல்வாவை எடுத்த வேகத்தில் வாயில் வைத்தாலும் அவ்வளவு தான், அல்வாவின் சூடு மொத்தமாக நாக்கைப் பதம் பார்த்துவிடும். ஐந்து நிமிடத்திற்கு வாயைத் திறந்து காத்தாட நின்றால் மட்டுமே சூடு குறையும்.
அல்வாவின் சூடு தாங்காமல் வாழை இலையின் நிறமே மாறி இருக்கும். அல்வாவின் மணமும், சுடசுட கட்டியதால் ஏற்பட்ட வாழை இலையின் மணமும் மனதை என்னவோ செய்யும். அல்வாவின் சுவை வாழை இலையிலும், வாழை இலையின் சுவை அல்வாவிலும் ஒட்டிக் கொண்டு விடும். இப்போதெல்லாம் எந்தக் கடையிலுமே வாழையில் அல்வா தருவதில்லை. பிளாஸ்டிக் தாளில் தான் தருகிறார்கள். வாழை இலை அல்வா சாப்பிட்டு பல வருடங்கள் ஆகிறது. ஆனால் அதன் சுவை மட்டும் இன்றும் நினைவில் பசுமையாக இருக்கிறது.
அல்வாவை சைடிஷ் இல்லமால் சாப்பிட்டால் சுவை நன்றாய் இருக்காது. அல்வாவைப் பிரிப்பதற்கு முன், வாங்கிவந்த மிச்சரை முதலில் பிரிக்க வேண்டும். கொஞ்சம் அல்வாவைப் பிய்த்து மிச்சரில் நன்கு புரட்டி, மிச்சரில் இருக்கும் சகலவிதமான வஸ்துகளும் அல்வாவின் முதுகில் ஏறிக் கொண்டபின் மொருமொருமென்று அந்த அல்வாவை சாப்பிட்டால் அதன் ருசியே தனி தான்.
அம்பது அல்வா என்ன, கால்கிலோ அல்வாவைக் கூட தயங்காது சாப்பிடலாம் திகட்டவே திகட்டாது. அல்வா திகட்டக்கூடது என்பதற்காகவே வந்த ஆபத்பாந்தவன் தான் மிச்சர்.
கொஞ்சம் பெரியவனாகி மேல்நிலைப் வகுப்பு சென்ற பொழுது வீட்டில் அனுமதி வாங்கி அல்வா சாப்பிடும் நாட்களும் மலையேறிவிட்டது. அல்வா சாப்பிட வேண்டும் என்று தோன்றினாலே எதாவது ஒரு லாலா கடைக்கு சென்று விடுவோம். டீ கடையில் வடை பஜ்ஜி சாப்பிடுவது போல் தான் லாலா கடையில் அல்வா சாப்பிடுவது, வீட்டிற்கு வாங்கி வந்து தான் சாப்பிட வேண்டும் என்று அவசியமில்லை, சுட சுட கடை வாசலிலேயே நின்று சாப்பிடலாம். இன்றும் கூட நெல்லையில் பல கடைகளின் வாசலில் அல்வா சாப்பிடுபவர்களைப் பார்க்கலாம்.
முன்பெல்லாம் அல்வா சாப்பிட்டு முடித்தவுடன், கை நிறைய ஒரு கொத்து மிச்சரையும் தருவார்கள், சில வருடங்களுக்கு முன்பு வரை நாமே கேட்டால் மட்டுமே முகம் சுளித்துக் கொண்டு தருவார்கள், இன்றோ காசு கொடுத்தால் மட்டுமே ஒரு கொத்து மிச்சர் கிடைக்கிறது.
பஜாருக்கு
சென்றால் பெரும்பாலும்
பெரிய லாலா
கடைக்கு சென்று
அல்வா சாப்பிடாமல்
திரும்பியது இல்லை. தென்காசி
பெரிய லாலா
கடை அல்வாவை
விரும்பி வாங்கி
செல்பவர்கள் அதிகம்.
எப்போதுமே பெரிய
லாலா கடையில் கூட்டம்
மொய்த்துக் கொண்டுதான்
இருக்கும். இங்கிருந்து வெளிநாடுகளுக்கு
கூட அல்வா ஏற்றுமதி
செய்வதாக சொன்னார்கள்,
அதைப்பற்றி எனக்கு
தெரியவில்லை.
இருட்டுக்கடை அல்வாவோ அல்லது நெல்லையில் இருந்து வாங்கி வந்த அல்வாவோ அவற்றை நள்ளிரவில் அரை தூக்கத்தில் சாப்பிட்ட நாட்களே அதிகம். வீட்டில் இருந்து யாராவது நெல்லை சென்றாலே அன்று வீட்டிற்கு அல்வா வரப்போவது நிச்சயம். அல்வாவின் சூடு தணியும் முன் சாப்பிட வேண்டும் என்பதற்காக தூங்கிக் கொண்டிருக்கும் பொழுது கூட எழுப்பி அல்வா ஊட்டிவிட சாப்பிட்ட நியாபகங்கள் இருக்கிறது.
சத்யா அண்ணனுடன்
ஒருமுறை குற்றாலம்
சென்றிருந்த பொழுது குற்றாலநாதர்
கோவிலுக்குப் அருகே
இருக்கும் முதல்
சந்தில் இரண்டாவதாக
இருக்கும் வெங்கடேஸ்வரா
அல்வா கடைக்கு
அழைத்துச் சென்றார். குற்றால
சீசனில் குளித்துவிட்டு
சூடாக நெய் அல்வா
சாப்பிட்டால் எவ்வவளவு
அருமையாக இருக்கும்.
இன்றுவரை குற்றாலம்
சென்றால் வெங்கடேஸ்வரா
நெய் அல்வா
கடையில் சாப்பிடாமல்
திரும்புவது கிடையாது.
மெயின் பால்ஸ்
அருகே பல
வெங்கடேஸ்வரா நெய்
அல்வா கடை
உள்ளது, நான்
கூறிய கடையில்
மட்டுமே சுவை
கொஞ்சம் கூடுதலாக
இருக்கும். அல்வாவை
கையில் கொடுக்கும்
பொழுதே குற்றால
அருவி போல் நெய்
வழிந்தோடும்.
நெல்லை அல்வா
என்றவுடன் அனைவருக்கும்
நியாபகம் வருவது
இருட்டுக்கடை அல்வா
மட்டுமே, ஆனால்
நெல்லை மாவட்டத்தைப்
பூர்வீகமாக கொண்டவர்களுக்கு
மட்டுமே தெரியும்
நெல்லையில் எங்கு
அல்வா வாங்கினாலும்
அதன் சுவை
கிட்டத்தட்ட ஒரே
மாதிரி தான்
இருக்கும். வெளி
மாவட்டத்தவர்களால் இருட்டு
கடை அல்வாவையும்
மற்ற கடைகளின்
அல்வா சுவையையும்
எளிதில் பிரித்தறிந்து விட
முடியாது.
இருட்டுக்கடை அல்வாவை விட பலருக்கும் சாந்தி ஸ்வீட்ஸ் அல்வா பிடிக்கும், சிலருக்கு லஷ்மி ஸ்வீட்ஸ் அல்வா மட்டுமே பிடிக்கும்.
நெல்லை புதிய பேருந்து நிலையத்தினுள் நுழைந்தாலே மிகவும் காமெடியாக இருக்கும், பத்தடி நடப்பதற்குள் பத்து சாந்தி ஸ்வீட்ஸ் பார்த்து விடலாம். ஓம் சாந்தி, ஸ்ரீ சாந்தி, நியூ சாந்தி, ஹாய் சாந்தி, ஒரிஜினல் சாந்தி, புராதன சாந்தி என்று புதிய பேருந்து நிலையம் முழுவதுமே சாந்தி மயமாகத் தான் இருக்கும், பழைய பேருந்து நிலையம் அருகே இருக்கும் சாந்தி ஸ்வீட்ஸ் சென்றால் யார் கண்ணிலும் படமால் அழுக்குப் படிந்து ஒரு போர்ட் தொங்கிக் கொண்டிருக்கும் "எங்களுக்கு வேறு எங்கும் கிளைகள் கிடையாது, நம்பி ஏமாற வேண்டாம்" என்று. சாந்தி ஸ்வீட்ஸில் அல்வாவை விட அவர்கள் தயாரிக்கும் மைசூர்பாகு மிக நன்றாக இருக்கும்.
அல்வாவை மருத்துவ குணத்துடனும் பார்ப்பது உண்டு, வயிறு சரியில்லாமல் நான்ஸ்டாப் என்றால் மருத்துவர்கள் கூட பரிசீலிப்பது அம்பது கிராம் அல்வா.
அல்வா இருபது நாட்களுக்குக் கூட கெடாமல் இருக்கும். டால்டாவில் செய்து இருந்தால் மூன்று நாட்களுக்குள் மேலே வெள்ளை நிற கோட்டிங் வந்துவிடும், தோசைக் கல்லில் போட்டு சுட வைத்து சாப்பிட்டால் அதுவும் வித்தியாசமான சுவை தான்.
சென்னை கல்லூரியில் சேர்ந்த பின் எப்போது ஊருக்கு சென்றாலும் தவறாது அல்வா வாங்கி வர வேண்டி இருக்கும். சில முறை பதினைந்து கிலோ வரை அல்வாவை சுமந்து வந்திருக்கிறேன். ஊரில் இருந்து யார் வீட்டிற்கு வந்தாலும் அல்வா இல்லமால் படியேறுவதில்லை என்பதால் பெரும்பாலும் வீட்டில் அல்வா ஸ்டாக் இருந்து கொண்டே இருக்கும்.
ஆவடியில் ஒரு சூப்பர் மார்கெட்டில் லஷ்மி ஸ்வீட்ஸ் அல்வாவைப் பார்த்தேன், முகவரி கூட பழைய பேருந்து நிலையம், நெல்லை என்று தான் போட்டிருந்தது. பேக்கிங் ஆகி இருநாட்கள் என்றுகூறியது. அல்வா சாப்பிட்டு பல நாட்கள் ஆகிவிட்டது என்றதால் கால் கிலோ வாங்கி சென்றேன், ஆசையாக அந்த அல்வாவைப் பிரித்தவுடன் கண்டு பிடித்து மனம் வெறுத்தேன் அது லஷ்மி ஸ்வீட்ஸ் அல்வா இல்லை போலி என்று.
பெரும்பாலும் அல்வா கருஞ்சிவப்பு நிறத்தில் தான் இருக்கும் இதுவோ நல்ல ரோஸ் கலரில் இருந்தது, இருந்தும் அல்வா ஆசை தணியாததால் லேசாக பிய்த்து வாயில் வைத்தேன், ஷப்ப்ப்பா வாந்தி வராத குறை. வாழ்கையில் முதன் முறையாக ஊசிப்போன அல்வாவை வாயில் வைத்தது அன்று தான். வாழ்க சென்னை!
பின்குறிப்பு :


