2 Dec 2013

பண்ணையாரும் பத்மினியும் - ஜஸ்டினும் ஸ்டுடியோவும்

 அந்த அறை முழுவதும் மெல்லிய சிகரெட் நெடி பரவியிருந்தது. அந்தரத்தில் தொங்கிக் கொண்டிருந்த பல்பு, அறை முழுமையையும் மஞ்சள் நிறத்தால் நிரப்பியிருந்தது, அப்பட்டமான மஞ்சள் என்று சொல்லிவிட முடியாத மஞ்சளும் கருமையும் விரவிய ஒருவித கருமஞ்சள். மின்விசிறி மெட்டமைத்துக் கொண்டிருந்த அந்த டடக் டடக் டடடடக்  அங்கிருந்த அமைதியை குலைத்துக் கொண்டிருந்தது அல்லது அமைதியை இன்னும் அழகாகிக் கொண்டிருந்ததுவெவ்வேறு அளவுகளில், வெவ்வேறு காலங்களில் வாங்கப்பட்ட கீபோர்ட், சில கிட்டார்கள், புல்லாங்குழல், மைக் என்று அறை முழுவதுமே இசை உபகரணங்கள் சிதறிக் கிடந்தன. பழைய காலத்து டேப்ரிக்கார்டர் போன்ற மூன்று பெட்டிகள், அதற்கு பக்கத்தில் ஒரு கணினி, அந்தக் கணினியின் முன்பு இரண்டடி உயர மர ஸ்டூல்.  

  சொன்னால் நம்ப மாட்டீர்கள் அதுதான் ஜஸ்டினின் ரெக்கார்டிங் ஸ்டுடியோ. பல குறும்படங்களின் அற்புதமான இசை இங்கிருந்து உருவாகியதே. ஜஸ்டினின் ஸ்டுடியோவை எளிதாக வார்த்தைகளுக்குள் கொண்டுவந்து விட்டாலும் அப்படி ஒரு ஸ்டுடியோவை உருவாக்க அவர் பட்ட கஷ்டங்கள் கொஞ்சநஞ்சமல்ல என்பதை ஆன்டோ மூலம் அறிவேன். ஆன்டோவும் ஜஸ்டினும் ஓரறைத் தோழர்கள். ஆன்டோ மூலம் தான் ஜஸ்டின்  எனக்கு அறிமுகம். 'ஜஸ்டின் ஹாரிஸ்கிட்ட சவுண்ட் இஞ்சினியரா இருக்காண்டா, அப்டியே சின்ன சின்ன ஷார்ட் பிலிம்ஸ்க்கு ம்யுசிக் பண்றான்' நான்கு வருடங்களுக்கு முன்பு ஜஸ்டின் குறித்து ஆன்டோ என்னிடம் கூறிய வார்த்தைகள். அலட்டல் இல்லாத அவரது வார்த்தைகள். என்னுள் ,எவ்விதமான பெரிய பிம்பத்தையும் ஏற்படுத்தவில்லை. 



  கடந்த வாரம் ஜஸ்டினின் அறைக்குள் நுழைந்த பொழுது அந்த இரண்டடி உயர ஸ்டூலில் அமர்ந்து கணினியின் திரையில் என்னென்னவோ செய்து கொண்டிருந்தார். "என்னண்ணே பண்றீங்க" என்றேன். காதுகளில் மாட்டியிருந்த ஹெட்செட்டை கழற்றிவிட்டு "பண்ணையாரும் பத்மினியும் ஆர் ஆர் போயிட்டு இருக்கு" என்றபடி மீண்டும் தன் காதுகளில் கழற்றிய ஹெட்செட்டை மாட்டிக் கொண்டார். பொதுவாகவே அவர் அதிகம் பேசமாட்டார். தனியொரு ஆளாக திரைப்படத்தின் பின்னணி இசைக்கோர்ப்பு வேலைகளைச் செய்து கொண்டிருப்பதால், முழுக்கவனத்தையும் கணினியில் செலுத்தியிருந்தார். சிறிது நேரத்தில் ஆன்டோவும் வரவே என்ன நினைத்தார் என்று தெரியவில்லை "வாங்க ஒரு டீ குடிச்சிட்டு வருவோம்" என்றபடி கிளம்பிவிட்டார். இதன் தொடர்ச்சியை வேறொரு இடத்தில் தொடர்கிறேன். 

  பெரும்பாலான நேரங்களில் அலுவலக நண்பர் சுரேஷும் நானும் ஏதாவதொரு குறும்படம் பற்றித் தான் விவாதிக் கொண்டிருப்போம். அப்படி ஒருநாள் அளவளாவிக் கொண்டிருக்கும் போது சுரேஷிடம் தற்செயலாய் " பாஸ் ஜஸ்டின் என் பிரண்டோட பிரண்டு நிறைய ஷார்ட் பிலிம்ஸ்க்கு ம்யுசிக் போட்ருக்காரு, பட் நான ஒரு படம் கூட பார்த்தது இல்ல, நீங்க எதாவது பார்த்து இருக்கீங்களா ?"

"பாஸ்..நிஜமாவே ஜஸ்டின் உங்க பிரண்டா..." வியப்பின் எல்லைக்கே சென்றுவிட்டார் சுரேஷ்.

"ஆமா பாஸ்.. அதுக்கு ஏன் இவ்ளோ ஆச்சரியப்படுறீங்க, என்னோட பிரண்டு தான்" 

"ஜஸ்டின் ம்யுசிக் எனக்கு ரொம்ப பிடிக்கும், வேணா பாருங்க ஒருநாள் இல்ல ஒருநாள் ஜஸ்டின் பெரிய ம்யுசிக் டைரக்ட்டரா வருவாரு, அவர எனக்கு இன்ட்ரோ பண்ணி வைங்க பாஸ்.. ப்ளீஸ்", என்றார் 

"அதுகென்ன கண்டிப்பா மீட் பண்ணிரலாம்", இங்கே கவனிக்க வேண்டிய ஒரு முக்கியமான விஷயம், அதுநாள் வரையிலும் நான் ஜஸ்டினை ஒருமுறை கூட சந்தித்தது கிடையாது, ஒவ்வொருமுறை ஆன்டோ ரூமிற்கு செல்லும் போதும் 'ஜஸ்டின் ஹாரிஸின் ஸ்டுடியோவில் இருந்து வரவில்லை' என்ற பதில் தான் கிடைக்கும். ஆன்டோவின் நண்பன் தானே எப்போது வேண்டுமானலும் சந்தித்துக் கொள்ளலாம் என்ற எண்ணத்தில் விட்டுவிடுவேன். ஆனால் சுரேஷ், ஜஸ்டினின் பெயருக்குப் பின்னால் பெரிதாய் ஒரு ஆச்சரியக் குறியை சேர்த்த பிறகு எனக்கும் ஜஸ்டினை சந்திக்க வேண்டுமென்ற ஆர்வம் அதிகமாகிவிட்டது. சமகாலத்தில் பண்ணையாரும் பத்மினியும் படத்தில் கமிட் ஆகியிருந்தார் ஜஸ்டின். நாளைய இயக்குனர் இறுதிச் சுற்றில் இப்படத்திற்கு சிறந்த இசையமைப்பாளர் விருதை வென்றவர் என்பது கூடுதல் தகவல் .  

"எஸ்.யு அருண்குமார்ன்னு ஒரு டைரக்டர் இருக்காரு, அவரும் ஜஸ்டினும் பண்ணின எல்லா படத்துலயும் ம்யுசிக் நல்லா இருக்கும். உதிரின்னு ஒரு படம், அத மிஸ் பண்ணிராம பாருங்க, அதுல ஜஸ்டின் ஒரு பாட்டு பாடிருப்பாறு ரொம்ப நல்லா இருக்கும்" சுரேஷ் தரும் தகவல்களை ஜஸ்ட் லைக் தட்டாக விலக்கி விட முடியாது. நிச்சயம் அதில் விஷயம் இருக்கும். அன்றைய தினமே வீட்டிற்கு சென்றதும் முதலில் பார்த்த குறும்படம் உதிரி.   

உதிரி குறும்படத்தில் இழவு வீட்டில் பறையடிக்கும் ஒருவனுக்கும், அதே வீட்டில் இழவு பாட்டு பாட வரும் கிழவியின் பேத்திக்கும் இடையே மலரும் காதல் என்றளவில் படம் நகரும், தற்போது அந்த படம் விழா என்ற பெயரில் வெளிவர இருக்கிறது. 

உதிரி குறும்படத்தில் "சிங்கார சிரிப்பனானும் பார்ப்பதெப்பொது" என்று ஒரு பாடல் வரும். ஜஸ்டினின் ரசிகனாகச் செய்த பாடல். அவரே பாடியிருந்தார். வீட்டிற்கு நண்பர்கள் உறவினர்கள் என்று யார் வந்தாலும் வலுக்கட்டாயமாக அவர்களை கணினியின் முன் உட்கார வைத்து இந்தப் பாடலை ஒளிபரப்பு செய்தால் தான் என் மனம் நிம்மதியாகும். 

பலநாட்களாக ஜஸ்டினைப் பார்க்க வேண்டும் என்று நச்சரித்துக் கொண்டே இருந்த நேரம் ஆன்டோ ஒருநாள் போன் செய்தார் "ஏவிஎம்ல ஜஸ்டின் ம்யுசிக் பண்ணின வாரண்ட்ன்னு ஒரு படம் ஸ்க்ரீன் ஆகுது வாரியா, அவன மீட் பண்ணலாம்" என்றார். அங்கு தான் அவரை முதன்முதலில் சந்தித்தேன். ஒல்லியான தேகம், வெட்டப்படாமல் அடர்த்தியாக வளர்த்த முடி, நியாயமாய் அதனைக் கூந்தல் என்று தான் கூற வேண்டும். பரபரப்பாக இருந்தார். 

அவர் பரபரப்பாக இருந்ததாலும், நான் தான் நான் என்பதை அவர் அறியாததாலும் ஒரு கைகுலுக்கலுடன் எங்கள் சந்திப்பு முடிந்து கொண்டது. "இல்லடா அவன் கொஞ்சம் பிசியா இருக்கான் இல்ல அதனால தான்" என்று சமாதானம் சொன்னார் ஆன்டோ. வாரண்ட் இசைக்காக பெரிதாக பேசப்பட்ட குறும்படம். அதைத் தொடர்ந்து இளனின் வெளிவந்த விசித்திரம் குறும்படத்தின் இசையும் பெரிதாய் பேசப்பட்டது. கேபிள்சங்கர் கூட தனது கொத்து பரோட்டாவில் ஜஸ்டினின் இசை குறித்து எழுதியிருந்தார்.       

பின்பொருநாள் ஜஸ்டினை அவரது ரூமில் சந்தித்த போது அவரிடம் நான் பேசிய முதல் வார்த்தை "உங்க வாய்ஸ் யுவன் வாய்ஸ் மாதிரி சூப்பரா இருக்கு, சான்ஸ்லெஸ், உதிரி இழவு வீட்டு பாட்டு எனக்கு ரொம்ப பிடிக்கும்" என்றதும் "பண்ணையாரும் பத்மினியும்ல கூட இதே மாதிரி ஒரு பாட்டு உண்டு" என்றார் ஜஸ்டின்கடவுளே அந்தப் பாடலையும் ஜஸ்டினே பாடவேண்டும் என்று மனதில் நினைத்துகொண்டு அவரிடம் "அப்போ அதையும் நீங்களே பாடுங்க" என்றேன், "நான் தான் பாடியிருக்கேன் என்றார் சிரித்துக்கொண்டே.          

ஆன்டோ பெரும்பாலான நேரம் ஜஸ்டின் குறித்து எதாவது கூறுவார், அவர் பட்ட கஷ்டங்கள், படும் கஷ்டங்கள் என்று எதாவது கூறிக்கொண்டே இருப்பார். அத்தனை கஷ்டங்களுக்கு நடுவிலும் இசையை விட்டுவிடாது, இசை தான் தனது வாழ்க்கை என்று உறுதியாய் போராடிக் கொண்டிருந்தவர் ஜஸ்டின் என்பதால் அவர் மீதொரு தனி மரியாதை உண்டு.     

கடந்த மாதம் ஜஸ்டினின் எண்ணிலிருந்து ஒரு அழைப்பு வந்தது. வழக்கமாக ஜஸ்டின் எண்ணிலிருந்து அழைப்பு வந்தால் அது ஆன்டோவாகத் தான் இருக்கும், அன்றோ  ஜஸ்டினே அழைத்திருந்தார் "சத்யம்ல நம்ம பங்கசன் இருக்கு, கண்டிப்பா வந்தரு, அத சொல்றதுக்கு தான் கூப்டேன்" இருபது நொடிகள் கூட பேசியிருக்கமாட்டார் வைத்துவிட்டார். அவரே அழைத்திராவிட்டாலும் நான் செல்வதாகத்தான் முடிவு செய்திருந்தேன் என்பது வேறுவிசயம், இருந்தபோதும் அவரே அழைத்தது சந்தோஷமாய் இருந்தது.

வெள்ளிகிழமை காலை சத்யமே திருவிழாக் கோலம் பூண்டிருந்தது. பண்ணையாரும் பத்மினியும் படப்டிப்புக்கு பயன்படுத்திய பத்மினியை அரங்கின் வெளியே நிறுத்தி அழகு பார்த்திருந்தனர். அதுவரை திரையில் பார்த்திருந்த பல பிரபலங்களையும் நேரில் பார்க்கும் பொன்னான வாய்ப்பு. அவர்களது உலகமே வித்தியாசமானது. நம்மால் தள்ளி நின்று வேடிக்கை மட்டுமே பார்க்க முடிகிற கொண்டாட்டமான உலகம், எப்போதும் மற்றவர்கள்  


உலகம். அதைத் தான் அவர்களும் விரும்புகிறார்கள். ஆனால் அவர்களுக்கொரு முகவரி கிடைப்பதற்குள் அவர்கள் சந்திக்க நேரிடும் அவமானங்களைத் தாங்கிக்கொள்ள நிச்சயம் அசாத்தியமான மனதிடம் வேண்டும். அதிலும் ஜஸ்டின் போன்றவர்களுக்கு சற்றே அதிகமாக வேண்டும். குலவிச்சையின் வழியாக வந்தவர்களுக்கு மட்டும் இது பொருந்திப் போகாது.

பண்ணையாரும் பத்மினியும் படத்தில் பணிபுரிந்த ஒவ்வொருவரையும் தமிழ்த் தொலைக்காட்சிகள் தனித்தனியாக பேட்டி எடுத்துக் கொண்டிருந்தன. ஒரு மூலையில் ஜஸ்டினும் பேட்டி கொடுத்துக் கொண்டிருக்க, பலரும் அவரை நெருங்கி வாழ்த்திக் கொண்டிருந்தனர். அவரை தொந்தரவு செய்ய வேண்டாம் என்ற எண்ணத்தில் ஒரு ஓரமாக நின்று கொண்டிருந்த என்னைக் கவனித்து விட்டவர் கண்களாலேயே வரவேற்றார்.




திரையுலகின் பெரும்பாலான பிரபலங்கள் அந்த  மேடையில் வீற்றிருந்தார்கள். முக்கியமாக இயக்குனர் ராமும் கரு.பழனியப்பனும் வந்திருந்தார்கள், பெரும்பாலான நேரம் இவர்களையே கவனித்துக் கொண்டிருந்தேன். 

பாடல் வெளியிடும் முன் படத்தின் மூன்று பாடல்களை ஒளிபரப்பினார்கள். 'நம்ம ஊரு வண்டி' பாடல் படமாக்கப்பட்ட விதம் நன்றாக இருந்தது. ஜஸ்டின் எழுதிய பாடல் இது. மற்றொரு முக்கியமான விஷயம் இப்பாடலில் ஜஸ்டினின் இசை துள்ளலாக இருந்தது. வெகுநாளாயிற்று இப்படி ஒரு கிராமத்து இசையைக் கேட்டு. கேட்டவுடன் பிடித்துப் போன பாடல். அற்புதமான குரல் தேர்வு. 

"பேசுறேன் பேசுறேன் காதல் மொழி, பேசாம பேசுறேன் கண்கள் வழி "  ஜஸ்டின் பாடிய பாடல், இப்பாடலை கணினியிலும் மொபைலிலும் பலமுறை கேட்டுக்கொண்டே உள்ளேன் சலிக்கவில்லை. நாயகியின் தந்தை இறந்த வீட்டில் நாயகியின் மேல் நாயகனுக்கு காதல் வருவது போன்று கட்சியமைக்கப்பட்ட பாடல். இந்தப்பாடலையும் உனக்காக பொறந்தேனே பாடலையும் வாலி எழுதியுள்ளார். வந்திருந்தவர்கள் அனைவருமே ஜஸ்டினின் இசையை மிகவும் வியந்து பாராட்டினர். கேட்கவே பூரிப்பாய் இருந்தது. வெகுநேரம் கழித்தபின்னரே  பின்னரே ஜஸ்டினை பேச அழைத்தார்கள். ஜஸ்டின் என்ன பேசப்போகிறார் என்பதை அறிந்து கொள்ள மிக ஆர்வமாய் இருந்தேன். "எல்லாருக்கும் நன்றி" என்றபடி பேச ஆரம்பித்த ஜஸ்டின், ஒருவித உணர்ச்சிவசபட்ட நிலையில் இருந்தார்.

எத்தனைப் பாடல் வெளியீட்டு விழாக்களில் இந்தக் காட்சியை கற்பனை செய்து பார்த்திருப்பார். தான் மேடையில் நிற்பது போலவும், தன்னுடைய பாடல் வெளியீட்டு விழாவிற்கு பலரும் வந்து தன்னுடைய இசையை ரசிப்பது போலவும். வாழ்த்துவது போலவும். அன்றைய தினம் அவர் நின்று கொண்டிருந்தது எத்தனையோ விழாக்களில் தான் கற்பனை செய்து மகிழ்ந்திருந்த தனக்கான மேடையில்.



என்றாவது ஒருநாள் சாதித்து விடுவான் என்று காத்துக் கொண்டிருந்த தன பிள்ளையை அதே மேடையில் ஒரு பெரிய இயக்குனர் இவன் தான் அடுத்த இளையராஜா என்று புகழ்வதைக் கேட்டால் என்னவொரு ஆனந்த அதிர்வில் இருப்பார்கள் அவனது பெற்றோர்கள். அதையெல்லாம் உள்வாங்கி வெளிப்படுத்த முடியாமல் திணறிக் கொண்டிருந்தார் ஜஸ்டின்.

தொடர்ந்து பேச ஆரம்பித்தவர் " இந்த பங்கசன்ல வாலி சார ரொம்ப மிஸ் பண்றேன், அடுத்த படத்துக்கும் நீ என்கிட்டே வரணும்ன்னு சொன்னாரு. நிச்சயமா அவரோட ஆன்மா இந்த அரங்குல எதோ ஒரு இடத்துல இருந்து என்ன கவனிச்சிட்டு இருக்கும்"  என்றவரின் கண்கள் முழுதாக கலங்கியிருந்தன. இன்னும் சில வார்த்தைகளை மட்டும் பேசிவிட்டு "என்னால இதுக்கு மேல பேச"  வாக்கியத்தைக் கூட முழுமைப் படுத்தாமல் அங்கிருந்து நகர்ந்து விட்டார்.

உங்கள் முதல் ஆல்பமே மிகப்பெரிய ஹிட்டாகி விட்டது. இது உங்கள் திறமைக்குக் கிடைத்த வெற்றி, உங்கள் அடுத்த திரைப்படம் உங்கள் திறமைக்கு விட்டிருக்கும் சவால். அடுத்த இளையராஜா என்று உங்களை ஆசீர்வதித்து வாழ்த்தி மகிழ்ந்த ஆர்.வி உதயகுமாரின் வார்த்தைகள் பலிக்க எல்லாம் வல்ல அந்த இறைவனை வேண்டுகிறேன். உங்கள் வெற்றிபயணம் தொடர வாழ்த்துக்கள்.             

ஜஸ்டின் இது போல் பல மேடைகளை நீங்கள் அலங்கரிக்கவேண்டும். உங்கள் முதல் விழாவில் நீங்கள் பேச மறந்த பேச மறுத்த அத்தனை வார்த்தைகளையும் ஒன்றுவிடாமல் பேச வேண்டும். 

12 comments:

  1. பாடல்களை கேட்டேன் தோழர் சீனு ...

    உனக்காக பொறந்தேனே , பேசுறேன் பாடலும் மனதில் ஒட்டிக்கொள்ளும் ராகங்கள் ...
    திறைமை எங்கு இருந்தாலும் வெளிப்பட்டே தீரும்... ஜஸ்டின் அவர்களுக்கு வாழ்த்துக்கள்

    ReplyDelete
  2. ஜஸ்டினுக்கு வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  3. அனைத்தும் ஒரு சிறு புள்ளியில் இருந்து ஆரம்பிப்பது போல ஜஸ்டினுக்கு இந்த அறையில் இருந்து ஆரம்பிக்கிறது அவரது இசைப் பயணம். வாழ்த்துக்கள் .
    அறை பற்றிய விவரணை அசத்தல் நண்பா .

    ReplyDelete
  4. /// ஜஸ்டின் என் பிரண்டோட பிரண்டு நிறைய ஷார்ட் பிலிம்ஸ்க்கு ம்யுசிக் போட்ருக்காரு.... ///

    ஜஸ்டின் அவர்களுக்கு வாழ்த்துக்கள்....

    ReplyDelete
  5. கட்டுரையில் கலந்து கொள்ள : http://dindiguldhanabalan.blogspot.com/2013/12/Students-Ability-Part-13.html

    ReplyDelete
  6. திறமையுடன் கலந்த உழைப்பு என்றும் வீண்போகாது. உன்னுடன் இணைந்து நானும் நண்பர் ஜஸ்டினை வாழ்த்துவதில் பெருமை கொள்கிறேன் பிரதர்!

    ReplyDelete
  7. அருமை நண்பர் ஜஸ்டின் இசையுலகில் சாதிக்க வாழ்த்துக்கள்! நெகிழ்ச்சியான பகிர்வுக்கு நன்றி!

    ReplyDelete
  8. பண்ணையாரும் பத்மினியும் பாடல்கள் மிகவும் ரசிக்கும் வண்ணம் உள்ளது. ஜஸ்டினுக்கு வாழ்த்துகள்.

    ReplyDelete
  9. பண்ணையாரும் பத்மினியும் பாடல்கள் மிகவும் ரசிக்கும் வண்ணம் உள்ளது. ஜஸ்டினுக்கு வாழ்த்துகள்.

    ReplyDelete
  10. மெட்டமைத்த மின்விசிறி - அடடா ..!

    //அடுத்த இளையராஜா//

    ஒரு கலைஞனின் வீழ்ச்சிக்கு பல காரணம் -
    மிகைப்படுத்திய புகழ்ச்சியும் - இகழ்ச்சியும் அதில் முதன்மையானது .. இந்தியாவின் சாபக்கேடு இது ...


    அடுத்தடுத்து ரெண்டு செஞ்சுரி போட்டாலே - அடுத்த சச்சின் ரெடி என்று கொண்டாடுபவர்கள் தானே நாம் ...!

    ReplyDelete
  11. பதிவு அருமை...வாழ்த்துக்கள் சீனு....

    ReplyDelete
  12. உங்க்ள் நண்பர் ஜஸ்டின் சினிமாத் துறையில் மேலும் பல சிறப்புகளை பெற எனது வாழ்த்துகளும்......

    பாடல்களை இன்றே கேட்கிறேன்...

    ReplyDelete