5 Feb 2015

என்னை அறிந்தால் - என்னுடைய பார்வையில்

என்னை அறிந்தால் - என்னுடைய பார்வையில் (இனிமே இது ரொம்ப முக்கியமாக்கும்)

அஜீத்

கௌதம் வாசுதேவ் மேனன் - இவருடைய இயக்கம் பிடிக்குமோ இல்லையோ திரைப்படத்தின் காட்சியாக்கம் மிகவும் பிடிக்கும். தன்னுடைய கற்பனையில், தான் நினைக்கும் ஒவ்வொன்றையும் அதனுடைய இயல்பான அல்லது இயல்பை மீறிய அழகுடன் காட்சிப்படுத்துவதில் வல்லவர் கௌதம். இயல்பாகவே அஜீத் அழகு. அந்த அஜீத் கௌதமுடன் இணைந்தால் - அதற்காக மட்டுமே என்னை அறிந்தால் படத்தை வெகுவாக எதிர்பார்த்திருந்தேன். அதனால் படம் ஹிட்டு பிளாப்பு போன்ற இத்யாதிகளெல்லாம் எனக்கு அவசியம் இல்லாததாகத்தான் பட்டது. ஏன்னா தல நடிச்சா நான் பார்த்தே தீருவேன்னு எனக்கு தெரியும்.


இது அஜீத்தின் ஒன் மேன் ஷோ என்பதை விட வழக்கமான ஜிவிஎம்மின் ஒன் மேன் ஷோ. அதுதான் இப்படத்தை தூக்கி நிறுத்துவதும் கூட. இயல்பாக ஆரம்பிக்கும் கதை. இயல்பாக நகரும் திரைக்கதை. தேவையான இடங்களில் பாடல். பாடல்களில் கூட தேவையான அளவில் மட்டுமான நீளம். தெளிவான வசனங்கள் என்று என்று ஒவ்வொன்றும் ஈர்க்கிறது. 

பில்லா, மங்காத்தா அஜீத் வேறுவிதமாக இருந்தார் என்றால் இதில் கச்சிதமாக இருக்கிறார். பொதுவாகவே அஜீத்திற்கு மீசை வைத்தால் நன்றாக இருக்காது என்றொரு எண்ணம் எனக்கு உண்டு, கத்தையாக ஏதோ கம்பளிப் பூச்சியை ஓட்ட வைத்தது போல் இருக்கும். கூடவே ஒட்ட வெட்டிய முடியும். பில்லாவிலும் மங்காத்தாவிலும் மூன்று நாள் தாடியுடன் வருவாரே அது அவருக்கு மிக அழகாக இருக்கும். ஆனால் அளவாக வைக்கும் மீசை கூட தனக்கு அழகுதான் என்பதை சத்யதேவ் (அஜீத்) நிருபித்துள்ளார். அஜீத் தனது கழுத்தில் அணிந்திருக்கும் அந்த மாலையை முதலில் வாங்க வேண்டும். அதுகூட அழகாக இருக்கிறது. 

அஜீத்தினுடைய அடுத்த பெரும் குறையாக நான் நினைப்பது வசன உச்சரிப்பு, டயலாக் டெலிவரி. 'செல்லா ஏன் செல்லா அழுவுற' 'ஒளிஞ்சா கண்டான் விளையாடுவோமா' 'மழ நிக்கிறதுக்குள்ள, அது' போன்ற வசனங்களில் எல்லாம் எனக்கு சிரிப்பு தான் வந்தது. போதாகுறைக்கு இதை வைத்து என்னை ஓட்டுவதுதான் எனது அண்ணனின் வேலை. நல்லவேளையாக தனது சமீபத்திய படங்களில் வசனங்களை பார்த்து பார்த்து சிரத்தை எடுத்து உச்சரிக்கிறார். அல்லது அதிகமான வசனங்களை பேசாமல் தவிர்த்துவிடுகிறார். என்னை அறிந்தாலில் அதிகமான வசனங்கள் இருந்தாலும் - கௌதம் படத்தில் வசனங்கள் இல்லை என்றால் தான் ஆச்சரியம்- அதையும் சிறப்பாக பேசியிருக்கிறார். 

கௌதம் - கௌதம் படங்கள் ஒருவித மென்மையான உணர்வைத் தரக்கூடியவை. வன்முறைக் காட்சிகளில் கூட வில்லன்கள் தேவையில்லாமல் கூட உரத்த குரலில் கத்தி ஆர்ப்பாட்டம் செய்யமாட்டர்கள். (நான் இன்னும் நடுநிசி நாய்கள் பார்க்கவில்லை என்பதால் சம்முவம் என்னை மன்னிப்பதாக). காதலாகட்டும் அன்பாகட்டும் வீரமாகட்டும் மேலும் எவ்வித உணர்வுகளாகட்டும் கச்சிதமாக வெளிக்கொணர்வதில் வல்லவர். உணர்வுகளை வசனங்களின் மூலம் வெளிப்படுத்துவதில் வல்லவர். அன்றைக்கு நண்பர்களோடு பேசிகொண்டிருக்கையில் கூறினேன் சுஜாதாவிற்கு பின் எனக்கு மிகவும் பிடித்த வசனகர்த்தா என்றால் அது ஜிவிஎம் தான். 

அருண்விஜய் - தடையறத் தாக்க படத்திற்குப் பின் இப்படத்தில் மிகவும் கவர்க்கிறார். சில சமயங்களில் முன்னால் வந்துவிழும் முடி மங்காத்தா அர்ஜூனை நினைவூட்டினாலும் அசத்தலான நடிப்பு. 

வசனம் - இந்தப் படத்திலும் வசனங்களுக்குப் பஞ்சமில்லை. டைமிங் காமடியாகட்டும், மிக முக்கியமான பஞ்ச டயலாக் ஆகட்டும். 'சண்டையில கிழியாத சட்ட எங்க இருக்கு' என்பதைக் கூட பொருத்தமான இடத்தில் கோர்த்திருக்கிறார். இந்தப் படத்தைப் பொறுத்தவரையில் திரிஷா அஜீத் இடையே இடம்பெறும் வசனங்கள் மிகவும் கவர்ந்த்தவை

அனுஷ்கா, த்ரிஷா ஈஷா-  அனுஷ்காவை விட த்ரிஷா அதிகமாக கவர்கிறார். த்ரிஷா மீது இந்தளவிற்கு ஈர்ப்பு ஏற்படவும் ஜிவிஎம் தான் காரணம். விடிவி ஏற்படுத்திய தாக்கம். என்னை அறிந்தாலில் த்ரிஷாவிற்கு இப்படியொரு அறிமுகக் காட்சி இருக்கும் என்று சத்தியமாக எதிர்பார்க்கவில்லை. அதிலிருந்து அப்படியே த்ரிஷாவின் பாத்திரத்தை வார்த்தெடுத்திருப்பது சபாஷ். த்ரிஷா படம் நெடுக வரவில்லையே என்பதுதான் குறையாக இருக்கிறது. ஈஷாவாக நடித்திருக்கும் அந்தப் பாப்பா கொள்ளை அழகு

கதை திரைக்கதை - வழக்கமான போலீஸ் வழக்கமான வில்லன்களை களையெடுக்கும் முயற்சியில் போட்டுத்தள்ள, அந்த வழக்கமான வில்லன்கள் வழக்கமாக போலீஸின் குடும்பத்தைப் போட்டுத்தள்ள இங்கிருந்து வழக்கமாக ஏதோ ஒன்று நடக்கபோகிறது என்று எதிர்பார்க்கும் போது கதை வேறொரு கோணத்தில் திரும்பி மீண்டும் அதே நயாகனுக்கும் வில்லனுக்கும் இடையில் நடந்தது என்ன என்பதுதான் வழக்கமான கதை. ஆனால் இதை வழக்கத்திற்கு மீறிய தனக்கே உரித்தான திரைக்கதையில் கூறியிருப்பதில் ஜிவிஎம் கவர்கிறார்.

மேக்கிங் - ஒளிப்பதிவு, ஆர்ட், காஸ்ட்யும். அஜீத் படமாகட்டும் அல்லது தமிழ் படமாகட்டும் மேற்கூறிய மூன்றும் எப்படி இருக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பேனோ அந்த எதிர்பார்ப்பில் கொஞ்சமும் குறையாமல் அப்படியே...!

என்னை அறிந்தால் - படத்தில் எல்லாமே இருக்கிறது, காதல், அப்பா மகன் பாசம். அப்பா மகள் பாசம், வீரம், வில்லத்தனம், ஏமாற்றம், எதிர்பார்ப்பு என்று எல்லாமே இருக்கிறது. கொஞ்சம் மெதுவாக நகரும் திரைக்கதை (எனக்கு அப்படித் தெரியவில்லை) என்பதால் ஒருவேளை உங்களுக்குப் பொறுமை தேவைப்படாலம். காரணம் பில்லா மங்கத்தா என்று எதிர்பார்த்து சென்றிறீர்கள் என்றால் நிச்சயம் அப்படியான படம் இல்லை இந்த என்னை அறிந்தால். ஜெமோவின் எழுத்துக்கள் ஒரு மலைப்பாதையின் வழியாக நிகழும் ரயில்பயணம் போன்றது. அதனை உணர வேண்டும் என்றால் அந்த ரயில் மெதுவாகத்தான் சென்றாக வேண்டும். என்னை அறிந்தாலும் அப்படியே. நிச்சயம் இது ஒரு feel good movie.  கொஞ்சம் த்ரில்லரும் இருக்கிறது.

அஜீத் அஜீத் அஜீத் என்பதையும் தாண்டி முழுக்க முழுக்க அஜீத்தின் நடிப்பை நம்பி வெளிவந்திருக்கும் படம் என்பதால் 'என்னை அறிந்தால்' எம்மைப் போன்ற அஜீத் ரசிகர்களுக்கு வராது வந்த தீபாவளி என்பதில் கூடுதல் சந்தோசம்...  

விளம்பரம் :