Showing posts with label ஹலோ நாங்களும் இஞ்சினியர். Show all posts
Showing posts with label ஹலோ நாங்களும் இஞ்சினியர். Show all posts

20 Sept 2013

ஆவி அவர்களின் புத்தகத்திற்கு நான் எழுதிய புத்தக அறிமுக உரை

ஒரு சிறிய முன்னுரை :

கோவைஆவி என்னும் தளத்தில் அமானுஷ்யமாக இயங்கிவரும் ஆவிக்கு எப்போது அந்த ஆசை தோன்றியது என்று தெரியவில்லை, கடந்தவாரம் நள்ளிரவு ஆவிகள் அலையும் பன்னிரண்டு மணியளவில் ஆவியிடம் இருந்து ஒரு கால் "ஹலோ சீனு" என்றார் "சொல்லுங்க ஆவி" என்றேன்  பின்வருவதை சொன்னார்.

'ஹலோ நாங்களும் இஞ்சினியர் தான்' புக் எழுதி முடிச்சிட்டேன், இன்னும் ரெண்டு மாசத்துல கோவை புக்பேர்ல அந்த புக்க ரிலீஸ் பண்ணிரலாம்னு முடிவு பண்ணிருக்கேன், லாஸ்ட் வீக் வாத்தியார் கோவை வந்தப்போ லேஅவுட் பத்தி கேட்டேன் செஞ்சு தாரதா சொல்லிட்டாரு என்றபடி ஆனந்த் ஒரு ஆனந்த அதிர்ச்சி அளித்தார். "சீனு என்னோட புத்தகத்துக்கு நீங்க தான் அறிமுகவுரை எழுதணும், அப்போ தான் எனக்கு நிம்மதியா இருக்கும்னு." "ஐயோ ஆவி பாஸ் நான் வெறும் மனுஷன் தான் ஆவி எழுதின புக்குக்கு நான் எப்படி விமர்சனம் எழுத முடியும்"ன்னு ஜகா வாங்கினேன்.

என் மீது தொற்றிக் கொண்ட ஆவி என்னை விடுவதாயில்லை "இப்போ நீ எழுதி தராட்டா சென்னைக்கு பறந்து வந்துருவேன்னு" மிரட்டவே அவருடைய புத்தகத்திற்கு என்னுடைய அறிமுகவுரை எழுதிவிட்டேன்.

அந்த அறிமுகவுரை உங்கள் பார்வைக்கு  

எங்கோ ஓரிடத்தில் எழுதிக் கொண்டிருக்கும் ஒருவரின் எழுத்துக்களை மிக அருகாமையில் உணரச் செய்யும் வல்லமை பதிவுலகிற்கு உண்டு, அப்படிப்பட்ட பதிவுலகம் மூலம் நண்பரானவர் ஆனந்த விஜயராகவன். பெற்றோர் வைத்த அழகிய பெயரைத் துறந்து இணையத்தில் ஆவியாக வளம் வந்து கொண்டுள்ளார். ஆவி என்ற வித்தியாசமான பெயரே இவர் மீதான ஈர்ப்பை வெகு இயல்பாக வரவழைத்துவிடுகிறது.

"ஹலோ நாங்களும் இஞ்சினியர் தான்" என்ற பெயரில் தான் எழுதி இருக்கும் புத்தகத்தின் தலைப்பும் நம்மை வெகுஇயல்பாக ஈர்க்கிறது. தற்காலத்தில் தமிழகமே "ஹலோ நாங்களும் இஞ்சினியர் தான்" என்று சொல்லிக் கொண்டிருக்கும் சமகாலத்தில் தனது இஞ்சினியரிங் கல்லூரி வாழ்வின் படிமங்களை பாஸ்கர் ஜீவா கராத்தே சங்கீதா ரமாதேவி காதல் நட்பு என்ற குறியீடுகள் மூலம் தன்னுள் படிந்த விழுமியங்களை மற்றும் நினைவலைகளை பின்நோக்கிப் பார்த்து ஆங்கிலத்தில் காக்டெயில் என்று கூறிவார்களே அப்படியொரு கலவையாக நம்முடன் பகிர்ந்து கொள்கிறார்.   



நாமக்கல் மாவட்டத்தில் கிராயூர் என்னும் கிராமத்தில் இருக்கும் பாலிடெக்னிக்கில் இருந்து தொடங்கும் கதை மெல்ல நட்பு காதல் நாமக்கல் கிராயூர் என்று கிராமம் கிராமமாக பயணிக்கிறது. 

பல இடங்களில் இவரது இயல்பான அதே நேரத்தில் கொஞ்சம் நையாண்டி கலந்து எழுதும் இவரது நடை நம் உதட்டில் சிறு புன்னகையைப் மலரச் செய்ய தவறுவதில்லை, தன்னுடைய வகுப்பில் தான் அமர நினைத்த செகண்ட் பெஞ்சானது சக மாணவரால் தட்டிப் பறிக்கப்படுகிறது, சிறிது நேரத்தில் தனது வகுப்பாசிரியர் மூலம் மீண்டும் கிடக்கும் பொழுது ஆவி இப்படி எழுதுகிறார்.

செகண்ட் பெஞ்ச் கார்னர் சீட் கிடைத்துவிட்ட மகிழ்ச்சி.. என் பக்கத்தில் இருந்த, எனது இடத்தை ஆக்ரமித்த அந்த லேண்ட் மாபியாவை பார்த்து ஒரு வெற்றிப் புன்னகை பூத்தேன்.

தன்னுடைய வகுப்பில் சங்கீதா என்ற ஒரே ஒரு மாணவி மட்டும் தான் என்றறியப்படும் பொழுது கூட அந்தக் கவலையை ஆவி சந்தோசமாக சொல்கிறார்.


காய்கறிகள் இல்லாத போது கறிவேப்பில்லை கூட சுவையாக தெரியும் என்பது போல ஒற்றை மாணவியாய் அவள் தான் எல்லோருக்கும் ஒரே டைம் பாஸ்.
கதையில் திடீர் திருப்பமே சங்கீதா என்று நாம் நினைத்துக் கொண்டிருக்கும் வேளையில் சங்கீதாவுடன் இன்னும் சில மாணவிகளும் வகுப்பினுள் நுழைகின்றனர். இங்கிருந்து கதையின் திசை மாறுகிறது அல்லது சங்கீதாவின் தோழி ரமாதேவியால் மாற்றபடுகிறது. 

ஆவி எப்போதுமே கொஞ்சம் வித்தியாசமானவர் தான், அதனால் தான் ஹீரோயின் அறிமுகப்படலத்தில் சங்கீதாவை அறிமுகம் செய்துவிட்டு ஹீரோயின் தோழி அறிமுகப்படலத்தில் ஹீரோயினை அறிமுகம் செய்து எழுத்துப் புரட்சி செய்துள்ளார். அதிலும் தனது ரமாதேவியை எண்ணி சில இடங்களில் இப்படி சிலாகிக்கிறார்.


ரமாதேவி எனும் பெண் பார்ப்பதற்கு கருப்பு நிற கனகா போல் சாயலில் இருந்தாள்

இதைச் சொல்லும்போது கருப்பான அவள் கன்னங்கள் மெலிதாய் சிவந்திருந்தது.

இவரது வித்தியாசமான செயல்கள் இன்னும் நீளுகிறது காதலி அழைத்ததால் தியான வகுப்பு செல்கிறார், அதே நேரத்தில் காதலியுடன் சேர்ந்து ஆஞ்சநேயர் கோவிலுக்கும் செல்கிறார். காதலியுடன் கோவிலுக்குச் செல்வார்கள் என்ற நிலைபாட்டை மாற்றி ஆஞ்சநேயர் கோவிலுக்கும் செல்லலாம் என்ற நிலைபாட்டை ஏற்படுத்தியவர் நண்பர் ஆவியாகத் தான் இருக்கும். அவரது காதலின் படிமங்களை எண்ணி வியந்து கொண்டுள்ளேன்.

ஆண்டவா தைரியத்த கொடு என்று வேண்டிக் கொண்டே" ரமா, உன்னை எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு.. ஐ திங்க் ஐயம் இன் லவ் வித் யூ.." என்றேன்.
என்றபடி காதலியிடம் காதலையும் சொல்லிவிட்டு, ஏற்றுக்கொள்வாளா மறுப்பாளா என்றபடி ஆவி பரிதவிக்கும் இடத்தில் கச்சிதமான வார்த்தைக் கோர்வைகள் கடைந்தெடுத்த எழுத்தாளனின் எழுத்துக்கள்.

ஏற்றுக் கொள்வதும் நிராகரிப்பதும் அவள் உரிமை என்ற போதும், நிதர்சனத்தை புரிந்து கொள்ள மனம் ஒப்பவில்லை.
சில இடங்களில் ஆவியின் காதலியான ரமாதேவியின் செய்கை நம்முள் ஒருவித வியப்பை ஏற்படுத்துகிறது. தன் காதலியுடன் முதல் முறை பேருந்தில் பயணிக்கிறார், இன்னும் காதலை வெளிபடுத்தவில்லை, ஒருவருக்கொருவர் முழுமையாய் அறிமுகம் செய்திருக்கவும் இல்லை அந்நேரம் ரமா ஒரு கேள்வி கேட்கிறாள்,

"உங்க வீட்ல எவ்ளோ பேர்? " என்றாள்..   

அதற்கு ஆவி 
" மூணு பேர்" என்றேன்.
" நீங்க, அப்பா அம்மா மட்டும் தானா?"
" இல்ல, ஒரு தங்கையும், பாட்டியும் இருக்காங்க.."
"அப்புறம் மூணு பேர்னு சொன்னீங்க.."
"ஆமாங்க, வீட்டுல என்னை ஆனந்துன்னும் கூப்பிடுவாங்க, ராஜான்னும் கூப்பிடுவாங்க, அம்மா சிலசமயம் கண்ணான்னு கூப்பிடுவாங்க.. அதைத்தான் கேக்கறீங்கன்னு நெனச்சேன்." நான் சொல்லவும் அவள் இதழ்களில் பூத்திருந்த புன்னகை என் மனதை என்னவோ செய்தது.
இந்தப் பதிலைக் கேட்டதும் என்னுள் ஒரு ஆச்சரியம். இப்படி ஒரு புத்திசாலித்தனமான பதிலைக் கேட்டதும் நானாக இருந்திருந்தால் அப்படியே பேருந்தில் இருந்து  குதித்திருபேன் ஆனால் அப்பெண்ணோ மெலிதாக புன்னகைத்தாள் என்று குறிப்பிடுவதைப் ஆவி கூறுவதைப் பார்த்தால் அந்தப் பெண் எவ்வளவு பெரிய அதிர்ச்சியையும் தாங்கக் கூடியவள் என்றே அவதானிக்க வேண்டியுள்ளது.

மிக அருமையான ஒரு புத்தகத்தை எழுதி அதற்கு ஒரு பொடியனை அறிமுக உரை எழுதச் செய்த ஆவி அவர்களுக்கு என் நன்றிகள். ஆவி இன்னும் பல புத்தகம் எழுத வேண்டும் அத்தனையும் ஒரு எழுத்துப் புரட்சி உண்டுபண்ண வேண்டும் என்று மனம் எல்லாம்வல்ல அந்த ஆண்டவனை பிராத்திகிறது.

ஒரு சிறிய பின்குறிப்பு 

நம்மள மதிச்சி ஒருத்தரும் அறிமுகவுரைலா எழுத சொல்லமாட்டாங்க... இந்த மாதிரி கற்பனையா எழுதிகிட்டா தான் உண்டு. அறிமுகவுரை என்ற பெயரில் ஆவியின் தொடருக்கு நான் எழுதியது சத்தியமான கற்பனையே 

ஒரு சிறிய குட்டு 

பதிவு முழுவதையும் படிக்கமால் பின்குறிப்பை மட்டும் படித்தவர்களுக்கு. ஏன் பாஸ் நான் பதிவு எழுதினா மட்டும் மொதல்ல பின் குறிப்ப படிக்றீங்க :-)))

ஷொட்டு 

ஆவி அவர்கள் தனது தளத்தில் எழுதிவரும் ஹலோ நாங்களும் இஞ்சினியர் தான் தொடருக்கு... உங்கள் தொடர் சமீப காலமாக வரவில்லை, விடாம தொடர்ந்து உற்சாகமா எழுதுங்க ஆவி பாஸ்...