ஸ்ரீராமன் மைக்கின் முன்னால் நின்று கொண்டு இருந்தார். கல்யாண ராமனாகவோ பட்டாபி ராமனாகவோ காட்சி அளிக்கவில்லை. அன்னையின் ஆணையை ஏற்றுக் கொண்டு காவி உடை அணிந்த சாதாரண ஸ்ரீராமனாகவே காட்சியளித்தார்.
நெஞ்சம் நிமிர்த்தி,வலுவான தோள் மற்றும் ஒளிவீசும் கண்களுடன் அமைதியாக நின்று கொண்டு இருந்தார். முகத்தில் இருந்த தேஜஸ் அழகுக்கு அழகு சேர்த்தது. நிரம்பி வழிந்த அந்த பெரிய அரங்கம் இமைக்காமல் அவரையே பார்த்துக் கொண்டிருந்தது. தெய்வீகமான அமைதி அந்த அரங்கம் முழுவதும் பரவி இருந்தது.
தன் திருவாய் மலர்ந்த ஸ்ரீராமன், ராம பஜனை செய்ய ஆரம்பித்தார். அப்போது தான் உணர்ந்தேன் நிற்பது ராமன் இல்லை. ராமனின் பிம்பம். மக்கள் அனைவரும் ராமனுடன் சேர்ந்து ராம நாம சங்கீர்த்தனம் பாட ஆரம்பித்தனர். மிகவும் பரிச்சியமான பாடல். ஆனால் அதன் வரிகள் எனக்குத் தெரியவில்லை புரியவுமில்லை.
பக்கத்தில் அமர்ந்திருந்த என் அண்ணனைப் பார்த்தேன், எந்த சலனமும் இல்லாமல் மேடையையே பார்த்துக் கொண்டிருந்தான். அவன் எந்த ஆக்சனுக்கு எப்போது ரியாக்சன் செய்யவான் என்பதற்க்கான வேதிச் சமன்பாட்டை அந்த ஸ்ரீராமனால் கூட எழுத முடியாது.
இந்த ஆனந்தத்தைக் கெடுக்கும் படியான ஒரு குரல்,
" திருச்சிக்கு டிக்கெட் எடுத்தது யாருப்பா? திருச்சி வந்தாச்சி, எந்திரி, எந்திரி"
" யோவ் அண்ணாச்சி திருச்சி வந்தாச்சி எந்திரியும். உம்மோட பெரும் பாடுய்யா, டிக்கெட் எடுத்தது லேட்டு, பஸ்சுக்கு வந்தது லேட்டு, இப்பவும் லேட்டு" எரிச்சலில் கத்தினான் அந்த ஆசாமி.
" டிக்கெட் வாங்கியசுன்னா எல்லாருமே ' லேட்டு ' தானய்யா" .
அண்ணாச்சியின் சிலேடை புரியாமல் தலையில் அடிதுக்க் கொண்டான் அந்த ஆசாமி.
அண்ணாச்சி கூறியது சிரிப்பாக இருந்தது, இருந்தாலும், இளவதிலேயே 'லேட்' ஆக விரும்பாததாலும், அருமையான கனவு கலைக்கப் பட்டதாலும் சிரிக்கும் மனநிலையில் நான் இல்லை.
அப்போது தான் உணர்ந்தேன் கார்பன் டை ஆக்சைடு வெளியேற முடியாத அளவிற்கு அனைத்து கண்ணாடி ஜன்னல்களும் அடைக்கப் பட்டிருந்தன. வியர்வைத் துளிகள் முதுகில் மூன்றாம் உலகப் போரையே நிகழ்த்திக் கொண்டிருந்தன. உடனடித் தேவை ஆக்சிஜன்.
எல்லா சாமியையும் மறந்திருந்தேன். நினைவுக்கு வந்த ஒரே ஒரு சாமி நித்தியானந்தா சாமி தான்.
"கதவைத் திற காற்று வரட்டும்" .
