அலுவலகத்தில் புதிதாக தமிழ் வலைபூக்கள் என்று ஒரு வலைபூ ஆரம்பித்துள்ளார்கள். சமூக வலைத்தளம் போன்றது, சுருங்கச் சொன்னால் பேஸ்புக் பாதி பிளாக் மீதி என்று கலந்து செய்த கலவை அது, அந்த வலைப்பூவின் மேல் ஒரு வாசகம் எழுதியுள்ளார்கள் அந்த வாசகமே அந்த வலைபூ மேல் ஈர்ப்பு வர மிக முக்கிய காரணம், அந்த வாசகம்.
"நம் கருத்துக்களை தீந்தமிழில் பதியவும் பகிரவும் ஒரு இடம் (தயவு கூர்ந்து தமிழ் மொழியில் மட்டும் பகிரவும்)" .
இங்கு தமிழில் எழுதுவோரும், தமிழிலேயே கருத்துக்களைப் பரிமாறுபவர்களும் மிக அதிகம். அக்குழுவின் மூலம் கடந்த வாரம் திருவான்மியூர் கடற்கரையில் சந்திக்கலாம் என்று முடிவு செய்திருந்தார்கள், நானும் சென்றிருந்தேன், பதினைந்து பேர் வந்திருந்தனர், தங்கள் அலுவலக விசயங்களைப் பற்றி பேசிக் கொண்டிருந்தவர்கள், மெல்ல தமிழ், தமிழ் வலைபூ பற்றியும் பேசத் தொடங்கினர், அங்கிருந்தவர்களில் நான்கு பேர் பிளாக் எழுதுபவர்கள்.
அதில் ஒருவர் என்னிடம் வந்தார், "தம்பி நான் 'எங்கள் பிளாக்'கோட வாசகன், கே.ஜி கௌதமன் உங்களுக்கு தெரியுமா?" என்றார்.
"ஓ தெரியுமே, அலெக் அனுபவங்கள் எழுதுறாரே", என்பதோடு நான் விட்டிருக்கலாம் தான், விடவில்லையே.
அவர் தொடர்ந்தார் "ஆமாப்பா, நானும் அவரும் அசோக் லைலான்ட்ல ஒண்ணா வொர்க் பண்ணினோம், கௌதமன் உங்களுக்கு கூட தெரியுமா என்றார்" என்னிடம்.
"என்ன சார் இப்டி கேட்டுடீங்க, நா கௌதமன் சார், ஸ்ரீ ராம் சார் எல்லாரும் நல்ல பிரண்ட்ஸ்", இப்போது தான் ஒரு விஷயம் மனதில் எட்டி மிதித்தது. இது வரை நான் ஸ்ரீராம் சாரை பார்த்ததே இல்லை. போனில் பேசுவது உண்டு, கௌதமன் சார் அவர் ப்ளாக் ப்ரொபைலில் ஒரு படம் வைத்திருக்கார், அதை வைத்ததற்கு வைக்காமலேயே இருக்கலாம்,ஜூம் பண்ணினால் அவரது முகத்தைத் தவிர மற்றெல்லாம் தெரிகிறது.
மூளைக்குள் திடிரென்று ஒரு கேள்வி, 'ஒருவேள நம்மட்ட பேசிட்டு இருக்கவர் தான் ஸ்ரீராம் சாரோ' என்று. அப்போது தான் கவனித்தேன் என்னிடம் இவ்வளவு நேரம் பேசிக் கொண்டிருப்பவரின் பெயர் கேட்கவில்லை என்பதை. சிறிது நேரத்தில் பின்னால் இருந்து மற்றொரு நண்பர் அவரை 'பாலா' என்று பெயர் சொல்லி அழைத்தார், அடுத்த சந்தேகம் ஸ்ரீராம் சார் பேஸ்புக் நேம் 'ஸ்ரீராம் பாலசுப்பிரமணியம்' , ரைட்டு டா பகவான் கட்டம் கட்டிட்டார், இனி என்னவெல்லாம் நடக்க போகுதோ என்றவாறே அவரை கவனித்தேன்.
அவர் சாதரணமாய்த் தான் என்னைப் பார்த்தார்,சிரித்தார். எனக்கோ அவர் என்னை நக்கலாக பார்ப்பது போலவே தோன்றியது. அப்புறம் அவரிடம் பேச்சு கொடுத்தேன், ஸ்ரீராம் ஸார் டோன் எனக்குத் தெரியும், இவருக்கும் அவருக்கும் ஆறில்லை அறுபது வித்தியாசம், இருந்தாலும் நம்பிக்கை வரவில்லை. எங்கே என்னை வைத்து காமெடி செய்கிறாரோ என்பது போலவே அவரைப் பார்த்துக் கொண்டிருந்தேன், "என்னோட வாய வச்சிட்டு சும்மா இருந்தா தான".
மீண்டும் என்னிடம் கேட்டார் "தம்பி எவ்ளோ நாளா பிளாக் எழுதுறீங்க"
'இவர் தெரிஞ்சு கேட்காரா, தெரிஞ்சுக்க கேட்காரா' ஒன்றுமே புரியவில்லை, சரி மொபைலை எடுத்து ஸ்ரீராம் சாருக்கு போன் பண்ணினால் நடந்து கொண்டிருக்கும் தில்லுமுல்லுவை கண்டுபிடித்து விடலாம், விடலாம் தான் என்றாலும் எதோ ஒன்று என்னைத் தடுத்தது.
பிளாக் பற்றி அவர் என்னிடம் கேட்கும் போதெல்லாம் எனக்கு அப்போதே அங்கிருந்து எழுந்து ஓடிவிடலாம் போல் இருந்தது. சரி ஆனது ஆச்சு போற வரைக்கும் போட்டும் என்று விட்டுவிட்டேன். அவர் வேறு அவ்வபோது என்னைப் பார்த்து சிரித்துக் கொண்டிருந்தார், "ஏண்டா டேய் நீ என்ன பார்த்தது கூட கிடையாது, ஆனா நல்ல பிரண்ட்ஸா " என்று கிண்டலடிப்பது போலவே இருந்தது அந்த சிரிப்பு.
ஒரு மணி நேரத்திற்குப் பின் சபை கலையும் நேரம், "சீனு" என்று ஒரு குரல், யார் என்று பார்த்தால், அவர் தான், அவரே தான் "சொல்லுங்க சார்" என்றேன்.
"உங்களுக்கு கடவுள் நம்பிக்கை உண்டா, முருகன் பிடிக்குமா" என்றார்.
"நிறையவே உண்டு சார், எம்பெருமான் முருகப் பெருமானை பிடிக்காமல் போய்விடுமா" என்று சொல்ல நினைத்தாலும் சொல்ல வில்லை, அவரே தொடர்ந்தார்.
" வடபழனி முருகன் பற்றி ஒரு இசைத் தொகுப்பு, பாடல்கள் எழுதினது நான்" என்றார்.
மிக சந்தோசமாய் அந்த இசைத் தட்டை வாங்கினால் கௌதமன் இசையகம் என்று இருந்தது, மீண்டும் ஒருமுறை அவர் முகத்தை உற்று நோக்கினேன், சிரித்தார், சிரிக்க மட்டுமே செய்தார். நானும் சிரித்தேன், சிரிக்க மட்டுமே முடிந்தது, எங்காவது ஸ்ரீராம் என்ற பெயர் அத்தட்டில் தட்டுப் படுகிறதா என்று பார்த்தேன்,
காரணம் கௌதமன் சார் ஒரு இசைப் பிரியர், அவர் இசை, இவர் பாடல்களோ என்று வேகமாய் ஆராய்ச்சி செய்தேன், எங்கும் அவர் பெயர் தட்டுப் படவில்லை, பின்பு தான் கொட்டை எழுத்தில் எழுதியிருந்த அந்த எழுத்துக்களைப் பார்த்தேன், 'மோகன சிவ பாலன்' என்று எழுதி இருந்தது.
இதைப் படித்து முடிக்கும் போது நிச்சயம் ஸ்ரீராம் ஸார் நக்கலாய் ஒரு சிரிப்பு சிரிப்பார் என்று தெரியும், என்ன பண்றது கலி காலம்.
கதை சொல்லும் நீதி : கதையில தான் நீதி கிடைக்கும், நிஜத்துல மொக்கை தான் கிடைக்கும் யுவர் ஆனர்...

