9 Apr 2016

மெட்ராஸ் டூ டெக்சாஸ் - புது இடம்! புது மேகம்!

விமானத்தின் ஜன்னல் கதவுகளை உயர்த்தி மெல்ல வெளியில் பார்த்தேன். நல்ல வெளிச்சம். ஒரு இருண்ட குகைக்குள் இருந்து கடுமையான வெளிச்சத்தை பார்பதைப் போல் இருந்தது அந்த உணர்வு. தூக்கம் நிரம்பிய எனது கண்கள் அந்த வெளிச்சத்தை ஏற்றுக்கொள்ள திணறிக் கொண்டிருந்தன. கண்களை சுருக்கி, மேலும் கூர்மையாக்கி நிலத்தைத் தேடினேன். பரந்து விரிந்த பசுமையான புல்வெளி. அவைகளுக்கு மத்தியில் கூரை வேயப்பட்டதைப் போல கட்டிடங்கள், அங்கங்கே பெரிய பெரிய குளங்கள் என டாலசை பிரதி எடுக்க ஆரம்பித்திருந்தேன். விமானம் மெல்ல தனது உயரத்தைக் குறைக்க ஆரம்பித்திருந்தது. 


'இன்னும் சில நிமிடங்களில் டாலஸ் விமான நிலையத்தை நெருங்க இருக்கிறோம். லண்டனில் கடுமையான விமான போக்குவரத்து நெரிசல் இருந்தபோதிலும், வரும் வழியில் கடுமையான மேகமூட்டம் இருந்த போதிலும் நாம் எதிர்பார்த்ததை விட பதினைந்து நிமிடங்கள் முன்னதாகவே டாலஸ் விமான நிலையத்தை நெருங்கிவிட்டோம். நாம் தரையிறங்குவதற்கான உத்தரவு கிடைத்துவிட்டது. கடவுளுக்கு நன்றி. உங்களுக்கு சேவை செய்ததில் நாங்களும் அமெரிக்கன் ஏர்லைன்சும் மிகவும் பெருமைப்படுகிறோம். நன்றி.' என்ற தகவலை கூறிவிட்டு விமானத்தை ஓடுதளம் நோக்கி சீராக்குவதில் கவனம் செலுத்தத் தொடங்கினார் கேப்டன்.

ஒட்டுமொத்த விமானமும் உறக்கம் கலைந்து அமெரிக்காவில் இறங்க தயாராகிக் கொண்டிருந்தது. நான் மட்டும் ஜன்னலின் வழியாக விரிந்த அந்த நிலத்தின் மீது வைத்த கண்ணை எடுக்காமல் பார்த்துக் கொண்டிருந்தேன். பறந்து கொண்டிருப்பது அமெரிக்காவின் மீது என்பதையே நம்பமுடியாமல் மிதந்து கொண்டிருந்தேன். அமெரிக்கா வந்துவிட்டேன் என்கிற நிறைவு இருந்தாலும் என்னையே அறியாமல் ஏதோ ஒன்று உள்ளுக்குள் எட்டி உதைக்க ஆரம்பித்தது. மனம் மொத்தமும் சென்னையில் இருக்கும் என்னுடைய வீட்டில். நேற்று வரைக்கும் நான் நடந்து கொண்டிருந்த அந்த தரைகளில் கால்பதித்து நின்று கொண்டிருந்தது. உடல் மட்டும் விமானத்தின் ஓர் இருக்கையில் அமர்ந்திருந்தது. இன்னும் அடுத்த தேசத்தினுள் கால்பதிக்கவே இல்லை அதற்குள் ஹோம்சிக் - ஆம் இந்த உணர்வினை அப்படித்தான் கூறுகிறார்கள். அது ஒருவித கலவரமான மனநிலை. அம்மாவைப் பிரிந்து முதல்நாள் பள்ளிக்கூடம் செல்லும் குழந்தையின் மனநிலை. கொஞ்சம் தள்ளி அமரிந்திருந்த மகேஷைப் பார்த்தேன், எனது உணர்வுகளை பிரதி எடுத்தது போல் அமர்ந்திருந்தான். ஒருவருக்கொருவர் சிரித்துக் கொள்ளக்கூட மனமில்லாமால் வேறுபக்கம் திரும்பிக் கொண்டோம்.

மகேஷாவது பரவாயில்லை பேச்சிலர்ஸ் ரூம். நானோ வீட்டைத்தாண்டி எங்கும் போனதில்லை. வீட்டை என்பதை விட என் அம்மாவைப் பிரிந்து எங்கும் சென்றதில்லை என்பது தான் உண்மை. இன்றைக்கு கண்காணாத தொலைவில், உலக உருண்டையின் வேறோரு மூலையில் இருக்கிறேன். இனி எனக்கான உலகம் வேறு. நான் சந்திக்கப்போகும் மனிதர்கள் வேறு. நான் காணப்போகும் காட்சிகள் வேறு. ஆனால் நான்?

காலையில் கண் விழிக்கும் போது கிடைக்கும் காபியில் இருந்து, 'லேசா உடம்பு வலிக்கி' என்றால் கழுத்தைத் தொட்டுப்பார்க்கும் அம்மாவின் பாசத்தில் இருந்து, நள்ளிரவில் மழுங்க மழுங்க கணினியைப் பார்க்கும் போது 'பாபு தூங்கு டே' என்று அப்பா கூறும் அக்கறையில் இருந்து, இவை கிடைக்காத தொலைதூரத்திற்கு வந்திருக்கிறேன். இனி எனக்கு நானே காபி போட்டுக்கொள்ள வேண்டும், சமைக்க வேண்டும், என்னுடைய வேலைகள் மொத்தத்தையும் நானே கவனித்துக்கொள்ள வேண்டும். சுருங்கச் சொல்வதென்றால் யாருடைய அனுசரனையும் இல்லாமல் என்னை நானே கவனித்துக்கொள்ள வேண்டும். நினைத்துப் பார்க்கவே மலைப்பாக இருக்கிறது. 

விமானம் மெல்ல வானத்தில் வட்டமடிக்க வட்டமடிக்க தலைக்கு மேல் சில வளையங்கள் தோன்றி மறைந்து கொண்டிருந்தன. அமெரிக்கா சென்றே ஆக வேண்டும் என்று முடிவானபோது பலரும் பயமுறுத்தினார்கள் 'சீனு கண்டிப்பா ஹோம்சிக் வரும். வீட்டு ஞாபகமாவே இருக்கும். தனிம பாடாப்படுத்தும், ஆனா எவ்ளோ சீக்கரம் இத பழகிக்க முடியுமோ பழகிக்கோ.' என்று தான் அறிவுறுத்தினார்கள். இதையெல்லாம் கேட்கும்போது 'ஹெஹ்ஹே எனக்கா, ஹோம் சிக்கா' என்பது போல் சிரித்தேன். நாட்கள் நெருங்க நெருங்க, வேறு வழியே இல்லை விமானம் ஏறியே ஆக வேண்டும் என்ற நிலை வந்தபோது தான் என்னுடைய நிலை என்ன என்பதே எனக்குத் தெரிந்தது. நேற்று வரைக்கும் எனக்கே எனக்கான கூட்டில் மிகப் பாதுகாப்பாக, மிகப் பத்திரமாக இருந்திருக்கிறேன். இன்றைக்கு கண்கானா தொலைவில்.

'நாம தான் நல்லா ஊர் சுத்துவோமே நமக்கென்ன கவல. ஹோம் சிக்காவது மண்ணாவது' என்பது தான் என் எண்ணமாக இருந்தது. பயணம் முடிவான போதே யாமினி கூறியிருந்தாள் 'அண்ணா இங்க வந்தா உடனே ஹோம் சிக் வரும். இல்ல கொஞ்சநாள் கழிச்சு வரும், ஆனா உடனே வந்துட்டா நல்லது' என்று. அதை நினைத்து கொஞ்சம் ஆசுவாசப்படுத்திக் கொண்டேன். இருந்தும் முதல்முறையாக வீட்டைவிட்டுப் பிரிந்து வெகுதூரம் பயணிப்பதால் உருவாகும் உணர்வுகளை சமாளிக்க முடியவில்லை. திடிரென என் மீது எல்லாருக்கும், எல்லோர் மீது எனக்கும் பாசம் வந்ததைப் போல் இருந்தது. அந்த உணர்வில் இருந்து மீளவே முடியாத தொலைவிற்கு சென்றிருந்தேன்.

ஒரு தூக்கம் தூங்கி எழுந்தால் என்னுடைய வீட்டில், என்னுடைய படுக்கையில் இருந்து எழுந்திருக்க மாட்டேனா என்றெல்லாம் சிந்தனை ஓடியது. சில கனவுகள் நிஜமாகலாம். சில நிஜம் என்றைக்குமே கனவாக முடிவதில்லை. எவ்வளவு யோசித்தாலும் மூளையைப் போட்டு கசக்கினாலும் இனி ஒன்றும் ஆவதற்கில்லை. சிலவற்றை ஏற்றுக்கொண்டுதான் ஆக வேண்டும். உலகம் எவ்வளவு பெரியது என்பதை கூட்டை விட்டு வெளியில் வந்து பார்த்தால் தானே தெரிந்துகொள்ள முடியும். ஆனாலும் ஆனாலும் ஆனாலும் என்ற தொடக்கப்புள்ளி மட்டும் விடாமல் துரத்திக் கொண்டிருந்தது. 

ஒரு நாளைக்கு எவ்ளோ பேர் வெளிநாடு போறாங்க. ரவி எவ்ளோ நாளா அமெரிக்கால இருக்கான். பொண்ணுங்களே சமாளிக்கிறாங்க உன்னால முடியாத என்ற எதிர்வாதமும் என்னிடம் இல்லாமல் இல்லை. முதல்முறை வேலை நிமித்தம் வெளிநாடு வருபவர்களின் மனநிலையும் இப்படித்தான் இருந்திருக்க வேண்டும் என்று எனக்கு நானே சமாதனம் கூறிக்கொண்டேன். 

ரவி அமெரிக்கா சென்றபோது அவனை வழியனுப்புவதற்காக விமான நிலையம் போனதுதான் என்னுடைய முதல் விமான நிலைய அனுபவம். அன்றைக்கு தன் கணவனை வழியனுப்ப வந்த பெண் ஒரு சின்னக் குழந்தையைப் போல் தரையில் விழுந்து அழ ஆரம்பித்துவிட்டார். அவரைப் பார்க்கவே அந்த இடத்தில் ஒரு கூட்டம் கூடிவிட்டது. அவருடைய துயரத்தை எண்ணி பலரும் தங்கள் நிலையை ஆசுவாசப்படுத்திக் கொண்டார்கள். இருந்தும் பிரிவு எப்போதுமே இரு பக்க வேதனையை தரக்கூடியது. 

கணேஷ் கடைசி வரைக்கும் கேட்டுக் கொண்டே இருந்தான் 'அண்ணா ஏர்போர்ட்ல வச்சு அழுவியானா' என்று. 'அவர் எங்க அழப்போறாரு நல்ல சந்தோசமாத்தான் போவாரு' என்றான் வினோத். நானோ விமான நிலைய காட்சியை கற்பனை செய்துபார்க்கும் துணிவு கூட இல்லாமல் நின்று கொண்டிருந்தேன். 'சீனி சோகமாக இருக்காத சீனி. சந்தோசமா இரு. life has everything' என்று பத்து நாட்களுக்கு முன்பிருந்தே கூறத் தொடங்கியிருந்தார் கார்த்திக். என்னவானாலும் எங்கேயும் அழுதுவிடக் கூடாது என்பதில் மட்டும் உறுதியாக இருந்தேன். பயணத்திற்கான நாள் நெருங்க நெருங்க இரவும் பகலும் வேகமாக செல்வதைப் போல் இருந்தது. இது தான் உலகின் கடைசி நாள், இனி ஆவதற்கு ஒன்றுமில்லை என்பதைப் போல் பறந்து கொண்டிருந்தது காலம். அதன் இழுப்பில் எந்தப் பக்கம் திரும்புவதெனத் தெரியாமல் காற்றில் அல்லாடும் இறகைப் போல் ஆடிக் கொண்டிருந்தது மனம்,  

ஒவ்வொரு நாள் விடியும் போதும் இன்னும் மூணு நாள், இன்னும் ரெண்டு நாள், இன்னும் ஒரு நாள் என்பதையே கணக்குப் போட்டுக் கொண்டிருந்தேன். வெளிநாட்டு வாழ்க்கை அவ்வளவு எளிதானது இல்லை என்று யாரோ எப்போதோ என் அடி மனதில் பதிய வைத்துவிட்டார்கள் போல, மந்திரம் போல அதுவே கண்முன் நிழலாடிக் கொண்டிருந்தது. அலுவலகத்தின் கடைசி நாளின் போது கேக் வெட்டும் போது கண்ணைக் குளமாக்கிவிட்டார்கள். கேக் வெட்டக்கூடாது நான் வெட்டமாட்டேன் என்று மறுத்தும் நிகழ்ந்த சம்பவம் அது. ஆனால் அது எவ்வளவு பெரிய உபாயத்தை செய்தது என்பதை என்னால் சென்னை விமான நிலையத்தில் தான் புரிந்துகொள்ள முடிந்தது. சோகமோ கோவமோ உடைந்து வெளிப்பட்டுவிட்டால் போதும் பின் அதனை கட்டுக்குள் கொண்டுவந்து விடலாம். அதுதான் அங்கே நிகழ்ந்தது. 

- பறப்போம்


[பின்குறிப்பு : ஹோம்சிக்கில் இருந்து மீண்டுவிட்டேன் என்பது நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டிய மிக முக்கியமான தகவல்.]

52 comments:

  1. பொண்ணுங்களே சமாளிக்கிறாங்க உன்னால முடியாத // அமெரிக்கா சென்று ஆணாதிக்கவாதியாய் மாறிவிட்ட சீனுவைக் கண்டிக்கிறோம்..

    ReplyDelete
    Replies
    1. அதானே!! இது என்ன உதாரணம்!!
      ஆவி, பிள்ளை இப்போ பாவம். அடுத்த முறை இப்படிப் பண்ணாப் பாத்துக்குவோம். :)

      Delete
    2. அதானே! நம்மையும் சேர்த்துக்குங்க இந்தக் கேள்வியில்..ஹஹஹ்..

      கீதா

      Delete
    3. ஆவி அய்யா... அவ்வளவு தானா வேறெதுவும் இருக்கிறதா...

      Delete
  2. உங்கள் உணர்வுகளை அப்படியே எங்களுக்குள் கடத்தும் வண்ணம் இருந்தது உங்கள் எழுத்துகள்.

    மீண்டும் ஒரு முறை அமெரிக்க பயணம், கண்களை மூடி, மூச்சை உள்ளிழுத்து, சற்றே ஆசுவாசப்படுத்திக் கொண்டு, விமானத்தின் மெல்லிய இரைச்சல் சிறிது பழகிய பின், கண்களைத் திறந்து, உங்களை தள்ளிக் கொண்டு சன்னலின் வழியே எட்டி நோக்குகிறேன். பரந்து விரிந்த பசுமையான புல்வெளி. அவைகளுக்கு மத்தியில் கூரை வேயப்பட்டதைப் போல கட்டிடங்கள், அங்கங்கே பெரிய பெரிய குளங்கள் என டாலசை பிரதி எடுக்க ஆரம்பித்து விட்டேன்.

    தொடர்ந்து வருகிறேன் நண்பா!

    ReplyDelete
    Replies
    1. தொடரந்து வருகிறேன் என்று சொன்னது அமெரிக்காவிற்கு வருவதை பற்றியா

      Delete
    2. அமெரிக்காவுக்கு தொடர்ந்து செல்லவும் ஆசைதான்.. ஆனால் நானும் சென்று விட்டால் என் தாய் தேசத்தை யார் காப்பாற்றுவது ஐயா?

      Delete
    3. நானும் சென்று விட்டால் என் தாய் தேசத்தை யார் காப்பாற்றுவது ஐயா?// யப்பா யப்பா புல்லரிக்குதுப்பா...

      கீதா

      Delete
    4. தேசம் காக்கும் வீரனே... அப்புறம் அந்நிய செலவாணியை எப்படி சமாளிப்பதாம்.. அதனால் கொஞ்சம் காலம் இங்கிருந்துவிட்டு வருகிறேன் ;-)

      Delete
  3. சுவையாக விரியும் வகையில் விளக்கும்வரிகளில் எழுத்தும் நடையும்! அருமை!மேலும் எழுதுக!

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி அய்யா :-)

      Delete
  4. எழுத்துக்கள் உங்கள் வசப்படுகின்றன....பாராட்டுக்கள் .பழைய நினைவுகளை தூண்டிவிட்ட பதிவு. உங்களுக்கு அமெரிக்கா ஆனால் அந்த காலத்தில் எனக்கு சென்னை இதுதான் வித்தியாசம். உங்களைப் போலவே நானும் வீடு அம்மா புத்தகம்( நாவல்கள்) என்று இருந்த எனக்கு சென்னை புதுவித அனுபவத்தை கொடுத்ததுமட்டுமல்ல பல அனுபவ பாடங்களையும் கற்று தந்தது. அந்த அனுபவத்தின் மூலம்தான் மனிதர்களிடம் எப்படி பழக வேண்டு யாரை எங்கே வைக்க வேண்டும் யாரிடம் எந்த அளவு நம் சொந்தகதைகளை பகிரவேண்டும் என தெரிந்து கொண்டேன் அந்த அனுபவங்களை பெற்று அமெரிக்கா வந்த எனக்கு இந்தியாவை விட்டு வந்ததது இழப்பாகவே இல்லை. இப்போது நீயூஜெர்ஸியே எனது மண்ணாகி போனது

    ReplyDelete
    Replies
    1. ம்ம்ம் செம... இந்தியாவுக்குள் எங்கு சென்றிருந்தாலும் அதன் தாக்கம் எனக்குள் இவ்வளவு இருந்திருக்குமா தெரியவில்லை... இது புதுவிதமான அனுபவம்... ந்யூஜெர்சி குறித்துக் கொண்டேன் :-)

      Delete
  5. வளர்ந்த மண்ணைவிட்டு, சொந்தபந்தங்களை விட்டு, நாடு கடந்து, கடல் கடந்து செல்லும் ஒருவரின் மனநிலை எப்படி இருக்கும் என்பதை மிக விரிவாக விளக்கமாக உணர்வோடு ரசனையாக எழுதியிருக்கிறீர்கள். அருமையான பதிவு.

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி செந்தில் சார்.. எங்கயும் போயிராதீங்க Stay Tuned :-)

      Delete
  6. நீங்க அமெரிக்கா வரப் போறீங்கன்னு சொன்னவுடனே எனக்குத் தோணியது, உங்களுக்குக் கஷ்டமாக இருக்கும் என்று..உங்கள் பதிவுகளின் வழி நான் அறிந்தது பாசமான குடும்பமும் நண்பர்களும்... என்னோடு மிக மிக ஒத்துப்போகும் விசயம்! அதனால் எனக்கு உண்மையாகவே தோன்றியது, நீங்கள் அட்லாண்டா வரவேண்டும் என்று. விமான நிலையத்தில் இருந்து நேராக வீட்டுக்கு அழைத்து வந்திருப்பேன்.
    நீங்கள் சொல்லியுள்ள ஒவ்வொன்றும் எனக்கு பெங்களூரு சென்றபோது நடந்தது...அதுவும் காம்பசில் வேலை கிடைத்ததால் ஜனவரியில் வரவேண்டும் என்பது ஜுனிலேயேத் தெரியும்..அதுவும் எங்கள் வீட்டுக்கு வரும் உறவினர் கண்டிப்பாக கவுன்ட் டவுன் சொல்லாமல் போக மாட்டார்கள்..மன பாரம் அதிகரித்துக் கொண்டே போன காலம் அது. பெங்களூரு சென்று பல நாட்கள் தூங்காமல் அழுதிருக்கிறேன்..மதுரைத்தமிழன் சகோ சொன்னது போல் அமெரிக்கா வரும்போது எனக்குப் பழகிவிடவில்லை...எப்போதும் பழகாது. :)
    take care Seenu

    ReplyDelete
    Replies
    1. அம்மா மறைந்த பின் இந்தியாவிற்கும் எனக்கும் உள்ள உறவும் தேய்ந்து போகிவிட்டது

      Delete
    2. டச்சிங்க் தமிழா......உண்மையாக....

      Delete
    3. //போகிவிட்டது// அடுத்து பொங்கல் விடுமா ஐயா?

      Delete
    4. அதே feelings தான் எனக்கும் ம.துரை தமிழ் நண்பா ..அப்பாவும் அம்மாவும் இல்லாத ஊரை பார்க்க போக பிடிக்கலை :(

      Delete
    5. நன்றி கிரேஸ்.. அட்லாண்டா என்ன அண்டார்டிக்காவுக்குனாலும் போயிறலாம்.. அம்புட்டு தெம்பு வந்த்ருச்சு உள்ளுக்குள்ள :-)

      Delete
    6. வீடு திரும்ப ஏன் இத்துணை ஆர்வம் என வியந்தது சீனுவின் இந்தப் பதிவால் விளங்கியது

      Delete
  7. 5 varushama arabu nattula kuppai kotren America vukke ungalukkulaam valikkudhu..... Hhmmm

    ReplyDelete
    Replies
    1. அரபு நாட்டில் குப்பைக் கூடையின் பாரம் எவ்வளவு அதிகமாக இருந்திருக்கும் என்பதை நான் உணர்கிறேன் மிஸ்டர் அனானி..

      Delete
    2. அனானி அய்யா.. நன்றாக படித்தீர்கள் என்றால் புரியும் நான் அமெரிக்கா வலிக்குது என்று எங்குமே எழுதவே இல்லை.. அயல்நாடு வலிக்கிறது என்று தான் கூறியிருக்கிறேன்.. அயல்நாடு என்றால் இந்தியாவைக் கடந்த எதுவும் அயல்நாடு என்பது தங்களுக்கு தெரியாத விசயங்கள் ஒன்றும் இல்லை.. ஆகவே :-)

      Delete
    3. Hahaha Enakku epd solradhunu theriyala, ana adhuku artham ungalayo mathavangalayo kayapadutthanumnu illa anyway all the best friend sorry for tanglish.... :)

      Delete
  8. ரசிக்கும் எழுத்துக்கள்.

    பொண்ணுங்களே கூட என்பதுதான் எல்லோர்கண்ணிலும் காணக் கிடைத்திருக்கிறது எனக்கும் கூட.

    ReplyDelete
    Replies
    1. ஹா ஹா ஹா நன்றி பாண்டியன்

      Delete
  9. This comment has been removed by the author.

    ReplyDelete
  10. சீனு செம ரைட்டப்..எனக்கும் கூட நாகர்கோவிலில்/திருநெல்வேலியில் இருந்து சென்னை (அதுவும் கல்யாணம் ஆகி) வந்த போது ரொம்பவே படுத்தியது...அதன் பின் சென்னை டு கலிஃபோர்னியா ...என் பாட்டியை 81 வயது, அப்பாவுடன் தனியாக விட்டுப் போகிறேனே என்று அழுது தீர்த்தேன்......பின்னர் 9 மாதங்களில் பின்லேடன் உதவியதால் மீண்டும் இந்தியா...பாட்டி என்னுடன் 92 வயதில் இறக்கும் வரை மனதிற்குத் திருப்தியாக இருந்தது. உங்கள் பதிவு பல நினைவுகளை மீட்டெடுத்தது. இப்போது மகனைப் பிரியும் சூழல். அவனது எதிர்காலம்...அது. உங்கள் பெற்றோரையும் என் இடத்தில் வைத்து நினைத்துக் கொள்கின்றேன் பாபு!!!!!! ஹஹ உங்கள் பதிவில் நீங்கள் சொல்லிய உங்கள் வீட்டுச் செல்லப் பெயர்!!?

    கீதா

    ReplyDelete
    Replies
    1. // பின்லேடன் உதவியதால் // அப்பாடா, அவர் உங்க ஒருத்தருக்காவது நல்லது செய்திருக்கிறாரே..

      Delete
    2. //உங்கள் வீட்டுச் செல்லப் பெயர்!!?
      // நீங்க வேற, அவருக்கு தெருவுக்கு ஒரு செல்லப் பெயர் இருக்கு.. அம்மாவுக்கு பாபு, ஆபிசில் ஸ்ரீநிவாசன். பதிவுலகில் சீனு. தென்காசியில் சீனா. சீனிவாசன் ங்கற பெயரையே மூன்று விதமாக அழைப்பார்கள், இது இல்லாமல் ஸ்ரீராம் சார் இவரை புன்னகை இளவல் ன்னும், இவர் ரசிகர்கள் ஷைனிங் ன்னும் அப்ப்பப்பா, சோடா ஓடைங்கப்பா!

      Delete
    3. பாபு என் செல்ல பேர்லாம் இல்ல.. அப்பா என்னையும் அண்ணனையும் பாபுன்னு தான் கூப்டுவார் (தட் மகனே ஃபீல்)...

      அப்போ நீங்களும் அமெரிக்கால இருந்தீங்களா..

      Delete
  11. பொங்கும் உணர்வுகள் எழுத்துகளைச் செதுக்கி இருக்கின்றன. அருமை சீனு.

    ReplyDelete
    Replies
    1. ஹா ஹா ஹா நன்றி ஸ்ரீராம் சார்

      Delete
  12. கலவையான உணர்வுகள்அருமையான கட்டிபோடும் எழுத்து ..நிறையப்பேர்இந்த அனுபவத்தை கடந்து வந்திருக்கோம் ..டேக் கேர் சீனு ..

    ReplyDelete
    Replies
    1. ம்ம்ம் அந்த நம்பிக்கையில தான நானும் இங்க வந்திருக்கேன் :-)

      Delete
  13. //சுருங்கச் சொல்வதென்றால் யாருடைய அனுசரனையும் இல்லாமல் என்னை நானே கவனித்துக்கொள்ள வேண்டும். நினைத்துப் பார்க்கவே மலைப்பாக இருக்கிறது./ அவ்வவ் எனக்கு இதை வாசிக்கும்போது எங்கம்மா சொன்னது நினைவுக்கு வருது .//உன்னைபத்தி கவலை இல்லை உன் கணவரை பத்திரமா கவனின்னு சொன்னாங்க//சீனு .நாங்க எவ்ளோ பொறுப்புகளை தலையில் சுமந்து வெளிநாட்டுக்கு போறோம் பார்த்துக்கோங்க

    ReplyDelete
    Replies
    1. //போயிருக்கோம் பார்த்துக்கோங்க//

      Delete
    2. //உன்னைபத்தி கவலை இல்லை உன் கணவரை பத்திரமா கவனின்னு சொன்னாங்க// ஹா ஹா ஹா செம டைமிங்... ஆமா சமையல் செய்வது எப்படி ப்ளாக்ஸ் எல்லாதுக்கும் நிறைய ஹிட்ஸ் வர காரணம் நீங்க தான்னு உளவுத்துறை சொல்லுச்சே :-)

      Delete
  14. year 1982 Month September Day 13
    What is this? The day my feet touched the sands of Baroda. Same feeling. NO NO more feelings which cannot described in any language. But today my daughter is in America pursuing her studies.
    Do not worry. You will also come out with flying colours.
    WISH YOU ALL THE BEST IN YOUR VENTURE ENDEAVOUR AND EFFORT.

    ReplyDelete
  15. year 1982 Month September Day 13
    What is this? The day my feet touched the sands of Baroda. Same feeling. NO NO more feelings which cannot described in any language. But today my daughter is in America pursuing her studies.
    Do not worry. You will also come out with flying colours.
    WISH YOU ALL THE BEST IN YOUR VENTURE ENDEAVOUR AND EFFORT.

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி மோகன் சார்... வாழ்வின் சில முக்கியமான தருணங்கள் என்றைக்குமே அவ்வளவு எளிதில் மறந்துவிட முடிவதில்லை... இதிலும் எந்நாளும் முழுவதுமாக எனது உணர்வுகளை கடத்திவிட முடியவில்லை... :-)

      Delete
  16. Really good article. It took me back as well.
    Welcome to Dallas. We have a big tamil event today in Frisco, TX. Pattimandram, Drama and Dances - Dr. Gnanasambatham and Actor Pandiayrajan coming. Join us in Liberty High School, Frisco, TX. Event starts at 2pm.
    You will meet hundreds of tamil people.

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி பரணி :-) வருகைக்கும் அழைப்பிற்கும் :-)

      ஆனா பாருங்க பக்கத்தில இருக்கிற கடைக்கே இன்னும் எனக்கு தனியா போகத்தெரியாது.. என்ன இர்வின் வரைக்கும் சொல்றீங்க.. ஆனா இதுமாதிரி நிகழ்வுகளுக்கு எல்லாம் வரணும்ன்னு ரொம்ப ஆசை.. கொஞ்சம் தேசம் பழகட்டும்.. நிச்சயம் இந்த தகவல்களை பகிருங்கள்.. ஒருநாள் சந்திப்போம்

      Delete
  17. சீனு ஒரு தேர்ந்த எழுத்தாளரின் நடை கைகூடிவிட்டது...
    வாழ்த்துகள்
    அப்புறம்
    எனக்கு ஹோம் சிக் என்று அனுபவம் கிடையாது ...
    நாற்பத்தி மூன்று வருடங்களாக படித்து பணி என எல்லாமே ஒரே ஊரில்தான்
    இப்படி ஒரு பதிவை நானுமே எழுதவேண்டிவரலாம்
    பதவி உயர்வு வாய்ப்பு இருப்பதால்
    பார்க்கலாம்
    பீல் எனக்குமே வந்தது அப்படி எழுதுற நைனா
    பலமுறை ஏற்கனவே சொன்னதுதான்
    ஹாட்ஸ் ஆப்

    ReplyDelete
  18. வாழ்த்துக்கள் சீனு! மேலும் பல உயர்வுகள் உங்களை வந்தடையட்டும்! அருமையான நடையில் உங்கள் பயண உணர்வுகளை பகிர்ந்தமை சிறப்பு! நன்றி!

    ReplyDelete
  19. அருமையாக உணர்வுகளைப் பதிந்திருக்கிறீர்கள். ஒவ்வொரு முறை இந்தியா வந்துவிட்டுச் செல்லும்போதும் இந்த உணர்வுகள் தலை தூக்கும். இங்கேயும் வர மனமில்லாமல், அங்கேயும் மனம் பதியாமல் இரண்டும் கெட்டான் வாழ்க்கை வாழ வேண்டும். பழக இரண்டு, மூறு வருடங்கள் ஆகலாம். ஒரு முறை ஹூஸ்டன் மீனாக்ஷி கோயில் போயிட்டு வாங்க. அங்கே கோயில் நூலகத்தில் புத்தகங்கள் நிறையக் கிடைக்கும். பாரதி தமிழ் மன்றம் அல்லது பாரதி கலை மன்றம் என்னும் தமிழ்ச் சங்கம் இருக்கு. கச்சேரிகள், நாடகங்கள்னு மீனாக்ஷி கோயில் ஆடிட்டோரியத்தில் நடக்கும். டாலஸிலிருந்து ஹூஸ்டன் இரண்டு அல்லது மூன்று மணிநேரப் பயணம்னு நினைக்கிறேன். :)

    ReplyDelete
  20. Same blood.
    உங்களுக்காவது சின்னவயசு,அதிலும் அமெரிக்கா.
    எனக்கு நாலு கழுதை வயசாச்சு,..அதிலும் ஆப்பிரிக்கா.

    வாழ்க வளமுடன்

    ReplyDelete