'கார்ல போலாமா?' என்ற ஆவியின் கேள்விக்கு ஒருவேளை ரூபக் 'முடியாது' என்றிருந்தால் இந்நேரம் ரயிலில் பயணித்திருப்போம். நல்லவேளை ரூபக் சம்மதித்துவிட்டான்(ர்). பேருந்தில் ஏறியவுடன் தூங்கிப் போகும் சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் ஒருமுறை கூட பகலில் பயணித்ததில்லை. ஆனால் இன்றோ காரில், கூடவே வலையுலக தோழமைகளும். எனது இப்போதைய மனஉணர்வுகளை விவரிக்க இன்னும் சில பல பத்திகள் தேவைபடும் என்றாலும் உங்கள் நலன் கருதி அவற்றைத் தவிர்த்து விடுவதே நலம்.
தேசிய நெடுஞ்சாலை நாற்பத்தி ஐந்தின் தேசிய நீரோட்டத்தோடு கலந்திருந்த போது நேரம் - இரண்டு நாற்பத்தி ஐந்து. பெருங்குளத்தூர் கடக்கும் வரையிலும் அடாவடியாக நகர்ந்து கொண்டிருந்த வாகனங்கள் அதன்பின் உல்லாசமாக தங்கள் சிறகுகளை விரிக்கத் தொடங்கியிருந்தன.
சென்னையில் இருந்து புதுகோட்டை குறைந்தது ஏழு மணி நேரப்பயணம். ஆவியும் ரூபக்கும் மாற்றி மாற்றி வண்டியை ஓட்ட, நான், வாத்தியார் ஸ்கூல்பையன் மூவரும் பின் இருக்கையில் அமர்ந்து நேர்த்தியாக காரை செலுத்துவது எப்படி என வகுப்பெடுத்துக் கொண்டிருந்தோம். ஒருவேளை நாங்கள் மூவரும் கற்றுக் கொடுத்திராவிட்டால், பாவம் ஆவி மற்றும் ரூபக்கின் நிலமையை நினைத்துப் பார்க்கவே பயமாயிருக்கிறது. நல்லவேளை அப்படியெதுவும் நடந்துவிடவில்லை.
ஆங்காங்கு தென்படும் சாலையோர மரங்கள். அவ்வபோது வந்து செல்லும் கிராமங்கள் இவை தவிர்த்து இருபுறமும் பரந்து வறண்ட வெட்டவெளி மற்றும் ரியல்எஸ்டேட் வீட்டுமனை கள். என்றாவது ஒருநாள் விலையேறும் கோடீஸ்வரர் ஆகிவிடலாம் என்ற நம்பிக்கையில் வாங்கப்பட்ட வீட்டுமனைகள் அவை. வானம் பார்த்த புன்செய் நிலங்களில் பெரும்பாலானவற்றை அரசாங்கம் அடிமட்ட விலைக்கு பேரம் பேசி பறித்திருக்க, எஞ்சிய நிலங்கள் வறட் சியாலும், பயிர்செய்ய ஆள் இல்லாத காரணத்தாலும், கோடீஸ்வர ஆசையாலும் இலவு காத்துக் கொண்டிருக்கின்றன. மேலும் மேலும் விவசாய நிலங்கள் மனைகளாக மாறிக்கொண்டே உள்ளன. இப்போதே திண்டிவனம் சென்னைக்கு மிக மிக அருகில் வந்துவிட்ட நிலையில் திண்டுக்கல்லும் சென்னைக்கு மிக மிக அருகில் வந்துவிடும் நாள் வெகுதொலைவில் இல்லை.
செங்கல்பட்டு கடந்ததும் வரும் அந்த மிகபெரிய ஆறானது பொட்டு தண்ணீர் கூட இல்லாமல் வறண்டு கிடக்கிறது. செங்கல்பட்டு என்றில்லை வழியெங்கும் நாங்கள் பார்த்த அத்தனை ஆறுகளும் குளங்களும் வறண்டு போய்த்தான் கிடக்கின்றன. வறண்டு போன ஆறுகள் மணல் அள்ள வசதியாய் போய்விட்டதால் மணல் வியாபாரம் ஜெகஜோதியாய் நடைபெற்றுக் கொண்டுள்ளது. நீர் மனிதனுக்கு ஆதாரம். மண் நீருக்கு ஆதாராம். இரண்டையுமே மெல்ல மெல்ல சுரண்டிக் கொண்டிருக்கிறோம். சீக்கிரம் கடல்நீரை குடிக்கப் பழகிக்கொள்ளுங்கள். என்ன ஆனாலும் வாழ்ந்ததாக வேண்டுமே!
நெடுஞ்சாலையோர கிராமத்து மக்கள் நிலையை நினைத்தால் நிஜமாகவே பரிதாபமாக இருக்கிறது. கணநேரம் கூட ஓய்வில்லாமல் அங்கும் இங்கும் சென்று கொண்டிருக்கும் வாகனங்களுக்கு மத்தியில் சாலையை கடத்தல் என்பது பிரம்மபிரயத்தனமாகவே இருக்கிறது. பொறுமை இழந்து சாலையை கடப்பவர்கள், குடித்துவிட்டு சாலையை கடப்பவர்கள், கவனக்குறைவால் சாலையை கடப்பவர்கள் என்று பல விதங்களில் பலரும் தங்கள் உயிரை மாய்த்துக் கொள்கிறார்கள். பலரின் தேவையை பூர்த்தி செய்வதற்காக பலரும் தங்களின் பல சவுகரியங்களைத் தியாகம் செய்தாக வேண்டியுள்ளது, அவற்றில் தேசிய நெடுஞ்சாலைகள் தவிர்க்க முடியா ஒன்றாகிவிட்டது.
பகலில்கூட பரவாயில்லை, வாகன ஒட்டிகளால் கிராமத்தார்களையும், கிராமத்தா ர்களால் வாகன ஓட்டிகளையும் தெளிவாக கவனிக்க முடியும். ஆனால் இரவிலோ நிலைமை கொஞ்சம் சிக்கல் தான். அதிலும் இந்த ஏழு மணியிலிருந்து பத்து மணி வரை அதிக கவனத்துடனேயே வாகனம் ஓட்ட வேண்டியுள்ளது. கிராமத்தார்கள் சாலையை கடக்கிறார்களா? இல்லை கடப்பதற்காக காத்துக் கொண்டிருக்கிறார்களா? என்பதை அந்த இருளில் கணிக்கவே முடிவதில்லை. பல சந்தர்பங்களில் சிலரின் உயிர் மயிரிழையில் காப்பற்றபட்டது.
உயிர்காக்கும் வாசகங்கள், பாதுகாப்பு குறிப்புகள் அடங்கிய டிஜிட்டல் பதாகைகள் என்று ஆங்காங்கு நட்டுவைத்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது நெடுஞ்சாலைத்துறை. இருந்தும் திருச்சியில் இருந்து புதுக்கோட்டைக்கு வழிசொல்லும் வழிகாட்டிப் பலகைகள் எங்குமே இல்லை. எங்கெல்லாமோ சுற்றி பலரிடமும் வழிகேட்டு ஒருவழியாய் வழியைக் கண்டுபிடித்தோம். ஆனால் மதுரையில் இருந்து புதுகோட்டை வருபவர்களுக்கு இந்த பிரச்சனை இல்லை, சரியான இடத்தில் வழிகாட்டிப் பலகைகள் இருக்கின்றன. ஒருவேளை சென்னையில் இருந்து வருபவர்கள் அனைவரும் புத்திசாலிகள் எப்படியாவது கண்டுபிடித்து வந்து விடுவார்களென அரசாங்கம் நினைத்திருக்கக் கூடும் போல ஆச்சரியக்குறி.
ரூபக்ராம் தீவிர எம்.ஜி.ஆர் ரசிகன் என நினைக்கிறன். அவன் எம்.ஜி.ஆர் பட்டு போட வாத்தியார் பாட பாடியே படுத்தியெடுத்து விட்டார்கள். இதையாவது பொறுத்துக் கொள்ளலாம், நல்ல பாட்டு போடுகிறேன் பேர்வழி என்று தனக்கு மட்டுமே பிடித்த தமிழ்மொழி தவிர்த்த பிறமொழி பாடல்களாக போட்டு படுத்தியெடுத்துவிட்டார் ஆவி. என்ன மாதிரியான காரில் பயணித்துக் கொண்டுள்ளோம் என்பதை நினைத்து பார்த்துக்கொண்டேன். ஆனாலும் வாத்தியார் கூறிய சில சினிமா குறித்த அரிய தகவல்கள் ஆச்சரியம்.
ரஜினி குறித்து பேசத் தொடங்கிய போது ஒருகட்டத்தில் சிவகாசிக்காரன் ராம்குமாருக்கும் வாத்தியாருக்கும் இடையே கைகலப்பு வந்துவிடுமோ என நினைத்தேன் இறுதியில் அதையே கலகலப்பாக்கி காமெடி செய்துவிட்டார்கள் அவர்கள் இருவரும். மீண்டுமொருமுறை என்ன மாதிரியான காரில் பயணித்துக் கொண்டுள்ளோம் என்பதை காரின் விட்டத்தை நோக்கி தலையை உயர்த்தி, இடமும் வலமும் சிலுப்பி நினைத்து பார்த்துக்கொண்டேன்.
நெடுஞ்சாலையோரக் கடைகளைப் பற்றி குறிபிட்டே ஆக வேண்டும். கூடுவாஞ்சேரி அருகில் 'காரைகுடில்' என்ற உணவகத்தில் மதிய உணவருந்தினோம். பெயருக்கு ஏற்ப குடில் போன்ற அமைப்பில் கட்டப்பட்ட உணவகம், சுவை சொல்லிக்'கொல்லும்' படியாக இருந்தது. அடுத்ததாக விழுப்புரம் அருகே ஒரு சாலையோர சாயா கடையில் நிறுத்தினோம். அரை கப் பால், கொஞ்சம் காப்பி/டீ தூள் கொஞ்சம் ஜீனி போட வேண்டிய இடத்தில், கொஞ்சம் பால், கொஞ்சம் காப்பி/டீ தூள், அரை கப் ஜீனி போட்டதால் ஏற்பட்ட விளைவு மூன்று காப்பி ஒரு டீ கேட்ட எங்களுக்கு நான்கு கப் பாயாசம் கிடைத்தது. இதில் வாத்தியாருக்கு சுகர் கம்மியாம்...ப்ப்ப்பூப்பூ ஒருவேளை மின்னல் வரிகளின் தொடர் வாசகனாய் இருந்திருப்பான் போல. பழிவாங்கிவிட்டான். இடைப்பட்ட நேரத்தில் அனைவருக்கும் காப்பி வந்து சேர எனக்கு மட்டும் டீ வராத நிலையில் 'தம்பி டீ இன்னும் வரல' என்று ஸ்கூல்பையன் பஞ்ச் அடிக்க, அதைகேட்டு அவன் எங்களை அடிக்கும் முன் எஸ்சானோம்.
விரைவில்
குடுமியான் மலை, சித்தனவாசல், நார்த்தா மலை மற்றும் கங்கை கொண்ட சோழபுரம்...
விரைவில்
குடுமியான் மலை, சித்தனவாசல், நார்த்தா மலை மற்றும் கங்கை கொண்ட சோழபுரம்...