30 Aug 2015

ரக்ஷா பந்தன்

இரண்டு கதவுகளில் ஒன்றைத் தள்ளிக்கொண்டு நுழையும் போதே கவனித்துவிட்டேன் அவள் வருகையை. உடன் நடந்து கொண்டிருந்த தன் தோழியிடம் எதையோ கதைத்தபடி, இதற்கு முன் வந்திராத அந்த இடத்தை மிரட்சியாக பார்த்துக்கொண்டே உள்ளே நுழைந்து கொண்டிருந்தாள். என்றைக்குமே அவளிடம் இருந்து பறிக்க முடியாத சிறுகுழந்தை ஒன்றின் புன்னகை அந்த இதழ்களில் இருந்தது. ரோஜாப்பூக்களுக்கு மத்தியில் அமர்ந்துகொண்டு அப்போதுதான் முளைத்த தன் பல்தெரிய சிரிக்கும் குழந்தையின் முகத்தை நியாபகப்படுத்தக் கூடியது அவளுடைய சிரிப்பு. கொஞ்சம் கொஞ்சமாக உள்ளே நுழைந்து கொண்டிருந்தாள். அங்கும் மனதினுள்ளும். கணம் கணமாக அவள் நுழைந்து கொண்டிருந்த அந்தக்கணம் அத்தனைக் கவித்துவமானது. அது கொடுத்த அழுத்தத்திலேயே முடிவு செய்து விட்டேன் அவளைக் காதலித்தாக வேண்டும்.

இந்த முடிவை எடுக்க அதிகநேரம் தேவைபட்டிருக்கவில்லை. எங்களுக்கு நடுவில் இருந்த முப்பது அடி இடைவெளியில், இடைவெளிக்கு நடுவில் நின்று கொண்டிருந்த சில நந்திகளைக் கடந்து அவளைப் பார்ப்பதற்கு எவ்வளவு நேரம் உதவி செய்திருக்குமோ அவ்வளவு நேரம்தான் தேவைப்பட்டது அவளைக் காதலிக்கிறேன் என்பதை உறுதி செய்வதற்கு. 

இன்னமும் அந்தப்பார்வையில் இருந்த மிரட்சி விலகியிருக்கவில்லை. மெல்ல நடந்து நடந்து எங்களுக்கு இடையில் இருந்த வெளியை குறைத்துக் கொண்டிருந்தாள். வெள்ளை நிற டிஷர்ட், கொஞ்சம் பெரிய வெள்ளை நிற ஸ்கர்ட். அந்த இடத்தில் இருந்த அத்தனை பேரிடம் இருந்தும் தன்னை வித்தியாசப்படுத்திக் கொண்டிருந்தாள். அதற்கு மிக முக்கிய காரணம் அவள் கொண்டிருந்த நிறம், அவள் பேசிய மொழி, அவளுக்குச் சொந்தமான நாடு. 

இன்ன நாட்டைச் சேர்ந்தவள் என்பதை அவ்வளவு உறுதியாகக் கணிக்க முடியவில்லை. காதல் மொழி கடந்தது. காதல் இனம் கடந்தது .காதல் தேசமும் கடந்தது. ஆஸ்திரேலியர்களிடம் இவ்வளவு மென்மை இருக்குமா தெரியவில்லை. ரஷ்யர்களின் நிறம் மிரட்டலானது. பிரித்தானியம் ம்ம் இருக்காது. சாதாரணமாகவே அவர்களின் உயரம் ஆறடி என்று படித்த நியாபகம். இவள் அவ்வளவு உயரம் இல்லை. நான் ஐந்தரை அடி என்றால் அவளும் ஐந்தரை அடிதான் இருக்கக் கூடும். அமெரிக்காவாக இருப்பதற்கான சாத்தியக் கூறுகள் அதிகம். இருக்கலாம். தேவதையவள் இன்னும் என்னைப் பார்க்கவில்லை.  

சென்னையின் வெயில் அவளை அதிகமாக வாட்டுகிறது. இந்த இரவில், பௌர்ணமி போத்திய நிலவொளியிலும் கூட லேசாக வியர்த்துக் கொண்டிருந்தது அவளுக்கு. எப்படி இந்த வெம்மையத் தாங்கிக் கொள்கிறாள் என்று தெரியவில்லை. அதற்குள் அவளுக்காக கவலைப்பட ஆரம்பித்திருக்கிறேன். காதல் என்றால் எல்லாமும் தானே. தவறில்லை. எப்படி இந்த வெக்கையை தாங்கிக் கொள்கிறாள் என்பதை என் காதலை வெளிபடுத்திய அடுத்த நொடி கேட்க வேண்டும். வா நாம் உன் கூட்டிற்கே பறந்து விடலாம் என்று கூறவேண்டும். கையில் ஒன்றிரண்டு ராக்கி கட்டியிருந்தாள். அந்த கயிறு கூட அவளுக்காகவே தேர்ந்தெடுத்துக் கட்டியதைப் போல் அவ்வளவு அழகாக இருந்தது. அவள் தேசத்தில் இந்தக் கயிறுகள் வெறும் கயிறுகள் மட்டுமே. நல்ல வழித்து வகிடெடுக்காமல் தலை வாரியிருந்தாள். வழித்து சீவும் பெண்களின் முகத்தில் ஒருவித அமைதி குடிகொண்டிருக்கும். வெளியே எட்டிப்பார்த்தேன். மேகங்களுக்கு மத்தியில் நிலவு தன்னையே ஒரு கவிதையாக எழுதிக் கொண்டிருந்தது. இங்கு என் எதிரில் எழுதப்பட்டுக் கொண்டிருக்கும் கவிதையை ஆச்சரியமாய்ப் பார்த்துக் கொண்டிருந்தேன். கவிதை இன்னும் என்னைப் பார்க்கவில்லை. 

எந்தக் கணத்தில் காதலை வெளிபடுத்தலாம் என்பது காதலுக்கும் காதலனுக்கும் இடையில் நடைபெறும் ஒரு யுத்தம். இந்த யுத்தத்தில் முட்டிமோதி ரத்தம் கசிய சண்டையிட்டுக் கொள்வது காதலும் காதலும் மட்டுமே. யார் ஜெயித்தாலும் காதல் ஜெயிக்கும். யார் தோற்றாலும் காதல் தோற்கும் விநோதக்களம் இது. அந்த இடத்தில் இருந்த ஒட்டு மொத்த ஜனமும் அவளையே பார்த்துக் கொண்டிருந்தது. நான் மட்டும் காதலித்துக் கொண்டிருந்தேன். காதல் இன்னும் என்னைப் பார்க்கவில்லை.  

நொடிநேர மௌனம் கூட மணிக்கணக்கில் நீளும் காதலில் காதல் என்கிற சொல்லை, காதல் என்கிற அவளை, காதல் என்கிற காதலை அணுஅணுவாக ரசித்துக் கொண்டிருந்தேன். சுற்றிலும் படர்ந்திருந்த மௌனத்தில் ஏற்பட்ட சிறு சலனம் அவள். அந்த சலனத்தில் ஏற்பட்ட பெரிய அலை அவள். பெரிய அலையில் அல்லாடும் சிறைபட்ட ஓடம் நான். மெல்ல அந்த இடத்தில் இருந்து எழுந்து அவள் அருகில் சென்று கரம் பற்றி அவளுக்கு என் மொழி தெரியாது, காதலுக்கு மொழி தேவையில்லை, மெல்ல அவள் கரம் பற்றி, பற்றி எரியும் அக்காட்டில், நிழலுக்குப் போராடும் வனபட்சியாய் வார்த்தை கிடைக்காமல் அங்குமிங்கும் அல்லாடுகிறேன். தெளிந்த அந்த நீரோடையில் தெளியாத சுழியாய் ஓடிக்கொண்டிருக்கும் சலசலப்பில் கரைந்து போகும் காதலை இருக்கப் பிடித்து இழுக்க பார்க்கிறேன். காதல் என்னை இழுத்துச் செல்கிறது. என்னை மட்டும் இழுத்துச் செல்கிறது. பற்றிய கரம் தேடுகிறேன். கைகளில் அகப்பட்ட கிளை ஒடிந்து காதல் பெருவெள்ளம் சுழித்தாட்டுகிறது. திசையறியவில்லை. தேசம் தெரியவில்லை. கடைசி வரை அவள் என்னைப் பார்க்கவில்லை. ஒருவேளை அவள் என்பக்கம் திரும்பி என்னைப் பார்த்திருந்தால் கூட போதும் இந்தியாவை இந்நேரம் என்னுடைய சகோதரிகளின் நாடாக அறிவித்திருப்பேன். 

6 comments:

  1. செம அண்ணா....

    ரக்சா பந்தனுக்கும் இந்த பதிவுக்கும் என்ன தொடர்புன்னு தெரியலையே...

    ReplyDelete
  2. மிஸ்டர் சீனிவாசன் ாியலி ஆசம்

    ReplyDelete
  3. இதுக்குத்தான் நவீன இலக்கிய புத்தகம் நிறைய படிக்காதீங்கன்னு சொல்றது!

    ReplyDelete
  4. அருமை கொஞ்சம் கலீல் ஜிப்ரானின் நினைவு வந்தது...வாழ்த்துகள்.
    புதுகை வலைப்பதிவர் விழாக்குழு சார்பாக அன்புடன் வரவேற்கின்றோம்...

    ReplyDelete