21 Sept 2014

எழுத்தாளர் ராகவன் - சிறுகதை

முன்குறிப்பு : இது முழுக்க முழுக்க ஒரு உண்மைச் சம்பவத்தை மையமாய்க் கொண்டு எழுதப்பட்ட கற்பனை கலந்த கதை. 

அந்த அறையில் வழிந்தோடிக் கொண்டிருந்த மௌனத்தின் ஊடாக மெல்லிய சிகரெட் புகை கசிந்து கொண்டிருந்தது. மங்கிய அந்த புகையின் வழியாக தன்னைவிட்டு விலகி மறைந்திருக்கும் நிம்மதியின் சுவடுகளைத் தேடித் தோற்றுக் கொண்டிருந்தார் ராகவன். அவரது தடித்த விரல்களுக்கு இடையே சிக்கிக்கொண்டிருந்த நெருப்புப் பொறியானது யாருமற்ற வனாந்திரத்தில் எதையோ தேடி அலையும் மின்மினிப் பூச்சியைப் போல் தகித்துக் கொண்டிருந்தது. கிட்டத்தட்ட அவர் மனமும் பொறி விழுந்த நெருப்பு போல்தான் புகைந்து கொண்டிருக்க வேண்டும். திறந்து வைத்திருந்த ஜன்னலின் வழியே நெடுநேரமாய் கதை பேசிக் கொண்டிருந்தது நிலா. அவர் எழுதிய முதல் சிறுகதைத் தொகுப்பின் பெயர் கூட 'நிலா முற்றத்து காதலி' தான்.

'சார்' எவ்வளவு நேரம் தான் பேசாமல் இருப்பது. அந்த நொடியின் மவுனத்தைக் கலைத்தேன். மெல்ல நிமிர்ந்து பார்த்தார். எதுவும் பேசவில்லை. அன்றைய மாலையில் நடந்த சம்பவங்கள், காட்சிகள் இன்னும் அவரது கண்களில் இருந்து மறைந்திருக்கவில்லை. சம்பவம் நடந்த மாலைவேளையில் இருந்து இதோ இந்த நொடி வரை அவருடனேயே இருப்பவன் என்பதால், அவருடைய வலியின் வீரியத்தை என்னால் உணர முடிந்தது. ஆனால் பங்கிட்டுக்கொள்ள முடியவில்லை. அதை அவர் விரும்பவும் மாட்டார். அனுதாப மொழியில் ஏதாவது பேசினால் எழுந்து போய்விடக்கூடும் என்பதால் நடப்பது அனைத்தையும் மெளனமாக வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தேன். வாழ்வில் நாம் சந்தித்திராத , சந்திக்கத் தயங்கும் அத்தனைப் பிரச்சனைகளையும் விதிவசத்தால் எதிர்கொண்டவருக்கு என்னால் ஆகக்கூடிய மிகபெரிய ஆறுதல் அமைதியாக நடப்பதை வேடிக்கைப் பார்த்தல் மட்டுமே.

அறைக்குள் நுழைந்ததில் இருந்து அவரையே பார்த்துக் கொண்டிருந்தேன். எண்ணெய் மக்குப்பிடித்த தலைகளும், வியர்வை பிடித்த முதுகுகளும், சாய்ந்து சாய்ந்து அழுக்கு பிடித்திருந்த வெற்றுச் சுவரினையே வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தார். விடைகாண முடியா ஓராயிரம் கேள்விகள் விடைகளைத் தேடி அலைந்து கொண்டிருக்க வேண்டும். கனன்று கொண்டிருந்த சிகரெட்டை மீண்டும் ஒருமுறை ஆழமாய்ப் புகைத்தார். ஒவ்வொருமுறை புகையை இழுத்து விடும்போதும் அதுதரும் நிம்மதி அந்த நொடிக்குப் போதுமானதாய் இருந்திருக்க வேண்டும். வந்ததில் இருந்து இது ஐந்தாவது சிகரெட். 

எழுத்தாளர் ராகவன். இதுவரை இரண்டு சிறுகதைத் தொகுதிகளும் ஒரு நாவலும் எழுதி வெளியிட்டுள்ளார். மூத்த பத்திரிக்கை நிறுவனங்களில் வடிவமைப்பாளராக இருந்தவர். இணையத்தின் அபரிமிதமான எழுச்சியால் அச்சுப் பத்திரிக்கைகள் திடீர் வீழ்ச்சியை சந்திக்க, அப்படியான நல்லதொரு தருணத்தில் வேலையை இழந்தவர். தற்சமயத்திற்கு தன்னைத் தேடி வரக்கூடிய புத்தகங்களுக்கு லே-அவுட் வடிவமைத்துக் கொடுப்பதன் மூலம் கிடைக்கக் கூடிய வருமானத்தில் வண்டி ஓடிக் கொண்டிருக்கிறது. மாதச் சம்பளத்திற்கு வேலை பார்த்தவரைக்கும் பிரச்சனையே இல்லை. இப்படி வண்டி ஓட்ட ஆரம்பித்ததில் இருந்துதான் புதிது புதிதாக பிரச்சனைகளை சந்திக்கத் தொடங்கியுள்ளார்.



ராப்பகலாக ஒரே இடத்தில் அமர்ந்து, முதுகுவலிக்க புத்தகம் வடிவமைத்துக் கொடுத்தால் ஊழியத்திற்கு ஏற்றே ஊதியம் கொடுக்கமாட்டார்கள். அப்போ இப்போ என்று இழுத்தடிப்பார்கள் புத்தகப்பணியைக் கொடுத்தவர்கள். தனக்கு வர வேண்டிய பணம் கேட்டு பத்துமுறை போன் செய்தால் பதினோராவது முறை பதிலளிக்கக் கூடிய புண்ணியவான்கள். 

அவருக்கும் ஒரு வாழ்க்கை இருக்கிறது அதை வாழ அவருக்குப் பணம் வேண்டும். பேசியபடி பேசிய பணத்தை வழங்க வேண்டும் என்ற அக்கறை இல்லாத நியாயவான்கள். சமூகத்தை தன் பேனாமுனை கொண்டு வளைக்கத் துடிக்கும் சாகசப் பறவைகள். காரியம் கூடும் வரைக்கும் கண்ணில் விளக்கெண்ணெய் ஊற்றி 'ஆ அங்கப் பூசு, ஆ இங்கப் பூசு' என்று சந்தனத்தை தடவச் சொல்பவர்கள் புத்தகம் அச்சுக்குப் போய்விட்டால் 'சார் ரேட்டு ரொம்ப அதிகமாயிருக்கு', 'இதுக்கு போய் இவ்வளவு பணம் கேக்குறீங்க', 'சார் இன்னொருத்தரு நாலாயிரம் ரூபாய்க்கு பண்னறாரு, நீங்க நம்ம பிரண்டு ஒரு ஆயிரம் ரூவா கொறச்சுக்கக் கூடாதா?', 'சார் நட்புரீதியா நீங்க என்கிட்டே பணம் வாங்க மாட்டீங்கன்னு நினைச்சேன், இப்ப திடீர்னு பணம் கேட்கறீங்க' என்பார்கள் மனசாட்சியே இல்லாமல். 

மாதாமாதம் மூன்று புத்தகங்கள் முழுதாக வடிவமைப்பு முடிந்து அச்சுக்கு சென்றாலே அது பெரிய விஷயம், நிலைமை இப்படியிருக்க புத்தகம் எழுதிய புண்ணியவான்கள் இவரின் மடியிலேயே கை வைத்தால் பாவம் இவர் என்ன செய்வார், போதாக்குறைக்கு பேஸ்புக்கும் ட்விட்டரும் அச்சுப் பிரதிகளையே இல்லாமல் ஆக்கிக் கொண்டிருக்க அதன்மூலம் ஏற்படக்கூடிய சவால்களையெல்லாம் வசதியாக மறந்துவிடுவார்கள். அவரும் எத்தனை பேரிடம்தான் தொங்குவார். செய்த வேலைக்கு உண்டான கூலியைக் கேட்டால் ஏதோ ஒரு  கடன்காரனைப் போல் பார்க்கும் இவர்கள் பார்வையை எழுத்தில் வடிக்க இயலாது. உணரத்தான் முடியும். இவற்றை எல்லாம் மீறிய ஒரு சம்பவம் தான் இன்றைக்கு நிகழ்ந்தது. விரக்தியின் உச்சத்தில் இருந்தார். 

அன்றைய மாலை அவர் வடிவமைத்திருந்த கட்டுரைப் புத்தகத்தின் வெளியீட்டிற்கு சிறப்புப் பேச்சாளராக அழைக்கபட்டிருந்தார். நானும் உடன் சென்றிருந்தேன். 'சிறப்புரை எழுத்தாளர் ராகவன்' என்று அச்சடித்த அழைப்பிதழை கையிலேயே வைத்திருந்தார். இருக்கின்ற பிரச்சனைகளுக்கு மத்தியில் எப்போதாவது அவர் உணரக்கூடிய சிறிய சந்தோசம். பெருமிதம் என்றும் கொள்ளலாம். 

அண்ணா சாலையில் இருக்கும் 'நேஷனல் புக் பேலஸ்' 'ஆண் என்னும் அரண்' புத்தக வெளியீட்டிற்காக தன்னைத் தயார்படுத்திக் கொண்டிருந்தது. ஐந்தரை மணிக்கு நடக்க இருக்கும் நிகழ்விற்கு ஐந்து மணிக்கே சென்றுவிட்டோம் நானும் ராகவனும். எழுத்தாளர் மற்றும் கவிதாயினி மதி முன்னமே வந்திருந்து நிகழ்வுக்கான ஏற்பாடுகளை கவனித்துக் கொண்டிருந்தார். இது அவருடைய நான்காவது கட்டுரைப் புத்தகம். மற்ற எழுத்தாளர்களிடம் இருந்து தன்னை சற்றே மாறுபட்டுக் காண்பிக்கப் போராடும் ஒரு பெண் எழுத்தாளர். 

ஆணாதிக்கச் சமுதாயத்தில் மற்ற பெண் எழுத்தாளர்கள் அனைவரும் பெண்ணியம் மற்றும் அவை சார்ந்த கருத்துகளை முன்வைக்க இவர் மட்டும் சற்றே மாறுபட்டு ஆண்களின் உலகம் என்று எதுவும் இல்லை, ஒருகால் அப்படி ஒன்று இருந்தாலும் அதில் ஒரு பெண்ணுக்குக் கிடைக்கக்கூடிய சுதந்திரமும் ஆணின் மூலம் அவளுக்குக் கிடைக்கக் கூடிய பாதுகாப்பும் போற்றுதற்குரியது, பெண்ணே பெண்ணுக்கு எதிரியான இவ்வுலகில் ஆணின் அரவணைப்பு பெண்ணை முழுமைப்படுத்தும் உந்து சக்தி என்றெல்லாம் ஆணுக்காக பேசக்கூடிய ஒரு எழுத்தாளராக தன்னை மாற்றிக் கொண்டவர். இந்த நிமிடத்தில் எழுத்தாளர் ராகவனுக்கு பேசியபடி பணம் தராமல் டபாய்த்துக் கொண்டிருக்கும் மற்றொருமொரு நபர். 

நேஷனல் புக் பேலசின் உள்ளே நுழைந்த ராகவனைப் பார்த்ததுமே மதி தன்னுள் ஒருவித செயற்கைத்தனமான பரபரப்பை புகுத்திக் கொண்டதை நானும் ராகவனும் கவனிக்கத் தவறவில்லை. எங்களுக்கு முன்பாகவே அங்கு வந்திருந்த கவிஞர் கிருஷ்ணன் முதல் வரிசையில் அமர்ந்திருந்தார். ராகவனைப் பார்த்ததுமே 'வாங்க ராகவன், நலமா' என்றபடி ராகவனின் கையைப் பிடித்துக் கொண்டார். எண்பது வயது முதுமையிலும் நடைபெறும் அத்தனை இலக்கிய நிகழ்வுகளிலும் தவறாது பங்குகொள்பவர். ராகவனின் கவனம் முழுவதும் மதியை சந்தித்து பணம் கேட்பதிலேயே குறியாய் இருந்தது. அதற்கும் காரணம் இல்லாமல் இல்லை.

ஐந்தாம் தேதி கொடுத்திருக்க வேண்டிய வீட்டு வாடகையை, தேதி இருபதாகியும் கொடுக்க முடியவில்லை. அம்மாவின் புலம்பல் வீட்டு உரிமையாளரின் ஏச்சுபேச்சு இவற்றிற்கு மத்தியில் தான் ஜீவனம் ஓடிக்கொண்டுள்ளது. இன்றைக்கு மதி பணத்தைக் கொடுத்தால் ஹவுஸ் ஓனரிடம் பணத்தைக் கொடுத்துவிடலாம் என்ற நம்பிக்கையில் தான் வந்திருந்தார். அந்த சிறிய வீட்டிற்கு இரண்டாயிரத்து ஐநூறு அதிகம்தான் என்றபோதிலும் சிட்டியின் மையத்தில் இதைவிட வாடகைக் கம்மியான வீடு கிடைப்பது அரிதிலும் அரிது. பத்து வருடங்களுக்கு மேலாக ஒரே வீட்டில் இருப்பதாலோ என்னவோ ஹவுஸ் ஓனர் இன்னும் கழுத்தைப் பிடித்து வெளியில் தள்ளாமல் இருக்கிறார். ஆனால் அந்த தருணத்தை அவர் எதிர்பார்த்துக் காத்திருப்பது போலவே ராகவனுக்குப்பட்டது.

'மதி' சுற்றிலும் நண்பர்கள் சூழ நின்று கொண்டிருந்தவளை மெல்ல அழைத்தார் ராகவன். அத்தனை பேர் மத்தியில் எப்படிக் கேட்பது என்ற தயக்கம் அவரிடம் இருந்தது. தனியே அழைத்துப் பேசலாம் என்றால் அதற்கு அவள் தயாராய் இருப்பது போல் தெரியவில்லை. 

இவர் அழைப்பதைக் கேட்ட மதி 'ஒருநிமிஷம் சார்' என்றவள் அடுத்த பத்து நிமிடத்திற்கு அவர் பக்கம் திரும்பவே இல்லை. தேவை பணம். எதையும் பொருட்படுத்தாமல் அமைதியாக நின்றார். 

'மதி ஒருநிமிஷம்' பொறுமை இழந்தவர் மீண்டும் ஒருமுறை அழைக்க கூட்டத்தில் இருந்து விலகி வந்தாள். 

'சொல்லுங்க சார்'

'இல்ல இன்னிக்கு பணம் தாரதா சொல்லிருந்தீங்க', தயங்கியபடியே கேட்டார்.

'சார் பங்கசன் முடிஞ்சதும் பணத்தைப் பத்தி பேசுவோமே, நானே சீப் ஹெஸ்ட் வரலைன்னு நகத்த கடிச்சிட்டு இருக்கேன், என் நிலமையவும் கொஞ்சம் புரிஞ்சிகோங்க சார்' எதோ ராகவன் பணத்திற்காக பறப்பது போல் பேசினாள் மதி. 

'இல்லம்மா ஒரு வாரமா கேட்கிறேன், எனக்கு கொஞ்சம் அவசர தேவ, இன்னிக்கு தாரேன்னு சொன்னியே' என்றார். உதட்டில் இருந்து வார்த்தை சன்னமாக அதே நேரம் கொஞ்சம் கோவமாக வந்து விழுந்தது. 

'சார் இத இப்ப பேசக்கூடிய விஷயம் இல்ல சார், பங்சன் முடிஞ்சதும் பேசுவோம்'. விருட்டென்று அங்கிருந்து நகர்ந்துவிட்டாள். அருகில் நின்று கொண்டிருந்த எனக்கே என்னவோ போல் ஆகிவிட்ட்டது. 'சார் பணத்த வாங்கிட்டு நீங்க வேலைய ஆரம்பிச்சிருக்கணும், எப்படி பேசிட்டுப் போறா பாருங்க' என் ஆதங்கத்தை வெளிபடுத்தினேன்.

'இந்த வேலையில அப்படி எல்லாம் நாம எதிர்ப்பார்க்க முடியாது தம்பி, நமக்கு புக் வொர்க் கிடைக்கிறதே பெருசு, வெயிட் பண்ணுவோம். என்றபடி முதல் வரிசையில் அமர்ந்திருந்த கவிஞர் கிருஷ்ணன் அருகில் சென்று அமர்ந்து கொண்டார். மணி ஆறைக் கடந்து, ஏழையும் கடந்திருந்தது. சீப் ஹெஸ்ட்டாக வந்து புத்தகத்தை வெளியிட வேண்டிய நடிகர் சஞ்சய் இன்னும் வந்து சேர்ந்திருக்கவில்லை. நீண்ட நேரம் ஒரே இடத்தில் உட்கார முடியாமல் கஷ்டப்பட்டுக் கொண்டிருந்தார் கவிஞர் கிருஷ்ணன். இந்தப் புத்தகத்திற்கு முன்னுரை வேறு எழுதி இருக்கிறார். 

அதுவரை பார்த்துப் பழகியிராத முகங்களாக அரங்கினுள் நுழைந்து கொண்டிருந்தார்கள். சரியாக ஏழரை மணிக்கு உள்ளே நுழைந்த நடிகர் சஞ்சய் ஒரு பெரும் பட்டாளத்தையே உடன் அழைத்து வந்திருந்தார். தாமதத்திற்கான மன்னிப்பைக் கேட்டு  தனது பெரியதனத்தையும் நிரூபித்துக் கொண்டார். அவருடன் வந்திருந்தவர்கள் அனைவருமே பேஸ்புக் பிரபலங்கள். உங்களால் ஒரு நிலைத்தகவலுக்கு நூறு இருநூறுக்கு மேல் லைக்ஸ் வாங்க முடிகிறதா நீங்களும் பேஸ்புக் பிரபலமே. விழா தொடங்கியது. 

ஒவ்வொருவராக மதியை வாழ்த்தி புகழ்ந்து கொண்டிருந்த வைபவம் அரங்கேற, 'பேஸ்புக்கில் மதியின் ஸ்டேடஸ் ஒவ்வொன்றும் அனல் பறக்கும்'. 'ஒரு பெண்ணால் எப்படி இவ்வாறு எல்லாம் எழுத முடிகிறது என்பதை எண்ணி ஆச்சரியத்தில் வாயைப் பிளந்து லைக்ஸ் போட்டுக் கொண்டிருப்போம்'. 'மதியைப் போல் தோழி கிடைப்பது அரிதினும் அரிது'. 'ஆண்களுக்கு சாதகமாக அவர் பேசும் ஒவ்வொரு விசயமும் அப்படியே புல்லரிக்கும்' என்று நடிகர் சஞ்சய் உட்பட பேச வந்தவர்கள் அனைவரும் மதியின் பேஸ்புக் நிலைத்தகவல் குறித்து புளகாங்கிதம் அடைந்தார்களே தவிர அவர்களில் ஒருவர் கூட மதி அவளது கட்டுரையில் குறிப்பிட்ட விசயங்களைப் பற்றி பேசவே இல்லை. ராகவன் உள்ளுக்குள் சிரித்துக் கொண்டார். புத்தக நிகழ்வுகளின் முகம் மெல்ல மாறிக்கொண்டு வருவதை எண்ணி வியந்தார். ஒவ்வொருவராக மதியைப் பற்றி பெருமை பேசிவிட்டு சால்வைகளையும் நினைவுப் பரிசுகளையும் வாங்கிபடி இருந்தனர். அழைப்பிதழில் பெயர் குறிப்பிடாத எவர் எவரோ மேடையில் பேச அழைக்கப்பட்டார்கள். சால்வை அணிவித்து கௌரவிக்கப் பட்டார்கள். கடைசிவரை ராகவன் அழைக்கப்படவேயில்லை. கண்டுகொள்ளப்படவும் இல்லை. கருவேல முட்களின் நடுவில் அமர்ந்து இருப்பதைப் போல் உணர்ந்தார். 

விழா முடிந்து ஒவ்வொருவராக கிளம்பிக் கொண்டிருக்க, ராகவன் மதியைப் பார்த்துப் பேச வேண்டிய அவசியத்தில் காத்திருந்தார். பேசியதில் பாதித் தொகையைக் கொடுத்தாலும் இருப்பதை வைத்து வாடகையைக் கொடுத்துவிடலாம். காலையில் அம்மாவுக்கும் அவருக்கும் நடந்த சண்டையில் இருவருமே அன்றைய தினம் முழுவதும் சாப்பிட்டிருக்கவில்லை. பசி வேறு கண்ணை சுழற்றிக் கொண்டிருந்தது. மதி அங்கும் இங்கும் ஓடிக் கொண்டிருந்தாளே தவிர இவரைக் கண்டுகொள்ளவே இல்லை. ஒரு கட்டத்தில் கார் வர அதில் ஏறி அவளும் அவர் கணவரும் கிளம்பிவிட, முகத்தில் அறைந்ததைப் போல் உணர்ந்தார் ராகவன். 

ஏதோ பெரிதாய் ஏமாற்றபட்டதைப் போல் இருந்தது அந்த உணர்வு. சிறப்புரை ஆற்ற அழைக்கப்பட்டு கண்டுகொள்ளாமல் விடப்பட்டதை விட பெரிய வலி காத்திருக்கும்படி கூறி கண்டுகொள்ளாமல் விட்டதன் மூலம் ஏற்பட்டிருந்தது. 

அங்கிருந்து நேரே கவிஞர் கிருஷ்ணன் வீட்டிற்கு சென்றோம். ராகவனுக்காக கிருஷ்ணன் போன் செய்து பேசியதில் 'தான் மதுரைக்குக் கிளம்ப வேண்டிய அவசரத்தில் இருந்ததாகவும், நடிகருடன் வந்தவர்கள் ட்ரீட் தரும்படி கேட்டதால் கையிலிருந்த மொத்த காசையும் அவர்களிடம் கொடுத்துவிட்டதாகவும், தற்சமயம் கையில் காசு இல்லை, மதுரை சென்று அனுப்புகிறேன்' என்றும் கூறி கட் செய்துவிட்டாள். கவிஞராலும் ஒன்று பேச முடியவில்லை. என்னுடைய பர்ஸைப் பார்த்தேன் மிச்சமிருக்கும் பத்து நாட்களுக்காக நான்கு நூறுரூபாய்த் தாள்கள் பத்திரமாக இருந்தன. அதை வைத்து அவராலும் எதுவும் செய்ய முடியாது. அது இல்லாமல் என்னாலும் நாட்களைக் கடத்த முடியாது. 

விரக்தி தலைக்கேறிய நிலையில் என்னுடைய அறையில் வந்து அமர்ந்தவர் நள்ளிரவை நெருங்கிக் கொண்டிருக்கும் வரையிலும் மௌனமாகவே இருந்தார். அனுபவம் கற்றுகொடுத்த பாடங்கள் அவரை இயல்பாய் வைத்திருந்தாலும் மனதில் ஏற்பட்ட போராட்டங்களும் குழப்பங்களும் இயல்பை மீறிய பதட்டத்தைக் கொடுத்திருந்தன. 

ஏதோ ஞாபகம் வந்தவராய் யாருக்கோ போன் போட்டார். அறையில் நிலவிய நிசப்தத்தில், மௌனத்தில் எதிர்முனையில் பேசிக் கொண்டிருப்பவரின் குரல் தெளிவாகக் கேட்டது.

'சொல்லுங்க ராகவன்'

'.....'

'கொஞ்சம் சீக்கிரம் புக்க டிசைன் பண்ணி கொடுங்க, வாற ஞாயிறு நம்ம புக்க ரிலீஸ் பண்ணிரலாம், சீப் ஹெஸ்ட் ரெடி. எல்லா ஏற்பாடும் செஞ்சாச்சு. நீங்க தான் சிறப்புரை கொடுக்கணும் தயாரா இருங்க ராகவன்'

'.....'

'ஓ ரியலி சாரி ராகவன். இது மாசக்கடைசி, அடுத்த மாசம் நாலாந்தேதி பணம் தாரனே, தப்பா எடுத்துக்காதீங்க ப்ளீஸ்'

அடுத்தநொடி எண்ணெய் மக்குப் பிடித்த தலைகளும், வியர்வை பிடித்த முதுகுகளும், சாய்ந்து சாய்ந்து அழுக்குப் பிடித்திருந்த அந்த வெற்றுச் சுவற்றில் மோதி சுக்குநூறாக சிதறியது அவர் கையிலிருந்த கைபேசி. அடுத்தநொடி ராகவனும் அறையில் இல்லை. 

பின்குறிப்பு : ஒருவேளை இக்கதை சம்மந்தபட்ட நபரை புண்படுத்தியிருக்கும் என்றால், ஆம் இது எதிர்வினையே.

படங்கள் : நன்றி இணையம்

20 comments:

  1. என்னால் உணரமுடிகிறதே தவிர , அதை விளக்கமுடியவில்லை :-(

    உங்களின் சிறுகதைகளிலே , பெஸ்ட் இதுவாய்த்தான் இருக்கும் !

    ReplyDelete
  2. மிகக் கச்சிதமாக அமைந்த சிறு(நிஜ)க் கதை. குறை சொல்ல எதுவும் இல்லாதபடி உன் எழுத்து நடை மெருகேறி வருவதைக் கண்டு மிக மகிழ்கிறேன். ‘ரகுகுலம் கண்டது ஒரு ராமன், பின்பு யதுகுலம் கண்டது பலராமன்’ அப்படின்னு கவிஞர் எழுதின மாதிரி நீ பார்த்தது ஒரு ராகவனையும் அவரோட வேதனையையும். நான் பல ராகவன்களைக் கண்டிருக்கிறேன். ‘மதி’கள் நிறைந்த உலகமாயிற்றே இது... வேறென்ன நிகழ்ந்திட முடியும்..?

    ReplyDelete
  3. சீனு...
    மேலே உண்மைய தழுவிய கற்பனைக் கதை என்ற வரி, கதையின் ஒவ்வொரு வரியும் வாசிக்கும் போது ஏனோ என் நினைவில் வந்து வந்து போனது....
    ஏனெனில் அந்த வரியே இக்கதைக்கு உயிரூட்டுகிறது என நினைக்கிறேன்.....

    நெகிழ்ச்சியான சிறுகதை...

    ReplyDelete
  4. கதையல்ல.... இது நிஜம் !

    ReplyDelete
  5. வாழ்வியல் யதார்த்தத்தைக் கண் முன்னே கொண்டு வந்துவிட்டீர்கள்

    ReplyDelete
  6. :( மதிகெட்ட மதி மதிக்கப்படமாட்டாள்... இது நிஜம்..... படித்தவன் பாவமும் சூதும் செய்தால் போவான்.. போவான் ஐயோ எனப்போவான்... என. சாபமிட்டுள்ளான் பாரதி... என் பாரதி பொய்ப்பதில்லை..

    ReplyDelete
  7. சீனு நீளம் அதிகம் இருப்பதால் உங்கள் பதிவுகளை எப்போதும் நான் காலை நேரங்களில் படிப்பதில்லை. ஆனால் எழுத்தாளர் என்றவுடன் ஒரு ஈர்ப்பு வந்து உள்ளே வந்த என்னால் கடைசி எழுத்து வரை படிக்காமல் நிறுத்த முடியவில்லை.

    "கதை" ஏற்கனவே தெரிந்தது.. ஆயினும் அதற்கு மீண்டும் உயிரூட்டி நிஜத்தின் நிழலாய் உலவ விட உம் எழுத்துக்களால் சாத்தியப் பட்டிருக்கிறது. தேர்ந்த எழுத்து நடை. பொறுக்கி எடுத்த சொற்கள் கொண்டு உருவாக்கப்பட்ட வாக்கியங்கள் என "எழுத்தாளர்" சீனு மிளிர்கிறார்.

    கதையில் வரும் "மதி" என்ற எழுத்தாளருக்கு இந்தப் பண்பாடு கூட இல்லையே என்று நினைக்கையில் அவருடன் நட்பு கொண்ட நண்பர்கள் வெட்கித் தலைகுனிய வேண்டிய நாள் இன்று. அவர் "ராகவனின்" நம்பிக்கையை மட்டுமல்ல எழுதும் தகுதியையே இழந்து விட்டதாக தான் நான் கருதுகிறேன்.

    ReplyDelete
  8. புகழின் உச்சியில் இருக்கும் அந்தப்பெண் தன்னைப் பாராட்ட வருபவருக்காகக் காத்திருக்கிறார். அதே நேரம், அந்தப் பெண்ணிடமிருந்து ஏழை எழுத்தாளர் ஒருவர் தான் செய்து கொடுத்த பணிக்காக - அடுத்தவேளை அடுப்பு எரிப்பதற்காக - காத்திருக்கிறார். கொடுமை! அவரென்ன பிச்சையா கேட்கிறார்? தான் செய்த பணிக்கான பணத்தைத் தானே கேட்கிறார்.

    கதையில் வரும் "மதி" இந்தப் பதிவைப் படிப்பாரேயானால் கண்டிப்பாக எழுத்தாளர் ராகவனிடம் மன்னிப்பு கோருவார் என்ற நம்பிக்கை இருக்கிறது...

    ReplyDelete
    Replies
    1. //மன்னிப்பு கோருவார் என்ற நம்பிக்கை இருக்கிறது//
      ராகவனுக்கு தேவை பணம் அல்லது கூலி.மரியாதையோ மன்ன்னிப்பு கோரலோ அல்ல

      Delete
  9. இதில் என்ன கொடுமை என்னவென்றால் அந்த முகநூல் பிரபலம் வரும் வரை எண்பது வயது முதியவரையும் காத்திருக்கச்செய்ததுதான்... அவருடைய உடல்நிலையையும் "மதி" மதித்திருக்கலாம்.

    ReplyDelete
  10. வலி மிகுந்த நிகழ்வை தங்கள் எழுத்து நடையில் படிப்பவர் மனம் வலிக்குமாறு தந்துள்ளீர்கள் சீனு.

    ReplyDelete
  11. எனக்கென்னவோ கதை என்றே இதைப் படிக்க முடியவில்லை..ஒரு நிஜமான எழுத்தாளர் ராகவனுடன் கூடப் பயணித்து அவர் வலி உணர்ந்தார் போல் இருந்தது உங்களின் வரிகளில் வந்திருக்கும் நிஜம்....

    ReplyDelete
  12. பாவம் எழுத்தாளர்.

    ReplyDelete
  13. // சம்மந்தபட்ட நபரை புண்படுத்தியிருக்கும் என்றால்//
    வெளியில் சொல்ல வெட்கப்படுவார் என்று நினைத்திருந்தோமே இப்படி செய்து விட்டாரே என்று சிறிது சலனம் ஏற்பட்டிருக்கலாம்.மற்றபடி யாராவது விசாரித்தால் அதற்கான பதிலும் மதியிடம் ஆயத்தமாகவே இருக்கும்.

    ReplyDelete
  14. சீரிய நடையில் எழுதப்பட்டுள்ள அருமையான கதை. சீனு இப்பல்லாம் நீங்க ரொம்ப சீரியசான பதிவா எழுதித் தள்ளுறீங்க

    ReplyDelete
  15. நல்ல எழுத்து நடையழகு.

    ReplyDelete
  16. நல்ல “கதை”

    இந்த மாதிரி வேலை வாங்கிக் கொண்டு பணம் தராமல் இழுத்தடிப்பது தொடர்ந்து நடந்து கொண்டே இருக்கிறது.....

    சில பெரிய நிறுவனங்கள் போல முன்பணம் வாங்கிக் கொண்டு தான் வேலை செய்ய வேண்டும் போல....

    ReplyDelete
  17. வலி நிறைந்த உண்மை ... பணம் - உழைப்பை உறுஞ்சி ஊதியத்தை கொடுக்கமுடியாதவர்களுக்கு புத்தக வெளியீடு ஒரு கேடா ? மதிக்க தெரியாதவர்களுக்கு , அந்த கொடுமையே திரும்ப அவர்களுக்கே கிடைக்கும் வேளை வெகு தூரம் இல்லை .

    ReplyDelete