
கவிதை பாடும் கவிஞர் ஓருவர் தன் அழகான வசன நடையால் சாமியார் ஒருவருக்குள் காதலைப் புகுத்தி எதார்த்தமான சூழ்நிலைகளைக் கொண்டு கதை சொல்ல ஆரம்பிக்கிறார், அந்தக் காதலுக்கு அவர் கொடுத்த தலைப்பு காவி நிறத்தில் ஒரு காதல். அந்தக் கவிஞரின் பெயரோ கவிபேரரசு வைரமுத்து. கவி பேரரசு வைரமுத்து அவர்கள் பத்துவருடங்களுக்கு முன்பு எழுதிய இப்புத்தகத்தினைப் படிக்கும் வாய்ப்பு தற்போது தான் கிடைக்கப் பெற்றேன் அந்த அனுபவத்தை இங்கு பதிவாக எழுதுகிறேன்.
நான் படிக்காத சுஜாதா புத்தகங்களையும் படித்த பிற எழுத்தாளர்கள் புத்தகங்களையும் விரல் விட்டு எண்ணிவிடலாம். ஒவ்வொருமுறையும் சுஜாதா அவர்களின் புத்தகத்தைப் படித்துவிட்டு புத்தகவிமர்சனம் எழுத வேண்டும் என்று நினைப்பேன் ஆனால் நினைப்பதோடு நின்றுவிடுவேன் காராணம் அப்போது என்னிடம் அப்போது வலைபூ இல்லை. என் முதல் புத்தக விமர்சனத்தை இந்தப் புத்தகத்திலிருந்து தொடங்குகிறேன்.

ஒரு சாமியார் தான் கதாநாயகன். காதலியைத் தேடி காட்டிற்குள் இருந்து நாட்டிற்குள் வருகிறான். தொலைந்து போன காதலியைத் தேடிச் செல்லும் இடங்களில் எல்லாம் காதலி வாழ்ந்ததற்கான தடங்களும் தடயங்களும் மட்டுமே கிடைகின்றதே தவிர காதலி கிடைக்கவே இல்லை. இறுதியில் காதலியை சென்று சேர்ந்தாரா. பல வருடங்களுக்குப் பின் சந்திக்கும் இருவரின் மன நிலையும் எப்படி இருந்தது என்பன போன்ற பல விசயங்களை சலிப்பு தட்டாமல் சொல்லிச் செல்கிறார்.

தவறான விசாரணையால் போலீசாரிடம் சிக்கி கொள்ளும் சாமியார்
"காட்டுக்குள் வாழ்ந்தேன், மிருகங்களிடம் எனக்குப் பாதுகாப்பு இருந்த்தது. நாட்டுக்குள் வந்தேன் மனிதர்களிடம் தான் எனக்குப் பாதுகாப்பில்லை" என்று புலம்பும் வரிகளில் இருந்து வைரமுத்துவின் சிந்தனை ஓட்டத்தை அறிந்து கொள்ளலாம்.
தனக்காக தன் காதலியும் காத்துக் கொண்டிருக்கிறாள் என்று தெரியவரும் ஒவ்வொரு இடங்களிலும் காதலின் மேன்மை மிக மென்மையாக இருக்கும்.காதலியின் அக்கா கொடுத்த தகவல்களில் இருந்து தேடத் தொடங்கும் சாமியார் இடையில் பல சந்திபுகளுக்குப் பின் காவல்துறையில் டி.எஸ்.பி யாக பணிபுரியும் நண்பன் மூலம் அவள் 'கண்டதும் சுட' ப் பட வேண்டிய கொலைக் குற்றத்தில் இருக்கிறாள் என்பது வரை தெரிந்து அதிர்ந்து நொறுங்கும் வரை காதலின் ஒருபக்கமும், அதன் பின் நடக்கும் நிகழ்வின் மூலம் காதலின் மறுபக்கத்தையும் உணர்ச்சி பொங்கச் சொல்லிச் செல்கிறார்.

நெடுநாளைக்குப் பின் தன் காதலியைப் பார்த்த நொடியில் சாமியார் நினைக்கிறார்
"சுவடுகள் மாறவில்லை. கொஞ்சம் சதை போட்டிருக்கிறாள். கண்களில் மட்டும் அதே பௌர்ணமிகள்".
தீவிரவாதியாக இருக்கும் தன் காதலியைச் சந்திக்கச் செல்லும் முன், தன் வாழ்க்கைப் பற்றி முடிவு செய்ய வேண்டிய கடைசி நொடியில் இருக்கும் சாமியாரின் சிந்தனைகள் இதோ
" லௌகீகம் சிக்கல் தான்: உலகம் ரணம் தான்; உறவு சுகம் தான்
எந்த வாழ்க்கை முறை சரி? தள்ளி வாழ்வதா? தழுவி வாழ்வதா?
சாமியாரின் உள்ளக் கடலில் இரண்டு புயல்கள் மையம் கொண்டன. இரண்டையும் முட்டவிட்டு முட்டவிட்டு ஒரு முடிவுக்கு வந்தார். தள்ளி வாழும் வாழ்கையில் அமைதி இருக்கலாம், அது மயான அமைதி.
தழுவி வாழும் வாழ்கையில் சப்தம் இருக்கலாம். அது உயிருள்ள சப்தம்.
இந்த சந்தர்பத்தில் நக்ஸல்களிடம் பணயக் கைதிகளாக மாட்டிக் கொண்டுவிட்ட சாமியாரை தப்பிச் செல்லாமல் பாதுகாக்கும் பொறுப்பு அவர் காதலிக்கே வழங்கப் பட்டிருக்கும்.இங்கேசாமியாரின் மனநிலை
சாமியார் கண்கொட்டாமல் அவளையே பார்த்தார். இப்போது பதினெட்டு வருடத் தேடல் பத்தடி தூரத்தில்
அதே முகம்! என் மடியில் புதைந்த அதே முகம்! என் உள்ளங்கைகளில் ஏந்திய அதே முகம்! நான் முத்தமிட்ட முகம்! என் பதினெட்டு வருடக் கனவில் பவனி வந்த முகம். என் இருப்புக்கும் இறப்புக்குமான இடைப்பட்ட வாழ்க்கைக்கு ஆதாரமாய் இருக்கும் அதே முகம்! களத்தின் கனத்தாலும், வாழ்கையின் இனத்தாலும் கொஞ்சம் முற்றிப் போயிருந்தாலும் பழைய பசுமையின் சின்னங்கள் பறிபோய்விடாத அதே பழைய பால் முகம்.
இந்த நிலையில் தன் காதலியைச் சந்தித்த சாமியாரிடம் டி.எஸ்.பி நண்பனின் கிண்டலும் அதற்கு சாமியாரின் பதிலும்
" என்ன சாமியாரே சொர்கத்திற்கு வந்திருகீங்களா....நரகத்திற்கு வந்திருகீங்களா? " அந்த நேரத்திலும் டி எஸ் பி கிண்டலடித்தார்.
சந்தோசமோ துக்கமோ இல்லாத குரலில் சாமியார் சொன்னார்,
" நரகதிற்குள்ளே வந்து என் சொர்க்கத்தைப் பாத்திருக்கேன்"
இப்படிச் செல்லும் இந்தக் கதையின் முடிவில் நக்சல் காதலிக்கு மன்னிப்பு கிடைத்ததா இல்லை கூண்டோடு ஒழிக்கப் பட்டார்களா, பதினெட்டு வருடங்களாக தன் காதலனுக்காக தேக்கி வைத்திருந்த காதலை அவள் என்ன செய்தால் தொழுதாளா இல்லை துடைத்தேரிந்தளா? சாமியார் காதலியால் கொல்லப்பட் டாரா இல்லை கொள்ளப்பட்டரா, இனிமையாக ஆரம்பித்த காதல் பயணம் சுமை கடந்து சுகம் வரப் போகிறது என்ற எண்ணிய நேரத்தில் ரணமாக மாறியதை கவிஞர் எப்படி முடிவுரையாக மாற்றினார்,
என்பதை எல்லாம் அறிந்து கொள்ள
வெளியீடு
சூர்யா இலக்கியம்
#22 நான்காம் குறுக்குத் தெரு, டிரஸ்ட்புரம், சென்னை,
விற்பனையாளர்
திருமகள் நிலையம்
#55 வெங்கட்நாரயணா சாலை, தி,நகர், சென்னை.
#2324 2899
என்னும் முகவரிக்கு எழுதி கேட்டீர்கள் என்றால் புத்தகம் அனுப்புவார்கள் படித்து தெரிந்து கொள்ளுங்களேன்.
திடங்கொண்டு போராடு வலைப்பூ தலைப்பின் தாக்கம் கொண்டு கோவைக்கவி அவர்கள் எழுதிய கவிதை வரிகள். அவர்களுக்கு என் மனபூர்வமான நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
பதிவைப் பற்றிய உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து விட்டுச் செல்லுங்கள்,