7 Jul 2019

ஹார்ட்டுல தொழா


'ஹே யூ, ஹே யூ'

வண்டிக்கு பெட்ரோல் நிரப்புவதற்காக இறங்கியபோதுதான் உணர்ந்தேன், யாரோ என்னை அழைப்பதைப் போல. நல்ல பளபளப்பான, புத்தம் புதிய கருப்பு நிற ஜீப்பின் அருகில் நின்றுகொண்டிருந்த தாத்தா ஒருவர் என்னை அழைப்பது தெரிந்தது. பிரவுன் கலர் ஷார்ட்ஸ், வெள்ளை நிறை சட்டை, தலையில் கௌபாய் தொப்பி. பார்ப்பதற்கு வேட்டைகாரனைப் போல் நின்று கொண்டிருந்தார். வெள்ளை மீசையும், அடர் தாடியும் அவரது முதுமையைக் கொஞ்சம் வாளிப்பாகக் காட்டியது. அவரை நோக்கி என்ன என்றேன், "கொஞ்சம் இங்க வர முடியுமா" என்றார். அவர் நின்று கொண்டிருந்த தோரணை அப்படி. பரபரப்பான அந்த கேஸ் ஸ்டேஷனில் அத்தனை பேர் இருந்தும் என்னை அழைக்கக் காரணம் என்ன என்பது புரியாமல், அவரை நோக்கி நடந்தேன். 

"I need a favor", என்று ஆரம்பிக்கும் போதே உள்ளுக்குள் பொறிதட்டியது. அது என்னுடைய ராசியா இல்லை முகலட்சணமா தெரியவில்லை, கூட்டத்தில் ஆயிரம் பேர், ஏன் லட்சம் பேர் இருந்தாலும் "அண்ணே சாப்ட்டு நாலு நாள் ஆச்சு, ஊருக்குப் போக காசு இல்ல, பர்ச தொலைச்சிட்டேன்" ஆளுங்க மொத்தமும் என்னிடம்தான் வருவார்கள். கோவாவில் இருந்து சென்னை திரும்பும் போது மங்களூரில் ரயில் மாறுவதற்காக நின்று கொண்டிருந்த நேரத்தில், ஆவி, ரூபக் மற்றும் கௌதம் நின்று கொண்டிருக்க, அந்த நபர், அந்த மூன்று பேரையும் கடந்து என்னிடம் வந்து சட்டையைப் பிடிக்காத குறையாக காசு கொடு இல்லாட்டி கத்தில குத்திருவேன், ரயில் முன்னாடி பாஞ்சிருவேன் வரைக்கும் மிரட்டிவிட்டுச் சென்றார். கொடுமை என்னவென்றால் அவர் சரக்கடிக்க நான் காசு கொடுக்காத கோவத்தில் "தமிழனுக்கு தமிழன் உதவி செய்யாட்டா எப்படி" என்று கேட்டுவிட்டு தண்டவாளத்தில் துப்பினார். டேய் நான் பாட்டுக்கு சிவேன்னு தானடா போயிகிட்டு இருந்தேன். 

ச்ச ச்ச இந்த ஊர்ல அதும் அமெரிக்கால இப்படிலாம் இருக்காது என்று நினைத்துக்கொண்டே மேற்கொண்டு அவரோடு பேச ஆரம்பித்தேன். இல்லை அவர் என்னோடு பேச ஆரம்பித்தார். 

"தம்பி மே காட் பிளஸ் யூ" என்றவர் கண்களை சந்தேகத்தோடு நோக்கினேன். அமெரிக்காவின் பாதி நிலபுலங்களுக்கு சொந்தக்காரரைப் போல் இருந்தது அவர் தோரணை. அருகில் நின்று கொண்டிருந்த கம்பீரமான அவர் ஜீப், ஒரு நல்ல வேட்டைகாரனுக்கானது. அமெரிக்காவின் பல மாகாணங்களில் வேட்டையாட தடையில்லை என்பது கூடுதல் தகவல்.

"மூணு மைல் தள்ளி இருந்து வாறன். ப்ளேனோல தான் என் பேரக்குழந்தைங்க படிக்கிறாங்க. அவங்கள கூப்பிட வார அவசரத்தில பர்ஸ் எடுத்துட்டு வர மறந்துட்டேன். கிட்டவரும் போதுதான் பார்க்கிறேன் சுத்தமா கேஸ் இல்ல. வண்டிக்கு ரெண்டு கேலன் கேஸ் போட்டுக்கொடுத்தா புண்ணியமா போகும்" என்றார். எளிதில் மறுப்பு தெரிவிக்கத் தோன்றவில்லை. என்னுடைய பலவீனம் அது. இருந்தும் அவரையே சந்தேகமாகப் பார்த்தேன். அன்றைய தினத்திற்கு ரெண்டு கேலன் கேஸ் ஐந்து டாலர். என்ன சொல்லலாம் என யோசித்துகும் போதே மேலும் தொடர்ந்தார். 

"தம்பி எனக்கு ஹார்ட்ல ஒரு தொழ இருக்கு, இந்த வயசுக்கு மேல ஆப்பரேஷன் பண்ண பயமாவும் இருக்கு, நிறைய மாத்திரைகள் சாப்பிடுறேன், அதனால மறதி அதிகம் ஆகிருச்சு, நீ என்ன நம்பலைன்னா சொல்லு, உன்னோட அக்கவுண்டுக்கு நான் பணம் அனுப்பிவிடுறேன்" என்றார். அதே இந்திய வாசகங்கள். என்னுடைய தொடர்ந்த மௌனம் அவர் பேசுவதற்கு மேலும் நேரத்தைக் கொடுத்தது. "இங்க எத்தனையோ பேர் இருக்கும் போது நான் உன்கிட்ட வந்து உதவி கேட்கிறேன்னா அதுக்கு என்ன அர்த்தம், இப்போ கூட மதியம் சாப்பிட்ட மாத்திரை தல சுத்துது" என்றார். அதுதான் எனக்கும் புரியவில்லை. ஏன் எல்லாரும் என்கிட்ட வாறீங்க.  

"சரி ரெண்டு காலன் போட்டுகோங்க" என்றேன். நீயே போட்டு கொடுக்கிறியா என்றார். ஒருவகையில் அதுதான் சரி, எனக்கு பாதுகாப்பும் என்பதால், கார்டை தேய்த்துவிட்டு, பெட்ரோலை நிரப்ப ஆரம்பித்தேன், பணம் ஐந்து டாலரைக் கடக்கும் போது, இன்னும் ஒரு ரெண்டு கேலன் போட்டுகொடுத்தா ரொம்ப சந்தோசப்படுவேன் என்றார். அதுவரை அவர் மீது இருந்த சந்தேகம் வலுத்தது இங்கேதான். "நான் உனக்கு பணம் தருகிறேன்" என்பதை மீண்டும் மீண்டும் கூறிக்கொண்டே இருந்தார். ஒரு சிறு இடைவெளி கூட விடாமல் பேசிக்கொண்டே இருந்தார். 

"நீ இந்தியன் தானே", "நான் பிறந்து வளர்ந்தது எல்லாம் இங்க தான், ஆனா எங்க பூர்வீகம் ஈரான்", "நாங்களும் உங்கள மாதிரி ஆடு மாடுகள வேகவச்சி தான் சாப்பிடுவோம், அதுனால இந்திய உணவுகள் ரொம்பப் பிடிக்கும்" என்று தொடர்ந்து பேசிக்கொண்டே இருந்தார்.  

பத்து டாலரை நெருங்கும் போது "டேங்க் பில் பண்ணி தரமுடியுமா" என்றார், முகத்தில் அதுவரை இருந்த மொத்த புன்னகையையும் மறைத்து முறைத்தேன். "பரவால்ல பரவால்ல, நீ பண்ணினது மிகப்பெரிய உதவி, இதைவிட பெரிய உதவி யாரும் பண்ண மாட்டாங்க, காட் பிளஸ் யூ, காட் பிளஸ் யூ" என்றபடி வாகனத்தை எடுத்துவிட்டுக் கிளம்பிவிட்டார். ஐந்து டாலரே பெரிய விஷயம். பத்தெல்லாம் கொஞ்சம் ஓவர் இல்லையா? 

முன்பெல்லாம் யாருக்காவது உதவி செய்தால் மனம் அவ்வளவு மகிழ்ச்சியடையும். இப்போதெல்லாம் ஏமாற்றப்படுகிறோமோ என்கிற உணர்வு மேலோங்குகிறது. ஐந்து டாலரில் நிறுத்தி இருக்க வேண்டும், ஏன் பத்து டாலர் வரை கேஸ் நிரப்ப சம்மதித்தேன் என்றெல்லாம் ஒரே குழப்பம். 

அந்த கிழவரை வேறொரு தருணத்தில் வேறொரு கேஸ் ஸ்டேஷனில் சந்திப்பேனா? வேறொரு காரை எடுத்துக்கொண்டு வேறொரு நபரிடம் இதே கதைகளை கூறி கேஸ் நிரப்புவரா? அப்போது அவர் முன் சென்று நின்றால் எப்படி இருக்கும். அடுத்த சிலநாட்களுக்கு இதே யோசனையாக இருந்தேன்.  

வால்மார்ட் வாசலில் யாருக்கோ காத்திருக்கும் போது, சாண்டியிடம் நடந்த கதையைக் கூறும்போது, "யோவ் இதே மாதிரிதான் எனக்கும் நடந்தது, வயசான ஒருத்தர் தன்னோட குழந்தைக்கு மருந்து வாங்கனும்ன்னு காசு கேட்டாங்க, அத பார்த்தா உண்மையா கேக்குறமாதிரி இருந்தது, சரி வாங்க வால்மார்ட் பார்மசில நானே வாங்கித்தாறேன்னு கூட்டிடுப் போனேன், அப்படி ஒரு மருந்து அங்க இல்லைன்னு சொல்லிட்டான். அவங்களுக்கு ஒரு மாதிரி அழற மாதிரி ஆகிருச்சு. அங்க இருந்த எல்லாரும் கொஞ்சம் கொஞ்சமா காசு போட்டு அந்த லேடிக்கு வேற சில திங்க்ஸ் வாங்கிக் கொடுத்து அனுப்பிச்சோம் என்றார். சரி நீங்க எவ்ளோ கொடுத்தீங்க சொல்லுங்க என்றேன் "Nah அதெல்லாம் சொல்ல மாட்டேன்" என்றார். 

"ஒரு அம்பது நூறு டாலர்" என்றேன், "Nah" என்றார் சிரித்துக்கொண்டே. எப்படியும் எவ்வளவு கொடுத்திருப்பார் என்று தெரியும். 

அடுத்த கேள்வி என்னை நோக்கிக் கேட்டார், "சரி உண்மைய சொல்லுங்க, புல் டேங்க் பில் பண்ணிதான அனுப்ச்சிவிட்டீங்க".

1 comment:

  1. கிக்கிக்கீ :)) பாவம் சீனு இப்படியா ஏமாறுவீர் அப்படின்னு சொல்லமாட்டேன் .தம்பி நீ என்ர இனமப்பா . ஆனா என் பொண்ணு பொல்லாதது யாரோ பணம் கேட்டிருக்காங்க பசிக்குன்னு பஸ் ஸ்டாண்டில் . இரு சாப்பாடு வாங்கித்தரேனு மெக்டொனால்ட்ஸில் வாங்கி குடுத்திருக்கா .
    இங்கே லண்டன் பக்கம் 2 பவுண்ட்ஸுக்கு மேலே கேக்க மாட்டாங்க மோஸ்ட்லீ cider இல்லேன்னா பியர் குடிக்கத்தான் கேட்பாங்க .அமெரிக்க களவானிஸ் பெரியாளுங்க போலிருக்கே :) ஆனாலும் 10 டாலர் 3 மச்

    ReplyDelete