3 Jan 2016

பசங்க - 2 - யாருக்கான படம்?

ஒரு படம் எடுப்பது எவ்வளவு கஷ்டமோ அதைவிட கடினமான சவாலான காரியம் குழந்தைகளை வைத்துப் படம் எடுப்பது. மூன்றாவது முறையாக அதை சாத்தியபடுத்தி சாதித்துக் காட்டியிருக்கிறார் இயக்குநர் பாண்டிராஜ். முதல்முறை கிராமத்துக் குழந்தைகளையும், இரண்டாவது முறை சென்னை மாநகரத்து விளிம்புநிலைக் குழந்தைகளையும் திரையில் காட்டியவர் இம்முறை கொஞ்சம் உயர்ந்து வேறுபக்கம் திரும்பி ஹைகிளாஸ் குழந்தைகளைக் காட்டியிருக்கிறார். மேலும் மற்ற திரைப்படங்களில் (ஓரளவுக்கு) விபரம் தெரிந்த குழந்தைகளை வைத்து படம் இயக்கியவர் இம்முறை இப்போதுதான் விவரம் தெரிய ஆரம்பித்திருக்கும் குழந்தைகளை வைத்து படம் எடுத்திருக்கிறார். அதன்பின் ஒளிந்திருக்கும் சவால்களை தைரியமாகக் கடந்ததற்காகவே அதற்காகவே அவரைப் பாராட்டலாம். 


குழந்தையாக இருந்தபோது என்னுடைய சமகாலத்து 'ஹைகிளாஸ்' குழந்தைகளின் வளர்ப்பு மற்றும் அவர்களின் வாழ்வியல் எப்படி இருக்கும் எனத்தெரியாது. அப்படியிருக்க இந்தத் தலைமுறை குழந்தைகளின் உலகமும் வாழ்வியலும் ம்ம்ம்ம் சுத்தம். அதை பாண்டிராஜ் காட்சிப்படுத்தி இருப்பதற்காக இன்னொரு பூங்கொத்து. மேலும் குழந்தைகளின் உடல்மொழி, அவர்களின் தேவைகள், உணர்வுகள், எப்போது உடைந்து அழுவார்கள், எப்போது அடம்பிடித்து ஆர்ப்பாட்டம் செய்வார்கள், எப்போது கொஞ்சுவார்கள் எப்போ மிஞ்சுவார்கள் என ஒவ்வொரு விஷயத்திலும் மிக நுணுக்கமாக அவர் செய்திருக்கும் தேடல் அதன்பின் இருக்கும் உழைப்பு அற்புதம். 

சமீபத்தில் ஒரு படம் பார்த்தேன். 2015-ல் நான் பார்த்த கடைசி மொக்கைப் படம் என்றும் சொல்லலாம். இன்றைய மீடியாக்கள் டீ.ஆர்.பீக்காக என்னவெல்லாம் செய்வார்கள். அதிலும் பாக்சிங் போன்ற ஒரு ஸ்போர்ட்ஸ் கிடைத்தால் அதை வைத்து எப்படியெல்லாம் வியாபாரமாக்கப் பார்ப்பார்கள் என்பது தான் கதை. அல்லது கதையாக இருந்திருக்க வேண்டும். ஆனால் இயக்குநரோ அந்தக் கதைகளத்தை குத்திக்குதறி தொம்சம் செய்திருப்பார். கூடவே பார்வையாளர்களையும். 

சமுதாயத்திற்கு மெசேஜ் சொல்வது என்று முடிவு செய்துவிட்டால் கிடைத்த கேப்பில் எல்லாம் சிக்ஸர் அடிக்க வேண்டும். குறைந்தபட்சம் தனக்கு வரும் வாய்ப்புகளை வீணாக்காமலாவது இருக்க வேண்டும். அப்படி தன்னை நோக்கி வந்த வாய்ப்புகளை லாவகமாக பயன்படுத்தி இருக்கிறார் பாண்டிராஜ். கிடைத்த இடைவெளிகளில் எல்லாம் ஸ்கோர் செய்திருக்கிறார்.

படத்தின் முதல் slide-ஆகத் தோன்றும்

     குழந்தைகளின் சிறந்த
     வகுப்பறை
     தாயின் கருவறை

என்ற எழுத்துக்களின் மூலமாகவே இன்றைய தினத்தில் இந்தப் படத்தின் தேவையைக் கூறிவிட்டார். அதற்காக அடுத்தடுத்து வைக்கபட்டிருக்கும் காட்சிகள் அற்புதம். எந்நேரமும் தொலைக்காட்சி பார்த்துக் கொண்டிருக்கும் பெண்ணின் குழந்தை அதிகமாக சினிமா பஞ்ச் டயலாக் பேசுவதும், எப்போதும் சண்டையிடும் பெற்றோரின் குழந்தை எல்லோருடனும் மல்லுக்கு நிற்பதையும் புரிந்துகொள்ள தாயின் கருவறையினுள் அந்தக் குழந்தைகள் இருக்கும் போது நடைபெறும் சம்பவங்கள் போதுமானதாக இருக்கிறது. 'குழந்தைங்க எப்போதுமே கெட்டத பேசுறது இல்ல. கேட்டதைத் தான் பேசுறாங்க' என்பதுகூட அதன் நீட்சி தான். 

அவசர உலகில் குழந்தைகளுக்கும், பெற்றோருக்கும் இடையில் இருக்கும் தொடர்பு குறைந்துகொண்டே செல்கிறது. பெற்றோர்களின் கவனிப்பும் அரவணைப்பும் எவ்வளவு அவசியம் என்ற கேள்விக்கான பதில் அதன் முக்கியத்துவத்தை இழந்து கொண்டே வருகிறது. குழந்தைக்கு ஒரு பிரச்சனை என்றால் அது மன ரீதியான பிரச்சனையா அல்லது உடல் ரீதியான பிரச்சனையா என்பதைத் தெரிந்துகொள்ளக்கூட ஒரு மருத்துவரின் உதவியைத் தான் நாட வேண்டி இருக்கிறது என்பதை பல காட்சிகளில் தொடர்ந்து பதிவு செய்திருப்பது, எல்லாவற்றிற்கும் மருந்து மாத்திரை ஒன்றே தீர்வு என நம்பும் கூட்டத்திற்கு தேவையான ஒரு மெசேஜ் - பசங்க 2.  

சமுத்திரக்கனி வந்துசெல்லும் அந்த ஒரேயொரு காட்சியில் அரசுப் பள்ளியின் அவசியத்தையும், அரசு ஊழியர்கள் ஏன் தங்கள் குழந்தைகளை அரசுப் பள்ளிகளில் படிக்கவைக்க வேண்டும் என்பதன் காரணத்தையும் அழுத்தமாக கூறியிருப்பார். நிதர்சனம் என்னவென்றால் அரசுப் பள்ளி வாத்தியார் தன் குழந்தையை தனியார் பள்ளியில் சேர்க்கத் துடிப்பதுதான். 

சூர்யா, பெரிதாக ஸ்கோப் இல்லையென்றாலும், நல்லவேளை ஓவர் ஆக்டிங் செய்யவில்லை என்பதே பெரிய ஆறுதல். குழந்தைகளின் உலகைப் புரிந்துகொள்ள நாமும் குழந்தையாக மாற வேண்டியது எவ்வளவு அவசியம் என்பதை சூர்யா மூலம் காட்சிப்படுத்தி இருக்கிறார். படத்தில் வந்துசெல்லும் அத்தனை பேரின் நடிப்பும் அட்டகாசம். குறிப்பாக குழந்தைகளின் நடிப்பு. இசை, கேமரா உறுத்தவில்லை. வசனம் உறுத்துகிறது - அவ்வளவு ஷார்ப். 

குழந்தைகளின் முதல் குருவான தொடக்கக் கல்வி ஆசிரியர்களுக்கு கொடுக்கப்பட வேண்டிய உளவியல் ரீதியான பயிற்சி குறித்து இன்னும் தெளிவாகப் பேசியிருக்கலாம் என்பதைத் தவிர படத்தில் பெரிதாகக் குறை என்று எதுவுமில்லை.   

குழந்தைகளின் உலகம் ரகசியமானது. அவ்வளவு சீக்கிரமாக யாராலும் அதனுள் நுழைந்துவிட முடியாது புரிந்துகொள்ள முடியாது. அவரவர்களுடைய பெற்றோர்களைத் தவிர. அப்படியிருக்க பெற்றோருக்கும் குழந்தைகளுக்கும் இடையிலான பிணைப்பு எப்படி இருக்க வேண்டும் என்று பாண்டிராஜ் என்னும் இயக்குனர் படம் எடுத்து 'அட ஆமாப்பா, நாம இப்படி இல்லையே' என புரிய வைக்கவேண்டிய நிலையில் நீங்கள் இருக்கிறீர்கள் என்றால் நீங்களே முடிவு செய்துகொள்ளுங்கள் இப்படம் அவசியமானதா இல்லையா? பார்க்க வேண்டுமா கூடாதா என்று.   

7 comments:

  1. கிராமத்திலிருந்து நகரத்திற்கு குடிபெயர்ந்தவர்கள் அத்தி பூத்தாற்போல் கிராமத்துக்கு செல்வார்கள். அதே போல வலைப்பக்கம் எட்டிப்பார்க்க வந்திருக்கும் சீனுவுக்கு புத்தாண்டு வாழ்த்துக்கள்

    ReplyDelete
  2. நல்ல படம் பற்றிய அறிமுகத்திற்கும் விமர்சனத்திற்கும் பாராட்டுக்கள்.

    எனக்குள் எழும் கேள்வி என்னவென்றால் நாம் மாற்றம் எங்கு நிகழவேண்டும் என்பதை பேசுகிறோம் விவாதிக்கிறோம் ஆனால் மாற்றத்திற்காக நாம் எவ்வாறு தயார் ஆகிறோம் என்பதில் தொக்கி நிற்கும் கேள்வியை எதிர்கொள்பவர்கள் படைப்புகளை உருவாக்குபவர்கள் வெளிப்படுத்தும் நடைமுறை பதில் என்னவாக இருக்கும்?

    உதாரணத்திற்கு அரசுப்பள்ளியின் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் அந்த நடிகர் அவர் பிள்ளையை எங்கு படிக்க வைத்துக்கொண்டிருப்பார்? இதே கேள்வி இந்த இயக்குனருக்கும் பொருந்தும். ஏன் விமர்சனம் எழுதும் உங்களுக்கும் அதை வாசித்து கருத்துரைக்கும் எனக்கும் கூட பொருந்தக்கூடியது.:-)

    மேலும் புத்தக விற்பனையாளரும் பதிப்பாளருமான முகநூல் அன்பர் ஒருவர் தனியாரில் படிக்கும் தன்பிள்ளை பற்றிய தகவல் ஒன்றை பகிர்ந்த போது, அரசுப்பள்ளியில் ஏன் உங்கள் பிள்ளையை சேர்க்கவில்லை, வெறும் புரட்சிபேசும் புத்தகங்களை பதிப்பித்து என்ன பயனென்று கேட்டதற்கு அவரிடமிருந்து பதிலுமில்லை கருத்திற்கு விருப்பமும் இல்லை. ஆனால் பாராட்டி பேசினால் விரும்புகிறார்கள் நன்றி தெரிவிக்கிறார்கள்.

    இலக்கியவாதி என்றாலே கற்பனைவாதி என்ற பிம்பத்தில் இவர்கள் நடைமுறைக்குள் வராமல் வரலாறு படைக்கத்துடிக்கும் அரிய உயிரினமா, அப்படியென்றால் நாம் முதலில் நசுக்க வேண்டியது இந்த உயிரனங்களைத்தான். திரைப்படங்களை பிறகு பார்த்துக்கொள்ளலாம். :-) நன்றி.

    ReplyDelete
  3. உண்மை தான் அருமையான படம்.

    ReplyDelete
  4. தாரே சமீன் பர் ( thaare zameen par) அமீர்கான்
    நடித்த ஹிந்தி படத்தின் தழுவல்

    ReplyDelete
  5. படம் பார்க்க வேண்டும் நண்பரே
    நன்றி
    புத்தாண்டு வாழ்த்துக்கள்

    ReplyDelete
  6. நல்லதொரு விமர்சனம். ஊருக்கு வரும்போது பார்க்க நினைத்திருக்கும் படம்....

    ReplyDelete
  7. படம் பார்க்கத்தூண்டும் விமர்சனம்! நன்றி!

    ReplyDelete