6 Jan 2016

இன்லேண்ட் லெட்டர் - மீட்டெடுத்தலின் சுவாரசியங்கள்

அன்புள்ள வெற்றி வணக்கம்,

நலமா என்ற ஒற்றை வார்த்தைக்குப் பின் பொதிந்து கிடக்கும் அர்த்தம் எவ்வளவு ஆழமானது என்பதை யோசித்துப் பார்த்திருக்கிறீர்களா? சோர்ந்து போய் இனி ஆவதற்கு ஒன்றுமே இல்லை என தளர்வாகக் விழுந்து கிடக்கும் போது யாரோ ஒருவரிடம் இருந்து வரக்கூடிய அந்த நலமா என்ற ஒற்றை வார்த்தை தரக்கூடிய பலம் அதிகம். அதை உணர்ந்து பார்ப்பதற்கு ஒரேயொரு தோல்வியேனும் அவசியம் வெற்றி. இப்போ ஏன் இதை எழுதுகிறேன் என்று கேட்கிறீர்களா? சும்மா வெறுமனே நலமா என்று எழுதினால் அதில் ஏதேனும் கிக் இருக்கிறதா கூறுங்கள். இப்படியெல்லாம் ஜல்லியடித்துவிட்டு நிதானமாக மேட்டருக்கு வந்தால் 'எதோ சொல்ல வராருப்பா' என்று கொஞ்சமேனும் நிமிர்ந்து உட்காருவீர்கள். எல்லாமே ஒரு அரசியல் தானே! சரி விசயத்திற்கு வருகிறேன்.   

பொழுதுபோகாமல் மாய்ந்து மாய்ந்து கடிதம் எழுதிக் கொண்டிருந்த என்னையும் மதித்து எனக்கும் கடிதம் எழுத ஒரு ஆள் இருக்கிறார் என்று முன்னால் வந்து நின்றீர்கள் பாருங்கள். உங்கள் அன்புக்கு மிக்க நன்றி. நீங்கள் எழுதிய இரண்டு கடிதங்களையும் படித்தேன். உடனே பதில் எழுத முடியாமைக்கு மன்னிப்பு கேட்டால் உங்களுக்குப் பிடிக்காது என்று தெரியும். அதனால் என்னிடம் இருக்கும் பல மன்னிப்புகளில் ஒன்றை வீணாக்க விரும்பவில்லை. நீங்களும் விரும்ப மாட்டீர்கள் என்றே நம்புகிறேன். உங்களுடைய முதல் கடிதத்தில் பெங்களூரு டூ மகாரஷ்டிடம் பேருந்துப் பயணத்தையும், மற்றொரு கடிதத்தில் கர்நாடக, மகாராஷ்டிர எல்லையில் அமைந்திருக்கும் பாகல்கோட்டை என்ற கிராமத்தைப் பற்றியும் எழுதியிருந்தீர்கள். பாகல்கோட்டை கிராமம் பற்றிய வர்ணிப்பை அருமையானதொரு பயணப் பதிவாகப் பார்க்கிறேன். உங்களின் விழிகள் வழியாக அந்தக் கிராமத்தையும் அதே கிராமத்தில் நீங்கள் சைட் அடித்த பெண்ணையும் பார்த்த உணர்வு/திருப்தி. 

நீங்கள் எழுதிக் கொண்டிருக்கும்/எழுதிய சரித்திர நாவலான வானவல்லி தற்போது அச்சுக்கு சென்றுள்ளது எனக் கேள்விபட்டேன். வாழ்த்துக்கள். விரைவில் உங்கள் எழுத்துக்களை புத்தகமாகப் படிப்பதற்கு காத்திருக்கிறேன். ஒரு புத்தகம் எழுதுவதற்கெல்லாம் அசாத்திய திறமையும் பொறுமையும் உழைப்பும் தேவை. அதிலும் நீங்கள் நான்கு பாகங்கள் அடங்கிய சரித்திர நாவலை ஓவர் நைட்டில் முடித்துள்ளீர்கள். நிஜமாகவே பிரம்மிப்பாகவும், வியப்பாகவும் இருக்கிறது. அசாத்தியமான திறமை தான். மேரா ஒன் ஸ்டெப் பேக் ஹை. உங்களுடைய நனவோட்டம் முழுவதுமே சரித்திர நாவலில் வீழ்ந்ததாலோ என்னவோ தங்களுடைய உவமைகளிலும் எண்ண ஓட்டங்களிலும் சரித்திர சொற்களை அதிகமாகக் காணமுடிகிறது. பாதி புரிகிறது. மீதியைப் புரிந்துகொள்ள முடிகிறது - எனக்குப் புரியவில்லை என! 

நான் ஒரு ஊர் சுற்றி, நாடோடி என்பதில் எப்போதுமே எனக்குப் பெருமை உண்டு. என்னுடைய கருத்துக்களையேஉங்களுடைய என்னைப் பற்றிய கருத்துக்களாக நீங்கள் குறிப்பிட்டு இருந்தீர்கள். மகிழ்ச்சி. ஆனால் நீங்கள் மேற்கொள்ளும் பயணங்களைப் பார்க்கும் போது என்னுடைய ஊர்சுற்றல் வெகு சாதாரணமே. உண்மையைச் சொல்வதென்றால் தமிழ்நாட்டு எல்லையைத் தாண்டியது கோவா செல்வதற்காக மட்டும்தான். ஆனால் நீங்களோ அப்படியில்லை பயணங்களிலேயே வாழ்கிறீர்கள். என் மேல் கொண்ட பெருமையை உங்கள் பயணங்களின் மீதான பொறாமையாக மாற்றுகிறேன் வெற்றி. நிஜாமாகவே பொறாமையாக இருக்கிறது. அதிலும் பெங்களூருவில் இருந்து மகராஷ்டிரம் வரைக்கும் பேருந்துப் பயணமென்றால் என்னுடைய பொறாமை கொழுந்துவிட்டு எரிகிறது. உங்களுடைய ஒரு சிறுகதையில் பெங்களூருவில் இருந்து தமிழ்நாடு வரைக்கும் லாரியில் செய்த பயணத்தைப் பற்றிக் கூறியிருந்தீர்கள். அவையெல்லாம் வெறும் பயணமில்லை வெற்றி. அனுபவம். ஓட்டுனர்களிடம் இல்லாத கதை இன்றைக்கு வேறு யாரிடமும் இல்லை. அதிலும் லாரி ஓட்டுனர்களை எல்லாம் சுவாரசியம் நிறைந்த ஊர்வனவாகப் பார்கிறேன். அவர்களை மூலம் கிடக்கும் அனுபவங்களை வேறு எவர் மூலமும் பெற்றுவிட முடியாது. தென்காசியில் இருந்து சென்னைக்கு வீடு மாற்றி வரும்போது நீண்ட தூரப்பயணமாக லாரியில் சென்னை வரை வந்தேன். அதுவொரு மறக்க முடியாத பயணம். அதை எழுதுவதற்கு இது இடம் இல்லை என்பதால் இங்கே எழுதவில்லை. அந்த அனுபத்தை விசாரித்து வேறொரு கடிதம் எழுதுங்கள் வெற்றி. நிச்சயம் பகிர்கிறேன். உறுதியாக நீங்கள் எழுதுவீர்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது. 

பேருந்துப் பயணத்தில் ஒரு காதல் ஜோடி செய்த சேட்டைகளையும் அதன் மூலம் உங்களுக்கு ஏற்பட்ட அங்கலாய்புகளையும் பற்றி எழுதி இருந்தீர்கள். அங்கலாய்ப்பு என்ற வார்த்தை சரியா அல்லது பொறாமை என்று எடுத்துக்கொள்ளட்டுமா? அப்படியொரு அனுபவம் எனக்கு ஏற்பட்டுள்ளதா என்றும் கேட்டிருந்தீர்கள். சென்னை போன்ற பெருநகரத்தில் வசிக்கும் ஒவ்வொரு பேச்சிலர்ஸ்க்கும் பெருநரகம் என்று ஒன்று இருக்கிறது அவை தான் இது போன்ற காட்சிகள். அவற்றைப் பார்த்து ஒரு பெருமூச்சுவிட்டு கடந்து விட வேண்டியது தான். இன்றைக்கு காதலர்கள் இல்லாத இடமே இல்லை என்றாகிவிட்ட நிலையில் நகரம் முழுக்கவே இது போல் ஆயிரமாயிரம் சம்பவங்கள் நிகழும். இவற்றை எல்லாம் வரலாற்றில் எழுதினால் வரலாறு மொத்தமும் பெருமூச்சாகவே நிறைந்து கிடக்கும். நம்முடைய வரலாறு கொஞ்சமேனும் கௌரதையாக இருக்க வேண்டும் என்றால் இது போன்ற கட்டங்களை எல்லாம் கடந்தால் மட்டுமே முடியும் என்பதை நான் சொல்லி நீங்கள் தெரி(ளி)ய வேண்டிய அவசியம் இல்லை வெற்றி. அதனால் அவற்றை ஒரு துர்கனவாகவோ அல்லது வேறு எதாகவோ கடந்து விடுங்கள். 

சரி முக்கியமான விசயத்திற்கு வருகிறேன். உங்கள் கடித்ததில் நான் பெரிதும் வியந்த பகுதி ஒன்று இருக்கிறது. அவை உங்கள் அப்பா உங்களுக்கு எழுதிய கடிதங்கள். உலக உருண்டையை மாய எண்களால் இணைத்துவிட்ட இன்றை சூழ்நிலையில் நீங்கள் எழுதியிருந்த கடிதம் சார்ந்த நினைவுகள் என்னுள் பதுக்கி வைக்கபட்டிருந்த பல நினைவுகளை மீட்டெடுத்துவிட்டது. 

என்னுடைய அப்பாவும் சென்னையில் தான் இருந்தார். லேண்ட் லைனே பரவலாகி இருக்காத தொண்ணூருகளின் ஆரம்பகாலம் அது. ஒவ்வொரு மாதத்திலும் அப்பாவிடம் இருந்து ஒருமுறையோ அல்லது இரண்டு முறையோ கடிதம் வரும். இரண்டு முறைக்கு மேல் கடிதம் வந்து பார்த்ததில்லை. அப்பாவிடம் இருந்து வந்த பல கடிந்தங்க்களை அம்மா சேமித்து வைத்திருந்தார். இப்போ அவை இல்லை. காலம் அழித்திருக்க வேண்டும் இல்லை அம்மா! அந்தக் கடிதங்களில் எழுதப்பட்டிருக்கும் அப்பா அம்மாவின் கையெழுத்து நன்றாக நினைவில் இருக்கிறது. அப்பாவின் கையெழுத்து ஒழுங்கற்று கோழி கிறுக்கியது போல் இருக்கும். அவசர அவசரமாக எழுதப்பட்ட கடிதங்கள் அவை. அவசரமில்லாமல் எழுதியிருந்தாலும் அவர் கையெழுத்து அப்படித்தான் இருக்கும் என்பது வேறு விஷயம். அன்புள்ள என்று அம்மாவின் பெயரைப் போட்டு ஆரம்பித்த கடிதங்கள் அவை. அந்தக் கடிதம் எனக்கு முக்கியமே இல்லை. அந்தக் கடிதத்தை என்னைப் பற்றி எங்கே என்ன கேட்டிருக்கிறார் என்பதைத்தான் முதலில் தேடுவேன். கார்த்திக் சீனு நலம். அவர்களை கேட்டதாகக் கூறவும் என்று எழுதி இருப்பார். அதைப் படித்தவுடன் வரும் மகிழ்ச்சியை அவ்வளவு எளிதில் எல்லாம் பகிர்ந்துகொள்ள முடியாது. அது ஒரு மானசீகமான தந்தை மகன் உறவு. 


அம்மாவின் கையெழுத்து அப்படியே எதிர்மறை. கொஞ்சம் அழகாக நிதானமாக தெளிவாக எழுதப்பட்ட ஒன்று. நீட்ட நீட்டமான எழுத்துக்கள். அம்மா போல் எழுத முயன்று அப்பா போல் மாறிய கையெழுத்து என்னுடையது. தன்னுடைய சுகதுக்கங்களை எல்லாம் எழுதி முடித்த பின் நானும் அண்ணனும் எழுதுவதற்கென்று அம்மா கொஞ்சம் இடம் ஒதுக்கியிருப்பார். என்னுடைய முதல் கடிதத்தை பென்சிலில் தான் எழுதினேன். சமயங்களில் கடிதம் முழுவதையும் அம்மாவே எழுதி நான் எழுத இடம் வைக்காமல் விட்டிருந்தால் எனக்குக் கெட்ட கோவம் வரும். அடுத்த நிமிடமே அம்மாவிடம் காசு வாங்கி போன்னையாக் கடையில் ஒரு இன்லேன்ட் (வெகுகாலமாக inlandஐ, இங்கிலாந்து என்று தான் நினைத்திருந்தேன். வெள்ளையன் ஆட்சி பெயர்க் காரணம்) லெட்டர் வாங்கி, அந்த லெட்டர் முழுவதும் என்ன என்னவோ கிறுக்கி பின் எழுதிய வரையிலும் எழுதி அவருக்கு அனுப்பி விடுவேன். என்னுடைய கடிதம் கிடைத்தது என அம்மாவுக்கு எழுதும் கடிதத்தில் குறிப்பிட்டு இருப்பார். எவ்வளவு சந்தோசமான நினைவுகள் அவை. 

தெருவில் போஸ்ட்மேனைப் பார்த்தாலே 'அப்பா இன்னிக்கு எதுவும் அனுப்பலடே' என்று கூறும் அளவுக்கு எனக்கு போஸ்ட்மேனுக்கும் அவ்வளவு பரிட்சியம். அப்பா அம்மாவுக்கு எழுதும் கடிதங்கள் அத்தனையும் மிகவும் அந்தரங்கமானவை அவற்றை நானோ அண்ணாவோ தவிர வேறு யாரும் படிக்க அனுமதிக்கமாட்டார். அப்போ எல்லாம் அம்மா பீடி ஓட்டுவார். ஒட்டுமொத்த காம்பவுண்டும் எங்கள் வீட்டில் அமர்ந்துதான் பீடி ஓட்டும். வீடு முழுவதும் பீடி வாசம் பரவியிருக்கும். அப்படி அனைவரும் அமர்ந்து ஒட்டிக்கொண்டிருக்கும் போது கடிதம் வந்து நான் வாசித்துத் தொலைத்தால் அவ்வளவு தான், அன்றைக்கு அம்மா ருத்ரதாண்டவம் ஆடியிருப்பார். ஏன் என்று காரணம் புரியும் வயது வந்த போது கடிதம் என்னும் சகாப்தத்தையே நாம் கடந்து இருந்தோம்.  

பல அனுபவங்கள் யாருக்கும் தெரியாமல், யாரிடமும் சொல்ல முடியாமல் அல்லது நேரமில்லாமல் அமிழ்ந்து கிடக்கின்றன. அவற்றை எழுதும்போது கிடைக்கும் ஆறுதல் தொலைபேசி வழியாக பேசும்போது கிடைப்பதில்லை. அவசரமான உலகில் அவசர அவசரமாக வெளிப்படும் சொற்களைக் காட்டிலும் நிதானமாக வரும் எழுத்துகளுக்கு வலிமை அதிகம். அதனால் தானோ என்னவோ அந்த வலிமையான ஆயுதத்தை இவ்வளவு எளிதாக அழித்துவிட்டோம். ஆனாலும் அந்த ஆயுதம் கொடுத்த நினைவுகளை அவ்வளவு எளிதாக மறந்துவிட முடியவில்லை. விபரம் தெரிவதற்கு முன்னிருந்தே நெஞ்சில் பதிந்து போன நினைவுகள் அவை. மீட்டெடுத்த உங்களுக்கு மீண்டும் ஒருமுறை நன்றி

என்றும் அன்புடன்
சீனு   

6 comments:

  1. வணக்கம் தோழர்,

    விரைவில் உங்களுக்கு பதில் மடல் வரைகின்றேன்...

    நன்றி...
    வணக்கம்.

    ReplyDelete
  2. இலக்கிய நடை. நான் கூட இங்க்லாந்து கவர்னுதான் நெனச்சிக்கிட்டிருந்தேன்.

    கௌரதையை கெள-ரதை னு வாசித்துவிட்டேன் சீனு எதும் தவறாக நினைக்க வேண்டாம். :-)

    ReplyDelete
  3. கடித இலக்கியத்தை வாழவைக்கும் இரண்டு நண்பர்களையும் பாராட்டுகின்றேன்! தொடருங்கள்!

    ReplyDelete
  4. உங்கள் மூலம் கடிதம் இன்னும் தொடர்கிறது. பாராட்டுகள் சீனு.....

    ReplyDelete
  5. மலரும் கடித நினைவலைகள்
    மணம் பரப்புகின்றன..

    ReplyDelete
  6. அஞ்சலட்டையில் எழுதும் வழக்கத்தை இன்னும் நான் மேற்கொண்டு வருகிறேன்.

    ReplyDelete