28 Jun 2015

பெட்ரோல் பங்க் கொள்ளையர்கள்...

மீனம்பாக்கத்தைக் கடக்கும்போதுதான் வண்டி ரிசர்வில் ஓடிக் கொண்டிருப்பது ஞாபகத்திற்கு வர, ஜி.எஸ்.டி சாலையில் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்த அந்த பங்கினுள் நுழைந்தேன். இரவுப் பயணத்திற்காக கார்கள் தங்கள் வயிற்றை நிரப்பிக் கொண்டிருந்தன. பைக்கிற்கான வரிசை காலியாகக் கிடந்தது.  

'இருநூறு ரூபா' என்றேன்

'டூ ஹன்ட்ரடா' என்றார். 'ஆமா' என்றபடி பங்கை நோட்டமிட ஆரம்பித்தேன். 

'ஜீரோ பாத்துக்கோ சார்' என்றார். அவர் சொல்லாவிட்டாலும் பார்த்தே ஆக வேண்டும் என்பது எனக்கான முன் அனுபவம். 

வண்டி வாங்கிய புதிதில் ஐநூறு ரூபாய்க்கு பெட்ரோல் நிரப்பச் சொல்லிவிட்டு வேறு எங்கோ வேடிக்கை பார்க்க, அதற்குத் தண்டனையாக கிட்டத்தட்ட முன்னூறு ரூபாய் மதிப்புள்ள நாமத்தைச் சாற்றி அனுப்பினார்கள். எதிர்த்து கேட்காமல் இல்லை. இருந்தாலும் போனது போனதுதானே. இந்த விசயத்தில் இந்தியன் ஆயில் கொஞ்சம் பரவாயில்லை; பாரத் பெட்ரோல் பங்க்தான் படு மோசம். காசுக்கு பெட்ரோல் போடுகிறார்களா இல்லை காசடிப்பதற்காக  பெட்ரோல் போடுகிறார்களா என்றே தெரியவில்லை. 


அண்ணன் வண்டி வாங்கிய புதிதிலும் இப்படித்தான். அவனிடம், 'ன்னா பேக் வீல்ல ஏர் கம்மியா இருக்குன்னா' என்று நூல்விட்டு இருநூறு ரூபாய் அடித்தார்கள். அடித்தவர்கள் இரண்டு பேருமே சிறுவர்கள் என்பதுதான் பெருமைக்குரிய விஷயம். இப்போதெல்லாம் வண்டியின் பின் சக்கரம் பஞ்சர் ஆனால் கூட அவனாக இறங்கிப் பார்க்காமல் உறுதி செய்வதில்லை. 

நம்மிடம் பேச்சு கொடுத்துக் கொண்டே பெட்ரோல் அடிப்பது ஒரு கலை. அவர்களுக்குத் தேவை நம் கவனத்தைச் சிதைக்க வேண்டும். அப்படியே கொஞ்சம் காசும் அடிக்க வேண்டும். பெட்ரோல் போடச் செல்லும்போது இரண்டு நபராக சென்றால் பிரச்சனை இல்லை. என்னதான் பேச்சு கொடுத்தாலும் யாராவது ஒருவர் உசாராகவே இருப்போம். இருந்தாக வேண்டும். இன்றைக்கு தனியாகவே வந்திருக்கிறேன். பெட்ரோல் வண்டியினுள் இறங்கத் தொடங்கிய நேரத்தில் சைத்தான் தன்னுடைய வேலையைக் காட்டத் தொடங்கியது. எங்கிருந்து பேச்சை ஆரம்பிக்க வேண்டும் என்பது அவர்களுக்குத் தெரியும். அதை எப்படி சமாளிக்க வேண்டும் என்பது எனக்குத் தெரியும். 

'டேங்க்க சுத்தி இவ்ளோ மண்ணு இருக்கக் கூடாது தம்பி, மொதல்ல அதைத் தொடைங்க' என்றபடி தன்னுடைய சாட்டையை வீசினார். 'ரைட்டு தலைவரு ராங் ரூட்ல லிப்ட் கேக்ராறு' என மனம் எச்சரிக்க, இருந்தாலும் நடப்பதை வேடிக்கைப் பார்க்கும் குரூர ஆசையில் மனம் அடுத்த நொடியை எதிர்பார்த்துக் கொண்டிருந்தது.  

இப்போதெல்லாம் இவர்களிடம் ஏமாறுவது போல் ஏமாந்து அவர்களை 'கிக்கிக்கிக்கிக்கி' என வழியச் செய்வதில் அப்படி ஒரு ஆர்வம். அப்படியாவது 'அசிங்கபட்டுவிட்டோமே' என்ற எண்ணத்தில் தங்கள் தவறை உணரமாட்டார்களா என்றொரு நப்பாசைதான். 

'நான் தொடச்சிகிறேனா, என்றபடி டேங்க் கவரில் இருந்த துணியை எடுப்பதற்காக கையை உள்ளே விட சட்டென மீட்டரை மறைத்துக் கொண்டு மேட்டரை ஆரம்பித்தார். லேசாக எட்டிப்பார்த்தும் கூட மீட்டரில் ஓடும் எண் தெரியவில்லை. என் கணிப்பில் சிறிதும் பிசிறில்லை. எதிர்பார்த்தது, எதிர்பார்த்தது போலவே நடக்கத் தொடங்கியது. சரி நடப்பது நடக்கட்டும் என விட்டுவிட்டேன். செயல் மொத்தமும் பெட்ரோல் மூடியை சுற்றி இருக்கும் அழுக்கைத் தொடைப்பதில் இருந்தாலும் கவனம் மொத்தமும் உள்ளே சென்று கொண்டிருக்கும் பெட்ரோலின் மீதே இருந்தது. 

எல்லாம் முடிந்து விட்டதாக அவர் பைப்பை எடுக்க, கொஞ்சம் பிரயத்தனப்பட்டு எட்டிபார்த்ததில் நூற்றி நாற்பது ரூபாய், இரண்டு லிட்டர் என மீட்டர் பல் இளித்தது. 'இன்னோவ்' என்றேன். 'இன்னாப்பா' என்றா. 'எவ்ளோக்கு போட சொன்னேன்' என்றேன். மீட்டரில் இரண்டு லிட்டர் காண்பிப்பதை பார்த்த அவர் கேவலாமாக சிரித்துவிட்டு 'இரநூறா, ரெண்டு லிட்டர்ன்னு நினைச்சேன்' என்றபடி மீட்டரை மறைத்துக் கொண்டே மீண்டும் பம்பை உள்ளே சொருகினார். இப்போது சைத்தான் மீண்டும் சாட்டையை கையிலெடுக்க பம்பை உள்ளே விட்ட வேகத்தில் வெளியே எடுத்து, வேகமாக பெட்ரோல்-பம்ப் மெஷினில் பைப்பை வைக்கும் பகுதியில் இருக்கும் பட்டனை அழுத்த அதில் ரூபாய் நான்கு என்று காட்டிய எண் மறைந்து ஜீரோவைக் காட்டியது. இப்போதும் நான் விடவில்லை. 'எவ்ளோக்கு போட்டீங்க' என்றேன். போட்டாச்சுப்பா என்றார். நல்ல உயரம். கருத்த தேகம். வயது முப்பதைக் கடந்திருக்க வேண்டும். பதிலேதும் பேசவில்லை. நான் பணத்தைக் கொடுக்கவில்லை. 

'இன்னும் முழுசா போட்டமாதிரி தெரியல' என்றேன் முறைத்துக்கொண்டே. என்ன நினைத்தார் எனத் தெரியவில்லை, 'சாரிப்பா பம்பு ஒழுங்கா வேல செய்யல, நான் கூட போட்ருச்சோன்னு நினைச்சேன்' என்றபடி பம்பை அழுத்த, வண்டியை கொஞ்சம் முன்னுக்கு நகர்த்தி மீட்டரைப் பார்த்தேன். அறுபது ரூபாயில் வந்து நின்றது. முறைத்தபடியே பணத்தைக் கொடுத்துவிட்டு அங்கிருந்து கிளம்பினேன். ஒருவேளை ஏமாந்திருந்தால் நஷ்டம் அறுபது ரூபாய். இப்போது கூட்டிக் கழிச்சிப் பார்த்தால் நிகர லாபம் நான்கு ரூபாய். அதுவும் எனக்குத்தான். மீண்டும் சென்னையின் வாகன நெரிசலுக்குள் என்னை நுழைத்துகொண்டேன். மனம் கொஞ்சம் சந்தோசமாக இருந்தது. ம்ம் நீங்களும் பெட்ரோல் போடாமலா இருக்கப் போகிறீர்கள். பார்த்து சூதானமாக நடந்து கொள்ளுங்கள். இல்லை சூ... சரி வேணாம் விடுங்கள் எதற்கு கெட்டவார்த்தை எல்லாம் பேசிக்கொண்டு. உங்கள் பெட்ரோல் உங்கள் உரிமை.

11 comments:

  1. நாட்டிலே பெட்ரோலில் மட்டுமா கொள்ளை அடிக்கிறார்கள் ?

    எனது நண்பர் ஒருவர் இது போல பெட்ரோல் போடுவரிடம் சண்டை போட்டு, கை கலப்பு ஏற்பட்டு, கூட்டம் கூடி, போலிஸ் வந்து, எல்லோரையும் ஒரு வழியாகச் சமாதானம் பேசி, கூட்டம்
    கலைந்த உடன்,
    நண்பர் தான் இருந்த இடத்திற்குத் திரும்பி வண்டியை எடுக்க வந்தார்.

    பைக்கைக் காணவில்லை.

    சுப்பு தாத்தா.
    www.subbuthathacomments.blogspot.com

    ReplyDelete
  2. எல்லாவற்றிலும் திருட்டு.... :(

    ReplyDelete
  3. நிறைய பங்க்களில் இந்த கொள்ளை நடக்கிறது! உஷாராக இல்லை என்றால் கொள்ளை அடித்துவிடுவார்கள்!

    ReplyDelete
  4. கூர்மையாக பார்த்து அளவு சரியாக இருக்கிறது என்று திருப்திப் பாட்டுக் கொள்ள முடியாது. சில இடங்களில் சரியான அளவில் கலப்பட பெட்ரோல். ஸ்டார்ட் செய்யும்போதுதான் தெரியும்
    நம் கவனத்தை சிதற அடிப்பதில் வல்லவர்கள்

    ReplyDelete
  5. நல்ல பதிவு

    ReplyDelete
  6. இப்டி எல்லா இடத்துலயும் இருந்தா என்ன பண்றது?

    ReplyDelete
  7. இதை முதலில்ஃ பேஸ்புக்கில் படித்து விட்டேன்.

    என் நண்பனின் பையன் ஒருவனுடன் பைக்கில் சென்று இதே போன்றதொரு அனுபவத்தில் அவன் அவர்களுடன் சண்டைக்குப் போன திகில் காட்சி இன்னும் என் நினைவில். பைக்கை அப்படியே சாய்த்து விட்டு திடுதிடுவென ஓடி அவன் சட்டையைப் பிடித்து விட்டான். நடந்தது மாங்காடு அருகே. அப்புறம் நடந்தது தனிக்கதை!

    ReplyDelete
  8. ஆமாம் சீனு...எங்களுக்கும் இப்படி நடப்பதுண்டு....அதனால கொஞ்சம் கண்ணுல அவங்க மண்ணைத் தூவறதுக்கு முன்னாடி நாங்க விளக்கெண்ணைய விட்டுருவோம்....பணக் கொள்ளை மட்டும் இல்ல, கலப்படம் வேற...

    ReplyDelete
  9. சீனு, என் பையன் இப்படித்தான் பெட்ரோல் போடப் போனப்ப, போடும் அந்த நபர் அந்த பைப்பை டாங்கிற்குள் செருகிருக்காரு....என் பையனும் கவனிக்க ஆரம்பிச்சப்ப ஹெல்மெட் கீழ விழுந்துருச்சு..அத எடுக்க குனிந்த போது அவன் பெட்ரோல் பைப்ப எடுத்துட்டான். என் பையன் ரீடிங்க் பார்த்தா ரூ 100 காமிச்சுருக்கு. சரி ந்னு கிளம்பிருக்கான்...ஆனா வண்டில பெட்ரோல் முள்ளு ஏறவே இல்ல...உடனே அந்த ஆள் கிட்ட போய் நீங்க பெட்ரோல் போடவே இல்லனு சொல்லி அவன் போட்டேனு சொன்னதும், "இப்ப நீங்க உண்மைய ஒத்துக்கிட்டு போட்டீங்கனா நான் அமைதியா போய்டுவேன். இல்லைனா இங்க நடக்கறதே வேற...என்ன சொல்றீங்கனு அமைதியாகக் கேக்க, " பின்னாடி காத்திருந்தவர்கள் டென்ஷனாக அந்த ஆளு போட்டுருக்காரு. அப்படினா முன்னாடி பெட்ரோல் போடவே இல்ல ஆனா மீட்டர் ரீடிங்க் 100 நு காமிச்சுருக்கு என்னா தில்லு முல்லு பாருங்க...அடாவடி...ரொம்ப...

    --கீதா

    ReplyDelete